Select Page

வில்லி பாரதம் – பாகம் 3

சருக்கங்கள்

(உத்தியோக பருவம்)

27.கிருட்டிணன் தூதுச் சருக்கம்

28.படை எழுச்சிச் சருக்கம்

(வீட்டும பருவம்)

29.முதற் போர்ச் சருக்கம்

30.இரண்டாம் போர்ச் சருக்கம்

31.மூன்றாம் போர்ச் சருக்கம்

32.நான்காம் போர்ச் சருக்கம்

33.ஐந்தாம் போர்ச் சருக்கம்

34.ஆறாம் போர்ச் சருக்கம்

35.ஏழாம் போர்ச் சருக்கம்

36.எட்டாம் போர்ச் சருக்கம்

37.ஒன்பதாம் போர்ச் சருக்கம்

38.பத்தாம் போர்ச் சருக்கம்

(துரோண பருவம்)

39.பதினோராம் போர்ச் சருக்கம்

40.பன்னிரண்டாம் போர்ச் சருக்கம்

41.பதின்மூன்றாம் போர்ச் சருக்கம்

42.பதினான்காம் போர்ச் சருக்கம்

27. கிருட்டிணன் தூதுச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$27.1

#1
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை
பார் படைத்த சுயோதனற்கு படை எடேன் அமரில் என பணித்த கோவை
கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே

மேல்
*சஞ்சய முனி போனபின், கண்ணனைத் துரியோதனாதியரிடம்
*தூது விட எண்ணிய தருமனது உரை
$27.2

#2
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும்
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே

மேல்
$27.3

#3
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி

மேல்
*தருமன் உரை கேட்டு, அவன் தம்பியரையும் உடன் இருத்தி,
*’உங்கள் நினைவு யாது?’ என கண்ணன் வினாவுதல்
$27.4

#4
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும்
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன்
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே

மேல்
$27.5

#5
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள
பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில்
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான்

மேல்
*’சந்து செய்தருள்!’ எனத் தருமன் கண்ணனை வேண்டுதல்
$27.6

#6
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம்
கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான்

மேல்
$27.7

#7
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில்
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும்
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே

மேல்
$27.8

#8
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில்
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன்
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே

மேல்
$27.9

#9
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும்
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில்
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே

மேல்
*வீமன் தருமன் உரையை வெறுத்துக் கூறுதல்
$27.10

#10
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம்
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும்
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான்

மேல்
$27.11

#11
விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய்
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய்
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே

மேல்
$27.12

#12
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம்
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே

மேல்
$27.13

#13
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல்
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும்
பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார் இவனுடனே பிறப்பதே நான்

மேல்
$27.14

#14
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம்
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால்
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி
பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே

மேல்
*தருமன் அவனைக் கையமர்த்தி, சமாதானம் செய்தல்
$27.15

#15
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி
குருகுலத்தோர் போர் ஏறே குற்றமது பார்க்குங்கால் சுற்றம் இல்லை
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான்

மேல்
$27.16

#16
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ கேட்டோர்க்கு பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான்

மேல்
*வீமன் மீண்டும் போரையே வற்புறுத்தி மொழிதல்
$27.17

#17
சூடுகின்ற துழாய் முடியோன் சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம்
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே

மேல்
$27.18

#18
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன்
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே

மேல்
*கண்ணன் வீமனது கடுங் கோபத்தைத் தணித்தல்
$27.19

#19
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல்
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான்

மேல்
*விசயனும் போரையே வற்புறுத்தி, ‘தூது பயன் படாது’ என மொழிதல்
$27.20

#20
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால்
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே

மேல்
$27.21

#21
தேவராயினும் பழைய தெயித்தியராயினும் மற்றும் செப்புகின்றோர்
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே

மேல்
$27.22

#22
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி
நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர
வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே

மேல்
$27.23

#23
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம்
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே

மேல்
*நகுலனும், ‘தூது பயன் இன்று’ என்று உரைத்தல்
$27.24

#24
பார்த்தன் இவை புகன்று இறைவன் பணித்தருள இருந்ததன் பின் பரிவினோடும்
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான்
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே

மேல்
$27.25

#25
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து
கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான்
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம்
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே

மேல்
$27.26

#26
அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால்
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே

மேல்
$27.27

#27
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில்
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில்
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே

மேல்
*கண்ணன் வேண்ட, சகாதேவன் தன் கருத்தை உரைத்தல்
$27.28

#28
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும்
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம்
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே

மேல்
$27.29

#29
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என்
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி

மேல்
$27.30

#30
முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான்

மேல்
*’அந்தத்தில் முடியும் வகை யார்க்குத் தெரியும்?’ என்ற,
*சகாதேவனைக் கண்ணன் தனியிடம் கொண்டு சென்று, ‘பாரதப்
*போர் நிகழாதிருக்க உபாயம் என்?’ எனல்
$27.31

#31
இவ்வண்ணம் சாதேவன் இயம்புதலும் நகைத்தருளி இகலோர் சொன்ன
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர்
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான்

மேல்
*சகாதேவன் உரைத்த உபாயம்
$27.32

#32
நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி
பூ பாரம் தீர்க்க புரிந்தாய் புயல்வண்ணா
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே

மேல்
$27.33

#33
பார் ஆள கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான்

மேல்
*’நீ உரைத்தபடி யாவும் முடிப்பினும், என்னைக்
*கட்ட இயலுமோ” என்ற கண்ணனுக்கு, ‘உன் வடிவு
*காட்டின் இயலும்!’ என்றான் சகாதேவன்
$27.34

#34
முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன்
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-
தன்னை நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான்

மேல்
*கண்ணன் பல வடிவு கொள்ள, சகாதேவன் கருத்தினால்
*மூலவடிவைப் பிணித்தல்
$27.35

#35
மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்

மேல்
*’பாதப் பிணிப்பை விடுக’ என்று கண்ணன் கூற,
*சகாதேவன் போரில் ஐவரையும் காக்க வரம் வேண்டுதல்
$27.36

#36
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும்
சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான்
பூதேவரும் கனக பூங்கா நிழல் வைகும்
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன்

மேல்
$27.37

#37
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்
நின் பார்வையால் காக்க வேண்டும் நெடுமாலே

மேல்
$27.38

#38
என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான்

மேல்
*மீண்டு பாண்டவரை அடைந்த சகாதேவனும் கண்ணனும்,
*’சந்து செய்தல் இனிது!’ என்ன, பாஞ்சாலி அழுது,
*கண்ணனிடம் முறையிடுதல்
$27.39

#39
ஆண்டு இருந்த அவை நீங்கி அறிவுடையோர் இருவோரும்
பாண்டவர்கள் முன் எய்தி பழுது இல் புகழ் பாஞ்சாலி
நீண்ட கரும் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி
ஈண்டு அவரில் இளையோனும் சந்து மிக இனிது என்றான்

மேல்
$27.40

#40
தருமனுக்கும் கருத்து இதுவே தமருடன் போர் புரியாமல்
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான்
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள்

மேல்
$27.41

#41
சால கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய்
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே

மேல்
$27.42

#42
கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றி துகில் உரிய பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே

மேல்
$27.43

#43
மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால்
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால்
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன்
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள்

மேல்
*சாத்தகியும் சமாதானத்தை வெறுத்து மொழிதல்
$27.44

#44
தண்டு இருந்தது இவன் கரத்தில் தனு இருந்தது அவன் கரத்தில்
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள்
கண்டு இருந்தீர் எல்லீரும் கருதலர்-பால் ஊர் வேண்டி
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையீரே

மேல்
$27.45

#45
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான்

மேல்
*’நானே உன் குழல் முடித்து வைப்பேன்’ என, கண்ணன்
*திரௌபதியைத் தேற்றுதல்
$27.46

#46
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும்
பார்த்தருளி அருள் பொழியும் பங்கய கண் நெடுமாலும்
ஏத்த அரிய பெரும் கற்பின் இளையாளுக்கு இவை உரைப்பான்

மேல்
$27.47

#47
தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூது போய் மீண்டதன் பின்
நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன்
எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய
புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே

மேல்
$27.48

#48
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு
தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும்
இ குழலும் சேர முடியாது இரான் என்றான்

மேல்
$27.49

#49
பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும்
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன்

மேல்
*கண்ணனைத் ‘தூது ஏகு’ எனத் தருமன் வேண்ட, அவனும்
*தேர்மேல் ஏறி அத்தினாபுரியை அடைதல்
$27.50

#50
துன்று பிணியோர் துறந்தோர் அடங்காதோர்
கன்று சின மனத்தோர் கல்லாதவர் இளையோர்
ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர்
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே

மேல்
$27.51

#51
என்ன கழறி இருந்தோர் உரை தவிர்த்து
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான்

மேல்
$27.52

#52
சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும்
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா
அங்கம் ஒரு நான்கும் அவனிபரும் தற்சூழ

மேல்
$27.53

#53
கல் வரையும் பாலை கடும் சுரமும் கான்யாறும்
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும்
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான்

மேல்
*அத்தினாபுரியின் இயற்கை வளங்கள்
$27.54

#54
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும்
கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த
காவணங்களின் தோன்றின பச்சிளம் கமுகம்

மேல்
$27.55

#55
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம்
சம்பகம் தமாலம் பல திசை-தொறும் தயங்க
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து
தும்பி பாடின தோகை நின்று ஆடின சோலை

மேல்
$27.56

#56
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு செந்திருவின்
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த
புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை

மேல்
*அகழி, மதில், முதலியவற்றின் தோற்றம்
$27.57

#57
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம்
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு

மேல்
$27.58

#58
அடி நிலத்திலே படிவன இடி முகில் அனைத்தும்
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை
நெடிய சக்கர பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர்
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது புரிசை

மேல்
$27.59

#59
பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல்
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி
புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை

மேல்
$27.60

#60
புயங்க பூமியோ புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம்

மேல்
*பல வகை வீதிகளும் சேனைகளின் பெருக்கமும்
$27.61

#61
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல்
துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர
என்னும் ஓசையே உள்ளன வீதிகள் எல்லாம்

மேல்
$27.62

#62
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர்
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ

மேல்
$27.63

#63
விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள்
பரவை வெண் மணலினும் பல புரவியின் பந்தி
இரவில் வான மீனினும் பல யானையின் ஈட்டம்
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே

மேல்
*அந்தணர் முதலியோர் இருப்பிடங்களும்,
*பல வகை ஓசைகளும்
$27.64

#64
ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால்
மாசு இலா முடிமன்னவர் மாளிகை ஒருபால்
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால்
பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால்

மேல்
$27.65

#65
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை
அம் கண் மா நகர் அனைத்தும் மும்முரசு அதிர் ஓசை
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை

மேல்
$27.66

#66
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள்
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன்
குன்று எனும்படி குருகுல நாயகன் கோயில்

மேல்
*நகரின் தென்பாலுள்ள சோலையில் கண்ணன்
*அமர்ந்திருக்க, அவன் ஐவர்க்குத் தூதாக வந்துள்ளமையைத்
*துரியோதனனுக்குத் தூதுவர் உரைத்தலா
$27.67

#67
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால்

மேல்
$27.68

#68
அன்று தூது கொண்டு இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா
துன்று தூது வண்டு இனம் முரல் தொடையலான் தனக்கு
சென்று தூதுவர் இயம்பினர் சேவடி வணங்கி

மேல்
*துரியோதனன் நகரை அலங்கரிக்கப் பணித்து, கண்ணனை
*எதிர்கொள்ளச் செல்ல, சகுனி தடுத்து நிறுத்துதல்
$27.69

#69
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் சுரும்பு ஆர்
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள்
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம்
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார்

மேல்
$27.70

#70
மின்னும் மா முகில் பல்லிய விதங்கள் முன் முழங்க
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான்
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-
தன்னை வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி

மேல்
*கண்ணனுக்கு இடம் முதலியன அமைத்து, துரியோதனன் சபையில்
*வீற்றிருத்தல்
$27.71

#71
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற
தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின்

மேல்
*வீடுமன் முதலியோர் கண்ணனை எதிர்கொள்ள, அவன்
*நகருள் வந்து, விதுரன் மனையில் புகுதல்
$27.72

#72
தொல் பகீரதி மைந்தனும் துரோணனும் சுதனும்
வில் விதூரனும் கிருபனும் முதலிய வேந்தர்
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார்

மேல்
$27.73

#73
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல்
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான்

மேல்
*வேந்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பியபின், விதுரன்
*மாளிகையின் நடுவில் உள்ள ஒரு மண்டபத்தில், கண்ணன்
*அரியாசனத்தில் வீற்றிருத்தல்
$27.74

#74
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன்
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு
ஏந்தும் ஆசனம் இட பொலிந்து அதன் மிசை இருந்தான்

மேல்
*.விதுரன் கண்ணனைக் கண்டு களித்து, மனம்
*உருகி, அவனுக்கு முகமன் கூறுதல்
$27.75

#75
இருந்து உவந்தருள் இறைவனை இறைஞ்சினான் இறைஞ்சி
பெரும் துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன்
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன்

மேல்
$27.76

#76
கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான்
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா

மேல்
$27.77

#77
உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து
துள்ளினான் விழுந்து இணை அடி சூடினான் துயரை
தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை
அள்ளினான் என கண்களால் அருந்தினான் அளியோன்

மேல்
$27.78

#78
முன்னமே துயின்றருளிய முது பயோததியோ
பன்னகாதிப பாயலோ பச்சை ஆல் இலையோ
சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான்

மேல்
*கண்ணனும் ஏனையோரும் விதுரன் மனையில் விருந்து உண்டு
*மகிழ்ந்திருத்தல்
$27.79

#79
மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும்
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்
அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர்
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார்

மேல்
$27.80

#80
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும்
கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும்
ஐந்து_பத்து_நூறாயிரம் அரசர்க்கும் எவர்க்கும்
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற

மேல்
$27.81

#81
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி
சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார்

மேல்
$27.82

#82
வாச நீரும் வண் சுண்ணமும் முறைமுறை வழங்க
பூசுறும் தொழில் பூசினார் சூடினார் புனைந்தார்
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற
கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான்

மேல்
*சூரியன் மறைவும், அந்தி மாலையின் தோற்றமும்
$27.83

#83
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில் நாயகனும்
போனகம் பரிவுடன் நுகர்ந்து இருந்த அ பொழுதில்
தானும் மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த
பானுவும் பெரும் குட திசை பரவையில் படிந்தான்

மேல்
$27.84

#84
கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப
சுருதி என்னும் வெம் சாபமேல் அம்பு கை தொடுத்து
பருதி-தன் பெரும் பகைவர் மேல் விடுத்தலின் பரந்த
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால்

மேல்
$27.85

#85
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில்
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர்
துரங்கம் ஏழுடை கடவுளை நிரைநிரை துணித்த
கரங்கள் போன்றன கரை-தொறும் வளர் துகிர் காடு

மேல்
$27.86

#86
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர்
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு
ஆதபத்திரம் போன்றன தாமரை அடவி

மேல்
$27.87

#87
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம்

மேல்
*விதுரன் கண்ணனைப் போற்றி, அவன் தனி வந்த
*காரணம் வினவ, கண்ணன் தான் ஐவர்க்குத் தூதாக
*வந்தமையைத் தெரிவித்தல்
$27.88

#88
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம்
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த
புரவலன்-தனை புண்ணிய விதுரனும் போற்றி

மேல்
$27.89

#89
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர்
தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான்

மேல்
$27.90

#90
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய்
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான்

மேல்
*’துரியோதனன் முறைமையால் அரசு கொடான்’ என்ற விதுரனுக்கு,
*’கொடாவிடின் பாண்டவர் பொருது பெறுவர்’ எனக் கண்ணன்
*உரைத்தல்
$27.91

#91
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான்
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில்
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான்

மேல்
$27.92

#92
வாளை வாவியில் உகண்டு எழ வளர் இளம் கமுகின்
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான்
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான்

மேல்
*உலக இயல்பை விதுரனுக்கு உரைத்து, அவனுக்கு விடை
*கொடுத்து, கண்ணன் கண்வளர்தல்
$27.93

#93
விரைந்து பாய் பரி மன்னவர் இதம்பட மெலிவுற்று
இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார்
பரந்த போரினில் எதிர்த்து அவர் படப்பட பகழி
துரந்தபோது அவர்க்கு உதவுவர் சொன்னவை எல்லாம்

மேல்
$27.94

#94
என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க
மன்றல் நாள்மலர் பாயலின் மீது கண்வளர்ந்தான்

மேல்
*இரவின் இயற்கையும், இரவியின் தோற்றமும்
$27.95

#95
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை
அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால்
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல்

மேல்
$27.96

#96
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம்
பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ
கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம்

மேல்
$27.97

#97
இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த தொல் பதியில்
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில்

மேல்
*துரியோதனன் அரசு வீற்றிருத்தல்
$27.98

#98
சோதி வான நதி மைந்தனும் பழைய சுருதியால் உயர் துரோணனும்
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும்
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும்
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும்

மேல்
$27.99

#99
தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன்
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும்
மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும்
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான்

மேல்
$27.100

#100
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண்
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண்
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ

மேல்
$27.101

#101
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால்
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான்
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின்
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே

மேல்
*’கண்ணன் அவைக்கு வரும்போது யாரும் எதிர் கொள்ளக்
*கூடாது’ எனத் துரியோதனன் கட்டளையிடுதல்
$27.102

#102
காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர்
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால்
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர்
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான்

மேல்
*வீடுமன் முதலியோர் எதிர் கொள்ள, கண்ணன் அவை புகுந்து, ஆசனத்து அமர்தல்
$27.103

#103
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின்
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான

மேல்
$27.104

#104
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும்
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார்
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான்
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான்

மேல்
*’நேற்றே இந் நகர் வந்தும், என் இல்லிற்கு வாராது, விதுரன்
*இல்லில் தங்கியது ஏன்?’ எனத் துரியோதனன் வினாவுதல்
$27.105

#105
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும்
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான்

மேல்
*கண்ணன் மறுமொழி கூறுதல்
$27.106

#106
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும்
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான்
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான்
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ

மேல்
$27.107

#107
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும்
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும்
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும்
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார்

மேல்
*’தூதாக வந்த காரியத்தை விளம்புக!’ என்ற துரியோதனனிடம்,
*கண்ணன், ஐவர்க்கும் உரிய நாட்டைக் கொடுப்பாய் எனல்
$27.108

#108
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின்
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான்

மேல்
$27.109

#109
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய்
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில்
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே

மேல்
$27.110

#110
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல்
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே

மேல்
*’ஈ இருக்கும் இடமும் கொடேன்!’ எனத் துரியோதனன் மறுத்தல்
$27.111

#111
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான்
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும்
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே

மேல்
$27.112

#112
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என்
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என்
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என்
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன்

மேல்
*’ஐந்து ஊரேனும் வழங்குக!’ என்று கண்ணன் மீண்டும் வேண்ட,
*துரியோதனன் அதனை மறுக்கவே, அவனுக்கு அறிவுரை கூறுதல்
$27.113

#113
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும்
பார் வழங்க நினைவு இல்லையேல் அவனி பாதியாயினும் வழங்குவாய்
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான்

மேல்
$27.114

#114
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ்
நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர்
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான்

மேல்
$27.115

#115
தந்தை காதலுறு தன்மை கண்டு இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான்
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல்

மேல்
$27.116

#116
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால்
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும்
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன்

மேல்
*துரியோதனன் சினத்துடன் மறுத்து மொழிய, கண்ணன் போர் வேண்டுதல்
$27.117

#117
பேர் அரா அணை துறந்த மாயன் இவை பேச வன்பினொடு பின்னையும்
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார்
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான்

மேல்
$27.118

#118
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால்
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல்
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன்

மேல்
*’போருக்குக் கை அறை’ என்பது கேட்டு, துரியோதனன்
*சினந்து, கண்ணனை இகழ்தல்
$27.119

#119
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும்
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய்

மேல்
$27.120

#120
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ
கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால்
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே

மேல்
$27.121

#121
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான்
எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள்
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ

மேல்
$27.122

#122
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம்
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர்
மின்னை ஆம் அவர்கள் ஐவரும் பரிவினொடு தனித்தனி விரும்புவார்
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம்

மேல்
*கண்ணன் அவையை நீங்கி, விதுரன் மனைக்கு மீளுதல்
$27.123

#123
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும்
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய்
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான்
சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ

மேல்
*கண்ணனுக்கு விருந்து செய்தது பற்றி, விதுரனைத்
*துரியோதனன் பழித்து உரைத்தல
$27.124

#124
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும்
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும்
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன்
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான்

மேல்
$27.125

#125
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன்
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல் இன் அமுது இயற்றினான்
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும்
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ

மேல்
$27.126

#126
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும்
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம்
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே

மேல்
*விதுரன் சினந்து மறுமொழி கூறி, தன் வில்லை முறித்து, சபையை விட்டு நீங்குதல்
$27.127

#127
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான்
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான்
என்ன வானவர் நகைப்பரே எனை உரைத்த நாவுடன் இருத்தியோ

மேல்
$27.128

#128
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும்
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும்
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ

மேல்
$27.129

#129
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான்
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன்
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான்

மேல்
*விதுரன் வில் முறித்தது குறித்து வேந்தர்கள் வருந்த, வீடுமன்
*துரியோதனனைக் கடிந்து உரைத்தல்
$27.130

#130
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன்
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால்
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார்

மேல்
$27.131

#131
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில்
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய்
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன்
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன்

மேல்
*விதுரன் அன்றி வில் வீரர் பிறர் இல்லையோ?’
*எனத் துரியோதனன் மொழிதல்
$27.132

#132
பிதாமகன் பரிவுடன் முனிந்து சில பேச நாசம் உறு பேரனாம்
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும்
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட பரணி பாடவே

மேல்
$27.133

#133
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன்
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள்
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என்
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார்

மேல்
*கன்னன் தனது ஆண்மை எடுத்துரைத்தல்
$27.134

#134
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர்
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும்
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே

மேல்
$27.135

#135
அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான்
வெம் பணி பகழி ஏவில் ஆவியுடன் மீளுவான் அமரில் விசயனோ
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான்

மேல்
*’விசயனுக்கு நிகர் நீயோ?’ என்று வீடுமன் கன்னனை
*இகழ, அவனும் வீடுமனைப் பழித்தல்
$27.136

#136
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய்
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான்
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன்

மேல்
$27.137

#137
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய்
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய்
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே

மேல்
*துரியோதனன் யாவர்க்கும் விடை கொடுத்தனுப்புதல்
$27.138

#138
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன்
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான்
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான்
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம்

மேல்
*வில் முறித்தமை குறித்து விதுரனைக் கண்ணன்
*வினாவ, அவன் மறுமொழி கூறுதல்
$27.139

#139
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின்
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான்

மேல்
$27.140

#140
ஆவது கருதானாகில் அமைச்சர் சொல் கேளானாகில்
வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில்
நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில்
சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்

மேல்
$27.141

#141
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார்
சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார்
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்

மேல்
$27.142

#142
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும்
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான்
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல்
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான்

மேல்
*விதுரன் ஆண்மையைக் கண்ணன் புகழ்ந்து,
*’துரியோதனன் மொழிந்தனவற்றைப் பொறுத்தி’ என்று
*கூறி, பின் குந்தியின் மாளிகை செல்லுதல்
$27.143

#143
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன்
போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர்
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே

மேல்
$27.144

#144
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும்
காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில்
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம்

மேல்
$27.145

#145
பன்னிய புரை இல் கேள்வி பயன் நுகர் மனத்தாய் நின்னை
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன்
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும்
கன்னனை பயந்த காதல் கன்னி-தன் கோயில் புக்கான்

மேல்
*குந்தி கண்ணனை எதிர்கொண்டு, அவன்
*அத்தினாபுரி வந்த காரியம் வினாவுதல்
$27.146

#146
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும்
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும்
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள்

மேல்
$27.147

#147
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள்

மேல்
*கண்ணன் தான் தூது வந்ததும், போர் நேர்ந்துள்ளமையும்
*குந்திக்குக்கூறி, கன்னன் பிறப்பு வரலாற்றையும்
*அவளுக்கு உரைத்தல்
$27.148

#148
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன்
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான்
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான்

மேல்
$27.149

#149
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும்
கன்னியாய் இருந்து வாழும் காலை ஓர் முனிவன் வந்து
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான்

மேல்
$27.150

#150
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடை காதல் கூர
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே

மேல்
$27.151

#151
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர்
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான்
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான்

மேல்
$27.152

#152
பண்புடை குமரன் கற்ற படை தொழில் பலவும் கண்டு
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார்

மேல்
*கன்னனை ஐவருடன் கூட்டுமாறும், வர மறுத்தால் வரம்
*வேண்டுமாறும் குந்திக்குக் கண்ணன் மொழிதல்
$27.153

#153
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான்
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி
கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா

மேல்
$27.154

#154
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால்
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில்

மேல்
$27.155

#155
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான்
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம்
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான்

மேல்
*அது கேட்டு, குந்தி வருந்த, கண்ணன் தேற்றுதல்
$27.156

#156
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன்
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே

மேல்
$27.157

#157
கான் பட்ட கனலில் பாயும் கடும் கணை விலக்கினேனேல்
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன்
தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில்
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள்

மேல்
$27.158

#158
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே

மேல்
$27.159

#159
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார்
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான்

மேல்
*கண்ணன் விதுரன் மாளிகைக்கு மீள, சூரியன்
*மறைய, அந்திமாலை தோன்றுதல்
$27.160

#160
காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில்
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே

மேல்
$27.161

#161
நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான்

மேல்
$27.162

#162
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல்
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர்
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார்

மேல்
$27.163

#163
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா

மேல்
$27.164

#164
தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள்
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும்
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ

மேல்
*இரவில் துரியோதனன் செய்த சூழ்ச்சி
$27.165

#165
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும்
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன்
இரவிடை சூழ்ந்தவண்ணம் இன்னது என்று இயம்புகின்றாம்

மேல்
*’தனி வந்த கண்ணன் திறத்துச் செய்வது என்” எனத் துரியோதனன் வினாவுதல்
$27.166

#166
தந்தையும் தம்பிமாரும் கன்னனும் சகுனி-தானும்
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும்
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே

மேல்
$27.167

#167
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி
பாதப வனத்தில் போன பாண்டவர்-தம்மை மீண்டும்
மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும்
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான்

மேல்
*திருதராட்டிரன், ‘கண்ணனைக் கொல்ல வேண்டும்’
*என, விகருணன் தடுத்து மொழிதல்
$27.168

#168
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான்
இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர்
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை
கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான்

மேல்
$27.169

#169
கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும் காவலோரில்
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார்
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான்

மேல்
$27.170

#170
மூத்தவர் இளையோர் வேத முனிவரர் பிணியின் மிக்கோர்
தோத்திரம் மொழிவோர் மாதர் தூதர் என்று இவரை கொல்லின்
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில் இல்லை
பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான்

மேல்
$27.171

#171
பழியுடை பகைஞரேனும் தன் பெரும் பதியில் வந்தால்
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார்
கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும்
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான்

மேல்
*துச்சாதனன் விகருணனை முனிந்து, ‘போர் செய எழுவோம்’ என்றல்
$27.172

#172
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன்
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான்
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால்
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான்

மேல்
$27.173

#173
அதிரதர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால்
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான்

மேல்
*கன்னன், ‘அம்பு ஒன்றினாலே அவனை வெல்வேன்!’ எனல்
$27.174

#174
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான்
வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன்
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான்

மேல்
*சூழ்ச்சியால் கண்ணனைச் சிறைப்படுத்தலே தக்கது எனச்
*சகுனி உரைத்தல்
$27.175

#175
பதி பெயர்ந்து ஏகி நாளை பகைவரை கூடுமாயின்
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான்
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான்

மேல்
$27.176

#176
கொல்லுவது இயற்கை அன்று குழி பறித்து அரக்கரோடு
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான்

மேல்
*துரியோதனன் நிலவறை அமைத்து, அதனுள் அரக்கர்
*முதலியோரை மறைத்து வைத்தல்
$27.177

#177
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல்
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும்
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர்
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான்

மேல்
$27.178

#178
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான்
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான்
பல் படை வல்லோர்-தம்மை பதின்மடங்கு அதனில் வைத்தான்
அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே

மேல்
$27.179

#179
பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி
சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழிலுடை விதானம் ஏற்றி
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான்

மேல்
*சூரியன் உதித்தல்
$27.180

#180
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும்
நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக
படியவர் துயிலும் போக பரிதியும் உதயஞ்செய்தான்

மேல்
$27.181

#181
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில்
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான்

மேல்
$27.182

#182
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல்
அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல்
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ

மேல்
*அரசர்கள் துரியோதனன் அவைக்கு வருதலும்,
*கண்ணன் எழுந்து காலைக்கடன் முடித்தலும்
$27.183

#183
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும்
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார்
பெரும் துயில் அநந்த போக பேர் அணை துறந்த மாலும்
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான்

மேல்
*தூதுவர் அழைக்க, கண்ணன் அரசவைக்குச் செல்லுதல்
$27.184

#184
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன்
தூதுவர் ஆழி அம் கை தோன்றலே துளப மாலே
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம்
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான்

மேல்
*துரியோதனன் கண்ணனை மட்டும் அவையில் விடுமாறு
*காவலர்க்குப் பணித்தல்
$27.185

#185
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும்
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும்
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான்

மேல்
$27.186

#186
நாம வேல் அரசரோடும் நால் வகை சேனையோடும்
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர்
வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான்

மேல்
*துரியோதனன் பொய் ஆசனத்துக் கண்ணனை இருக்கச் செய்ய,
*அது முறிந்து நிலவறையில் புக, கண்ணன் பெரு வடிவு
*கொண்டு, அங்குள்ள வீரரை அழித்தல்
$27.187

#187
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும்
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும்
அன்பொடு திகிரியானை அதன் மிசை இருக்க என்றான்

மேல்
$27.188

#188
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே
நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே

மேல்
$27.189

#189
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும்
துஞ்சினம் இன்று என வன் பணியின் கிளை துன்பம் உழந்திடவும்
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா
நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே

மேல்
$27.190

#190
மல்லர் அரக்கர் குலத்தொடு பப்பரர் வாளினர் வேலினர் போர்
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம்
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே

மேல்
$27.191

#191
அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய்
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன்
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே

மேல்
$27.192

#192
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால்
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய்
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர்
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே

மேல்
$27.193

#193
வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன்
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள்
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே

மேல்
$27.194

#194
மின் சுடிகை புயகங்கள் வெருக்கொளும் வெம் கருட கொடியோன்
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால்
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே

மேல்
$27.195

#195
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால்
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால்
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ்
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே

மேல்
$27.196

#196
அந்த இடத்து எறி பம்பரம் ஒத்து உடலம் சுழல சுழல
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால்
முந்து அமரர்க்கு அமுதம் தர மை கடல் முன் சுழல சுழலும்
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே

மேல்
$27.197

#197
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால்
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால்
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே

மேல்
$27.198

#198
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர்
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால்
ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே

மேல்
$27.199

#199
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால்
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே

மேல்
$27.200

#200
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும்
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண்
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால்
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே

மேல்
$27.201

#201
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே

மேல்
$27.202

#202
வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர்
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில்
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே

மேல்
$27.203

#203
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே
தோல் இனம் ஏந்தின நீள் கவண் ஏந்தின சோரிகள் சோர்ந்திடவே
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின பாசமொடு ஓங்கின சூழ் சில பூம் கரமே

மேல்
$27.204

#204
சிலசில கைத்தலம் அடு கழலில் பல செறி கழல் கட்டினவே
சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே

மேல்
$27.205

#205
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு
ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும்
பாயிர நான்மறை பாடி வியந்து பணிந்து புகழ்ந்தனரே

மேல்
*தேவர் முதலிய யாவரும் கண்ணனை துதித்து வேண்ட
*அவன் தன் பெரு வடிவை சுருக்கிக்கொள்ளுதல்
$27.206

#206
ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்
காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே
நாரணனே முனியேல் முனியேல் என நாகர் பணிந்தனரே

மேல்
$27.207

#207
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல்
யாதவனே முனியேல் இதயத்தில் இருப்பவனே முனியேல்
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல்
நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே

மேல்
$27.208

#208
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர்
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய்
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே

மேல்
$27.209

#209
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார்
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே

மேல்
$27.210

#210
தேவரும் வாசவனும் தவரும் திசைமுகனும் நராதிபரும்
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால்
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே

மேல்
*சிறிதும் சலித்தல் இன்றி இருந்த துரியோதனனை நோக்கி, அவனை
*அழியாமைக்குக் காரணம் கூறி, கண்ணன் வெளியேறுதல்
$27.211

#211
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே
எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும்
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும்
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே

மேல்
$27.212

#212
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான்
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே

மேல்
$27.213

#213
அஞ்சினம் நின்னை அழித்திட நின்னுடன் அன்று பெரும் சமர்-வாய்
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும்
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே

மேல்
*உடன் வந்த மன்னர்களைக் கண்ணன் நிறுத்தி,
*கன்னனுக்கு அவன் பிறப்பு வரலாற்றை உணர்த்தி,
*ஐவருடன் கூடுமாறு கூறுதல்
$27.214

#214
என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே
சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார்
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே

மேல்
$27.215

#215
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர்
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே

மேல்
$27.216

#216
ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே
வாயு வழங்கினன் வீமனை நல்கினன் விசயனை வாசவனும்
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம்
தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே

மேல்
$27.217

#217
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள்
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர்
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார்
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே

மேல்
*’ஐவரை இன்று அடுப்பின், அது செய்ந்நன்றி
*கொன்றதாகும்’ எனக் கன்னன் மறுத்தல்
$27.218

#218
கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும்
குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால்
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ

மேல்
$27.219

#219
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான்
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றி பாண்டவர்க்கும்
போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ

மேல்
*கன்னனை அனுப்பிவிட்டு, கண்ணன் அசுவத்தாமனை
*அருகில் அழைத்து, ‘துரியோதனன் வேண்டினும் நீ
*சேனாதிபதி ஆதல் கூடாது’ எனல்
$27.220

#220
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல்
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம்
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான்

மேல்
$27.221

#221
போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர்
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில்
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே

மேல்
$27.222

#222
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ
ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை
சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே

மேல்
*கண்ணன் தன் மோதிரத்தை வீழ்த்த, அதனை அசுவத்தாமா
*எடுக்கும்போது, ‘வானில் ஊர்கோள் உற்றது’
*என, அவனும் வான் நோக்க, அவையோர்,
*’அசுவத்தாமன் சூளுற்றான்’ எனல்
$27.223

#223
ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்-தன்னை இவ்வாறு
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான்
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல்
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே

மேல்
$27.224

#224
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்-தனை பார்த்தான்
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும்
பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர்

மேல்
*’அசுவத்தாமனை இனித் தெளியலாகாது’ என்று துரியோதனன்
*அவையில் கூற, அது அறிந்து அசுவத்தாமன் வருந்துதல்
$27.225

#225
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான்
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே

மேல்
$27.226

#226
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும்
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும்
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை
தெளியாவண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான்

மேல்
*விதுரன் மாளிகை சென்றபின், கண்ணன் இந்திரனை அழைத்து,
*கன்னனிடமுள்ள கவச குண்டலங்களை வாங்குமாறு கூறுதல்
$27.227

#227
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில்
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின்
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான்

மேல்
$27.228

#228
அந்த கணத்தில் வந்து இறைஞ்சும் ஆகண்டலனை தழீஇக்கொண்டு
கந்த துளப முடியோனும் கண்ணும் கருத்தும் களி கூர
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான்

மேல்
$27.229

#229
கிரியின் சிறகை அரி படையாய் கேண்மோ ஆண்மை களம் மீதில்
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார்

மேல்
$27.230

#230
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார்
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே

மேல்
$27.231

#231
கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின் கற்பாந்த
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு
துவசம் படைத்தோன் படும் பயந்த துணைவா இன்னே சொன்னேனே

மேல்
$27.232

#232
வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும்
இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இரந்தோர்-தமக்கும் துறந்தவர்க்கும்
சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயாதிபர்களுக்கும்
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான்

மேல்
$27.233

#233
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும்
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான்

மேல்
$27.234

#234
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர்
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார்
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான்

மேல்
*இந்திரன் கன்னனிடம் கிழ முனி வடிவம் கொண்டு வந்து,
*அவனது கவச குண்டலங்களைப் பெறுதல்
$27.235

#235
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான்

மேல்
$27.236

#236
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும்
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில்
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின்
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான்

மேல்
$27.237

#237
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான்

மேல்
$27.238

#238
அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும்
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான்

மேல்
$27.239

#239
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும்
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன்

மேல்
*இந்திரன் தன் உண்மை வடிவு காட்டி, கன்னனுக்கு வேல் ஒன்று கொடுத்தல்
$27.240

#240
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான்
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள்
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே

மேல்
$27.241

#241
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில்
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான்

மேல்
*இந்திரன் கண்ணனிடம் மீண்டு வந்து நிகழ்ந்தன கூற,
*அவன் இந்திரனுக்கு விடை கொடுத்தல்
$27.242

#242
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி
புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான்
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும்

மேல்
$27.243

#243
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான்
எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார்
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே

மேல்
*குந்தியைக் கண்ணன் தூண்ட, அவள் கன்னனிடம் செல்லுதல்
$27.244

#244
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான்
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும்
பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள்

மேல்
*கன்னன் குந்தியை எதிர்கொண்டு உபசரிக்க, அவள்
*அவனுக்குத் தான் தாய் என்பதை மெய்ப்பித்தல்
$27.245

#245
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன்
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும்
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும்

மேல்
$27.246

#246
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால்
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே

மேல்
$27.247

#247
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல்
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன்
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார்

மேல்
$27.248

#248
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள்

மேல்
$27.249

#249
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள்
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான்
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள்

மேல்
*’இளைஞர் ஐவருடனும் வந்து நீயே அரசாள வேண்டும்’ என்று குந்தி வேண்ட,
*கன்னன் அதற்கு ஏதுக்காட்டி, மறுத்து மொழிதல்
$27.250

#250
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள்

மேல்
$27.251

#251
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர்
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும்
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான்

மேல்
$27.252

#252
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான்
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே எனக்கு இனி புகழும் கருமமும் தருமமும் என்றான்

மேல்
*குந்தி மிகவும் வருந்த, கன்னன் அவளைத் தேற்றி, வந்த காரியத்தை வினவுதல்
$27.253

#253
பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின்
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும்
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள்

மேல்
$27.254

#254
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்கு பண்பினால் இன்னன பகர்வாள்

மேல்
*குந்தி இரு வரம் வேண்ட, கன்னனும் மறாது கொடுத்தல்
$27.255

#255
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள்
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள்
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான்

மேல்
$27.256

#256
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால்
மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான்
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான்

மேல்
*கன்னன் குந்தியிடம் இரண்டு வரம் வேண்டிப் பெறுதல்
$27.257

#257
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர்
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர்

மேல்
$27.258

#258
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின்
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என்
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான்

மேல்
$27.259

#259
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள்

மேல்
*குந்தி கண்ணனிடம் மீண்டு வந்து செய்தி உரைக்க, கண்ணன் மகிழ்ந்து,
*பாண்டவரிடம் மீண்டு வந்து, நிகழ்ந்தன கூறல்
$27.260

#260
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான்

மேல்
$27.261

#261
தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல்
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான்

மேல்

28. படை எழுச்சிச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$28.1

#1
படர்ந்து கானகம் திரிந்து மீண்டு அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற
தொடர்ந்து நான்மறை பின் செல பன்னக துவசன் மா நகர் தூது
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே

மேல்
*தருமன் தனக்குத் துணைவராம் அரசர்க்குத் தரால் செய்தி
*அனுப்ப, அரசர் பலரும் வந்து திரளுதல்
$28.2

#2
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான் ஓலையின் புறத்து அம்மா

மேல்
$28.3

#3
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான்
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார்
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார்
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர்

மேல்
$28.4

#4
விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார்
பராவு பேருடை சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும்
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார்

மேல்
$28.5

#5
அரக்கி தந்தருள் கடோற்கச காளையும் அபிமனோடு இராவானும்
விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில்
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட
துரக்கும் வெம் பரி துரௌபதர் ஐவரும் சூழ் படையுடன் வந்தார்

மேல்
$28.6

#6
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர்
சோனகாதிபர் கன்னடர் மாகதர் துலுக்கர் குச்சரர் ஒட்டர்
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார்

மேல்
$28.7

#7
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார்
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார்
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார்
ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார்

மேல்
$28.8

#8
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான்

மேல்
*வந்த மன்னவரைத் தருமன் எதிர்கொண்டு, துரியோதனன் நாடு
*தர மறுத்துப் போர் புரிய முன் வந்ததைக் கூறுதல்
$28.9

#9
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான்

மேல்
$28.10

#10
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல்
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள்
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள்
தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான்

மேல்
*அரசர்கள் தருமனுக்கு உறுதிமொழி கூறுதல்
$28.11

#11
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய்
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம்
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார்
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார்

மேல்
*தருமன் சிவேதனைச் சேனாபதி யாக்குதலும், இராவான்
*தன் ஆண்மை எடுத்துரைத்தலும்
$28.12

#12
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம்
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே

மேல்
$28.13

#13
பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும் பார்த்திவருடன் கூடி
ஈண்டு இருந்தனர் இவ்வுழி செரு குறித்து எழிலி மேனியனோடும்
தூண்டும் வெம் பரி தேர் துரியோதனன் தூது போய் பரந்தாமன்
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ

மேல்
*துரியோதனன் படைத்துணை வேண்டி அரசர்களுக்கு ஓலை
*அனுப்ப, பல நாட்டு அரசர்களும் வந்து திரளுதல்
$28.14

#14
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே
தந்தம கிளைஞரோடும் சாதுரங்கத்தினோடும்
வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான்

மேல்
$28.15

#15
மித்திரர் ஆன மன்னர் விறலுடை துணைவரோடும்
புத்திரரோடும் தத்தம் போர் புரி சேனையோடும்
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான்

மேல்
$28.16

#16
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு
தொடைப்படு தும்பை மாலை சுயோதனன் சூழ்ச்சி ஆக
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே
படைப்படு சேனையோடும் படை துணை ஆயினானே

மேல்
$28.17

#17
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர்
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார்

மேல்
$28.18

#18
கலிங்கர்_கோன் சோமதத்தன் கௌசிகன் காம்பிலீசன்
தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன்
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன்
துலங்கு நீர் ஓகனீகன் எனும் பல வேந்தர் தொக்கார்

மேல்
$28.19

#19
பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம்
சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி
கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம்
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார்

மேல்
$28.20

#20
அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும்
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும்
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும்
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ

மேல்
$28.21

#21
தம்பியர் அனைவரும் துச்சாதனன் முதலா உள்ளோர்
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர்
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார்

மேல்
$28.22

#22
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம்
பாடு சீர் விகத்தசேனன் பகதத்தன் முதலா உள்ளோர்
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன்
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார்

மேல்
$28.23

#23
நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல்
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம்
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து
பதினோர் அக்குரோணி சேனை பார் மிசை பரந்த அன்றே

மேல்
*துரியோதனன் வீடுமனைச் சேனாபதி யாக்குதல்
$28.24

#24
பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை
அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே

மேல்
*வீடுமனிடம் களப்பலிக்கு உரியாரையும், அதற்கு உரிய நாளையும்
*துரியோதனன் கேட்க, அவன் மறுமொழி பகர்தல்
$28.25

#25
அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து அவனி வேந்தன்
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான்

மேல்
$28.26

#26
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான்
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில்
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால்
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான்

மேல்
*வீடுமன் உரைத்தபடி துரியோதனன் சகாதேவனிடம்
*சென்று நாள் கேட்டல்
$28.27

#27
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள்
ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டினல்லால்
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான்

மேல்
*துரியோதனன் கேட்க, இராவான் தன்னைப்
*பலியிட ஒப்புக்கொள்ளுதல்
$28.28

#28
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான்
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான்

மேல்
*கண்ணன் துரியோதனன் முகூர்த்த நாள் குறித்த
*செய்தியைக் கேட்டு, தருமனுக்கு நிகழ்ந்தன கூறி,
*தன்னைக் களப்பலி ஊட்டுமாறு கூறுதல்
$28.29

#29
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம்
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்மில்
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே

மேல்
$28.30

#30
ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று
நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால்
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண்
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான்

மேல்
*பாண்டவர் வருந்தி உரைக்க, இராவான் தன்னைப் பலி
*கொடுக்கக் கூறி, போரைச் சில நாள் கண்டபின்
*மடியுமாறு அருள் எனக் கண்ணனை வேண்டுதல்
$28.31

#31
தருமனும் தம்பிமாரும் சாற்றிய மாற்றம் கேட்டே
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும்
பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார்

மேல்
$28.32

#32
அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன்
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை
ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான்

மேல்
$28.33

#33
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில்
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய்
கடிய நேர் பலி தந்தாலும் காய் அமர் சில நாள் கண்டு
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான்

மேல்
*காளி கோயில் முன்னர் இராவான் தன்னைப் பலி கொடுத்தல்
$28.34

#34
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில்
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ

மேல்
*பாண்டவர் பகடு முதலிய பிற பலிகளையும்
*கொடுத்து, வரம் வேண்டி மீளுதல்
$28.35

#35
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான்
பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதி ஆக
வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார்

மேல்
*கண்ணன் சிவேதனை நோக்கி, வஞ்சி சூடிப்
*படையெடுத்துச் செல்லுமாறு கூறுதல்
$28.36

#36
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும்
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான்
இற்றை நாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும்
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே

மேல்
*சிவேதன் பாண்டவர் சேனையை அணிவகுத்தல்
$28.37

#37
அதிரதாதிபர் தானும் வீமனும் விசயனும் திறல் அபிமனும்
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன்
மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத
பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே

மேல்
$28.38

#38
நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும் சகதேவனும்
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான்
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே

மேல்
*ஐவரும் கண்ணனும் போருக்கு முனைய,
*பலராமன் தீர்த்த யாத்திரை போதல்
$28.39

#39
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும்
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான்
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான்

மேல்
*பலராமனும் விதுரனும் எங்கெங்குமுள்ள தீர்த்தங்கள் சென்று ஆடுதல்
$28.40

#40
போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய்
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான்

மேல்
*நாற்படைகள் நின்ற நிலை
$28.41

#41
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும்
கடி படப்பட அதிர் பணை குலம் என அதிர்ப்பன கறைகள் போல்
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும்
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே

மேல்
$28.42

#42
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ்
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின்
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம்
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே

மேல்
$28.43

#43
பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ்
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய்
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர்
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே

மேல்
$28.44

#44
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய்
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள்
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே

மேல்
$28.45

#45
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள்
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள்
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே

மேல்
$28.46

#46
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய்
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய்
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும்
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே

மேல்
*அறுவகைப் படைகளும் அணி வகுத்து நிற்க, முரசு,
*குடை, கொடி, முதலியன நெருங்குதல்
$28.47

#47
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல்
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய்
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே

மேல்
$28.48

#48
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான்
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம்
பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே

மேல்
$28.49

#49
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின்
படர் நிழல் கவிகையின் மிசை துகள் பரவி மொய்த்து எழு புரவியின்
சுடர் வித படைகளின் நிரை படு துகிலுடை கொடிகளின் விராய்
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே

மேல்
$28.50

#50
வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின்
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித
துளை இசைத்தன முரசு இரைத்தன துடி அரற்றின செவிடுபட்டு
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே

மேல்
*பாண்டவர் சேனை உயிருள்ள உடம்பு போன்று விளங்குதல்
$28.51

#51
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம்
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள்
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே

மேல்
*துரியோதனன் வீடுமனுக்கு அணி வகுக்கக் கூறுதல்
$28.52

#52
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல்
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான்

மேல்
$28.53

#53
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன்

மேல்
*வீடுமன் அணிவகுத்தலும், கன்னன் வீடுமனொடு முனிந்து,
*’நீ இறக்குமளவும் படை எடேன்!’ எனச் சூளுரைத்தலும்
$28.54

#54
ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும்
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன்
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே

மேல்
$28.55

#55
அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில்
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான்
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன்

மேல்
*துரியோதனன் படைகள் அணியணியாகப் போருக்கு எழுதல்
$28.56

#56
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில்
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும்
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும்
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன்

மேல்
$28.57

#57
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார்
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர்
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா

மேல்
$28.58

#58
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான்
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம்
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம்

மேல்
$28.59

#59
யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை
கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின்
பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா

மேல்
$28.60

#60
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும்
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும்
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார்

மேல்
$28.61

#61
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார்
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே

மேல்
$28.62

#62
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம்
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால்
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே

மேல்
$28.63

#63
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால்
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே

மேல்
*தூளி எழ, இரு திறத்துச் சேனைகளும் வந்து நெருங்குதல்
$28.64

#64
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான்
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே

மேல்
$28.65

#65
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும்
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே

மேல்
*’போர் முடிய எத்தனை நாள் செல்லும்?’ என்று வினாவிய
*துரியோதனனுக்கு வீடுமன் விடைபகர்தல்
$28.66

#66
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும்
துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன்
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான்

மேல்
$28.67

#67
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும்
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில்
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும்
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ

மேல்
*விசயன் எதிர்ப்பக்கத்தேயுள்ள குரவரையும் துணைவரையும்
*கண்டு, மனம் அழிந்து பின்னடைய, கண்ணன் உரைசெய்தல்
$28.68

#68
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும்
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான்
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான்

மேல்
$28.69

#69
நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும் நீள் கிளைஞரும் துணைவரும்
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே
என்று பல பேசி அதி பாதகம் என கருதி யான் மலைவுறேன் இனி எனா
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான்

மேல்

29. முதற் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$29.1

#1
மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி
யாவரும் யாவும் ஆகி இறைஞ்சுவார் இறைஞ்ச பற்பல்
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே

மேல்
*கண்ணன் தத்துவம் உணர்த்தி விசயனது மயக்கத்தைத் தெளிவித்தல்
$29.2

#2
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி
தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான்
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த
நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்

மேல்
$29.3

#3
குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே
அயின்று முக்குணங்களோடும் அறு வகை படைகளோடும்
பயின்று அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்கு
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்

மேல்
$29.4

#4
அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்
தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும்
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும்
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர்

மேல்
$29.5

#5
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன்
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும்
நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்

மேல்
$29.6

#6
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள்
நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம்

மேல்
$29.7

#7
பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம்
இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே

மேல்
*வந்த மன்னவரைத் தருமன் எதிர்கொண்டு, துரியோதனன்
*நாடு தர மறுத்துப் போர் புரிய முன் வந்ததைக் கூறுதல்
$29.8

#8
தான் வணங்குநர் தன் கழல் வணங்குநர் தங்களை தழீஇக்கொண்டு
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான்

மேல்
*கண்ணன் பாண்டவருடன் வீடுமனை அடுத்து, ‘நீயே
*போர் செயின் வெல்லுதல் கூடுமோ?’ என்ன,
*அவன் தன்னை வெல்லும் உபாயம் உரைத்தல்
$29.9

#9
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும்
பாண்டவர்-தாமும் ஆக பகீரதி மைந்தன்-தன்பால்
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன்
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான்

மேல்
$29.10

#10
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம்
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள்

மேல்
$29.11

#11
பன்னு சீர் யாகசேனன் குமரனை பத்தாம் நாளில்
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன்
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு
கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன்

மேல்
$29.12

#12
நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார்
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான்

மேல்
*பின் துரோணனிடம் சென்று, ‘நீ அருள் செயின்
*இவர்க்கு வாழ்வு உண்டு’ என்ன, அவன் தான்
*மாளும் வகை உரைத்தல்
$29.13

#13
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண்
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம்
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே

மேல்
$29.14

#14
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான்
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில்
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன்
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே

மேல்
$29.15

#15
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும்
தன் பெரும் சாபத்தாலும் சமரிடை திட்டத்துய்மன்
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான்

மேல்
*பின், பாண்டவர் சேனையை அசல_வியூகம் வகுத்து,
*விந்தையை வணங்கி, மாயோன் சொன்னதும்
*போர் தொடங்குதல்
$29.16

#16
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம்
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார்
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம்
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார்

மேல்
$29.17

#17
கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும்
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன்
சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே

மேல்
*முரசும் சங்கும் முழங்க, சேனைகள் ஒன்றோடொன்று பொருதல்
$29.18

#18
புரசை யானை பொரு பரி தேருடை
அரசன் மா துவசத்தனஆதலால்
குரைசெய் வான் பணை குப்பைகள் யாவினும்
முரச சாலம் முழங்கின சாலவே

மேல்
$29.19

#19
மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய்
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால்
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா
சலஞ்சலத்தொடும் சங்கொடும் ஆர்த்தவே

மேல்
$29.20

#20
சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன
நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன
வென்றி வீரரும் வீரரும் மேவினார்

மேல்
$29.21

#21
பார வாளமும் வாளமும் பாய்ந்தன
கூர வேல்களும் வேல்களும் குத்தின
வீர சாபமும் சாபமும் வீக்கின
தூர வாளியும் வாளியும் தோய்ந்தவே

மேல்
$29.22

#22
இட்ட தார் முடிமன்னவரோடு எதிர்
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார்
பட்டவர்த்தன பார்த்திவர்-தம்முடன்
பட்டவர்த்தன பார்த்திவர் எய்தினார்

மேல்
$29.23

#23
மந்திரத்தவர் தம்முடன் மா மதி
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார்
தந்திரத்தவர் தம்மிசையே செல
தந்திரத்தவர் சாயகம் ஏவினார்

மேல்
$29.24

#24
மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே
மண்டலீகர் தம் வாட்படை ஓச்சினார்
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார்

மேல்
*அம்பினால் அவயவம் இழந்து நிற்போரின் நிலை
$29.25

#25
முடி இழந்த நிருபர் முகுந்தனால்
இடி படும் தலை ராகுவொடு ஏயினார்
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும்
தொடி நெடும் கை வலவனின் தோன்றினார்

மேல்
$29.26

#26
பூபர் தங்கள் புயங்களும் மார்பமும்
சாப வெம் கணை தைத்து உகு சோரியால்
தீபம் என்னவும் செம் மலர் கோடுடை
நீபம் என்னவும் நின்றனர் ஆண்மையால்

மேல்
*அம்பு முதலிய இழந்து நின்ற போது வீரர்கள்
*காட்டிய தீரச் செயல்கள்
$29.27

#27
கையில் வாளி தொலைந்த பின் காய்ந்து தம்
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார்
பொய் இலா மொழி பூபதி சேனையின்
மை இல் ஆண்மையினார் சில மன்னரே

மேல்
$29.28

#28
வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு
கலக்கம் அற்ற வெம் கார்முகத்தார் சிலர்
துலக்கு எயிற்று கணை தொடுத்தார் தொடை
இலக்கம் அற்ற படை இலக்கு ஆகவே

மேல்
$29.29

#29
தாள் இரண்டுடை சிங்கம் அன்னார் சிலர்
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார்
கோள் இரண்டும் என குறுகார் தடம்
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே

மேல்
$29.30

#30
ஓடி முட்டலின் தேர்கள் உடைந்தன
நாடி முட்டலின் நாகங்கள் வீழ்ந்தன
கூடி முட்டலின் கொய்யுளை மாய்ந்தன
சாடி முட்டலின் ஆள்களும் சாய்ந்தனர்

மேல்
$29.31

#31
பற்றி நின்று ஒருவன் படை வாள் எதிர்
உற்றவன் தலை சிந்திட ஓச்சினான்
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை
செற்றவன் தலை சிந்திட வீசினான்

மேல்
$29.32

#32
புங்கம் மெய் புதைய புதைய சிலர்
சிங்கம் என்ன செருக்களத்து ஆடினார்
கங்கம் இட்ட பைம் காவண நீழலில்
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே

மேல்
$29.33

#33
வாளி ஆயிரம் தைத்த வழி எலாம்
ஓளியாக ஒழுகும் குருதியால்
தாள் இலான் நடத்தும் தடம் தேருடை
மீளி ஆம் என நின்றனர் வீரரே

மேல்
$29.34

#34
வெட்டினார் படை மெய்யில் படாமை நின்று
ஒட்டினார் இமைப்போதினில் ஓடியே
தட்டினார் உடலை தழுவிக்கொடு
கட்டினார் விழுந்தார் சில காளையர்

மேல்
*பல தேச மன்னர்களும் நெருங்கிப் பொருதல்
$29.35

#35
கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும்
கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும்
வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும்
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே

மேல்
*விசயன் வீடுமனுக்கு எதிரே போர் தொடங்குதல்
$29.36

#36
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண்
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும்
மிசை எழும் துகளால் இமைத்தனர் மேலை நாகரும் வெம் கழுத்து
அசைய நின்று சுமந்து இளைத்தனர் கீழை நாகரும் அடையவே

மேல்
$29.37

#37
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும்
சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான்
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார்

மேல்
*வீடுமனும், அவனுக்கு உதவியாக வந்தவரும் சலிக்கும்
*வண்ணம் வீமன், அபிமன் முதலியோர் பொருதல்
$29.38

#38
வன் பனை கொடி மீது பன்னிரு வாளி மெய் கவசத்தின் மேல்
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான்
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும்
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே

மேல்
$29.39

#39
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர்
வாசி நாலும் விழ தொடுத்தனன் வாளி நால் அபிமன்னுவும்
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே

மேல்
*சல்லியன் வேலால் உத்தரன் மடிய, வீமன் வெகுண்டு வருதல
$29.40

#40
வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார்
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான்
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல்
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான்

மேல்
$29.41

#41
இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார்
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல்
அன்று பட்ட கலக்கம் அப்படி ஐவர்-தம் படை அமரின் மேல்
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே

மேல்
$29.42

#42
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன்
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன்
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே

மேல்
*வீமன் துரியோதனனுடன் பொருது, அவனது வில்லை ஒடித்து,
*தேரையும் எடுத்து எறிய, மன்னர் பலர் துரியோதனனுக்கு உதவ வருதல்
$29.43

#43
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான்
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்

மேல்
$29.44

#44
மோதி ஆயிர பேதமாக முனைந்து தங்களில் இருவரும்
சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார்
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம்
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான்

மேல்
$29.45

#45
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும்
போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில்
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர்

மேல்
$29.46

#46
பரித்த தேரொடு பரிதியை செறி பரிதி போல் இரு பக்கமும்
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார்

மேல்
*வீமன் கதை கொண்டு பொர, சிவேதனும் ஈசன்
*அளித்த வில்லோடு தோன்றுதல்
$29.47

#47
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான்
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால்

மேல்
$29.48

#48
அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின் மேல்
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என
தும்பையுற்று மிலைச்சி ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான்

மேல்
*சிவேதன் சல்லியனிருக்குமிடம் நாடிச் சென்று, பொருதல்
$29.49

#49
சங்கு இனங்கள் முழங்கவும் பணை முரசு இனங்கள் தழங்கவும்
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும்
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய்
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான்

மேல்
$29.50

#50
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன்
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான்
பல்லியம் முழக்கியது என பலவும் வீரம்
சொல்லி ஒருவர்க்கொருவர் தொடு சிலை குனித்தார்

மேல்
*துரியோதனன் சல்லியனுக்கு உதவியாகத் தன் தம்பியர்
*அறுவரை விடுத்தல்
$29.51

#51
ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை என உற்றே
இருவரும் மலைந்திட இராச குலராசன்
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான்

மேல்
$29.52

#52
தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார்
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த
கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான்

மேல்
$29.53

#53
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான்
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல்
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான்

மேல்
$29.54

#54
தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள்
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான்

மேல்
*துரியோதனன் தூண்டுதலால் வீடுமன் சிவேதனை எதிர்த்தல்
$29.55

#55
பட்டன ஒழிந்த பல படையும் இவன் அம்பில்
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல்
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான்

மேல்
$29.56

#56
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல்
அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான்
சித்திரம் எனும்படி திகைத்தனன் விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான்

மேல்
$29.57

#57
வீடுமனும் மீள ஒரு விற்கொடு சிவேதன்
சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான்
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர்
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான்

மேல்
$29.58

#58
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம்
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான்
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு ஆங்கு
என்ன அமர் செய்வது இனி என்று தளர்வுற்றான்

மேல்
*வீடுமன் தளர்வுற, துரியோதனன் மன்னர் பலரை ஏவுதலும்,
*அவர் சிவேதன் எதிர் நிற்கலாற்றாது தோற்றோடுதலும்
$29.59

#59
தளர்ந்த நிலை கண்டு துரியோதனன் அரும் போர்
விளைந்தது சிவேதனுடன் வீடுமன் இளைத்தான்
இளந்தலை உறாதபடி ஏகு-மின் என போய்
கிளர்ந்த முடிமன்னர் பலர் கிட்டினர் விரைந்தே

மேல்
$29.60

#60
அந்த முடிமன்னவர் அநேகரையும் முன்னம்
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான்
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும்
சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே

மேல்
$29.61

#61
வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர்
ஐவரையும் ஏவினன் முனைந்தனர்கள் அவரும்
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும்
கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான்

மேல்
*வீடுமன் சிவேதன் எதிர் மீண்டும் சென்று, வில்
*இழந்து நிற்றல்
$29.62

#62
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான்
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள
பங்கம் உற வில் துணி படுத்தி எதிர் நின்றான்

மேல்
$29.63

#63
ஆன பொழுது அந்தரம் நெருங்கி அமர் காணும்
வானவர் விராடபதி மைந்தனை மதித்தார்
வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும்
கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால்

மேல்
$29.64

#64
ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால்
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார்
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார்

மேல்
*’வில் ஒழிய வேறு படை கற்றிலையோ?’ என்று வீடுமன்
*வினாவ, சிவேதன் வாள் கொண்டு பொருதல்
$29.65

#65
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன்
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான்
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும்
வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய்

மேல்
$29.66

#66
என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான்
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான்
நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான்

மேல்
*வீடுமன் தன் வில்லால் சிவேதன் கை ஒன்றைத்
*துணித்து, உயிரையும் கவர்தல்
$29.67

#67
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன்
தோள் இணையில் ஒன்று துணிய கணை தொடுத்தான்
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால்
மீளவும் வெகுண்டு சுடர் வாளினை எடுத்தான்

மேல்
$29.68

#68
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம்
தொடுத்து வரு வீடுமனை மா முடி துணிப்பான்
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால்
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான்

மேல்
*வானோர் மகிழ, துரியோதனன் பக்கத்து
*அரசர்கள் மகிழ்வடைதல்
$29.69

#69
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார்
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம்

மேல்
*படுகளக் காட்சிகள்
$29.70

#70
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில்
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும்
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண்
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும்

மேல்
$29.71

#71
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம்
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும்
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும்

மேல்
$29.72

#72
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும்
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம்
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும்

மேல்
*சூரியன் மறைய யாவரும் தத்தம் பாடிவீடு அடைதல்
$29.73

#73
பட்ட நுதல் களி யானை பாண்டவர்-தம் படை தலைவன் பட்டானாக
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில்
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா

மேல்
*புதல்வரை இழந்த விராடனுக்கு, கண்ணனும் தருமனும் தேறுதல் உரைத்தல்
$29.74

#74
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர்
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார்

மேல்
$29.75

#75
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல்
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன்
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில்
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான்

மேல்
*தன் உயிரும் தருமனுக்கு உரியதே என விராடன் மறுமொழி பகர்தல்
$29.76

#76
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன்
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார்
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின்
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான்

மேல்
*இரவி எழ, இருள் மறைதல்
$29.77

#77
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண்
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும்
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான்
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா

மேல்

30. இரண்டாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$30.1

#1
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன
அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன்
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம்

மேல்
*திட்டத்துய்மனைச் சேனாபதியாகக் கண்ணன் நியமித்தல்
$30.2

#2
சோனை மேகம் என்ன வாளி தூவு திட்டத்துய்மனை
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான்
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய்
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான்

மேல்
*இருபக்கத்துச் சேனைகளும் களத்தில் வந்து கலத்தல்
$30.3

#3
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும்
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன வெருவரும்
கவ்வையோடு வந்து வெம் களத்திடை கலந்தவே

மேல்
$30.4

#4
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில்
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என
இம்பரார் நடுங்கினார் இரங்கு பல்லியங்களால்

மேல்
*தருமன் தம்பியர் முதலியோர் சூழ, திட்டத்துய்மனோடு
*களத்தில் அணி வகுத்து நிற்றல்
$30.5

#5
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு
இளவலோடு கச துரங்கமங்களோடும் இடம் வர
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும்
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர

மேல்
$30.6

#6
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல
நடுவு நால் வகை படும் பதாதியோடு நாயகன்
கடக நாதனுடன் அணிந்து நின்றனன் களத்திலே

மேல்
*வீடுமன் அணிவகுத்து, துரியோதனனோடு நடுவண் நிற்றல்
$30.7

#7
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும்
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும்
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும்
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான்

மேல்
*திட்டத்துய்மன் துரோணனோடு பொருது தோற்று ஓடுதல்
$30.8

#8
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல்
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து
ஆசுகங்கள் வீசவீச அந்தரம் புதைந்தவே

மேல்
$30.9

#9
சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும்
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான்
உற்கை என்ன ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே

மேல்
$30.10

#10
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான்
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே

மேல்
*சேனைத் தலைவன் நிலை கண்டு, வீமன் தேரில் நெருங்கி
*வந்து பொர, சக்கரதேவன் எதிர்த்தல்
$30.11

#11
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான்
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து வீமசேனன் வேலையை
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான்

மேல்
$30.12

#12
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர்
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன்
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன்
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான்

மேல்
*தூசியிலுள்ள யானைப்படை வீமனால் அழிந்தமை கண்டு,
*சக்கரதேவன் வில் ஏந்தி வருதல்
$30.13

#13
கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன்
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும்
துதிக்கை வன் கரங்களால் சுற்றி எற்றினான்
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே

மேல்
$30.14

#14
மின் பொழி படையுடை மேவலார் உடல்
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன்
தன் பெரும் துணைவனாம் தாம மாருதி
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே

மேல்
$30.15

#15
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத
தும்பி மேல் விழவிழ தும்பி வீசுவ
பம்பி மேல் எறிதரு பவனனால் கடல்
அம்பி மேல் விழ விழும் அம்பி போன்றவே

மேல்
$30.16

#16
வரு களிறு ஒரு கையால் வாங்கி வீசலின்
பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள்
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே

மேல்
$30.17

#17
கழல் அணி பொலம் கழல் காளை கைகளால்
எழஎழ மத கரி எடுத்து வீசலின்
விழுவன அன்றி மேல் விசையின் போவன
பழைய கல் சிறகுடன் பறப்ப போன்றவே

மேல்
$30.18

#18
புகலுறு கலிங்கர்_கோன் போரில் வென்னிட
இகலுடன் எடுத்துஎடுத்து இவன் எறிந்தபோது
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும்
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே

மேல்
$30.19

#19
வென்னிடு கட கரி வீரன் வீமன் முன்
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு
என் இது என மொழிந்து ஏறு தேரொடும்
தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான்

மேல்
$30.20

#20
களத்திடை மடிந்தன கலிங்கன் வேழம் என்று
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட
தள தரணிபர் எனும் தானை யானைகள்
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே

மேல்
*கலிங்கமன்னன் சக்கரதேவனும் அவன் மைந்தர்களும்
*மாண்டமை கண்டு, வீடுமன் வீமனோடு
*நெருங்கி வந்து பொருதல்
$30.21

#21
கந்து அடர் களிற்றுடன் கலிங்க பூபதி
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின்
இந்திரனால் சிறகு இழந்த குன்று போல்
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே

மேல்
$30.22

#22
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான்
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல்
தோமரம் ஒன்றினால் துணித்து வீழ்த்தினான்

மேல்
$30.23

#23
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும்
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன்

மேல்
$30.24

#24
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர்
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே

மேல்
*வீடுமனும் வீமனும் ஒத்துப் பொருகின்ற நிலையில், அபிமன் உதவிக்கு வருதல்
$30.25

#25
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும்
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார்
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே

மேல்
$30.26

#26
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர்
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன்
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ

மேல்
*வீமனும் அபிமனும் வீடுமனை வளைத்துப் பொர, துரியோதனன்
*உதவிக்குப் பல மன்னர்களை அனுப்புதல்
$30.27

#27
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும்
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில்
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச
காவலன் உரைப்ப இருவோரையும் வளைத்தனர்கள் காவலர் எனை பலருமே

மேல்
*அது கண்டு, அருச்சுனன் வீம அபிமருக்குத் துணையாக வருதல்
$30.28

#28
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே
வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன்
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான்

மேல்
*வீடுமன் படை பின்னிட்டுப் பாசறையை நோக்கி ஓடுதல்
$30.29

#29
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில்
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார்
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும்
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே

மேல்
*சூரியன் மறைவும், வீரர்கள் பாடிவீடு புகுதலும்
$30.30

#30
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார்
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன்
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான்
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான்

மேல்
$30.31

#31
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால்
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய்
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே

மேல்
*பின்னிட்டு வந்த அரசர்களைத் துரியோதனன் அச்சுறுத்துதல்
$30.32

#32
கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ
மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே

மேல்

31. மூன்றாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$31.1

#1
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல்
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும்
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார்

மேல்
*வீடுமன் கருட வியூகமும், கண்ணன் அர்த்த
*சந்திர வியூகமும் வகுத்தல
$31.2

#2
ஏலா அமரில் மூன்றாம் நாள் இரண்டு படையும் திரண்டு ஏற
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம்
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல்
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே

மேல்
$31.3

#3
போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த
காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல்
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே

மேல்
*விசயனையும் அபிமனையும் வீடுமன் முதலியோர் வளைத்தல
$31.4

#4
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும்
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும்
வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும்
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே

மேல்
*துரியோதனன் முதலியோர் வீமனை வளைத்துப் போர் புரிதல்
$31.5

#5
சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும்
ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும்
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க
வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே

மேல்
$31.6

#6
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும்
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும்

மேல்
*கடோற்கசன் அம்பால் துரியோதனன் உணர்வு அற்று விழ,
*அபிமன் வேல் எறிந்து அவனது தேர்ச் சாரதியை மாய்த்தல்
$31.7

#7
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன்
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான்
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில்
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன்

மேல்
$31.8

#8
நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன்
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன்
பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே

மேல்
*செய்தி கேட்ட வீடுமன் விசயனையும் கண்ணனையும் விடுத்து,
*துரியோதனன் கிடந்த இடம் வந்து, அவனை எடுத்துத்
*தேர்மேல் கொண்டு மூர்ச்சை தெளிவித்தல்
$31.9

#9
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர்
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு
செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய்
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான்

மேல்
$31.10

#10
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில்
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே

மேல்
*துரியோதனனைப் படை வகுப்பில் நிறுத்தி, கடோற்கசன், அபிமன்,
*முதலிய வீரர்கள் பின்னிடுமாறு வீடுமன் வெம்போர் புரிதல்
$31.11

#11
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என
மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய்
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான்

மேல்
$31.12

#12
மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும்
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து
தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில்
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே

மேல்
*வீடுமனது போர் கண்டும் விசயன் வாளா இருக்கவே,
*கண்ணன் ஆழியுடன் தேரிலிருந்து இறங்குதலும்,
*விசயன் ஓடி அவன் பாதத்தைத் தொழுது துதித்தலும்
$31.13

#13
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும்
தொலையத்தொலைய யாவரையும் சுடு வெம் கணையால் துரந்துதுரந்து
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான்

மேல்
$31.14

#14
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும்
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே

மேல்
$31.15

#15
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான்
ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும்
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான்

மேல்
*அது கண்டு, வீடுமனும் தன் தேரினின்று
*இறங்கி, கண்ணனைத் துதித்தல்
$31.16

#16
வாசவன் முன் பெறு காளை தொழத்தொழ மாறுபட சினவும்
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன்
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா

மேல்
$31.17

#17
ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழியிடை துயிலும்
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும்
நாரண அற்புத வானவருக்கு ஒரு நாயக நின் பணியும்
வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே

மேல்
$31.18

#18
ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள்
மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால்
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே

மேல்
$31.19

#19
வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான்
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே
யானும் இனி பிறவாமல் அளித்தருள் ஈச என பரவா
ஞான மனத்தொடு நா குழற பல நாடி உரைத்தனனே

மேல்
*கண்ணன் சினம் ஆறி நிற்க, தான் பொருவதாகச் சொல்லி,
*கண்ணனுடன் தேரில் சென்று, விசயன் கடும் போர் விளைத்தல்
$31.20

#20
ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும் ஆடல் அருச்சுனனும்
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே

மேல்
$31.21

#21
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால்
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால்
ஈறு படுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவரே

மேல்
$31.22

#22
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம்
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால்
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம்
காய் கரி பட்டன பாய் பரி பட்டன காவலர் பட்டனரே

மேல்
$31.23

#23
நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும்
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர்
ஓடி ஒளித்தனர் ஆடு அமரில் துரியோதனனுக்கு இளையோர்
வாடி ஒளித்தனர் மாகதர் ஒட்டியர் மாளவர் குச்சரரே

மேல்
*விசயன் அம்பினால் பகைவர் சாயக் கண்ணன்
*மகிழ்வுறுதலும், வீடுமன் முதலியோர் மன்னனைக்
*காத்துப் பாசறை கொண்டு செல்லுதலும்
$31.24

#24
பார்த்தன் அம்பினால் மேவலார் படை பரவை சாயவே விரவு கோவியர்
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான்
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும்
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார்

மேல்
*படுகளக் காட்சிகள்
$31.25

#25
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே

மேல்
$31.26

#26
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால்
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே

மேல்
$31.27

#27
பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால்
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே

மேல்
*சூரியன் மறைதலும், அன்றைய நிகழ்ச்சிகள் குறித்துப்
*பாசறையில் வீடுமன் பேசியிருத்தலும்
$31.28

#28
அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின்
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான்
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும்
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன்

மேல்
*தருமன் சேனை மகிழ்வாலும், துரியோதனன் சேனை
*வருத்தத்தாலும், கண்ணுறங்காது இரவைக் கழித்தல்
$31.29

#29
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன்
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார்
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார்
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம்

மேல்
*சூரியன் கதிர் பரப்பி எழுதல்
$31.30

#30
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான்
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன்

மேல்

32. நான்காம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$32.1

#1
தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள்
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள்
ஓடிய சகடு இற உதைத்து பாம்பின் மேல்
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள்

மேல்
*இருவர் சேனையும் பொங்கிப் போருக்கு எழுதல்
$32.2

#2
நல் பகலிடை வரு நளின நாயகன்
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான்
பின் பகல் அணியையும் பிறங்கு சேனையால்
முன் பகல் வியூகமே ஆக மூட்டினான்

மேல்
$32.3

#3
கார் முகில் வண்ணனை கண்டு காணலார்
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார்
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும்
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே

மேல்
$32.4

#4
ஏழ் இரு புவனமும் ஏந்து மேருவை
சூழ்வன கிரி குழாம் சுற்றுமாறு போல்
பாழி அம் புய கிரி பவனன் மைந்தனை
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே

மேல்
*யானைப் படைகளை வீமன் அழித்தவகை
$32.5

#5
ஆலாலம் என கதுவா அதிரா
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால்
ஏலா உடல் என்பு உக மோத வெறும்
தோல் ஆயின சிற்சில தோல் இனமே

மேல்
$32.6

#6
மேல் வாய் தம கையொடு மேல் எழவும்
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா
மால் வாரணம் வாய்கள் கழன்றன முன்
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே

மேல்
$32.7

#7
மதி வெண்குடை மாருதி வன்புடனே
குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால்
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும்
எதிர் சிந்துரம் ஆகி இளைத்தனவே

மேல்
$32.8

#8
உடலில் தசை யாவும் உடைந்து நெடும்
குடல் அற்று விழும்படி குத்துதலான்
மிடல் பற்றிய வீமன் வெறும் கைகளால்
அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே

மேல்
$32.9

#9
கந்தாவகன் மொய்ம்பு உறு காளை புய
கந்தால் அமர் செய்து கலக்குதலின்
தந்தாவள சேனை தரிப்பு அறவே
தம் தாவளம் உற்றன சாயுறவே

மேல்
$32.10

#10
வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு ஒரு தோல்
மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால்
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து
அ வாரணம் வாரணம் ஆகியதே

மேல்
$32.11

#11
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும்
கும்பித்தன வாயு_குமாரன் இவன்
அம் பொன் கர பங்கயம் அள்ளுதலின்
தும்பி குலம் ஆயின தும்பிகளே

மேல்
$32.12

#12
மின் நாக மணி புயன் வெம் கதையால்
முன்னாக மலைந்து முருக்குதலால்
எ நாகமும் நாகம் எனும்படியே
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே

மேல்
$32.13

#13
கோடும் கரமும் பறிய குதிகொண்டு
ஓடும் குருதி புனலூடு உடலம்
மூடும்படி யாவரும் மூழ்குதலால்
ஆடும் கயம் ஆயின அ கயமே

மேல்
$32.14

#14
வீசும் தம கை முதல் மெய் முழுதும்
கூசும்படி சிற்சில் குழம்புகளாய்
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல்
பூசும் களப களி போன்றனவே

மேல்
$32.15

#15
கிரியே என வந்து எதிர் கிட்டின புன்
பொரியே என வானிடை புக்கன போர்
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம்
கரியே கரி அல்லது கண்டவர் யார்

மேல்
$32.16

#16
இவ்வாறு வெகுண்டு இவன் எற்றுதலும்
கை வாரண வேலை கலக்கம் உற
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும்
வெவ் வாசிகள்-தம்மொடும் வென்னிடவே

மேல்
*அது கண்டு துரியோதனன் தம்பியர்
*முதலியோருடன் சென்று எதிர்த்தல்
$32.17

#17
உடைகின்றமை கண்டு உரக துவசன்
குடையும் கொடியும் குளிர் மா முரசும்
படையும் சில தம்பியரும் பலரும்
புடைகொண்டு வர போனான் அவன் மேல்

மேல்
$32.18

#18
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும்
சேம கவசம் சிதைவுற்றிடவும்
நாம கணை ஏவினன் நாயகனாம்
மா முத்த மதி குடை மன்னவனே

மேல்
$32.19

#19
ஆறு அம்பினில் அற்று அரவ துவசம்
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன பின்
வேறு அம்பு தொடுத்திலன் வீமன் அவன்
மாறு அம்பு தொடுத்தனன் மற்று இவன் மேல்

மேல்
$32.20

#20
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று
அங்கத்தில் நுழைந்தன அம்புகளும்
துங்க கடக திரள் தோள் புடையா
வெம் கண் கனல் வீமன் வெகுண்டனனே

மேல்
*வீமன் வெகுண்டு பொர, அவனுக்குத்
*துணையாகத் தம்பியர் முதலியோர் வருதல்
$32.21

#21
நொந்தான் இவன் என்று நுதி கதிர் வேல்
அம் தார் முடிமன்னர் அநேகருடன்
வந்தார் பலர் தம்பியர் மைத்துனரும்
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே

மேல்
$32.22

#22
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு
அலரும் கொடி வாள் அரவோன் அருகே
பலரும் கரி தேர் பரி ஆளுடனே
சிலரும் புவிபாலர் திரண்டனரே

மேல்
*வீமன் கணையால் துரியோதனன் தளர, சகுனி சல்லியன்
*முதலியோர் வந்து, அவனை எடுத்து அணைத்தல்
$32.23

#23
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று
அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம்
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும்
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில்

மேல்
$32.24

#24
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய
சேம கவன பவன கதி பரிமா நான்கும் சிரம் துணிய
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே

மேல்
$32.25

#25
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான்
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன்
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர்

மேல்
*தமையன் நிலை கண்டு தம்பியர் முனைந்து பொருதல்
$32.26

#26
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள்
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார்

மேல்
*துரியோதனன் தம்பியரில் ஐவர் வீமன் கணையால் மாளுதல்
$32.27

#27
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி

மேல்
$32.28

#28
சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன்
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும்
வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும்
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன்

மேல்
*துரியோதனன் சேனைகள் சிதற, பகதத்தன்,
*’அஞ்சல்!’ என்று அவர் எதிர் சென்று பொருதல்
$32.29

#29
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன்
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை

மேல்
$32.30

#30
விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன்
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால்
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன்
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான்

மேல்
$32.31

#31
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில்
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான்
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான்
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான்

மேல்
$32.32

#32
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும்
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும்
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே

மேல்
*பகதத்தன் வரவால் சேனை தளர்தல் கண்டு, கடோற்கசன்
*பல வேறு மாய வடிவம் கொண்டு மலைதல்
$32.33

#33
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும்
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும்
சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம்
மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான்

மேல்
$32.34

#34
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத
சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும்
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான்

மேல்
$32.35

#35
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம்
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம்

மேல்
*கடோற்கசன் வெற்றிபெற, பகதத்தன் தப்பி
*ஓடுதலும் சூரியன் மறைதலும்
$32.36

#36
நின்றார் நின்றபடி கடிதாக நெடிது ஓடி
சென்றார் கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின்
கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார்
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர்

மேல்
$32.37

#37
ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர்
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும்
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான்

மேல்
*இரு திறத்தாரும் தத்தம் பாசறை புகுதல்
$32.38

#38
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று
சேர்ந்தசேர்ந்த மன்னவரோடும் திறலோடும்
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும்
வேந்தனோடும் பாசறை புக்கான் வீடும்மன்

மேல்
*மைந்தர் ஐவரின் மறைவு தெரிந்து காந்தாரி அழுது சோர்தல்
$32.39

#39
பூண் பாய் மார்பின் புத்திரர்-தம்மை பொலிவோடும்
காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர்
தூண் பால் ஆகி சோர்தர உள்ளம் சோர்வுற்றாள்

மேல்
$32.40

#40
கொன்னே குந்தி மைந்தர் இருக்க கொலையுண்டீர்
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள்
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள்

மேல்
$32.41

#41
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர்
ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள்
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி
ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள்

மேல்
*இருள் அகல, இரவி தோன்றுதல்
$32.42

#42
ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல்
மீளா ஓடிற்று அ திசை வானோன் மிளிர் சென்னி
சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா

மேல்

33. ஐந்தாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$33.1

#1
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல்
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய்
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார்

மேல்
*இரு மன்னர் தானைகளும் திரண்டு போருக்கு எழுதல்
$33.2

#2
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும்
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே

மேல்
$33.3

#3
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ
பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும்
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும்

மேல்
*கண்ணனுடன் தேரில் விசயன் புறப்படுதல்
$33.4

#4
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே
புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன்

மேல்
*விசயன் வீடுமனை அடுக்கும் எல்லையில், எதிர்த்த
*கலிங்கர் அவன் அம்பினால் புண்ணுறுதல்
$33.5

#5
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே

மேல்
$33.6

#6
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன்
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய்
நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை மூழ்கினார்

மேல்
*அது கண்டு வீடுமன் அம்பு தொடுக்க, விசயன்
*அவனது வில் முதலியவற்றைத் துணித்தல்
$33.7

#7
செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார்
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான்
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான்
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே

மேல்
*இவர்கள் இங்ஙனம் பொர, வீமனைத் துச்சாதனன்
*முதலியோர் வளைந்து பொருது தோற்று ஓடுதல்
$33.8

#8
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும்
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான்

மேல்
$33.9

#9
துச்சாதனன் தம்பிமார் மைந்தர் மற்றும் சகுனி சல்லியன்
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார்
அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே

மேல்
*தம்பியர் நிலைகண்டு, துரியோதனன் சினத்துடன்
*தேரில் வந்து வீமனுடன் பொருதல்
$33.10

#10
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன்
கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன்

மேல்
$33.11

#11
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும்
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான்
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம்
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே

மேல்
$33.12

#12
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும்
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே

மேல்
*துரியோதனன் ஓர் அம்பு பட்டு அலமர, பூரிசவா
*வந்து வீமன்மேல் இரண்டு அம்பு தொடுத்தல்
$33.13

#13
ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து
ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல்

மேல்
*அது கண்டு, சாத்தகி பூரிசவாவை எதிர்த்து நின்று,
*வில், வாள், முதலியவற்றால் பொருதல்
$33.14

#14
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின்
பவனாகதி பெறு தேரினன் நளினாபதி இளவல்
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான்
தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான்

மேல்
$33.15

#15
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர்
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும்
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே

மேல்
$33.16

#16
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில்
பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு
இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார்

மேல்
$33.17

#17
படிவாய் உடுபதியும் தினபதியும் பொருது எனவே
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால்

மேல்
$33.18

#18
தோலாது அடலொடு சீறின துரகத்தொடு துரகம்
மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள்
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம்
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா

மேல்
*போர்க்களக் காட்சிகள்
$33.19

#19
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய்
ஓடும் குருதியின் வாளைகள் என ஓடின ஒருசார்
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார்

மேல்
$33.20

#20
கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய்
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார்
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார்

மேல்
$33.21

#21
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல்
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார்
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல்
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார்

மேல்
$33.22

#22
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம்
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால
மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து
ஐயாயிரம் முடிமன்னவர் அகல் வானம் அடைந்தார்

மேல்
*சூரியன் குடபால் மறைய, யாவரும் பாசறை சேர்தல்
$33.23

#23
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால்
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன்
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான்

மேல்
$33.24

#24
எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார்
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார்
ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா
அப்போது அனிகத்தோடும் அகன் பாசறை புக்கார்

மேல்
*சூரியன் கீழ்த்திசையில் கிளர்ந்து எழுதல்
$33.25

#25
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர்
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன்
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன்
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான்

மேல்

34. ஆறாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$34.1

#1
கோயில் ஆளுடைய பைம் கொண்டலார் கண் துயில்
பாயலாய் வாழ நீ பாக்கியம் செய்தது என்
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின்
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே

மேல்
*திட்டத்துய்மன் மகர_வியூகம் வகுத்துக் களத்து நிற்க,
*வீடுமன் கிரவுஞ்ச வியூகம் வகுத்து நிற்றல்
$34.2

#2
பயிலும் வெம் பாசறை பாண்டவர் ஐவரும்
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார்
சயில வெம் கட கரி தானையும் தாமுமே

மேல்
$34.3

#3
பகுத்த பல் அணிகளின் பான்மை அக்குரோணியாய்
மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை
தொகுத்து வண்டு இமிர் தொடை துருபதன் திருமகன்
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே

மேல்
$34.4

#4
போகமும் தருமமே ஆன மெய் புனிதனும்
நாக வெம் கொடியுடை நாயக குரிசிலும்
வேக வெம் படையுடை வேந்தரும் சேனையும்
ஆகவம் குறுகினார் ஆரவம் பெருகவே

மேல்
$34.5

#5
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம்
தெரிஞ்சுகொண்டு ஈர்_இரு திசையினும் செல்லவே
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன்
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான்

மேல்
*இருபக்கத்தாரும் மாறுபட்டுப் பொருதல்
$34.6

#6
இந்திரன் முதலிய இமையவர் தங்களால்
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு
உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார்

மேல்
*துரோணன் தேர் ஊர்ந்து வீமனோடு பொர, ஆசிரியனது
*தேர்க்குதிரைகளையும் பாகனையும் அழித்தல்
$34.7

#7
பரவி நால் வித வய படைஞரும் சூழ வாள்
இரவி நான் வெம் பகை இருளினுக்கு என்று தன்
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான்
விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே

மேல்
$34.8

#8
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும்
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும்
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான்

மேல்
*அப்பொழுது சல்லியன் வீரம் பேசி வர,
*அவன் வீமனால் தேரோடும் எற்றுண்ணல்
$34.9

#9
சூழி வெம் கச ரத துரகத நிருபரை
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே
தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான்

மேல்
$34.10

#10
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என
வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும்
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே

மேல்
*சல்லியன் தளர்வு கண்டு, துரியோதனன் சகுனி
*முதலியோருடன் வந்து பொருதல்
$34.11

#11
சல்லியன்-தன் பெரும் சலிவு கண்டு அங்கையின்
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என
பல்லியங்களும் எழ பாந்தள் அம் பொன் கொடி
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான்

மேல்
$34.12

#12
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம்
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார்
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும்
தம்பியர் யாவரும் மாமனும் தானுமே

மேல்
$34.13

#13
தோன்று அரி துவசனும் சோகம் இல் பாகன் ஊர்
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர்
ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே
போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர

மேல்
$34.14

#14
நின்று இரு சேனையும் நேர்பட வேலினும்
வன் திறல் வில்லினும் வாளினும் மலைவுற
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து
ஒன்றினார் வில் வளைத்து ஒருவருக்கொருவரே

மேல்
$34.15

#15
அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான்
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான்
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார்
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார்

மேல்
*வீமன் கணைகளால் பலர் மடிய, துரியோதனன் முதலியோர்
*வலி இழந்து பின்னிடுதல்
$34.16

#16
வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும்
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன்
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான்

மேல்
$34.17

#17
தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும்
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின்
ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால்
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன் அரோ

மேல்
$34.18

#18
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய்
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய்
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர்
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார்

மேல்
*விகன்னன் வீரர் பலருடன் வந்து, அபிமனோடு பொருது
*தேர் இழந்து, சித்திரசேனன் தேரில் தத்தி ஏறுதல்
$34.19

#19
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும்
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும்
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான்

மேல்
$34.20

#20
மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல்
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின்
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான்

மேல்
*ஏனையோரை அபிமன் அம்பினால் மொத்தி,
*விகன்னனது உடல் சிதையுமாறு கணை தொடுத்தல்
$34.21

#21
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும்
செற்ற விகனனும் முற்றும் இவனொடு செற்றி அமர் பொருகிற்றினார்
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான்

மேல்
$34.22

#22
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண்
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன்
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர்
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே

மேல்
$34.23

#23
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான்
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம்
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது என்ன வெருவினர் துன்னலார்

மேல்
*யாவரும் தம்தம் இருப்பிடம் புக, அபிமனைத்
*தந்தைமார் தழுவிப் பாராட்டுதல்
$34.24

#24
அன்றை அமரினில் ஒன்றுபட அவர் அங்கம் அயர்வுறு பங்கம் ஏது
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார்
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன்
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார்

மேல்
*படுகளக் காட்சிகள்
$34.25

#25
கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ பல கட குஞ்சரம்
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால்
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால்

மேல்
$34.26

#26
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும்
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே

மேல்
$34.27

#27
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண்
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும்
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர் தொழுது துதிக்கவே
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே

மேல்
*சூரியன் மறைதலும் உதித்தலும்
$34.28

#28
இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும்
தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய்
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன்

மேல்

5. ஏழாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$35.1

#1
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர்
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார்
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும்
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே

மேல்
*இரு திறத்தார் சேனைகளும் களம் எய்த,
*கண்ணன் பாம்பு வியூகமும் வீடுமன் சகட வியூகமும் வகுத்தல்
$35.2

#2
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும்
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார்
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும்
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே

மேல்
*பாண்டியன் துரோணனுக்குத் தோற்றோட, கடோற்கசன் மீண்டும் வருதல்
$35.3

#3
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன்
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான்
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே

மேல்
*சாத்தகிக்குச் சுதாயு தோற்க, சகுனி, சல்லியன்,
*முதலானோரை வென்று வீமன் வாகை சூடுதல்
$35.4

#4
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன்
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின்
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே

மேல்
*விசயனும் வீடுமனும் விற்போர் விளைத்தல்
$35.5

#5
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான்
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன்
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே

மேல்
$35.6

#6
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே

மேல்
$35.7

#7
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா
பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார்
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால்
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே

மேல்
*விசய வீடுமர்களால் முந்திய போரினும் மிகப் பல வீரர் மாளுதல்
$35.8

#8
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம்
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால்
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள்
ஆறு போரினும் பட்ட பேரினும் அறுமடங்கு பேர் அன்று பட்டதே

மேல்
*சூரியன் மேல் கடலில் மறைந்து, உதய கிரியில் தோன்றுதல்
$35.9

#9
பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும் பட்டபட்ட போர்
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின்
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய்
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே

மேல்
$35.10

#10
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய்
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார்
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர்
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே

மேல்

36. எட்டாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$36.1

#1
பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும்
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும்
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான்
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே

மேல்
*வீடுமன் சூசி வியூகமும், கண்ணன் சகட வியூகமும் வகுக்க
* தருமனும் துரியோதனனும் போர்க்களத்தை அணுகுதல்
$36.2

#2
நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும்
தரு நிலத்துளோர் காணவும் தருமன் வந்தனன் சமரிலே

மேல்
$36.3

#3
வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன்
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான்
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால்
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே

மேல்
*துரியோதனன் துணைவர்களுடன் கூடி வீமனை வளைத்தல்
$36.4

#4
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக வெம் சூறை போல்
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன்
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன்
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான்

மேல்
*துரியோதனன் தம்பிமாரில் எண்மரை வீமன் வானுலகிற்கு ஏற்றுதல்
$36.5

#5
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும்
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான்

மேல்
$36.6

#6
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே
சுந்தரன் விசாலக்கணன் வீர வாசி பௌதுண்டனும்
அந்த மா மகோதரனுடன் மாகவிந்துவும் அபயனும்
சிந்தினார் களம்-தன்னில் ஆதித்தகேதுவும் சேரவே

மேல்
*துரியோதனன் வீடுமனை அடுத்து, தம்பிமார்
*இறந்தமைக்கு இரங்கி, நெஞ்சழிய, வீடுமன்
*அவனைப் பல வகையால் தேற்றுதல்
$36.7

#7
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புக துள்ளவும்
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும்
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான்

மேல்
$36.8

#8
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய்
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார்
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார்

மேல்
$36.9

#9
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான்
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே

மேல்
$36.10

#10
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும்
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே
சரங்களால் அயிலால் வாளால் தம் பகை செகுத்து தாமும்
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா

மேல்
$36.11

#11
இரும் தனம் படைத்த மாக்கள் இன்பமும் அறனும் அஞ்சார்
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர்
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர்
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார்

மேல்
$36.12

#12
இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும்
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள்
தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா

மேல்
$36.13

#13
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும்
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா

மேல்
$36.14

#14
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான்
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான்
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர்

மேல்
$36.15

#15
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே
செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே
அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும்
இருந்தவர் காண்பது அல்லால் யார்-கொலோ இறக்கலாதார்

மேல்
$36.16

#16
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன்
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால்
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான்

மேல்
*கடோற்கசனும் இராவானும் பல வடிவு கொண்டு போர் செய்ய,
*பகனது தம்பி அலம்புசன் வீமன்மேல் வெகுண்டு பொருதல்
$36.17

#17
காய் இரும் களிற்றின் மேலான் கடோற்கச காளை-தான் ஓர்
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம்
தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான்

மேல்
$36.18

#18
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால்
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான்

மேல்
$36.19

#19
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான்

மேல்
*அலம்புசன் இராவானுக்குத் தோற்று ஓடுதல்
$36.20

#20
என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான்
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன்

மேல்
$36.21

#21
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த
அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும்
புலம்புற பொருதான் அந்த அரக்கனும் புறம்தந்தானே

மேல்
*அலம்புசன் கருடனாகி மீண்டு வந்து,
*இராவானை வாளினால் கொல்லுதல்
$36.22

#22
அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான்
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய்
எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான்

மேல்
$36.23

#23
நின்றவன்-தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி
கொன்றனன் கொன்றானாக குருகுலத்து அரசன் சேனை
வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார்

மேல்
*துரோணனும் அசுவத்தாமனும் பாஞ்சாலர்மேல்
*அம்பு தொடுத்தல்
$36.24

#24
பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால்
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி
பாஞ்சால நாடர் பலரும் பட பாணம் விட்டார்
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும்

மேல்
*இராவான் மறைவு கேட்டு, அபிமன், வீமன்
*முதலியோர் வெகுளி பொங்க வந்து பொருதல்
$36.25

#25
பட்டான் துணைவன் என கேட்டு பரிவு பொங்க
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம்
தொட்டான் பகழி அபிமன்னு தொடுத்தலோடும்
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர்

மேல்
$36.26

#26
மைந்தன் களத்தில் மடிந்தான் என வாயு_மைந்தன்
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான்
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான்

மேல்
*தம்பியரோடும் மன்னர்களுடனும் வந்து துரியோதனன்
*வீமனை வளைக்க, வீமன் அம்பால் அவன் தம்பியர்
*எழுவர் மாளுதலும் அவன் பின்னிடுதலும்
$36.27

#27
சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன
மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர்
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன்

மேல்
$36.28

#28
திளைத்தார் அரசர் திகிரிக்கிரி என்ன ஓடி
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை
உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி
துளைத்தார் கிளைத்தார் விளைத்தார் அமர் தூண்டு தேரார்

மேல்
$36.29

#29
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம்
தொடுத்தான் அவர் மேல் இமைப்போதையில் சூழ்ந்துளோரை
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும்
படுத்தான் எழுவர் இவன் வாளியின் பட்டு வீழ்ந்தார்

மேல்
$36.30

#30
அறம் மிக்க சொல் குண்டலபோசன் அனாதியக்கன்
திறம் மிக்க தீர்க்கநயனன் சிலை திம்மவாகு
மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல்
துறை மிக்க கேள்வி கனகத்துசன் ஆன தோன்றல்

மேல்
$36.31

#31
இ பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர்

மேல்
$36.32

#32
அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி நீயும்
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக என்று சீறி
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன்
புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான்

மேல்
*சூரியன் மேல்பால் மறைதல்
$36.33

#33
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டு
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான்

மேல்
*படுகளக் காட்சிகள்
$36.34

#34
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன்
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான்
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள்
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும்

மேல்
$36.35

#35
பூட்டு அற்ற வில்லின் மிசை சோரி புனலின் வீரர்
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம்
வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும்
சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே

மேல்
$36.36

#36
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம்
நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை
நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே

மேல்
*இரு திறத்தாரும் தத்தம் பாடி வீடு அடைதல்
$36.37

#37
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன்
மின் பாடு இலங்கும் கணை வெம் சிலை வீமனோடு
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர்
தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல்

மேல்
*’இராவான் மறைவுக்கு இரங்கலீர்!’ எனக்
*கண்ணன் ஐவரையும் தேற்றுதல்
$36.38

#38
அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன்
இன்றே இறந்தான் இதற்கு உன்னி இரங்கலீர் என்று
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும்
குன்றே கவித்த குடை கோவலன் கூறினானே

மேல்
*பரிதி குண திசையில் தோன்றுதல்
$36.39

#39
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன்
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம்
தன்னில் கவர்ந்தான் என பண்டையின் தாம மேனி
மின்னி பரிதி குண-பால் திசை மேவினானே

மேல்

37. ஒன்பதாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$37.1

#1
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி
தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர்
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி நின்ற ஒருவன்
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர்

மேல்
*துரியோதனன் முந்திய இரவில் கன்னனை அழைத்துப் போர் செய்யுமாறு
*வேண்ட, அவன், ‘வீடுமன் தோற்றால் நான் பொருவேன்’ எனல்
$37.2

#2
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில்
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும்
மின் போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா இருந்த பொழுதே

மேல்
$37.3

#3
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன்
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல்
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார்

மேல்
$37.4

#4
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான்
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய்
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே

மேல்
$37.5

#5
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன்
சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன்
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே

மேல்
*கன்னன் மொழியை வீடுமனுக்கு உரைக்குமாறு துச்சாதனனைத்
*துரியோதனன் அனுப்ப, அவன் சென்று சொல்லுதல்
$37.6

#6
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர்
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ

மேல்
*துச்சாதனனுக்கு வீடுமன் உரைத்த மறுமொழி
$37.7

#7
பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே

மேல்
$37.8

#8
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே

மேல்
*மறுநாள் வீடுமன் தன் சேனையைச் சருப்பதோபத்திர வியூகமாக வகுத்தல்
$37.9

#9
கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும்
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால்
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால்

மேல்
$37.10

#10
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர்
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன்

மேல்
*தருமனது சேனை பற்ப வியூகம் வகுத்து நிற்றல்
$37.11

#11
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன்
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய்
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர்

மேல்
$37.12

#12
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும்
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே

மேல்
$37.13

#13
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம்
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான்
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால்
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே

மேல்
*அலம்புசன் வந்து, வீமனோடு வாட்போர் செய்து,
*ஒரு கரம் துணிபடுதல்
$37.14

#14
இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர அதிரா
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான்

மேல்
$37.15

#15
செருவில் வெருவா நிருத சேகரன் வய போர்
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான்

மேல்
$37.16

#16
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன்
வாளின் மிசை வாள்-அதனை வைத்து அடல் அரக்கன்
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான்

மேல்
*இருவரும் மற்போர் புரிதல்
$37.17

#17
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று
உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி
மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர்
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான்

மேல்
$37.18

#18
குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல்
மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால்

மேல்
*மற்போர்க்கு இளைத்தபின், அரக்கன்
*விற்போர் தொடங்குதல்
$37.19

#19
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன்
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான்
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான்
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார்

மேல்
$37.20

#20
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து
பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று
இணை இலது இவர்க்கு இனி இரண்டு அனிகினிக்கும்
புணையும் இவர் என்றனர் புரந்தரனொடு இமையோர்

மேல்
$37.21

#21
மலையினையும் வாசுகியையும் பொருவும் நாணும்
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான்
தொலைவு இல் பகையான பகன் மார்பும் இரு தோளும்
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான்

மேல்
*’விற்போர் பயன் இன்று’ என்று அரக்கன் அந்தரம் சென்று,
*மலையைக் கையால் எடுத்து வீமன்மேல் எறிதல்
$37.22

#22
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான்
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய்
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான்

மேல்
*அருகு நின்ற அபிமன் அம்பினால் மலையைத் துகளாக்குதல்
$37.23

#23
எறியும் அளவில் குரிசில் இளவல் திரு மைந்தன்
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான்
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி
முறியும்வகை பல் பகழி முகில் என விடுத்தான்

மேல்
*வீமன் வேலால் அரக்கனை மார்பில் எறிய,
*அவன் இறந்துபடுதல்
$37.24

#24
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும்
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல்
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான்

மேல்
$37.25

#25
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை
முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய்
கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார்

மேல்
*அரக்கரும் பல மன்னர்களும் வீமன் கதையால் மடிதல்
$37.26

#26
ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர்
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால்

மேல்
$37.27

#27
முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன்
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான்
சொல் பகல் இலான் இளவல் என்றனர் துதித்தார்
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம்

மேல்
*காசியர்கள், சேதியர்கள் முதலியோர் விசயன்
*வாளியால் மடிதல்
$37.28

#28
காசியர்கள் சேதியர்கள் மாளவர் கலிங்கர்
பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார்

மேல்
*வீம விசயர்களால் துரியோதனன் சேனை சிதறுதல் கண்டு,
*வீடுமன் வந்து பாஞ்சாலருடன் பொருதல்
$37.29

#29
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால்
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில்
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன்

மேல்
$37.30

#30
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்
திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற
வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும்
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார்

மேல்
$37.31

#31
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள்
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார்
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக
பரியும் தாமும் சிலர் பட்டார் படாதார் உண்டோ பாஞ்சாலர்

மேல்
*சிகண்டியின் கணைக்கு வீடுமன் இலக்காக, துச்சாதனன்
*அம்பு எய்து, சிகண்டியின் தேர் முதலியவற்றைச் சிதைத்தல்
$37.32

#32
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில்
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி
காயும் கணைகட்கு இலக்கு ஆனான் காமன் கணைக்கும் கலங்காதான்

மேல்
$37.33

#33
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா
தொல்லோன் நின்ற நிலை கண்டு துச்சாதனன் தன் சுடு சரத்தால்
பல்லோர் வியப்ப தங்கள் குல பகைவன் சேனாபதி இளவல்
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான்

மேல்
*விசயன் நடு வந்து, பகழி வீச, பகைவர் புறமிடுதல்
$37.34

#34
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில்
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும்
தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன்
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார்

மேல்
$37.35

#35
பார்த்தன் கணையால் பட்டவரை பங்கேருகத்தோன் பல கோடி
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை
மா தந்திகளும் புரவிகளும் துணியத்துணிய வழி சோரி
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை

மேல்
*பின், வீடுமன் சிலை ஏந்திப் பொர, விராடன்
*இளவல் சதானிகன் மடிதலும், சூரியன் மறைதலும்
$37.36

#36
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன்
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட
துன்னும் பகழி மழை பொழிந்து துரக்கும் பொழுது விராடபதி
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன்

மேல்
$37.37

#37
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும்
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும்
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான்

மேல்
$37.38

#38
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும்
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால்
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும்
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ

மேல்
$37.39

#39
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான்
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம்
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார்

மேல்
*இரு பக்கத்தாரும் பாசறை சேர்தல்
$37.40

#40
சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும்
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான்
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை
வேந்தருடனும் போய் புகுந்தான் தன் பாசறையில் வீடுமனும்

மேல்
*பரிதி குணக்கில் எழுதல்
$37.41

#41
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து
நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும்
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான்

மேல்

38. பத்தாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$38.1

#1
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர்
நலிவு எலாம் அகற்றும் நாமம் நால்_இரண்டு எழுத்துடன்
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன்
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே

மேல்
*முந்திய நாளிற்போல, தருமன் படை பற்ப வியூகமும்,
*துரியோதனன் படை சருப்பதோபத்திர வியூகமுமாக அணிவகுத்து நிற்றல்
$38.2

#2
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும்
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே

மேல்
$38.3

#3
திரண்டு பல்லியங்கள் தேவர் செவி புதைக்க வானிடை
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க மெய் பதைக்கவே
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே
அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே

மேல்
$38.4

#4
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர்
காடு மன்னு பரிதியை கரம் குவித்து இருந்த பின்
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும்
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே

மேல்
$38.5

#5
வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும்
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான்

மேல்
$38.6

#6
சுற்று அறாத வில்லினன் தொடை மிடைந்த தூணியன்
கொற்ற வாகை வாளினன் கூர வீர வேலினன்
மற்றும் ஆயுதங்களோடும் மன்னரோடும் வார் முரசு
எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான்

மேல்
*’வீடுமனுக்கு இன்று வானுலகு அளித்தி’
*என்ற கண்ணனுக்கு விசயன், ‘எவர்
*எதிர்ப்பினும் நான் வெல்வேன்’ எனல்
$38.7

#7
தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால்
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம்
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே

மேல்
$38.8

#8
போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான்
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான்
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான்
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே

மேல்
$38.9

#9
சிலை பதாகை இவுளி தேர் செழும் கனல் அளித்தன
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும்
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா

மேல்
$38.10

#10
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன்
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான்
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என்
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே

மேல்
*விசயனும் வீடுமனும் விற்போர் புரிதல்
$38.11

#11
என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில்
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர்
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய்
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே

மேல்
$38.12

#12
பலரும் எய்த வாளி மெய் படப்பட பனித்து நா
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான்
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே

மேல்
$38.13

#13
துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய வெய்ய ஆம்
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து
உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன்
வில் நிமித்த வாளியால் அ வாளிகள் விலக்கினான்

மேல்
*வீடுமன் வாளியால் பகைவர் சேனை பட்ட பாடு
$38.14

#14
துருபதேயர் மகத நாடர் வெம் குலிங்கர் சோனகர்
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர்
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான்

மேல்
$38.15

#15
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார்
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார்
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன்
தொடி துணிந்து சோரி வெள்ள நதியினூடு சுழலுவார்

மேல்
$38.16

#16
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார்
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார்
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார்
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ

மேல்
*வீடுமனுக்கு உதவியாக மன்னர் பலரும் வந்து சரங்கள் விட,
*அவற்றை விசயன் விலக்குதல்
$38.17

#17
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய்
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார்
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும்
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே

மேல்
$38.18

#18
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும்
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார்
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான்

மேல்
*வீமன் தண்டுகொண்டு பொருதல்
$38.19

#19
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான்

மேல்
$38.20

#20
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன்
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே

மேல்
*வீமனுக்குத் தன் படை வீரர் முதுகிடுதல் கண்டு,
*துரியோதனன் வில் வல்லோர் பலரை ஏவுதல்
$38.21

#21
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர்
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல்
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே

மேல்
*விசயன் அவர் விடும் அம்புகளை விலக்கி, அவர்தம் கை முதலியவற்றைத் துணித்தல்
$38.22

#22
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய்
அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன்

மேல்
$38.23

#23
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர்
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும்
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும்
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே

மேல்
*வீடுமனும் தன் காலம் நெருங்கியது என்று எண்ணியவனாய்,
*அம்பு எய்து, பகைவரை நடுங்கச் செய்தல்
$38.24

#24
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும்
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ

மேல்
$38.25

#25
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல்
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே

மேல்
$38.26

#26
விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர்
நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும்
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும்
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர்

மேல்
$38.27

#27
சோமகரில் மச்சரில் தென்னரில் துளுவரில் துருபதேயரில் வளவரில்
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன்
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம்

மேல்
*தம் படையை வீடுமன் அடுவது கண்டு, விசயன் சிகண்டியை
*முன் வைத்து, வீடுமன் எதிரே பொர வருதல்
$38.28

#28
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய்
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார்
செம்பியனும் மா கிருபனும் செறி துரோணனொடு சேயொடு செயத்திரதனும்
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே

மேல்
$38.29

#29
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும்
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின்
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே

மேல்
$38.30

#30
தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே

மேல்
*சிகண்டியைக் கண்டு வீடுமன் போர் செய்யாதிருக்க,
*துச்சாதனன் எதிரியின் வில் துணியுமாறு அம்பு எய்தல்
$38.31

#31
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர்
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்
சாதனன் சரங்கள் பல தூவினன் பரிந்து எதிரி சாபமும் துணிந்து விழவே

மேல்
*சிகண்டி எதிர் நிற்கலாற்றாது மீள, வீடுமன்
*கண்ணன் மேனியும் சிவக்குமாறு அம்பு விடுதல்
$38.32

#32
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர்
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால்
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே

மேல்
*சிகண்டியை விசயன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி,
*தானும் அவனுமாக வீடுமனோடு பொருதல்
$38.33

#33
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல்
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன்
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான்
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே

மேல்
*தன் மேல் உறுவது விசயன் அம்பு என்பது அறிந்து வீடுமன் மகிழ்தல்
$38.34

#34
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய்
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா

மேல்
*அருகு நின்ற துரியோதனன் தம்பியரை, ‘தமையனிடம் சென்று, போர் அறிந்து பொருக!’
*என வீடுமன் பணித்து, அம்பாகிய அணையில் சாய்தல்
$38.35

#35
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர்
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர்
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர்
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே

மேல்
$38.36

#36
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே

மேல்
*இரு திறத்தாரும் வீடுமனை அடுத்து நின்று, நொந்து நைதல்
$38.37

#37
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய்
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார்
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே

மேல்
*அம்பின் அணைமேல் உயிர் ஓடாவண்ணம் நிறுத்தி வீடுமன் ஞானத்தோடே கிடக்க,
*தருமன் முதலியோரும் துரியோதனாதியரும் அழுது புலம்புதல்
$38.38

#38
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான்
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும்
நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக

மேல்
$38.39

#39
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும்
அங்கும் துரியோதனனை ஆதியான அரசர்
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார்

மேல்
$38.40

#40
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின்
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும்
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர்
அறமும் பொன்றும் நின்னோடு ஐயா அந்தோ அந்தோ

மேல்
$38.41

#41
தந்தை இன்பம் எய்த தவமே இன்பமாக
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும்
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார்

மேல்
*அழுத மைந்தர்க்கு ஆறுதல் கூறி, தன் தலையின்
*தாழ்வு தீர்க்குமாறு விசயனுக்கு வீடுமன் கூற,
*அவன் அங்ஙனமே செய்தல்
$38.42

#42
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி
எழுது தொல்லை வினையை யாரே விலக்குகிற்பார்
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன்
பழுது ஒன்று இல்லை இதுவே பயன் என் பவத்தால் என்றான்

மேல்
$38.43

#43
சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என்
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான்

மேல்
*வீடுமன் துரியோதனனது கண்ணீரை
*மாற்றி, ‘கன்னனைத் தானைத் தலைவனாக்கிப்
*போர் புரியுங்கள்!’ எனக் கூறுதல்
$38.44

#44
சொரியும் கண்ணீர் துடைத்து துரியோதனனை நோக்கி
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான்
தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான்

மேல்
*தருமன் அமைத்த கோயிலில், வீடுமன் தன் உயிர்
*விடும் காலம் நோக்கி, அம்புப் படுக்கையில் இருத்தல்
$38.45

#45
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய காலம் நோக்கி
வீயின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தா
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான்

மேல்
*சூரியனது மறைவும் செக்கர் வானத்தின் எழுச்சியும்
$38.46

#46
இன்று உன் மைந்தன் பட்டான் என்று தந்தைக்கு இசைப்பான்
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான்
அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய்
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம்

மேல்
*இரு திறத்தாரும் பாடி எய்துதலும்,
*துரியோதனன் தந்தைக்கு வீடுமன் விழுந்த செய்தி
*சொல்லச் சஞ்சயனை அனுப்புதலும்
$38.47

#47
பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது
ஆண்டு பாடி புக்கது அரவ துவசன் படையும்
ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான்

மேல்
*முனிவனால் செய்தி தெரிந்த திருதராட்டிரன் நிலை
$38.48

#48
முனியும் நகரில் சென்று முகுரானனனுக்கு உரைப்ப
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான்

மேல்
$38.49

#49
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான்
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான்
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான்
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன்

மேல்
*துரியோதனன், ‘நாளைச் சேனைத் தலைவர் யார்”
*என்று ஆராயும்பொழுது, கன்னன் வீடுமன் சொன்னபடி
*தானே தலைவன் ஆவதாகக் கூறுதல்
$38.50

#50
செம் கண் அரவ கொடியோன் சேனாபதியாய் நாளை
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான்

மேல்
*தனக்குத் துணை வேறு இல்லை என்று அவனுக்குக் கூறி,
*துரியோதனன் துரோணனைத் தலைவனாக்குதல்
$38.51

#51
தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன்
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய்
சேனாபதியாக என்றான் தீ வாய் நாக கொடியோன்

மேல்
$38.52

#52
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம்
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து
தொலையா வெம் போர் தொலைக்க துணிந்தான் எவரும் துயின்றார்

மேல்
*அருக்கன் குணபால் அடைதல்
$38.53

#53
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான்

மேல்

39. பதினோராம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$39.1

#1
காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி எல்லா
தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம்
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே

மேல்
*தோற்றுவாய்
$39.2

#2
பகிரதி_மைந்தன் சேனாபதி என பத்து நாளும்
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம் இனிமேல் அந்த
துகள் அறு கேள்வி வேள்வி துரோண ஆசிரியன் செய்த
புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம்

மேல்
*ஐவரும் சேனையும், துரியோதனாதியரும்
*படைகளும் களத்திற்கு வருதல்
$39.3

#3
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான்
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான்
வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே

மேல்
$39.4

#4
மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன்
சேதன படைஞரோடும் சேனையின் காவல் ஆன
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான்

மேல்
*வீடுமன் இல்லாத சேனையின் தோற்றம்
$39.5

#5
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர்
நதி இலா நாடும் தக்க நரம்பு இலா நாத யாழும்
நிதி இலா வாழ்வும் மிக்க நினைவு இலா நெஞ்சும் வேத
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை

மேல்
*துரோணன் சகட வியூகம் வகுக்க, திட்டத்துய்மன்
*கிரவுஞ்ச வியூகம் வகுத்தல்
$39.6

#6
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை
சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான்
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன்
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான்

மேல்
*சேனாபதியர் இருவரும் அம்பு மழை பொழிதல்
$39.7

#7
படையுடை இருவர் சேனாபதிகளும் பனி வெண் திங்கள்
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம்
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார்

மேல்
*சகாதேவன் சகுனியை வில்லாலும்
*கதையாலும் வெல்லுதல்
$39.8

#8
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது
கருத்துடன் பொருது வென்ற மாமனும் கலந்து தம்மில்
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக
சரத்தொடு சரங்கள் பாய சராசனம் வாங்கினாரே

மேல்
$39.9

#9
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான்

மேல்
$39.10

#10
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல்
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல்
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிட பொருது மீண்டான்

மேல்
*துரியோதனன் வீமனோடு பொர வந்து,
*விரைவில் பின்னிடுதல்
$39.11

#11
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து
சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான்

மேல்
$39.12

#12
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர்
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான்

மேல்
*அப்பொழுது சல்லியன் வீமன்மேல் அம்பு துரந்து வருதல்
$39.13

#13
பல்லியம் முழங்க மன்னர் படப்பட பரி தேரோடும்
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே

மேல்
*சல்லியன் நகுலனோடு பொருது பின்னிடுதல்
$39.14

#14
துருபதேயர் மகதநாடர் வெம் குலிங்கர் சோனகர்
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர்
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான்

மேல்
$39.15

#15
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான்

மேல்
*கன்னனும் விராடனும் விற்போர் செய்தல்
$39.16

#16
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல்
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே

மேல்
*துருபத யாகசேனனும் பகதத்தனும்,
*யானைப் போர் புரிதல்
$39.17

#17
துருபத யாகசேன நிருபனும் தும்பை சூடி
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும்
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும்
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார்

மேல்
*சிகண்டி வாட்போரில் சோமதத்தன் முதலியோரைப்
*புறங்காட்டி ஓடச் செய்தல்
$39.18

#18
துன்று வெம் கழல் கால் சோமதத்தனும் சூழ்ந்து நின்ற
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான்
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ

மேல்
*அபிமனும் இலக்கணகுமரனும் பொருதல்
$39.19

#19
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின்
கோ திரள் புடை வர குடை வர கொடி வர
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும்
தூர்த்தனர் விசும்பையும் தொடுத்தன தொடைகளால்

மேல்
$39.20

#20
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும்
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும்
எய் கணை அபிமனும் இலக்கணகுமரனும்
கை கணை தர நெடும் கார்முகம் வாங்கினார்

மேல்
*இலக்கணகுமரன் அபிமனின் வில்லையும் நாணையும்
*துணிக்க, அவன் தேரில் சென்று இலக்கணகுமரனைப்
*பற்றிக் கொண்டு போதல்
$39.21

#21
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான்

மேல்
$39.22

#22
அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும்
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை
பற்றினன் உயிரொடும் பாண்டவர் குமரனே

மேல்
$39.23

#23
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல்
தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன்
காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல்

மேல்
*சயத்திரதன் அபிமனைத் தடுத்தல்
$39.24

#24
முந்து வாள் அபிமன் அ மூரி வில் குமரனை
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே

மேல்
*சயத்திரதன் வலி தொலைய, கன்னன் முதலிய வேந்தர் வர,
*பொர வந்த யாரையும் விற்போரில் அபிமன் புறங்காணுதல்
$39.25

#25
மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின்
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர்
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார்

மேல்
$39.26

#26
வந்தவர்வந்தவர் வாள் நுதல் நிலை-தொறும்
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே

மேல்
*அப்பொழுது சல்லியன் வந்து அபிமனைத் தடுத்தல்
$39.27

#27
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால்
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே

மேல்
$39.28

#28
சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அ
மத்திரராசனை வருக நீ வருக என்று
அத்திரம் நால் இரண்டு அவன் முகத்து அடைசினான்
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே

மேல்
*சல்லியன் அவனது தேர்ப்பாகனை வேலால் வீழ்த்த,
*சல்லியன் கதையுடன் தேர் விட்டு இறங்குதல்
$39.29

#29
தோள் இரண்டினும் நடு துளை பட பாகன் மேல்
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான்
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும்
யாளி போல் சல்லியன் இரதம் விட்டு இழியவே

மேல்
*வீமன் அங்கு வந்து, சல்லியனைத் தண்டினால்
*மோத, சல்லியன் தரையில் விழுதல்
$39.30

#30
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும்
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய்
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும்
முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான்

மேல்
*அபிமன் வீமனோடு, ‘என் ஆண்மை என் ஆம்?’ என்று பேசி
*நின்றபோது, இலக்கணகுமரன் தப்பி, தனது தேருக்கு மீளுதல்
$39.31

#31
தல-கணே சல்லியன் வீழ்தலும் தந்தையோடு
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும்
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான்

மேல்
*தரையில் வீழ்ந்த சல்லியனையும், தப்பிய இலக்கணகுமரனையும்
*கிருதவன்மா காப்பாற்றிக் கொண்டு செல்லுதல்
$39.32

#32
தரையில் வீழ் சல்லியன்-தன்னையும் தனது பேர்
இரதம் மேல் ஏற்றி அ இலக்கணகுமரனாம்
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே

மேல்
*துரியோதனனும் போர் செய்யமாட்டாது
*சேனையுடன் திரும்புதல்
$39.33

#33
பொரும்பொரும் முனை-தொறும் புண்ணியன் சேனையில்
பெரும்பெரும் தரணிபர் பேறுடன் வேறலால்
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான்
திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே

மேல்
*அருக்கன் குடபால் மறைதல்
$39.34

#34
தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால்
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன்
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான்

மேல்
*பாண்டவர் பக்கத்தார் பாடி வீட்டில் இனிது துயில,
*துரியோதனன் பக்கத்தார் துயிலின்றி வருந்தியிருத்தல்
$39.35

#35
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன்
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே

மேல்
$39.36

#36
பால் நாள் அளவும் துயிலாமல் பாந்தள் துவசன்-தனக்கு உயிர் நண்பு
ஆனார் பலரும் வாள் வேந்தர் அமைச்சர் பலரும் இளையோரும்
சேனாபதியும் சூழ இருந்து அபிமன் கையில் திரு மைந்தன்
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார்

மேல்
*’தருமனை நாளை அகப்படுத்தினால்தான் இன்று
*புதல்வனைப் பற்றிச் சென்ற செற்றம் நீங்கும்’ என்ற
*துரியோதனனுக்குத் துரோணனின் மறுமொழி?
$39.37

#37
தனுவேதத்தின் கேள்விக்கும் சதுர்வேதத்தின் வேள்விக்கும்
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார்
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர்
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான்

மேல்
$39.38

#38
பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல்
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால்

மேல்
$39.39

#39
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில்
இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன்

மேல்
*திகத்தராசன் முதலியோர், ‘தருமனுக்கு உதவியாக வாராதபடி
*விசயன் வீமன் முதலியோரை வளைப்போம்!’ என வஞ்சினம் மொழிதல்
$39.40

#40
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர்
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல்
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார்

மேல்
$39.41

#41
அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல்
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல்
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய
பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார்

மேல்
$39.42

#42
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என
புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல்
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார்

மேல்
$39.43

#43
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல்
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி
கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார்

மேல்
*வேந்தர்களையும் துரோணனையும் அனுப்பிவிட்டு,
*துரியோதனன் தன் இருப்பிடம் சேர்தல்
$39.44

#44
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர்
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே

மேல்
*சூரியன் குணபால் தோற்றம் செய்தல்
$39.45

#45
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும்
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான்

மேல்

40. பன்னிரண்டாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$40.1

#1
பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன்
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின்
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம்

மேல்
*இரவில் துரியோதனன் துரோணனுக்கு உரைத்தவற்றை
*ஒற்றரால் அறிந்த தருமன் கண்ணனுக்கும்
*விசயனுக்கும் கூறி, போருக்கு எழுதல்
$40.2

#2
அல் தராபதி கருதி ஆசானோடு உரைத்த எலாம்
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன்
மற்று அரா அணை துறந்த மாயனுக்கும் விசயனுக்கும்
சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே

மேல்
*கண்ணன் தருமனை நடுவில் வைத்து,
*மண்டல வியூகம் வகுத்தல்
$40.3

#3
கரும் களவின் கனிவண்ணன் கனை கழல் கால் வேந்தரொடும்
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே

மேல்
$40.4

#4
பின் நிறுத்தி மாருதியை பேர் அணியில் பல வகையாம்
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும் குமரனையும்
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன்

மேல்
*துரோணன் மகர வியூகமாகச் சேனையை வகுத்தல்
$40.5

#5
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும்
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும்
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே

மேல்
*திரிகர்த்தராசனும் நாரண கோபாலரும் விசயனை
*அறைகூவி, வில் வளைத்துப் பொருதல்
$40.6

#6
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும்
தேர் அணியும் பரி அணியும் திரிகத்த குலபதியும்
நாரணகோபாலர் எனும் நராதிபரும் வாள் விசயன்
காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார்

மேல்
*தருமனைக் காக்குமாறு அருகு நின்ற அரசர்களுக்கு
*உரைத்து, விசயன் வில் வளைத்து எதிர் பொருதல்
$40.7

#7
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது
காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து
கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான்

மேல்
$40.8

#8
தூளியே அண்டம் உற தூர்த்து முதல் அகல் விசும்பை
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு சிலை வாங்கி
ஆளி ஏறு அனையானும் அவனிபரும் கவந்தமுடன்
கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால்

மேல்
*சயத்திரதன் முதலிய முப்பதினாயிரர்
*சூழத் துரோணன் வருதல்
$40.9

#9
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான்

மேல்
*திட்டத்துய்மன் பாஞ்சாலர் சூழ வந்து துரோணனை எதிர்த்தல்
$40.10

#10
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன்
பந்தம் உற பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல்
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே

மேல்
$40.11

#11
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார்

மேல்
$40.12

#12
துன்முகனை புறங்கண்டு துன்மருடன் முனை சாய்த்து
கல் முகம் ஆம் காந்தாரர் கலிங்கர் கவுசலர் நிடதர்
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே

மேல்
*சேனையிலுள்ளோர் அழிந்து மீள்வது கண்டு, துருபதன்
*முதலியோர் சிலையை அறுத்து, தானையையும் துரோணன் அழித்தல்
$40.13

#13
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி
துறை வாய் வெம் கனல் போலும் துருபதன் கை சிலை துணிய
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான்

மேல்
$40.14

#14
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர்
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான்

மேல்
$40.15

#15
தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார்
பாண்டியனும் முதுகிட்டான் பாஞ்சாலர் புறமிட்டார்
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர்
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே

மேல்
*துரோணனும் தருமனும் அடுத்து நின்று பொருதல்
$40.16

#16
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும்
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின்
நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில்
அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே

மேல்
$40.17

#17
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும்
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும்
விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே

மேல்
*நாற்படைகளும் செருச் செய்த வகை
$40.18

#18
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன
மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே

மேல்
$40.19

#19
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல
நிரைக்கும் நெடும் பதாகை இல நிறத்த கொடிஞ்சி ஆதி இல
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே

மேல்
$40.20

#20
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என
இகல் செய்து செம் பராகம் மிசை எழுப்பின துங்க வாசிகளே

மேல்
$40.21

#21
விளைத்தனர் தொந்தமாக அமர் மிகைத்தனர் தம்தம் வீரமுடன்
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது
திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே

மேல்
*உதிட்டிரனும் துரோணனும் பொருத வகை
$40.22

#22
மிகைத்தனர் தும்பை மாலை முடி மிலைச்சினர் இன்று சாலும் என
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு
பகைத்தனர் அங்கம் யாவும் மிசை படப்பட நஞ்சு கால் பகழி
உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே

மேல்
*துரோணன் தனது தேர் முதலியன இழந்து, தளர்வுற்று மீளுதல்
$40.23

#23
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே

மேல்
$40.24

#24
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில்
அனத்தம் விளைந்து நாணொடு வில் அற துணியுண்டது ஆகவமுன்
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே

மேல்
$40.25

#25
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன்
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே

மேல்
*துரோணன் மீண்டும் தேரில் வர, தருமன்
*பக்கத்து வீரர்கள் வளைத்துப் பொருதல்
$40.26

#26
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும்
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி பின்னையும்
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம்
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான்

மேல்
$40.27

#27
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும்
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும்
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும்
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே

மேல்
$40.28

#28
முந்திமுந்தி மச்சராசனோடு சேனை முதல்வனும்
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும்
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல்
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே

மேல்
$40.29

#29
கன்னன் ஆதி சகுனி ஆதி கலிங்கதேசன் ஆதியா
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை
தென்னன் ஆதி நகுலன் ஆதி திட்டத்துய்மனோடு அபி
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி

மேல்
$40.30

#30
நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார்
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே

மேல்
$40.31

#31
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும்
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார்
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே

மேல்
$40.32

#32
குத்துவார் படைக்கலங்கள் கொண்டு மல் குறிப்பினால்
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால்
ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற
தத்துவார் துரங்கமங்கள் தாரையாக ஏறுவார்

மேல்
$40.33

#33
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன்
கற்ற சாரி ஓடும் அ கணக்கு அறிந்து புகழுவார்
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே
எற்றுவார் படைக்கலன் இழந்து நின்ற வீரரே

மேல்
$40.34

#34
சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன
கன்ன ஆறு சொரி மத களிற்று இனங்கள் வீழ்ந்தன
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள்
இன்னவாறு பட்டன என குறித்து இயம்ப ஒணா

மேல்
$40.35

#35
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார்
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார்
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார்

மேல்
*இருபக்கத்தாரும் தொந்த யுத்தம் செய்தபொழுதில்,
*கடோற்கசனும் அபிமனும் வர, பகைவர் சேனை பறந்தோடுதல்
$40.36

#36
இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார்
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே

மேல்
$40.37

#37
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும்
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும்
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே
பரிதி கண்ட பனி என பகை தளம் பறந்ததே

மேல்
$40.38

#38
பறந்து போய் நெடும் பணி பதாகையானொடு எய்தினார்
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும்
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து
இறந்துபோன மன்னர் அன்றி நின்ற மன்னர் எவருமே

மேல்
*சேனையின் நிலை உணர்ந்த துரியோதனன் அரசர்களுடனும்
*சேனைகளுடனும் வந்து அணி வகுத்துப் பொர,
*அபிமனால் அச் சேனை உடைதல்
$40.39

#39
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான்

மேல்
$40.40

#40
விட்டவிட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும்
தொட்டதொட்ட சிலையொடும் துணிந்து வெம் களத்திடை
பட்டபட்ட நிருபர்-தங்கள் பாடு காண எண்ணியோ
முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான்

மேல்
$40.41

#41
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும்
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே
அந்தஅந்த முனைகள்-தோறும் அந்தஅந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே

மேல்
$40.42

#42
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர்
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே
அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம்
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே

மேல்
*துரோணன் தருமன் முன் நிற்க ஆற்றாது, தப்பிச் செல்லுதல்
$40.43

#43
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன்
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல்
நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான்

மேல்
*பகதத்தன் தனியே வந்து, தருமன் சேனையை எதிர்த்தல்
$40.44

#44
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும்
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான்
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே

மேல்
$40.45

#45
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும்
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன்
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே

மேல்
$40.46

#46
இருபது பதிற்று நூறு களிறு உள இவனினும் மிகுத்த வீரர் கடவுவர்
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன்
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர்
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ

மேல்
$40.47

#47
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே

மேல்
*பகதத்தனுடன் பின்னிட்ட சேனையும் துரியோதனன் முதலியோரும் வந்து
*கலக்க, தருமனும் அபிமனும் எதிர் ஏற்க, சேனைகள் பொருதல்
$40.48

#48
பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர்
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும்
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே

மேல்
*வீமனும் பகதத்தனும் கைகலந்து நின்று பொருதல்
$40.49

#49
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே

மேல்
$40.50

#50
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு
புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே

மேல்
$40.51

#51
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின்
இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே

மேல்
$40.52

#52
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ

மேல்
$40.53

#53
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர்
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும்
உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே

மேல்
*பகதத்தனாலும் அவனது யானையாலும் நேர்ந்த
*தளர்ச்சி கண்டு தருமன் கண்ணனை நினைத்தல்
$40.54

#54
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில்
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை
நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே

மேல்
*’தருமனுக்கும் பகதத்தனுக்கும் கடும்போர் விளைந்துள்ளது; அங்கு
*விரைந்து செல்ல வேண்டும்’ என விசயனுக்குக் கண்ணன் கூறுதல்
$40.55

#55
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார்
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால்
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான்

மேல்
$40.56

#56
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய்
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே

மேல்
*கண்ணன் விசயனோடு பகதத்தனை அணுக, அவன்
*வீமனுடன் செய்த போரை விட்டு, விசயனை எதிர்த்தல்
$40.57

#57
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான்

மேல்
$40.58

#58
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான்
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான்

மேல்
$40.59

#59
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே

மேல்
$40.60

#60
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால்
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள்
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே

மேல்
$40.61

#61
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால்
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம்
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான்

மேல்
*விசயன் எய்த அம்பு மழையால் பகதத்தனது யானைகளின் அணி குலைதல்
$40.62

#62
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ்
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம்
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே

மேல்
*பகதத்தன் விசயன்மேல் எறிந்த வேலைக் கண்ணன் தனது
*உடம்பில் ஏற்க, அது மாலையாக அமைந்து விடுதல்
$40.63

#63
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல்
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான்
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே

மேல்
$40.64

#64
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல்
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய்
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார்

மேல்
*பகதத்தன் உயிர் போக்கத் தக்க தருணம் என்று கூறிக் கண்ணன் அம்பு கொடுக்க,
*விசயன் தொழுது வாங்கி, அவன்மேல் செலுத்துதல்
$40.65

#65
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான்
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே

மேல்
$40.66

#66
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள்
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே

மேல்
*பகதத்தன் பட்டு வீழ, மன்னர்கள் விசயனையும் கண்ணனையும் புகழ்தல்
$40.67

#67
பகதத்தனும் பட்டு அவன் ஊர்ந்த பகடும் பட்டு புடை சூழ
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும்
புகழ்தற்கு அரிய பாகனையும் புகழார் இல்லை பூபாலர்

மேல்
*காந்தாரர் விசயனைச் சூழ்ந்து பொருதபோது,
*சகுனி புதல்வர் இருவர் இறத்தல்
$40.68

#68
விருதும் சங்கும் பல்லியமும் மேன்மேல் அதிர வில் போரில்
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார்
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர்

மேல்
$40.69

#69
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில்
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர்

மேல்
$40.70

#70
சஞ்சத்தகர் விண் குடியேற தானே அடர்த்தான் பகதத்தன்
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான்
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால்
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே

மேல்
*சகுனி அரசர் பலருடன் கூடித் தருமனோடு
*போர் செய்து, பின்னிடுதல்
$40.71

#71
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய படாத அரசர் பலரோடும்
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன்
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான்

மேல்
$40.72

#72
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும்
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல்
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான்

மேல்
$40.73

#73
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில்
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி

மேல்
*துரோணன், துரியோதனன், முதலியோர் வீமனுடன் பொருதல்
$40.74

#74
ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும்
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும்
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன்
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே

மேல்
*வீமன் தனது போர் வன்மையால் பகைவரைக் கலக்குதல்
$40.75

#75
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள்
அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர்
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில்
படுமோ தொடுத்த பகழி பருப்பதம் சேர் மழை போல் பாறினவே

மேல்
$40.76

#76
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன்
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின்
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே

மேல்
$40.77

#77
ஒன்று முதலா பல பகழி ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி
இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படியாக
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான்

மேல்
$40.78

#78
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும்
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார்

மேல்
$40.79

#79
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும்
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும்
பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல்
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால்

மேல்
*வீமன் முன் நிற்கலாற்றாது, எதிர்ந்தோர் தம்தம் பாசறை புகுதல்
$40.80

#80
இளைத்தது அடைய பெரும் சேனை இனி நாம் ஒன்றுக்கு ஈடு ஆகோம்
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே

மேல்
$40.81

#81
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல்
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான்
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார்

மேல்
*பாண்டவரும் பாசறை புக, தினகரன் மேல்பால் அடைதல்
$40.82

#82
காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும்
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல்
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும்

மேல்
*துரியோதனன் பக்கத்தில் பலரும் கூடியிருக்க,
*கன்னன் துரோணனை இகழ்ந்து சிரித்தல்
$40.83

#83
அறம் தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கும் அபிமற்குமே
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு இரங்கா அழா
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார்

மேல்
$40.84

#84
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல்
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான்

மேல்
*துரோணன் சினந்து மொழிதல்
$40.85

#85
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான்
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில்
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே

மேல்
$40.86

#86
இன்று அல்ல நாளைக்கும் ஆம் நின் அவை-கண் இருந்தோர்களில்
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால்
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான்

மேல்
*’ஐவரை ஒப்பார் வேறு இலர்!’ என்று கூறித் துரோணன் தன்
*பாடிவீடு செல்ல, துரியோதனன் மன்னர்க்கு விடைகொடுத்துத் துயிலுதல்
$40.87

#87
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம்
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால்
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ
அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே

மேல்
$40.88

#88
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும்
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால்
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர்
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில் அதி பாவமே

மேல்
$40.89

#89
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான்
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும்
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே

மேல்
$40.90

#90
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும்
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம்
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே

மேல்
$40.91

#91
அதிர்வார்கள் அதிர்-மின்கள் அதிர பொரும் போரில் அறன் மைந்தனோடு
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம்
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான்
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான்

மேல்
*பாண்டவர்கள் துயிலுதல்
$40.92

#92
மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும்
தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும்
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும் கண்துயின்றார்களே

மேல்
*கதிரவன் உதயஞ்செய்தல்
$40.93

#93
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண்
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய்
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல்
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்

மேல்

41. பதின்மூன்றாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$41.1

#1
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன்
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும் திருமால்
அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே

மேல்
*மன்னரும் சேனைகளும் சூழ, துரோணன் சக்கர
*வியூகம் வகுத்து நிற்றல்
$41.2

#2
நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால்
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான்
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே

மேல்
$41.3

#3
இலக்கணமைந்தனும் மைந்துடை மன்னவன் இளைஞரும் எம்முனையும்
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும்
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா
நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே

மேல்
$41.4

#4
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல்
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே

மேல்
*திட்டத்துய்மன் மகரவியூகம் வகுத்து, மன்னர் சூழ நிற்றல்
$41.5

#5
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார்
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில்
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே

மேல்
$41.6

#6
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர்
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன்
பார் இரு_நாலு திசாமுகமும் படையோடு பரந்து வரும்
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம் அளவோ

மேல்
$41.7

#7
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல்
துருபதன் மைந்தனும் நின்றனன் அந்தர துந்துபி மீது எழவே

மேல்
*சஞ்சத்தகர் அறைகூவ, விசயன் சென்று, விற்போரில்
*அவர்களைத் தோற்று ஓடச் செய்தல்
$41.8

#8
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில்
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்
சத்தகர் வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே

மேல்
$41.9

#9
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம்
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம்
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே

மேல்
$41.10

#10
பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்
னிட்டவர் எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய்
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும்
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால்

மேல்
$41.11

#11
ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார்
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே
பார் ஒரு பாதி சிவந்தது மேனி பரந்து எழு சோரியினால்

மேல்
*திட்டத்துய்மன் துரோணனுடன் போர் செய்ய
*முனைந்து, எதிர் நிற்க இயலாது பிறக்கிடுதல்
$41.12

#12
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய்
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன்

மேல்
$41.13

#13
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி
காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே

மேல்
$41.14

#14
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம்
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல்
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல்

மேல்
$41.15

#15
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும்
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும்
அந்தணன் ஆண்மையும் வன்மையும் வின்மையும் அன்று துதித்தனரே

மேல்
*திட்டத்துய்மனுக்குத் தருமன் ஆறுதல் கூறுதல்
$41.16

#16
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான்
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே
மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே

மேல்
*’பகைவரின் சக்கர வியூகத்தைப் பிளக்க வல்லவன் நீயே’
*என்று கூறி, அபிமனைத் தருமன் போருக்கு அனுப்புதல்
$41.17

#17
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே

மேல்
$41.18

#18
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன்
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால்
நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார்

மேல்
$41.19

#19
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில்
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால்
வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே

மேல்
*திட்டத்துய்மன் முதலிய மன்னர் சூழ, அபிமன்
*தேரில் விரைந்து போர்க்குச் செல்லுதல்
$41.20

#20
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற
கோத்த தூணியன் வாள் முதல் பல கொற்றம் முற்றிய படையினன்
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான்

மேல்
$41.21

#21
வீர வார் கழல் கழலின் மீது விளங்க மார்பினில் வெண் நிலா
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே

மேல்
$41.22

#22
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும்
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான்
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான்

மேல்
*சக்கர வியூகம் கெடும்படி அபிமன் அம்புமழை பொழிய,
*துரோணன் வென்னிடுதல்
$41.23

#23
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும்
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான்

மேல்
$41.24

#24
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான்
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன்
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே

மேல்
$41.25

#25
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான்
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும்
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால்

மேல்
*அசுவத்தாமனும் கன்னனும், அபிமனை எதிர்த்து,
*நிலைகெட்டுத் திரும்புதல்
$41.26

#26
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால்
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே

மேல்
$41.27

#27
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான்
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான்
அன்னவன் பகழி குலங்கள் அநேக மோகரம் ஆகையால்
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான்

மேல்
*கிருபனும் கிருதவன்மாவும் அபிமன்முன் வில் இழந்து
*வெறுங்கையோடு ஓடுதல்
$41.28

#28
கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால்
ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே

மேல்
*சகுனியும், அவனது மகன் முதலிய சுற்றமும் வர, அபிமன்
*கணையால் சகுனியின் மகன் மடிய, ஏனையோர் ஓடுதல்
$41.29

#29
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார்
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார்
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே

மேல்
*விகன்னன் முதலிய துரியோதனன் தம்பியரும், வேறு
*அரசர்களும் வந்து அபிமன் முன் நிற்க இயலாது ஏகுதல்
$41.30

#30
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும்
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும் சமர் துன்னினார்
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர்
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான்

மேல்
$41.31

#31
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய்
முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால்
இற்றஇற்ற படைக்கலங்களும் எய்த்த எய்த்த பதாதியும்
அற்றஅற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர் அடையவே

மேல்
*தருமனிடம் விடை பெற்று, வீமன் பல மன்னர் சூழ,
*அபிமனுக்கு உதவ வருதல்
$41.32

#32
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய்
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார்
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான்

மேல்
$41.33

#33
தோல் அநேகம் அநேகம் நேமி துரங்கமங்கள் அநேகம் நீள்
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற களத்திடை
பாலனே கடிது ஏகி வெம் முனை பயிலுவான் ஒரு பாவமே

மேல்
$41.34

#34
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும்
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான்
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும்
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே

மேல்
*வீமன் சென்ற திசைகளில் எல்லாம் சக்கர வியூகம் சிதைதல்
$41.35

#35
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில்
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம்
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம்
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான்

மேல்
$41.36

#36
கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர்
தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர்
குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர்
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார்

மேல்
$41.37

#37
பொருத பற்பல பாடை மன்னவர் பொன்னிலம் குடி புகுதவே
விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார்
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள்
நிருதர் பட்டது பட்டு இறந்தனர் நேமியுள் படும் நிருபரே

மேல்
*படையின் நிலை கண்டு, துரியோதனன், ‘சகுனி முதலியோர்
*சென்று, அபிமனை வீமன் அணுகாவகை வளைத்தால்,
*பின் இருவரையும் வெல்லுதல் எளிதாம்’ எனல்
$41.38

#38
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும்
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால்
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான்

மேல்
$41.39

#39
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில்
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே

மேல்
$41.40

#40
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும்
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ

மேல்
*மன்னன் பணித்தபடி வீரர் சென்று, இருவர் முன்னும் நிற்கலாற்றாது மீளுதல்
$41.41

#41
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும்
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர்
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே

மேல்
$41.42

#42
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர்
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே

மேல்
$41.43

#43
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய
துணி பட அழிந்து மீள நடவினர் துவச புயகன் பதாதி நிருபரே

மேல்
$41.44

#44
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே

மேல்
*மீண்ட மன்னரை வசை மொழிந்து, அருகு வந்த
*சயத்திரதனோடு துரியோதனன் இன் சொல் பகர்தல்
$41.45

#45
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன்
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான்

மேல்
$41.46

#46
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல்
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில்
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர்
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை

மேல்
*விசயனையும் அபிமனையும் கொன்றைமாலையை இடையே இட்டுப் பிரித்து,
*அபிமனை எளிதில் வெல்லத் துரியோதனன் உபாயம் உரைத்தல்
$41.47

#47
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே

மேல்
$41.48

#48
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர்
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே

மேல்
*மன்னன் குறித்த வண்ணம் சயத்திரதன் கொன்றை மாலையை எறிய,
*வென்று மீண்ட அபிமன், அதனைக் கடவாது திரும்பவும் பொர வருதல்
$41.49

#49
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே

மேல்
$41.50

#50
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில்
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும்
அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர்
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே

மேல்
*துரியோதனன் சேனைகள் ஓட, வீமன் அபிமன் நின்ற இடம்
*குறுக வருதலும், கொன்றைமாலையைக் கண்டு பின் தங்கி நிற்றலும்
$41.51

#51
பரிசன குமாரன் விடும்
எரி கணைகளால் முடுகு
தரியலர் பதாதி படை
நெரிய வரு காலையிலே

மேல்
$41.52

#52
விறல் அபிமன் நின்ற களம்
உறுதும் இனி என்று நனி
குறுகலும் விலங்கியது
நறை இதழி அம் தொடையே

மேல்
$41.53

#53
இன்று அமரின் யாரும் உயிர்
பொன்றிடினும் ஈசன் அணி
கொன்றை கடவேன் என முன்
நின்றனன் நராதிபனே

மேல்
*’மாலையால் பிரித்து அபிமனை வென்று விட இயலாது’
*என வீமன் நொந்து கூறி, மீண்டு செல்லுதல்
$41.54

#54
முந்து வடி வாள் அமரின்
வந்து அணுகுவான் மதலை
நிந்தனை-கொல் ஆம் இது என
நொந்து சில கூறினனே

மேல்
$41.55

#55
இந்த மது மாலை இடை
தந்து அபிமன் ஆர் உயிரை
உந்திவிடவோ எளிது
சிந்து பதி சேவகமே

மேல்
$41.56

#56
விரகு பட எப்பொழுதும்
முரண் அமர் தொடக்கும் வலி
உரக துவசற்கு ஒழிய
அரசரில் எவர்க்கு உளதோ

மேல்
$41.57

#57
தன் மகனையும் சமரில்
வன்மையொடு கொன்று ஒழிய
மன் முனை திரண்டிடினும்
என் மகன் மடிந்திடுமோ

மேல்
$41.58

#58
என்று இதழி மாலை-தனை
நின்று தொழுது அன்பினொடு
சென்றனன் இடிம்பனை முன்
வென்ற திறல் வீமனுமே

மேல்
*மாலை கடவாமல் வந்த அபிமனோடு பொருதல்
$41.59

#59
மாலை கடவாமல் வரு
பாலன் அரசர்க்கு நடு
வேலை வடவை கனலி
போல் ஒளிர நின்றனனே

மேல்
$41.60

#60
யாளி என நின்ற வய
மீளியை வளைந்து பல
வாளிகள் பொழிந்தனர்கள்
கூளிகள் நடம்செயவே

மேல்
$41.61

#61
பற்பலரும் அர்த்த ரதர்
வில் பல வணக்கி எதிர்
சொல் பொலி வய பகழி
சிற்சில தொடுத்தனரே

மேல்
$41.62

#62
பெய் கணை அடங்க இவன்
எய் கணை விலக்கியிட
மொய் கணை அனந்தம் அவர்
மெய்கள் நைய உந்தினனே

மேல்
*கன்னனும் அபிமனும் பொருதல்
$41.63

#63
கன்னனும் மடங்கல் அபி
மன்னுவும் உடன்று முனை
முன் இரதமும் கடவி
மன் அமர் தொடங்கினரே

மேல்
$41.64

#64
அங்கர்_பதி தேரில் இவன்
வெம் கணைகள் நாலு விட
மங்குல் என நாலு துரகங்களும்
விழுந்தனவே

மேல்
$41.65

#65
தொடுத்த சிலை கோலி அவன்
எடுத்த சிலையும் கொடியும்
நடு தறிய வெட்டி முனை
கெடுத்தனன் அனந்தரமே

மேல்
*கன்னன் ஏக, துரியோதனன் துணைவர்
*வந்து பொருது முதுகிடுதல்
$41.66

#66
இரவி_மகன் ஏகுதலும்
அரவ துவசன் துணைவர்
விரவினர் வளைந்து தம
புரவி அணி தேர் படவே

மேல்
$41.67

#67
விட்ட இரதத்தினொடு
வட்ட வரி வில் குரிசில்
தொட்ட கணை தைக்க அவர்
கெட்டு முதுகிட்டனரே

மேல்
*துரோணனும் அசுவத்தாமனும் எதிர் வர, அபிமன்
*தான் ஒருவனாய் இருவரையும் வெல்லுதல்
$41.68

#68
சுகன் நிகர் துரோணனொடு
மகன் விசயன் மைந்தன் எதிர்
முகன் அமரில் வந்து புர
தகனன் என நின்றனரே

மேல்
$41.69

#69
நிற்கும் நிலை நின்று வரி
விற்களும் வளைத்தனர்கள்
உற்கைகளின் நூறு பல
பொன் கணை தொடுத்தனரே

மேல்
$41.70

#70
வரு கணை விலக்கி எதிர்
பொரு கணைகளாலே
ஒருவன் ஒர் இமைப்பொழுதில்
இருவரையும் வென்றான்

மேல்
$41.71

#71
தேர்முகம் இழந்தும் இரு
கார்முகம் இழந்தும்
போர்முகம் இழந்தும் அவர்
நேர் முகம் இழந்தார்

மேல்
*துன்முகன் அமர் செய்து, கிரீடம் இழத்தல்
$41.72

#72
துன்முகனும் அன்று அமரின்
முன்முன் அமர் செய்தே
வன்மிகம் மறிந்தது என
நல் முடி தறிந்தான்

மேல்
*சல்லியனும் அவன் மகன் உருமித்திரனும் வர,
*அபிமனால் உருமித்திரன் உயிர் இழக்க, அவன் புறகிடுதல்
$41.73

#73
சித்திர வில் வீரன் எனும்
மத்திரர் பிரானும்
புத்திரரில் ஆதி உரு
மித்திரனும் வந்தார்

மேல்
$41.74

#74
வந்து அபிமனோடு அமரின்
முந்தி இருவோரும்
சிந்து கணை மாரிகளின்
அந்தரம் மறைத்தார்

மேல்
$41.75

#75
அவரவர் எடுத்த இரு
தவரும் நடு வெட்டா
இவர் கணை விலக்குவன
கவர் கணை தொடுத்தான்

மேல்
$41.76

#76
மைந்தன் ஒரு வாளியினில்
அந்தரம் அடைந்தான்
நொந்து பல வாளியொடு
தந்தை புறகிட்டான்

மேல்
*அபிமனால் இறந்தோரும் உடைந்து ஓடினோரும் பலர்
$41.77

#77
வென்று அமரில் வாள் அபிமன்
நின்ற நிலை கண்டே
ஒன்று பட மா இரதர்
சென்றன உடைந்தே

மேல்
$41.78

#78
கெட்டவர்கள் இன்னர் என
முட்ட உரைக்கொண்ணா
பட்டவர் அநேகர் இவன்
விட்ட கணையாலே

மேல்
*பிளப்புண்ட பகைவரின் சக்கர வியூகத்தில் அபிமன் புகுதல்
$41.79

#79
முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின் முன்பினோடும்
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான்
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான்

மேல்
$41.80

#80
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி
குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும்
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது
சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான்

மேல்
*அரசகுமாரர்கள் பதினாயிரர் சூழ, துரியோதனன்
*மகன் வந்து அபிமனை வளைந்து, அவன்
*முன் நிற்க ஆற்றாது ஓடுதல்
$41.81

#81
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன்
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது

மேல்
$41.82

#82
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல்
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார்

மேல்
$41.83

#83
முன் முன்பு முந்தி பலர் ஏவிய மூரி வாளி
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால்
பின் முன்பு பட்ட பல கோடி பிறங்கு சேனை

மேல்
$41.84

#84
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும்
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே

மேல்
*அபிமன் எதிர் வந்த இலக்கணகுமரனோடு பொருது,
*அவனது உயிரைப் போக்குதல்
$41.85

#85
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும்
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும்
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன்
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே

மேல்
$41.86

#86
ரகு குலத்தவன் இளவலும் நிசிசரர் இறை அளித்தருள் இளவலும் இருவரும்
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும்
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே

மேல்
$41.87

#87
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும்
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே

மேல்
$41.88

#88
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர்
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன்
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே

மேல்
$41.89

#89
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை
முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே

மேல்
$41.90

#90
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும்
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன்
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே

மேல்
*தன் மகன் இறந்தது கேட்டு, கண்ணீர் சொரிய நின்ற
*துரியோதனன், ‘இப்பொழுதே அபிமனைச் செகுக்க
*வேண்டும்’ என மன்னர்களுக்கு ஆணையிடுதல்
$41.91

#91
இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால்
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான்

மேல்
$41.92

#92
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன்
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல்
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன்
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன்

மேல்
$41.93

#93
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே
குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல்
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார்

மேல்
*அசுவத்தாமன், துரோணன், மற்றும் மன்னர்கள்,
*யாவரும் ஒன்றுகூடி, அபிமனை வளைத்தல்
$41.94

#94
குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும் பகைகள் ஆறும்
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார்

மேல்
$41.95

#95
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும்
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல்
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே

மேல்
*அபிமன் எய்த அம்பினால், பலர் உயிர்
*இழத்தலும் சின்னபின்னப் படுதலும்
$41.96

#96
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே
முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும்
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான்

மேல்
$41.97

#97
ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான்
கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான்
மாகத குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர்
நாகம் உற்றனர்கள் கோடி நரபதி குமரர் வீந்தார்

மேல்
$41.98

#98
சிலை அழிந்தவர் அநேகர் தேர் அழிந்தவர் அநேகர்
தலை அழிந்தவர் அநேகர் தாள் அழிந்தவர் அநேகர்
நிலை அழிந்தவர் அநேகர் நெஞ்சு அழிந்தவர் அநேகர்
துலை அழிந்தவர் அநேகர் தோள் அழிந்தவர் அநேகர்

மேல்
$41.99

#99
இனைவு அரும் சகுனி மைந்தர் எழுவரும் துணைவர் உள்ளார்
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான்
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான்

மேல்
*காவலர் உடைதல் கண்டு, கன்னனைத் துரியோதனன் அனுப்புதல்
$41.100

#100
காவலர் உடைதல் கண்டு கன்னனை அரசன் பார்த்து
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின்
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன்

மேல்
*கன்னன் முதலில் அபிமனால் தன் தேர் முதலியன
*இழந்து, பின் மீண்டும் வந்து பொருது, அபிமனுடைய
*தேர் முதலியவற்றைச் சிதைத்தல்
$41.101

#101
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான்

மேல்
$41.102

#102
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின்
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு
தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ

மேல்
$41.103

#103
தூண்டினன் மேலாள் ஆகி துனை பரி தடம் தேர் தூண்டி
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன் தெளிந்து மீள
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால்
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான்

மேல்
$41.104

#104
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு
பற்குனன் மைந்தன் திண் தேர் பரிகளும் பாகும் பட்டு
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும்
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே

மேல்
*தேர் இழந்த அபிமன் வாள் ஏந்தி,
*தரையில் பாய்ந்து பொருதல்
$41.105

#105
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனி மேல் விரைந்து பாய்ந்தான்

மேல்
$41.106

#106
வாளொடு பரிசை ஏந்தி மண்டலம் பயிற்றி இற்றை
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன் நின்ற வீரன்
தோளொடு புரையும் செம்பொன் மேருவை சுடரோன் நாக
கோளொடு சூழ்வது என்ன சுழற்றினான் குமரர் ஏறே

மேல்
$41.107

#107
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன்
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய்
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர்

மேல்
*துச்சாதனன் மகன் துச்சனி, ‘அபிமனை மாய்ப்பேன்!’
*என வந்து, அவன் வாளினால் மடிதல்
$41.108

#108
துச்சாதனன் மகன் மன்னர் தொழும் துச்சனி என்னும்
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன்
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன்

மேல்
*அது கண்டு துரோணன் அம்பு பல எய்ய, அபிமன்
*தன் வாளால் அவற்றைத் துணித்து, அவனது
*தேர் முதலியவற்றையும் சிதைத்தல்
$41.109

#109
துரியோதனன் மகனும் பொரு துச்சாதனன் மகனும்
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான்
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான்

மேல்
$41.110

#110
சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும்
பரியும் கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய்
முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே

மேல்
*பின்னும் துரோணன் மும்முறை தேர் இழந்து,
*மீண்டும் தேரில் வந்து வாளியினால்
*அபிமனது வலக்கையைத் துணித்தல்
$41.111

#111
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல்
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான்
செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே

மேல்
$41.112

#112
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும்
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான்

மேல்
$41.113

#113
பேணார் உயிர் பருகும் பசி பெட்ப பகு வாய் வெம்
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல்
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல்
நீள் நாகர் வியக்கும்படி விழ மீளியும் நின்றான்

மேல்
$41.114

#114
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும்
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான்
கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன்
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன்

மேல்
*ஒற்றைக் கையோடு நின்ற அபிமன்,
*கண்ணனிடம் பெற்ற மந்திரத்தால், ஓர்
*உருளையைச் சக்கரமாக்கிப் பொருதல்
$41.115

#115
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால்
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார்
வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான்

மேல்
*ஒரு கையுடன் சக்கரத்தால் அபிமன் செய்யும் போர்
*கண்டு புழுங்கி, துரியோதனன் சயத்திரதனை அழைத்து,
*அபிமன் உயிர் கவர ஏவுதல்
$41.116

#116
ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும்
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான்
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன்
பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா

மேல்
$41.117

#117
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே

மேல்
$41.118

#118
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன்
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே

மேல்
*சயத்திரதன் கதையுடன் பொர வர, பகைவர் களத்தே இட்டு ஓடிய
*ஒரு கதையை அபிமன் கையில் தாங்கிச் செருப் புரிதல்
$41.119

#119
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே

மேல்
$41.120

#120
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன்
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே

மேல்
$41.121

#121
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே

மேல்
$41.122

#122
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம்
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே

மேல்
$41.123

#123
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே

மேல்
*சயத்திரதனது தேர் முதலியவற்றை அபிமன் அழிக்க,
*அவனும் தரையில் குதித்துக் கதை கொண்டு பொருதல்
$41.124

#124
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன்
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே

மேல்
$41.125

#125
பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும்
அதிசயம் பட பொருதனர் எதிரெதிர் அபிமனும் சயத்திரதனும் அமரிலே

மேல்
*அபிமனது போர்த்திறம் கண்டு யாவரும் வியத்தல்
$41.126

#126
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே

மேல்
$41.127

#127
கழுகு பந்தர் இட்டன மிசை விசையொடு கழுது இனங்கள் இட்டன பல கரணமும்
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின்
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே

மேல்
$41.128

#128
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர்
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின்
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே

மேல்
*அபிமன் தளர்வுற்ற நிலையில் சயத்திரதன் கதையினால்
*அவனை மாய்த்தல்
$41.129

#129
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே

மேல்
$41.130

#130
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன்
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும்
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின்
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே

மேல்
*அபிமனது மறைவுக்குக் கவி இரங்குதல்
$41.131

#131
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம்
அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே

மேல்
$41.132

#132
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ
கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ

மேல்
$41.133

#133
கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ
அன்ன நெடும் துவசன் இவற்கு ஆயு மிக கொடுத்திலனே அந்தோ அந்தோ

மேல்
$41.134

#134
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ

மேல்
*பகைப்புலத்தாரின் மகிழ்ச்சி
$41.135

#135
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன்
பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர்
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம்
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன்

மேல்
$41.136

#136
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல்
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார்
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே

மேல்
*தருமன் அபிமனது மரணச் செய்தி கேட்டுப் புலம்புதல்
$41.137

#137
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல்
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே

மேல்
$41.138

#138
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும்
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான்
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில்
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே

மேல்
$41.139

#139
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன்
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே

மேல்
$41.140

#140
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின்
கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே

மேல்
$41.141

#141
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம்
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான்
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே

மேல்
*வீமன் புலம்புதல்
$41.142

#142
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன்
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான்

மேல்
$41.143

#143
மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலம் தொடையாலும் விடையோன் ஈந்த
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார்
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே

மேல்
$41.144

#144
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான்
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ

மேல்
*தருமனும் அருச்சுனனை ஒழிந்த தம்பியரும்
*அழுது புலம்பியிருக்க, அருக்கன் மறைதல்
$41.145

#145
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம்
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான்

மேல்
*விசயன் தெற்குத் திக்கில் வெற்றிகொண்டு மீள, யாவும் உணரும் கண்ணன்
*இந்திரனை நினைத்து, அவனது புதல்வனைக் காக்குமாறு கூறுதல்
$41.146

#146
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும்
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான்

மேல்
$41.147

#147
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும்
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன்
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால்
ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான்

மேல்
*வழியில், இந்திரன் முனி வடிவில் வந்து, இறந்த தன்
*புதல்வனுடன் தீப் பாய இருத்தல் கண்டு, கண்ணன்
*அந்தணனை விலக்குமாறு விசயனுக்குக் கூறுதல்
$41.148

#148
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன்
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன
துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி
விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விளிவேன் என்னா

மேல்
$41.149

#149
நெறியிடை இவர்கள் காண நெருப்பினை வளர்த்து தானும்
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன்
அறிவுடை விசயற்கு இந்த அந்தணன் தழலில் வீழாது
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான்

மேல்
*விசயன் அந்தணனைத் தடுத்துக் கூற,
*அவன், ‘நின் மகன் இறந்தாலும் என்
*வார்த்தையை மறாது ஒழி’ என்றல்
$41.150

#150
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா
பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும்
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான்

மேல்
$41.151

#151
வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ
பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை

மேல்
$41.152

#152
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான்

மேல்
*அருச்சுனனும் ஒருப்பட்டு மேலே போகும்
*போது பேரொலி செவிப்படுதல்
$41.153

#153
ஐ என தொழுது வீரன் அந்தணன் உயிரை மீட்டு
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர்
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும்
பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே

மேல்
*பாசறை அணுகும் முன்னம், விசயன் பக்கத்திலுள்ள
*ஆயுதங்களைக் கண்ணன் அப்புறப்படுத்துதல்
$41.154

#154
பாசறை அணுகும் முன்னம் பாசடை பதுமம் போல
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான்

மேல்
*’அரற்று ஒலியின் காரணம் என்?’ என விசயன் கேட்ப,
*கண்ணன் யாதும் உரையாது கண்ணீர் சிந்துதல்
$41.155

#155
அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான்
பங்கய நெடும் கண் சேப்ப நித்திலம் பரப்பினானே

மேல்
*விசயன் வற்புறுத்திக் கேட்ப, கண்ணன் அபிமனுக்கு உற்றவாறு கூறுதல்
$41.156

#156
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல்
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில்
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ

மேல்
$41.157

#157
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான்

மேல்
*புத்திர சோகத்தால் அருச்சுனன் தேரினின்று பூமியில் விழ,
*கண்ணன் தழுவி எடுத்துச் சோகம் மாற்றுதல்
$41.158

#158
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல்
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது
புத்திர சோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான் போல்
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான்

மேல்
$41.159

#159
அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன் பரிவோடு ஏந்தி
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான்

மேல்
*விசயனது புலம்பல்
$41.160

#160
போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை வென்று
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன்
நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீ களம் பட்டாயாகில்
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே

மேல்
$41.161

#161
சக்கரம் பிளந்தவாறும் தரியலர் உடைந்தவாறும்
துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும்
மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும்
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ

மேல்
$41.162

#162
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ
உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ

மேல்
$41.163

#163
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய்
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல்
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ

மேல்
$41.164

#164
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ

மேல்
$41.165

#165
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன்
பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ

மேல்
$41.166

#166
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும்
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை
அற்புத படைகள் வல்லாய் அபிமனே அமரர் ஊரும்
கற்பக காவும் வானில் கங்கையும் காட்டினாரோ

மேல்
$41.167

#167
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும்
துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி
இளைத்தது என்று இந்திராணி இன் அமுது ஊட்டினாளோ

மேல்
*ஐவரும் புலம்பி நெஞ்சழிந்த காலத்து, முனிவர்
*பலருடன் வியாத முனி வந்து தேற்றி மீளுதல்
$41.168

#168
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற
முன்னவர்கள் பின்னவர்கள் முறைமுறை புலம்ப
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான்

மேல்
$41.169

#169
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும்
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும்
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான்

மேல்
$41.170

#170
தாயரொடு தந்தையர்கள் தாரமொடு தனயோர்
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர்
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால்
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர்

மேல்
$41.171

#171
வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால்
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார்

மேல்
$41.172

#172
உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம்
அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம்
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல்
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே

மேல்
$41.173

#173
ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி
போற்றிய மகீபரை இருத்தி முனி போனான்

மேல்
*விசயன் பின்னும் சோகம் தாங்காது, நகுலனைக்
*கனல் வளர்க்கச் செய்து, தீப் பாயும் நிலையில், முன்
*அருச்சுனன் தடுத்த அந்தணன் வந்து விலக்குதல்
$41.174

#174
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே
ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான்

மேல்
$41.175

#175
மத்திரை மகன் கனல் வளர்க்க அதனூடே
மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான்
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான்
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ

மேல்
$41.176

#176
அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய்

மேல்
*அந்தணன் விலக்க எரிபுகுதல் தவிர்ந்த விசயன்,
*பின் தருமன் முதலியோரை வெகுளுதல்
$41.177

#177
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன்
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன்
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்-அது ஆனான்

மேல்
$41.178

#178
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா
ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார்
வீமனையும் நின்ற இளையோரையும் வெகுண்டான்

மேல்
*’நாளை அந்திப்பொழுதிற்குள் சயத்திரதனை முடிப்பேன்!’
*என விசயன் வஞ்சினம் மொழிதல்
$41.179

#179
சிந்து பதி ஆகிய செயத்திரதனை தேர்
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா
அந்தி படும் அ அளவின் ஆவி கவரேனேல்
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான்

மேல்
$41.180

#180
இன்று அமரில் வாள் அபிமன் இன் உயிர் இழக்க
கொன்றவனை நாளை உயிர் கோறல் புரியேனேல்
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே

மேல்
$41.181

#181
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த
பாதகனை நான் எதிர் பட பொருதிலேனேல்
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும்
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன்

மேல்
$41.182

#182
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன்
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல்
தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும்
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே

மேல்
$41.183

#183
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன்
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன்

மேல்
$41.184

#184
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால்
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன்

மேல்
*விசயன் வஞ்சினம் கேட்டு, தருமன் கண்ணனோடு பேசுதல்
$41.185

#185
இன்னணம் இருந்தவர்கள் யாவரும் நடுங்க
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும்
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும்

மேல்
$41.186

#186
வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சின
படி சயத்திரதனை படுத்தல் கூடுமோ
பொடி அனல் இவன் புகின் புகுந்து நால்வரும்
இடி பொரும் அரவு என இறத்தல் திண்ணமே

மேல்
$41.187

#187
முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனை
தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால்
அ பெரும் சேனையில் அவனை உள் உற
துப்பு உற அணிந்திடின் துன்னல் ஆகுமோ

மேல்
$41.188

#188
எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின்
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான்
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய் படு
குஞ்சரம்-தனக்கு அருள் கொண்டல் மேனியான்

மேல்
*தருமனைக் கண்ணன் தேற்றி, விசயனொடு கயிலைக்குச்
*சென்று, புலரும் முன் வருவதாகக் கூறி இருவரும் போதல்
$41.189

#189
இந்திரன் காக்கினும் ஈசன் காக்கினும்
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும்
கந்தனின் சிறந்த நின் கனிட்டன் நாளையே
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே

மேல்
$41.190

#190
வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும்
கயிலை அம் பொருப்பனை கண்டு மீளவும்
துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம் எனா
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான்

மேல்
*வழியில் விசயன் பசியினால் களைத்து விழ, கண்ணன்
*மயக்கம் போக்கி, மாங்கனி முதலிய அருந்தச் செய்தல்
$41.191

#191
ஏகிய நெறியிடை இளைத்து வாசவற்கு
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும்
போகியின் அறிதுயில் புரியும் நான்மறை
யோகி அம் கையின் அணைத்து உயக்கம் மாற்றியே

மேல்
$41.192

#192
உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல்
கொண்டிலை பசி கனல் கொளுந்தி வீழ்ந்தனை
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால்
கண்டிலை உலகியல் காட்ட காட்டவே

மேல்
$41.193

#193
மாங்கனி வாழையின் கனி வருக்கையின்
தீம் கனி கன்னலின் செய்ய நீர் உள
வேம் கனல் பசியும் நின் விடாயும் ஆறவே
ஈங்கு இனிது அருந்துதி ஏந்தல் என்னவே

மேல்
*விசயன், ‘சிவபூசை புரியவில்லையே!’ என, தன்னையே
*பூசிக்குமாறு கண்ணன் உரைத்தல்
$41.194

#194
சரிந்தவர் சரிவு அற தாங்கும் நாயகன்
பரிந்து இவை உரைத்தலும் பாவை பங்கன் மேல்
புரிந்திலன் இன்னமும் பூசை என்றனன்
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே

மேல்
*விசயன் கண்ணனைச் சிவாகம விதிப்படி பூசித்து,
*கனியும் தீர்த்தமும் உண்டு களைப்பு நீங்குதல்
$41.195

#195
மரு வரு கானக மலரினால் எமை
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ
இருவரும் ஒருவரே என்பது இன்று போய்
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே

மேல்
$41.196

#196
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும்
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான்
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம்
ஒன்றியே சிவாகம உரையின் சாத்தினான்

மேல்
$41.197

#197
சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர்
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன்
காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன்
பார்த்தன் முன் தவ பயன் பலித்தவாறு அரோ

மேல்
*கண்ணன் கருடனை நினைக்க, அவன் வந்து,
*இருவரையும் கயிலையில் கொண்டு சேர்த்தல்
$41.198

#198
போய் அரு நெறியிடை புள்ளின் வேந்தனை
தூயவன் நினைத்தலும் அவனும் தோன்றினான்
மாயனை தோளினும் வலாரி மைந்தனை
சேய் என கரத்தினும் சேர ஏந்தியே

மேல்
$41.199

#199
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன்
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம்
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ

மேல்
$41.200

#200
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை
காற்றினால் விசை உற கழன்று போயின
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே

மேல்
$41.201

#201
பறிந்தன கொடு முடி பலவும் வேரொடு
மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும்
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம்
செறிந்தன பணிந்தன செய்ய தாள்களே

மேல்
$41.202

#202
பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால்
காண்தகு சடைமுடி காலகாலன் மெய்
பூண்டன பணிகளும் புரண்டு வீழ்ந்தவே

மேல்
$41.203

#203
விரிந்த பைம் கனை கழல் வயினதேயனை
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார்

மேல்
*கயிலைக் காட்சிகள்
$41.204

#204
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம்
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால்

மேல்
$41.205

#205
நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன்
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ்
பாரத அமர் புரி பச்சை மா முகில்
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால்

மேல்
$41.206

#206
சங்கரன் மணி வரை சாரல் மாருதம்
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல்
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும்
கங்கை நுண் துவலையும் கலந்து வீசுமால்

மேல்
$41.207

#207
அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம்
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால்
கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால்

மேல்
*சிவபெருமான் கண்ணனை எதிர்கொண்டு ஆசனத்து
*இருத்தி, வந்த காரியம் வினவுதல்
$41.208

#208
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை
அந்தி வான் நிறத்தவன் அறிந்து முன்னமே
நந்தியும் உரைசெய கேட்டு நன்று என
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான்

மேல்
$41.209

#209
ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை
பாங்கினால் வினவினான் பவள மேனியான்
ஈங்கு இவன் பிறந்ததும் இளைத்த பார்_மகள்
தீங்கு அற புரிதரு செயலும் யாவுமே

மேல்
*கண்ணன் சிவபெருமானுக்கு யாவும் சொன்னபின்,
*’விசயனை வருக!’ என்று சிவபெருமான் அழைத்தல்
$41.210

#210
கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின்
வாசவன் புதல்வனை வருக என்றலும்
பாச அன்புடன் அவன் பணிந்து போற்றினான்

மேல்
*விசயன் சிவபெருமான் எதிரே வந்து, பணிந்து போற்றுதல்
$41.211

#211
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல்
வண்ணன் மேல் காண்டலும் மனம் களிப்புறா
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல்
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ

மேல்
$41.212

#212
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று
அங்கராகமும் உவந்து அணியும் மேனியாய்
சங்கரா மேரு வெம் சாபம் வாங்கிய
செம் கரா சிவசிவ தேவ தேவனே

மேல்
$41.213

#213
விண்ணிடை திரிபுரம் வெந்து நீறு எழ
பண்ணுடை செம் தழல் பரப்பும் மூரலாய்
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல்
கண்ணுடை கடவுளே கால காலனே

மேல்
$41.214

#214
கை உறு சிலையுடன் கான வேடன் என்று
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன்
மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும்
மை உறு கண்டனே மறப்பது இல்லையே

மேல்
$41.215

#215
உமையவள் கணவனே உகாந்த காலனே
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன்
அமைவு உற துதித்தலின் அவனும் மற்று இவன்
சமைவு கண்டு ஐயனோடு உவகை சாற்றினான்

மேல்
*சிவபெருமான் உவந்து, கண்ணனோடு பேசி, ‘வேண்டுவது
*என்?’ என, கண்ணன் அம்பு முதலியன வேண்டுதல
$41.216

#216
ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற
தேற்றினை சிந்தையை தெளிந்த வாய்மையால்
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின்
கூற்றினை அடைதலால் பிறவி கொள்ளுமே

மேல்
$41.217

#217
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும்
பூண்டது ஓர் பறை அறைந்து அன்றி போகலேன்
ஆண்டு அருள் படைகளால் அவுணர் காய்ந்தனன்
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே

மேல்
$41.218

#218
தானவர் பொரு படை கொண்டு தாரணி
மானவர் பொருவது வழங்கும் அல்லவால்
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர்
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி தோன்றலே

மேல்
*சிவபெருமான் கண்ணனைப் புகழ்ந்து கூறுதல்
$41.219

#219
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார்
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும்
கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே

மேல்
$41.220

#220
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன்
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால்
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே

மேல்
*சிவபெருமான் விசயனை ஒரு பொய்கையில் மூழ்கச்செய்து,
*ஒரு முனிவனால் அம்பு முதலியன அவனுக்குக் கொடுக்கச் செய்தல்
$41.221

#221
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன்
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே

மேல்
$41.222

#222
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும்
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு
ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும்
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான்

மேல்
*மேலும், பல வரங்களைச் சிவபெருமான் கொடுத்து, அவர்களை விடுக்க,
*அவர்கள் வெள்ளி எழும் காலத்து வந்து பாசறை சேர்தல
$41.223

#223
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன்
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின்
சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே

மேல்
$41.224

#224
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும்
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும்
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும்
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே

மேல்
*தருமன் கடோற்கசனைத் துரியோதனனிடம், விசயன்
*வஞ்சினம் முதலியன உரைத்து வருமாறு, தூது அனுப்புதல்
$41.225

#225
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன்
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார்
பங்குனன் ஓதிய வஞ்சினமும் பசுபதியிடை ஏகியதும்
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே

மேல்
$41.226

#226
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின்
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும்
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே

மேல்
$41.227

#227
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான்

மேல்
*கடோற்கசன் துரியோதனனிடம் சென்று, செய்தி சொல்லுதல்
$41.228

#228
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும்
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும்
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே

மேல்
$41.229

#229
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும்
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான்
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான்
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே

மேல்
$41.230

#230
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர்
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும்
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும்
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே

மேல்
$41.231

#231
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள்
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன்
கொன்றிடுவேன் அது தப்பின் அரும் கனலூடு குதித்திடுவேன்
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன்

மேல்
$41.232

#232
வஞ்சனையால் அமரில் பகை-தன்னை மலைப்பது பாதகம் என்று
அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால்
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர்
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன்

மேல்
*துரியோதனன் உரைத்த மறுமொழி
$41.233

#233
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான்
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ

மேல்
$41.234

#234
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும்
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே

மேல்
$41.235

#235
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும்
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே

மேல்
$41.236

#236
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில்
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான்

மேல்
*கன்னன் இகழ்ச்சி பொருந்தப் பேசுதல்
$41.237

#237
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும்
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில்
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான்

மேல்
$41.238

#238
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில்
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான்

மேல்
*அதற்குக் கடோற்கசன் வெகுண்டு, அவர்களை இகழ்ச்சியாகப் பேசுதல்
$41.239

#239
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும்
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள்
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும்
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே

மேல்
$41.240

#240
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான்
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே

மேல்
$41.241

#241
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி
பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர்
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை
பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே

மேல்
*’அவைக்கு ஏற்பப் பேசாத அரக்கி மகனுடன் ஒன்றும் பேசாதீர்’ என்று
*துரியோதனன் உரைக்க, கடோற்கசன் அவனை இகழ்ந்து பேசி, மீளுதல்
$41.242

#242
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும்

மேல்
$41.243

#243
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும்
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார்
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார்

மேல்
$41.244

#244
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார்
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார்
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார்
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான்

மேல்
$41.245

#245
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால்
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில்
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன்
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான்

மேல்
*’நாளை அமரில் சயத்திரதனைக் காக்கவேண்டும்’
*எனத் துரோணன்முதலியோரைத்
*துரியோதனன் இரந்து வேண்டுதல்
$41.246

#246
அரக்கன் அ பேர் அவை அகன்ற பின் பகை
துரக்கும் வெம் குனி சிலை துரோணன்-தன்னொடும்
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன்
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான்

மேல்
$41.247

#247
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல்
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன்
வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே

மேல்
$41.248

#248
நாளை ஓர் பகலுமே நமக்கு வெய்ய போர்
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன்
வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான்

மேல்
*’என்னால் இயன்ற அளவு காப்பேன்!’ எனத்
*துரோணன் உரைத்தல்
$41.249

#249
மணி மதில் அரண் என மன்னு சேனையை
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான்
பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ
துணிவுற தெரியுமோ தும்பை மாலையாய்

மேல்
$41.250

#250
முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம்
தப்பது படாதெனின் தனஞ்சயன் சிலைக்கு
ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல்
அ பதுமாசனன்-தனக்கும் ஆகுமோ

மேல்
$41.251

#251
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண்
புல்லினான் என்னினும் சிந்து பூபனை
வில்லினால் வெல்ல அரிது என்று மீளவும்
சொல்லினான் மறை மொழி துரோணன்-தானுமே

மேல்
*சயத்திரதனைக் காப்பதாகக் கன்னன் முதலியோர் உரைத்தல்
$41.252

#252
கோ பலருடன் பல கூறல் மற்று அவர்
நா பல நவிலினும் நாளை வான் பகல்
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர்
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே

மேல்
$41.253

#253
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான்
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே

மேல்
$41.254

#254
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர்
குரல் பட சேவகம் கூறுகிற்பரோ
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய்
சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ

மேல்
$41.255

#255
பொரு தொழில் விதம் பட புரிந்த காலையில்
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும்
கருதலன் வின்மையும் காண்டி காவலா

மேல்
*ஏனைய மன்னர்களும், புலர்ந்த பின் தெவ்வரைச் செகுப்போம்
*என்று கூறி விடை கொள்ளுதல்
$41.256

#256
என்று சேனாபதி மகன் இயம்பினான்
நின்ற காவலர்களும் நிசை புலர்ந்துழி
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும்
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ

மேல்
*தருமனைக் கண்ணன் முதலியோர் வந்து துயிலுணர்த்துதல்
$41.257

#257
பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி
நாதனும் விசயனும் நலத்தொடு ஏவிய
பூதனும் அருக்கனும் துயில் உணர்த்தினார்
சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே

மேல்
*கண்ணனும் கடோற்கசனும் தாம் சென்று வந்த இடத்து
*நிகழ்ந்தவற்றைத் தருமனுக்கு உரைத்தல்
$41.258

#258
கயிலை புக்கதும் அரன் கணையும் சாபமும்
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும்
புயல் என கரிய மெய் பூம் துழாயவன்
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின்

மேல்
$41.259

#259
பை திகழ் மணி பணி பதாகையானிடை
எய்தி அங்கு உரைத்ததும் இருந்த மன்னவர்
வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும்
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான்

மேல்

42. பதினான்காம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$42.1

#1
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின்
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும்
கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே

மேல்
*தருமன் முதலியோர் படையுடன் களம் புக திட்டத்துய்மன் அணிவகுத்து நிற்றல்
$42.2

#2
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான்
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான்

மேல்
$42.3

#3
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை
கடைந்து அமுது அளித்த கருணை அம் கடலே கடும் பரி சந்தனம் கடவ
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும்
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக

மேல்
$42.4

#4
சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி துரகதம் துரகத தடம் தேர்
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப

மேல்
*சயத்திரதனை இடை வைத்து, ஏனைய வீரர்களைச் சுற்றிலும்
*நிறுத்தி, துரோணனன் ஐ வகை வியூகமாக வகுத்து நிற்றல்
$42.5

#5
பாப்பு வெம் பதாகை பார்த்திவன் பணியால் பத்து இரண்டு யோசனை பரப்பில்
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி

மேல்
$42.6

#6
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி
பேசிய கன்னன் சகுனி சல்லியரை பேர் அணியாகவே நிறுத்தி

மேல்
$42.7

#7
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர்
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன்

மேல்
$42.8

#8
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே
அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார்
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில்
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே

மேல்
*உத்தமோசாவும் உதாமனும் இருபுறத்தும் வர, விசயன்
*துரியோதனன் படைமேல் செல்லுதல்
$42.9

#9
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான்

மேல்
*துச்சாதனனும் அவனைச் சூழ்ந்துள்ள சேனைகளும் விசயனுக்கு
*உடைந்து துரோணன் நின்ற இடத்தை அடைதல்
$42.10

#10
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள்
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே

மேல்
$42.11

#11
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும்
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும்
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும்
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான்

மேல்
*துரோணனுக்கும் விசயனுக்கும் அமர் விளைதல்
$42.12

#12
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய்
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால்
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே

மேல்
$42.13

#13
முட்டியாலும் நிலையினாலும் மொய்ம்பினாலும் முரணுற
தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன்
கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப்பொர
பட்ட இல்லை இருவர் மேலும் விட்டவிட்ட பகழியே

மேல்
$42.14

#14
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே

மேல்
*இருவரும் ஒத்து பொர பொழுது சென்றது என கூறி
*சயத்திரதனை அணுகும்பொருட்டு மாயன் தேரை
*வியூகத்தினுள்ளே செலுத்துதல்
$42.15

#15
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின்
பகைவன் நின்ற அ நிலம் பதிற்றிரண்டு யோசனை
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால்
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான்

மேல்
*தொடர்ந்து வந்த துரோணனை முனிவு மாறி ஏகுமாறு
*அருச்சுனன் மொழிதல்
$42.16

#16
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என
கதி துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும்
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது அருச்சுனன்
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான்

மேல்
$42.17

#17
ஐய நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது நின்
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான்
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான்

மேல்
*காம்போசன் முதலியோரை, விசயன் வென்று, சூசி வியூகத்தை அடைதல்
$42.18

#18
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம்
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள்
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய்
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான்

மேல்
*’கன்னனைப் பொருது மேற்செல்லவேண்டும்’ என விசயன்
*கண்ணனிடம் கூற, அவனும் தேரை அங்குச் செலுத்துதல்
$42.19

#19
முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும்
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின்
சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன்
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான்

மேல்
$42.20

#20
விலங்கி நம்மை அமர் விளைக்க விடதன் வில் சுதக்கணன்
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை
கலங்குமாறு பொருது போகவேண்டும் என்று கருதியே

மேல்
$42.21

#21
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உற பயிற்றலும்
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும்
தொக்கு வந்து விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே

மேல்
*கன்னனைச் சூழ நின்ற மன்னர்களை அழித்து,
*அவன் எதிர் நின்று விசயன் பொருதல்
$42.22

#22
சரம் தொடுத்த வயவரை சரத்தினின் தனித்தனி
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி
சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட
கரம் துடிக்க இரு பதங்கள் தறியவே கலக்கினான்

மேல்
$42.23

#23
கலக்கம் உற்று வில் இழந்து கவன மா இழந்து மேல்
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய்
உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார்

மேல்
$42.24

#24
துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும்
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான்
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன்
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார்

மேல்
$42.25

#25
தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய்
விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார்
விடம் கொள் வாளி மின் பரப்பி வெய்ய நாண் இடிக்கவே
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார்

மேல்
$42.26

#26
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால்
விண்தலம் புதைந்து தங்கள் மெய் படாமல் விலகினார்
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார்

மேல்
$42.27

#27
முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம்
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும்
தகர்த்து மார்பின் மூழ்க வாளி ஏவினன் தனஞ்சயன்

மேல்
*கன்னன் மயங்க, சுதாயு அவனுக்கு உதவியாக வந்து பொருதல்
$42.28

#28
தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன்
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான்

மேல்
$42.29

#29
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில்
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும்
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல்
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே

மேல்
$42.30

#30
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான்
எழுந்த வாளி வாளியால் விலக்க ஏவி ஆசுகம்
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான்

மேல்
*சுதாயு தண்டு கொண்டு எறிய, அது விசயனைத்
*தாக்காவண்ணம் கண்ணன் மார்பில் ஏற்றலும்,
*சுதாயு முன் பெற்ற சாபத்தின்படி மடிதலும்
$42.31

#31
முகம் கலங்க மெய் கலங்க முடி கலங்க மூரி மார்பு
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன்
சகம் கலங்க ஏற்றனன் தனாது மெய்யின் ஆகவே

மேல்
$42.32

#32
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன்
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை
சோகம் மிக்கு விழுதல் கண்டு தூரகாரி ஆதலால்
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார்

மேல்
$42.33

#33
வாழி வாழி குந்தி மைந்தன் வலவன் வாழி வாழியே
வாழி வாழி அவனி உய்ய வந்த நாதன் வாழியே
வாழி வாழி காளமேகவண்ணன் வாழி வாழியே
வாழி வாழி வாசுதேவன் வாழி வாழி வாழியே

மேல்
*’எறிந்த கதை நின் மேனியில் பட, சுதாயு மடிந்த காரணம்
*உரை’ என்ற விசயனுக்கு அதனை விளக்குதல்
$42.34

#34
என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில்
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான்

மேல்
$42.35

#35
பன்னவாதை என்று ஒருத்தி தாய் தந்தையும் பரவை மன்னவன் அந்த
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான்
முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான்

மேல்
$42.36

#36
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால்
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான்
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன்

மேல்
*அடுத்து, சுதாயுவின் இளவல் சதாயு வந்து பொருது மாளுதல்
$42.37

#37
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர்
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும்
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார்

மேல்
*ஆயிரவாகு அருச்சுனனுடன் பொருது அழிதல்
$42.38

#38
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி
ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு

மேல்
$42.39

#39
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம்
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான்

மேல்
$42.40

#40
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி
அடுத்த போர் முடிமன்னவன் விடும்விடும் அநேக ஆயிரம் அம்பும்
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற

மேல்
$42.41

#41
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்
குலி முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட
சிலிமுகங்களின் துணித்தனன் ஆயிரம் சிகர வாகுவும் சேர

மேல்
$42.42

#42
மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய்
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே

மேல்
$42.43

#43
அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன்
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான்

மேல்
*பட்டவர்த்தனரும் முடிமன்னரும் திரண்டு வந்து விசயனுடன் பொருது,
*பலர் உயிர் இழத்தலும், பலர் தப்பியோடுதலும்
$42.44

#44
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும்
படி நடுக்குற பணி குலம் நெளித்திட பட்டவர்த்தனர் உள்ளார்
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார்

மேல்
$42.45

#45
பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ

மேல்
$42.46

#46
போரில் வெவ் விடாய் தணிவுற களத்தினில் புறங்கொடுத்தவர் சோரி
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார்
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே

மேல்
$42.47

#47
நின்று பட்டனர் தனித்தனி அமர் புரி நிருபர் முந்துற ஓடி
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண்
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும்
அன்று பட்டவர்க்கு உறையிட போதுமோ அநேக நாளினும் பட்டார்

மேல்
$42.48

#48
அநேகம் ஆயிரம் பேர் பட கவந்தம் ஒன்று ஆடும் அ கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும்
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார்

மேல்
*சூரியன் உச்சிப் பொழுது அடைதல்
$42.49

#49
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால்
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும்

மேல்
*’நீர் உண்ணாவிடில் குதிரைகள் செல்லமாட்டா’ எனக்
*கண்ணன் கூற, விசயன் வருணன் அம்பினால்
*ஒரு தடாகம் உண்டு பண்ணுதல்
$42.50

#50
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால்
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன்

மேல்
$42.51

#51
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே

மேல்
$42.52

#52
ஆழம் புணரியினும் பெரிது அதினும் பெரிது அகலம்
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம்
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம்

மேல்
$42.53

#53
ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால்
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால்
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால்
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம்

மேல்
*தடம் கண்டு கண்ணன் உரைப்ப, விசயன் புரவிகளுக்கு
*நீர் ஊட்டி இளைப்பாறுதல்
$42.54

#54
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா

மேல்
$42.55

#55
குவளை பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி
பவள துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர்
இவுளிக்கும் இளைப்பு ஆற இளைப்பு ஆறினன் இப்பால்

மேல்
*’விசயனோடு பொரச் சென்றவர் தப்பார்’ என்று ஓடிவந்தவர் சொல்ல,
*துரியோதனன் துரோணனிடம் சென்று குறையிரத்தல்
$42.56

#56
அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர்
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன்
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார்

மேல்
$42.57

#57
துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான்
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி
பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும்

மேல்
$42.58

#58
அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார்
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின்
பிதிர் ஏறுவது அல்லாது அது பிழைப்பிப்பவர் இலரால்

மேல்
$42.59

#59
காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால்
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார்
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா

மேல்
$42.60

#60
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால்
முனி நாயக வேறு ஓர் விரகு இல்லை திருமுன்னே
இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான்

மேல்
*துரோண முனிவனின் மறுமொழி
$42.61

#61
முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும்
துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால்
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ

மேல்
$42.62

#62
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும்
நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர்
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும்
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார்

மேல்
$42.63

#63
தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன்
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார்
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான்
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆராயினும் அரிதால்

மேல்
$42.64

#64
அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது என அரசர்க்கு
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய்
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான்
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா

மேல்
$42.65

#65
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன்
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ
என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான்

மேல்
*துரோணன் அழிவற்ற கவசம் ஒன்றைத் துரியோதனனுக்கு
*அணிய, அவன் போருக்குப் புறப்படுதல்
$42.66

#66
பங்கயாசனன் வாசவற்கு அளித்தது வாசவன் பயில் போரில்
அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய்
புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான்

மேல்
$42.67

#67
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார்

மேல்
*துரியோதனன் சேனைகள் விசயன் ஆக்கிய தெய்விகப்
*பொய்கையில் நீர் பருகி விடாய் தீர்ந்து, விசயனை வளைத்தல்
$42.68

#68
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார்
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார்

மேல்
$42.69

#69
மத்த வாரணம் கொண்டு செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார்
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார்
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார்
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார்

மேல்
*விசயன் புரவிகளுக்கு நீரூட்டும்போது, துரியோதனன் பெரும்
*படையுடன் வருதல் கண்டு, புரவியைத் தேரில் பூட்டி, கண்ணன்
*அனுமதியுடன் தரையில் நின்ற வண்ணம் பொருதல்
$42.70

#70
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும்
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான்

மேல்
$42.71

#71
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர்
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான்

மேல்
$42.72

#72
கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய்
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல்
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான்

மேல்
$42.73

#73
தலைவனாம் முனி கிருபனும் கிருதனும் துரகதத்தாமாவும்
அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார்

மேல்
$42.74

#74
கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால்
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ
கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான்

மேல்
$42.75

#75
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு
காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற

மேல்
*வந்த சேனையை நிலைகுலையச் செய்தபின், விசயன்
*கண்ணனோடு இன்புறத் தேரில் ஏறுதல்
$42.76

#76
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம்
நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள்
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே

மேல்
*துரியோதனன் சகுனி முதலியோருடன் வந்து வளைத்தல்
$42.77

#77
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும்
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே

மேல்
*’இவர்கள் நெருங்கி வந்து பொருதற்கு யாது காரணம்?’ என
*விசயன் கண்ணனை வினவ, அவன் துரோணன் அளித்த
*கவசத்தின் தன்மை கூறி, அதனை அழிக்குமாறு தூண்டுதல்
$42.78

#78
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர்
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே

மேல்
$42.79

#79
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன் கலச சம்பவனும்
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே

மேல்
*தனஞ்சயன் அம்பின் எதிரே பலரும் பின்னிடுதல்
$42.80

#80
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில்
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும்
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே

மேல்
$42.81

#81
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம்
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர்
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே

மேல்
$42.82

#82
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர்
சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள்
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே

மேல்
*துரோணன் அளித்த கவசத்தை அணிந்து, துரியோதனன் விசயன் எதிர் பொருதல்
$42.83

#83
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே

மேல்
$42.84

#84
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல்
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே

மேல்
*வாளிகள் துரியோதனன் கவசத்தை அழியாமை கண்டு, விசயன் வேல் கொண்டு எறிய,
*அசுவத்தாமன் தன் அம்புகளால் அதனைத் துணித்தல்
$42.85

#85
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில்
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில்
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே

மேல்
*அருச்சுனன் தளர்நிலை கண்டு, கண்ணன் வலம்புரி முழக்க, மண்டலிகர் மயக்கமுறுதல்
$42.86

#86
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல்
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே

மேல்
$42.87

#87
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில்
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே

மேல்
$42.88

#88
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல்
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே

மேல்
*அப்பொழுது, கண்ணன் விசயனுக்கு வேல் அளிக்க, அவன் அதனை எறிந்து,
*துரியோதனன் கவசத்தைத் துகளாக்குதலும், யாவரும் பின்னிடுதலும்
$42.89

#89
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில்
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே

மேல்
$42.90

#90
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும்
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில்
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே

மேல்
$42.91

#91
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும்
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும்
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே

மேல்
$42.92

#92
வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில்
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார்
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும்
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார்

மேல்
$42.93

#93
தம்பியரும் துச்சாதனன் முதலோர்
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார்
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார்

மேல்
$42.94

#94
மாரதர் வீந்தார் அதிரதர் மாய்ந்தார்
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார்
நாரதன் முதலோர் நாகர் அநேகர்
பாரதம் இன்றே பற்று அறும் என்றார்

மேல்
$42.95

#95
இந்த வய போர் இ முறை வென்று
பைம் துளவோனும் பார்த்தனும் ஆக
சிந்து மகீபன் தேடி மணி தேர்
உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம்

மேல்
*கண்ணனது சங்கநாதம் கேட்ட தருமன், சாத்தகியை
*அழைத்து, விசயனது போர்ச் செய்தி அறிந்து வர அனுப்புதல்
$42.96

#96
வள்ளல் குறித்த வலம்புரி நாத
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின்
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்

மேல்
$42.97

#97
தன் துணை நின்ற சாத்தகியை கூய்
வென்றிடு போரில் விசயன் இளைத்தால்
அன்றி முழக்கான் அதிர் வளை ஐயன்
சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான்

மேல்
$42.98

#98
வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க
என்-கண் தந்தான் இன் உரை என்னா
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான்
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான்

மேல்
$42.99

#99
கண்ணுற நில்லார் கடவுளர் முதலாம்
விண்ணவரேனும் விசயன் வெகுண்டால்
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய்

மேல்
*அதிரதரோடு சென்ற சாத்தகி, தூசி பிளந்து சென்று,
*கிருதவர்மனை வெல்லுதல்
$42.100

#100
என்று அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும்
சென்றனன் வெய்தின் தேவகி மைந்தன்
துன்றிய செருவில் தூசி பிளந்தே

மேல்
$42.101

#101
விருதொடு முந்த விளங்கிய கொற்ற
கிருதனை ஆதி கேழலொடு ஒப்பான்
ஒரு தனுவும் கொண்டு ஊர் பரிமாவும்
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான்

மேல்
*சாத்தகி சலசந்தனோடும், துரியோதனன் தம்பியர்
*நால்வரோடும் பொருது வெல்லுதல்
$42.102

#102
பல் மக நூறாயிரவர் பரி தே
ரன் மிக நூறாயிரவர் அழிந்தார்
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-
தன் முன் மலைந்தான் தார் சலசந்தன்

மேல்
$42.103

#103
தார் சலசந்தன் சாத்தகி என்னும்
கார் செலவு ஆய கணை மழையாலே
போர் சலம் இல்லா புகர் மலையோடு
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான்

மேல்
$42.104

#104
நாட்டம் இல்லா நரபதி மைந்தர்
ஈட்டம் ஆக ஈர் இருவோர்கள்
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான்
வேட்டம் போன வெம் களிறு ஒப்பான்

மேல்
$42.105

#105
யாரும் போரில் எளிவர வீரம்
சாரும் சாபம்-தன்னொடு நேமி
தேரும் தானும் சென்றிடுவோனை
கூரும் சாப குரு எதிர் கண்டான்

மேல்
*சாத்தகியைத் துரோணன் தடுக்க, இருவரும் ஒத்துப் பொருது இளைத்தல்
$42.106

#106
ஏகல்ஏகல் என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு என்று
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான்
மேகவண்ணனுக்கு இளவலும் வேதியருடன் போர்
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான்

மேல்
$42.107

#107
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார்
இருவரும் கொடும் பகழிகள் முறைமுறை எய்தார்
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார்
இருவரும் பெரும்பொழுது அமர் திளைத்தனர் இளைத்தார்

மேல்
*பின், சாத்தகி இளைப்பு ஆறி, மேற் செல்ல, துச்சாதனன்
*தடுத்து நிற்கலாற்றாது பின்னிடுதல்
$42.108

#108
இளைத்து வேதியன் நிற்ப மன்னவன் இளைப்பாறி
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன்
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான்

மேல்
$42.109

#109
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான்
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொட