0. கடவுள் வாழ்த்து, பதிகம் 1. நாமகள் 2. கோவிந்தையார் 3. காந்தருவதத்தையார் 4. குணமாலையார் |
5. பதுமையார் இலம்பகம் 6. கேமசரியார் 7. கனகமாலையார் 8. விமலையார் 9. சுரமஞ்சரியார் |
10. மண்மகள் இலம்பகம் 11. பூமகள் 12. இலக்கணையார் 13. முக்தி |
@0 கடவுள் வாழ்த்து
#1 சித்தர் வணக்கம்
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த
தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள்_நிதி_செல்வன் என்ப
தேவாதி தேவன்-அவன் சேவடி சேர்தும் அன்றே
#2 அருகர் வணக்கம்
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடி_தாமரை சென்னி வைப்பாம்
#3 மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
பல் மாண் குணங்கட்கு இடனாய் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்
#4 அவை அடக்கம்
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும் நகை வெண் மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவி
பொற்பா இழைத்து கொளல்-பாலர் புலமை மிக்கார்
#5
முந்நீர் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
அ நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
இ நீர என் சொல் பழுது-ஆயினும் கொள்ப அன்றே
பொய்ம் நீர அல்லா பொருளால் விண் புகுதும் என்பார்
#6 பதிகம்
மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
தான் ஏறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னை
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்
#7
கோடாத செங்கோல் குளிர் வெண்குடை கோதை வெள் வேல்
ஓடாத தானை உருமு குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்
#8
சேந்து ஒத்து அலர்ந்த செழும் தாமரை அன்ன வாள் கண்
பூம் தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே
#9
கல்லார் மணி பூண் அவன் காமம் கனைந்து கன்றி
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்றவாறும்
புல்லார் புகல பொறி மஞ்ஞையில் தேவி போகி
செல் ஆறு இழுக்கி சுடுகாடு அவள் சேர்ந்தவாறும்
#10
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்த
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய் துயர் தீர்த்தவாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்தவாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்றவாறும்
#11
நெஞ்சம் புணையா கலை மா கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்தவாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்றவாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்தவாறும்
#12
முந்நீர் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்
செந்நீர் கடியின் விழவாட்டினுள் தேம் கொள் சுண்ணம்
மை நீர் நெடும் கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இ நீர் படியேம் இவை தோற்றனம் என்றவாறும்
#13
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடும் கண் குணமாலையை வைது மாறி
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடி_மாடம் அடைந்தவாறும்
#14
பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடை புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும்
அன்றை பகலே குணமாலையை அச்சுறுத்த
வென்றி களிற்றை விரி_தார்_அவன் வென்றவாறும்
#15
தேன் ஊறு தீம் சொல் குணமாலையை சேர்ந்தவாறும்
கோன் ஊறு செய்வான் கருதி சிறை கொண்டவாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்தவாறும்
#16
தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூம் கச்சு நீக்கி பொறி மாண் கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்தவாறும்
#17
பை நாக பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மை நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணி
கொய் நாக சோலை கொடி அ நகர் புக்கவாறும்
#18
அத்தம் அனைய களிற்று அ நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளை
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட
சித்தம் குழையற்க என தீர்த்து அவள் சேர்ந்தவாறும்
#19
பொன் பூண் சுமந்த புணர் மெல் முலை கோடு போழ
நல் பூம் கழலான் இரு திங்கள் நயந்தவாறும்
கல் பாடு அழித்த கன மா மணி தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறி கொண்டவாறும்
#20
தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழு சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்தவாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போயவாறும்
#21
இன் நீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்ப
பொன் ஊர் கழலான் பொழி மா மழை காடு போகி
மின் நீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன் ஊர் கொடு வெம் சிலை கண்டு எதிர்கொண்டவாறும்
#22
திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளை
புண் தாங்கு எரி வேல் இளையோற்கு புணர்த்தவாறும்
#23
மதியம் கெடுத்த வய மீன் என தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆயவாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்தவாறும்
பதியின் அகன்று பயந்தாளை பணிந்தவாறும்
#24
கண் வாள் அறுக்கும் கமழ்_தார்_அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்தவாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஓர் கன்னி
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்டவாறும்
#25
துஞ்சா மணி பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்ப கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அற கொன்றவாறும்
#26
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் என சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணி பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும் பொற்ப செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாயவாறும்
#27
திறை மன்னர் உய்ப்ப திரு நிற்ப செங்கோல் நடப்ப
குறைவு இன்றி கொற்றம் உயர தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடி கீழ் அரசு அஞ்சி துறந்தவாறும்
#28
கோணை களிற்று கொடி தேர் இவுளி கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன்மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணை கிழவன் விருந்து ஆர் கதி சென்றவாறும்
#29
தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்றவாறே
@1 நாமகள் இலம்பகம்
#30
நா வீற்றிருந்த புல_மா_மகளோடு நன் பொன்
பூ வீற்றிருந்த திரு_மா_மகள் புல்ல நாளும்
பா வீற்றிருந்த கலை பார் அற சென்ற கேள்வி
கோ வீற்றிருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்
#31
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே
#32
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே
#33
தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே
#34
குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே
#35
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே
#36
வள்ளல் கைத்தல மாந்தரின் மால் வரை
கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே
#37
மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று-அரோ
#38
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என
காடு கையரி கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடும் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே
#39
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான்
சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே
#40
பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய் தலை
தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே
#41
வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு என
தலை தலை அவர் கதம் தவிர்ப்ப தாழ்ந்து போய்
குல தலை மகளிர்-தம் கற்பின் கோட்டகம்
நிலை படா நிறைந்தன பிறவும் என்பவே
#42
கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்
செவ்வன் நூறு_ஆயிரம் சிலைக்கும் பம்பையும்
எ எலா திசைகளும் ஈண்டி காரொடு
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே
#43
மாமனும் மருகனும் போலும் அன்பின
காமனும் சாமனும் கலந்த காட்சிய
பூமனும் அரிசி புல் ஆர்ந்த மோட்டின
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே
#44
நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்
செறி மருப்பு ஏற்று இனம் சிலம்ப பண்ணுறீஇ
பொறி வரி வராலினம் இரிய புக்கு உடன்
வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே
#45
சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை
வீறொடு விளைக என தொழுது வித்துவார்
நாறு இது பதம் என பறித்து நாள்செய்வார்
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்
#46
முலை தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
புலத்து-இடை கவரி கன்று ஊட்ட போந்த பால்
நிலத்து-இடை பாய்ந்து அவை பிறழும் நீரவே
#47
பால் சுவை அறிந்து அவை பழன தாமரை
மேல் செல பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மாலை தேன் இரிய பாய்ந்தவே
#48
இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
விருந்து எதிர்கொண்ம் என தழுவி வீழ்ந்தவே
#49
வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
அளமரு குயிலினம் அழுங்கி பூம் பொழில்
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே
#50
வளை கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழி
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையை
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே
#51
கண் என குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
பண் எழுத்து இயல் பட பரப்பி இட்டனர்
தண் வயல் உழவர்-தம் தன்மை இன்னதே
#52
நித்தில பந்துடன் ஈன்று பாதிரி
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
தத்து நீர் நாரை மேல் எறிய தண் கடல்
பைத்து எழு திரை என பறவை ஆலுமே
#53
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்
செல்வமே போல் தலை நிறுவி தேர்ந்த நூல்
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சி காய்த்தவே
#54
மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்
தேன் கண கரும்பு இயல் காடும் செந்நெலின்
வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே
#55
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே
#56
வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை
மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம்
பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்
#57
வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்
தாள் உடை தாமரை கிழிய வண் சுமை
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்
பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே
#58
சோர் புயல் முகில் தலை விலங்கி தூ நிலம்
மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
ஆர்புறு பலா பழம் அழிந்த நீள் களம்
போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே
#59
ஈடு சால் போர் பழித்து எருமை போத்தினால்
மாடு உற தெளித்து வை களைந்து கால் உறீஇ
சேடு உற கூப்பிய செந்நெல் குப்பைகள்
கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே
#60
கரும்பு கண் உடைப்பவர் ஆலை-தோறெலாம்
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்து சாறு அடுவுழி பிறந்த தீம் புகை
பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே
#61
கிணை நிலை பொருநர் தம் செல்லல் கீழ் பட
பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்
கணை நிலை கரும்பினில் கவரும் பண்டியும்
மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்
#62
மல்லல் அம் தெங்கு இளநீர் பெய் பண்டியும்
மெல் இலை பண்டியும் கமுகின் மேதகு
பல் பழுக்காய் குலை பெய்த பண்டியும்
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்
#63
கரும் கடல் வளம் தர கரையும் பண்டியும்
நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்
பெரும் கலி பண்டிகள் பிறவும் செற்றுபு
திருந்தி எ திசைகளும் செறிந்த என்பவே
#64
கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன்
துளியொடு மது துளி அறாத சோலை சூழ்
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே
#65
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்வி பூ
காவில் கூடு எடுக்கிய கவ்வி கொண்டு இருந்தன
தா இல் பொன் விளக்கமா தண் குயில் முழவமா
தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பி கொம்பரோ
#66
கூடினார் கண் அம் மலர் குவளை அம் குழி-இடை
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏற பாய்வன
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்ப போந்து
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே
#67
காவி அன்ன கண்ணினார் கயம் தலை குடைதலின்
ஆவி அன்ன பூம் துகில் அணிந்த அல்குல் பல் கலை
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே
#68
பாசவல் இடிப்பவர் உலக்கை வாழை பல் பழம்
ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து
ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ
வாச தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே
#69
மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்
நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனை
கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர
நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே
#70
வெள்ளி போழ் விலங்க வைத்து அனைய வாய் மணி தலை
கொள் பவளம் கோத்த அனைய கால குன்றி செம் கண
ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணி புறா
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே
#71
காடி உண்ட பூம் துகில் கழும ஊட்டும் பூம் புகை
மாட மாலை மேல் நலார் மணி குழலின் மூழ்கலின்
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞை-தம் சிறகு
ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே
#72
கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்
வண்ண மேகலைகளை பற்ற அற்று உதிர்ந்தன
எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே
#73
கோட்டு இளம் தகர்களும் கொய் மலர தோன்றி போல்
சூட்டு உடைய சேவலும் தோணி கோழி ஆதியா
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர் கொளீஇ
காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே
#74
இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே
#75
விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் மு பழ சுனை
தலை தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலை தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நில தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே
#76
அடிசில் வைகல் ஆயிரம் அற புறமும் ஆயிரம்
கொடி அனார் செய் கோலமும் வைகல்-தோறும் ஆயிரம்
மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்
ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே
#77
நல் தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்
நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ
#78
கண் வலை காமுகர் என்னும் மா படுத்து
ஒள் நிதி தசை தழீஇ உடலம் விட்டிடும்
பெண் வலை படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடி நகர் அமைதி செப்புவாம்
#79
விண் புகு வியன் சினை மெலிய பூத்தன
சண்பகத்து அணி மலர் குடைந்து தாது உக
வண் சிறை குயிலொடு மயில்கள் மாறு கூஉய்
கண் சிறைப்படு நிழல் காவு சூழ்ந்தவே
#80
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே
#81
கடி நல கரும்பொடு காய் நெல் கற்றையின்
பிடி நலம் தழீஇ வரும் பெரும் கை குஞ்சரம்
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே
#82
சல சல மு மதம் சொரிய தம் தம்முள்
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்ப பாய்ந்து இரு
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே
#83
முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய்கொள
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல் வினை
சித்திர கிம்புரி வைரம் சேர்த்துநர்
ஒத்து இயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே
#84
ஓடு தேர் சாரிகை உகு பொன் பூமியும்
ஆடகம் ஆற்றும் தார் புரவி வட்டமும்
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலா
கோடு வெம் சிலை தொழில் இடமும் கூடின்றே
#85
புடை நகர் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது என கலந்தது அ கடல்
மடை அடைத்து அனையது அ மாக்கள் ஈட்டமே
#86
சிந்துர பொடிகளும் செம்பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதற பார் மிசை
இந்திரவில் என கிடந்த வீதியே
#87
பாத்தரும் பசும்பொன்னின் மாடத்து உச்சி மேல்
தூ திரள் மணி குடம் நிரைத்து தோன்றுவ
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே
#88
நெடும் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே
#89
பொன் சிறு தேர் மிசை பைம்பொன் போதகம்
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை
மற்று அ தேர் உருள் கொடா வளமை சான்றவே
#90
மாலையும் பசும்பொனும் மயங்கி வார் கணை
கோல் எய்யும் குனி சிலை நுதலினாரொடு
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலயம் இது என ஐயம் செய்யுமே
#91
கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நல் சுண பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்ப பொங்கிய
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே
#92
நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே
#93
இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய
முட்டு இலா மூ_அறு பாடை மாக்களால்
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே
#94
தங்கு ஒளி நித்தில தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம்
#95
கோள் சுறா இனத்தொடு முதலை குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சி பாய்வன
மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறா புள் இனம் இரற்றும் என்பவே
#96
சிறை அன பெடையினோடு ஊடி சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்ப தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே
#97
அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கரும் கலம் தோய்வு இலா காமர் பூம் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே
#98
பட்டவர் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம் வாய் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடை காவலின் காமர் கன்னியே
#99
நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மது குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே
#100
தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே
#101
மாற்றவர் மற படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரை கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றமுறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா
#102
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீ
கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே
#103
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகி
தம் புலங்களால் யவனர் தாள்படுத்த பொறியே
#104
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல்
பரந்த பசும்பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்ப திருந்தின்றே
#105
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணி தாழ் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடி கூந்தல்
வயிர கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே
#106
செம்பொன் மழை போன்று அடி-தொறு ஆயிரங்கள் சிந்தி
பைம்பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அதுதான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம்
#107
துப்பு உறழ் தொண்டை செ வாய் தோழியர் காம தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறா
செப்பி தம் செம்பொன் அல்குல் நலம் வரைவு இன்றி விற்கும்
உப்பு அமை காம துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே
#108
குங்குமம் மெழுகி சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே
#109
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப்பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே
#110
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கை
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழ செ வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே
#111
தேன் உலாம் மது செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர் கண் மூடி மாநகர் இரவு செய்ய
பால் நிலா சொரிந்து நல்லார் அணிகலம் பகலை செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே
#112
இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மை
பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன்
#113
மணி புனை செம்பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலை
கணி புனை பவழ திண் காழ் கம்பல கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே
#114
பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவன பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும்
மன் பெரும் பவழ குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நன் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே
#115
விழு கலம் சொரிய சிந்தி வீழ்ந்தவை எடுத்துக்கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழ குலை கமுகும் தெங்கும் வாழையும் பசும்பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை-தொறும் இயற்றினாரே
#116
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே
#117
மெய் அணி பசும்பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐதுபட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய்
செய் அணிகலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன்
#118
முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால்
#119
குடையொடு குடை பல களிறொடு நெரி தர
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடி உடை மழை மினின் குலவியது ஒருபால்
#120
பூத்தலை வாரண போர் தொழில் இளையவர்
நா தலை மடி விளி கூத்தொடு குயில் தர
காய்த்துறு தமனிய துகளொடு கடி கமழ்
பூ துகள் கழுமிய பொலிவினது ஒருபால்
#121
மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசு அரிந்து அணி கிளர்
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால்
#122
வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையும்-மின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால்
#123
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால்
#124
வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம்
#125
பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய்
கோவை நித்தில மாட குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே
#126
திருவ நீள் நகர் செம்பொனின் நீடிய
உருவ ஒண் கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர் செல்வன பன் மயிர்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே
#127
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் என தோன்றுமே
#128
செம்பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல்-அரோ
#129
வேரி இன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்த பின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி-தோறு இது செல்வத்து இயற்கையே
#130
கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமி சேர்ந்து கண்ணீர் வர தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண் புறவு என்பவே
#131
நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே
#132
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம் நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள்செய் மாலை நகை முடி பெய்பவே
#133
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு-இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே
#134
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும்
அம்_சில்_ஓதியர் அம் மலர் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே
#135
தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மாநகர் பொன் உலகு ஒத்ததே
#136
அரவு கான்றிட்ட அம் கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள்ளுறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே
#137
முல்லை அம் குழலார் முலை செல்வமும்
மல்லல் மாநகர் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே
#138
முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மா கடல் அன்னது ஓர் சும்மைத்தே
#139
திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால்
அம் கண் மாநகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே
#140
தேன்தலை துவலை மாலை பைம் துகில் செம்பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பக சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அதாமே
#141
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண் கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண்குடை இ நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்
#142
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதர
சேண் நிலத்து இயற்றிய சித்திர சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுற தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே
#143
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடி கையால் கூவி விட்டது ஒத்ததே
#144
முத்து மாலை முப்புரி மூரி மா மணி கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே
#145
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கித களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செம் கண் இந்திரன் நகர் செல்வம் என்னது அன்னதே
#146
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம்பொன் அம் பொன் மான் பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளிமாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே
#147
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழை அம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலை பசும் கமுகு சூலு பாளை வெண்பொனால்
ஊழ் திரள் மணி கயிறு ஊசல் ஆட விட்டதே
#148
மென் தினை பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணி சுனை குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே
#149
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே
#150
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர் பசும்பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இ திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே
#151
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இ திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே
#152
கூற்றம் அன்ன கூர் நுதி குருதி வான் மருப்பு-இடை
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே
#153
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம்பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணி கலம் பெய் மாடமும்
இ வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே
#154
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப்படுத்து இயன்றவே
#155
கந்து மா மணி திரள் கடைந்து செம்பொன் நீள் சுவர்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால்
இந்திரன் திருநகர் உரிமையோடு இ வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே
#156
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உண
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோல தீம் சுவை கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே
#157
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரை செம் கணான்
#158
வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய் திரு_மா_மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே
#159
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண்குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இ வையமே
#160
தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடை
திருமகன் திரு மா நில மன்னனே
#161
ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்
#162
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்
#163
உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய-ஆயினும் அ வளை தோளி கண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே
#164
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒள் நறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கி கடை குழன்ற கரும் குழல்கள்
வண்ண போது அருச்சித்து மகிழ்வு ஆனா தகையவே
#165
குழவி கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறு நுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே
#166
வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்
கண் கூடா கடை புடைத்து கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனா படியவே
#167
சேல் அனைய சில் அரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்து பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உற போந்து அகன்றனவே
#168
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றி பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே
#169
ஈனாத இளம் கமுகின் மரகத மணி கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அரு மணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரை பூ சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்து கவின் சிறை கொண்டு இருந்ததே
#170
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமை தோள்
துணி கதிர் வளை முன் கை தொகு விரல் செங்காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே
#171
தாம செப்பு இணை முகட்டு தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கரும் கண்ண
ஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே
#172
அம் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே
#173
மன் நாக இணை படமும் தேர் தட்டு மதி மயக்கி
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்த பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே
#174
வேழ வெண் திரள் தட கை வெருட்டி மற்று இளம் கன்னி
வாழை தண்டு என திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே
#175
பக்கத்தால் கவிழியவாய் மேல் பிறங்கா பாண்டில் ஆ
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்கு பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே
#176
ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக்கால் இன் வனப்பினவே
#177
பசும்பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்து அரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே
#178
அரக்கு இயல் செங்கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடி
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அற திரண்டு நீண்டு
ஒருக்குற நெருங்கி பொன் ஒளி ஆழி அகம் கௌவி
திரு கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே
#179
என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உற புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சி சீறடியும் மேதக்க விழைவினவே
#180
இ உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அ உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்து
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்து காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனா காம பூ சிதறினான்
#181
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டு சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கி செல்கின்றான்
மொய் அறா களி யானை முழங்கி தேன் இமிர் தாரான்
#182
வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன்-தன் மகள்
பெண்டிர்-தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே
#183
அரு மணி மரகதத்து அம் கண் நாறிய
எரி நிற பொன் இதழ் ஏந்து தாமரை
திருமகள் இவள் என திலக வெண்குடை
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே
#184
கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவ செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்
#185
இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ம் குழல்
மென் மலர் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே
#186
முந்து நாம் கூறிய மூரி தானை அ
கந்து கொல் கடா களி யானை மன்னவன்
பைம் தொடி பாசிழை பரவை ஏந்து அல்குல்
தந்தை-மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே
#187
மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அரு மதி சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே
#188
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடும் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே
#189
காதலால் காம பூமி கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்
#190
தன் அமர் காதலானும் தையலும் மணந்த-போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆக புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப்பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்
#191
பவழ வாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மது கோதை மாதர் தாமரை பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்
#192
பளிக்கு அறை பவழ பாவை பரிசு என திகழும் சாயல்
களி கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளி கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறை பறவை ஒத்தான்
#193
துறு மலர் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறு மலர் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திட பெரியர் வைகினார்
#194
துடி தலை கரும் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலை சிலம்பினோடு அரவ மேகலை
வடி தலை கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே
#195
இழை கிளர் இள முலை எழுது நுண் இடை
தழை வளர் மது மலர் தயங்கு பூம் சிகை
குழை முக கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே
#196
படு திரை பவழ வாய் அமுதம் மாந்தியும்
கொடி வளர் குவி முலை தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே
#197
கப்புர பசும் திரை கதிர் செய் மா மணி
செப்பொடு சிலதியர் ஏந்த தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே
#198
மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஒள் நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே
#199
குங்கும தோளினானும் கொழும் கயல் கண்ணினாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அற பருகும் நாளுள்
திங்கள் வெண்குடையினாற்கு திரு இழுக்குற்ற வண்ணம்
பைம் கதிர் மதியில் தெள்ளி பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே
#200
களிறு அனான் அமைச்சர்-தம்முள் கட்டியங்காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றி பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலா கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்
#201
அசைவு இலா புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையை பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை பட காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்
#202
அண்ணல் தான் உரைப்ப கேட்டே அடு களிற்று எருத்தின் இட்ட
வண்ண பூம் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு என கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்
#203
எழுதரு பருதி மார்பன் இற்று என இசைத்தலோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்-கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்
#204
வலம்புரி பொறித்த வண் கை மதவலி விடுப்ப ஏகி
கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்
#205
எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனை திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்
#206
காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளி கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்
#207
பெரும் பெயர் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றி
திருந்தினாற்கு இன்று-காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே
#208
கை மலர் காந்தள் வேலி கண மலை அரையன் மங்கை
மை மலர் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆக
கொய் மலர் கொன்றை மாலை குளிர் மதி கண்ணியாற்கு
பெய் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே
#209
நீல் நிற வண்ணன் அன்று நெடும் துகில் கவர்ந்து தம்முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிற தானை வேந்தே விரி புனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்கு குருந்து அவன் ஒசித்தது என்றான்
#210
காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப்பட்டது அன்றே
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்
#211
படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடு_உரை யாவர் பேர்ப்பார் வாய் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றி பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்
#212
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செம் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திரதத்தன் என்பான்
#213
அளந்து தாம் கொண்டு காத்த அரும் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்
#214
மூரி தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கி
பாரித்தேன் தரும நுண் நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரி தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்
#215
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புன மா மலர் வேய் நறும் பூம் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே
#216
கலை ஆர் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலை ஆர் தடமும் முனியாது படிந்து
உலையா திருவின் அமிர்து உண்டு ஒளி சேர்
மலை ஆர் மணி மார்பன் மகிழ்ந்தனனே
#217
விரி மா மணி மாலை விளங்கு முடி
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்து_இழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே
#218
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே
#219
பஞ்சி அடி பவள துவர் வாய் அவள்
துஞ்சும் இடை கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய்_இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே
#220
பண் கெழு மெல் விரலால் பணை தோளி தன்
கண் கழூஉ செய்து கலை நலம் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்
#221
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடும் தேர் மிகு தானை அ
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே
#222
தான் அமர் காதலி தன்னொடு மா_வலி
வானவர் போல் மகிழ்வுற்ற பின் வார் நறும்
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்
#223
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே
#224
வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்
#225
நன் முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் என
பின்னதனால் பயன் பேசலன் விட்டான்
#226
இற்று அதனால் பயன் என் என ஏந்து_இழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன்_தொடி சோர்ந்தாள்
#227
காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்க
பாவி என் ஆவி வருத்துதியோ என
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்
#228
தண் மலர் மார்புறவே தழீஇயினான் அவள்
கண் மலர் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு என
பண் உரையால் பரவி துயர் தீர்த்தான்
#229
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழ
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணை பூ மகள் சேர்ந்தாள்
#230
பண் கனிய பருகி பயன் நாடகம்
கண் கனிய கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனிய கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளர தளர்கின்றாள்
#231
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செ வாய் விளர்த்து கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலை கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே
#232
தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
தேம்பு உடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான்
#233
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியை சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்
#234
அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனை கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான்
#235
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடை
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே
#236
பீலி நல் மா மயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மா மயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இ மஞ்ஞை அறிந்து அருள் என்றான்
#237
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்
#238
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அ வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செல
பாடலின் மேன்மேல் பயப்பய தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்
#239
பண் தவழ் விரலின் பாவை பொறி வலம் திரிப்ப பொங்கி
விண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு-இடை பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்ப தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே
#240
காதி வேல் வல கட்டியங்காரனும்
நீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல்
ஓதினார்-தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குண கோதினுள் கோது அனான்
#241
மன்னவன் பகை ஆயது ஓர் மா தெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இரா பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே
#242
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம்முளான்
தருமதத்தன் என்பான் இது சாற்றினான்
#243
தவளை கிண்கிணி தாமரை சீறடி
குவளையே அளவுள்ள கொழும் கணாள்
அவளையே அமிர்து ஆக அ அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்
#244
விண்ணினோடு அமிர்தம் விலை செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது என தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இ வையகம்
தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே
#245
தன்னை ஆக்கிய தார் பொலி வேந்தனை
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழி செல்லின் இ மண் மிசை
பின்னை தன் குலம் பேர்க்குநர் இல்லையே
#246
திலக நீள் முடி தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்
#247
அருளுமேல் அரசு ஆக்கும்-மன் காயுமேல்
வெருள சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ
#248
உறங்கும்-ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்
#249
யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின்
தேவர் என்பது தேறும் இ வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார்
#250
தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழி தெய்வமே
#251
வேலின் மன்னனை விண்ணகம் காட்டி இ
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று என கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்
#252
குழல் சிகை கோதை சூட்டிக்கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரை பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார்
#253
நட்பு-இடை குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தை சேர்ந்தான்
கட்டு அழல் காம தீயில் கன்னியை கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்
#254
பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள்
குறைபடு மதியம் தேய குறு முயல் தேய்வதே போல்
இறைவனா தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளை போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான்
#255
கோள் நிலை திரிந்து நாழி குறைபட பகல்கள் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகி பசியும் நீடி
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இ உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்
#256
தார் பொலி தருமதத்தன் தக்கவாறு உரப்ப குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவள பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள்ளென வியர்த்து பொங்கி
நீர் கடல் மகர பேழ் வாய் மதனன் மற்று இதனை சொன்னான்
#257
தோளினால் வலியர் ஆகி தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லி கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும்-போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான்
#258
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கி
கண் எரி தவழ வண் கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்கு கட்டியங்காரன் சொன்னான்
#259
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன் அலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான்
#260
விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்பு கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான்
#261
நில தலை திரு_அனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலை தலை போகம் மூழ்கி முகிழ் நிலா முடி கொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கி
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான்
#262
கோன் தமர் நிகளம் மூழ்கி கோட்டத்து குரங்க தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சி சுடர் பழி விளக்கு இட்ட அன்றே
#263
பருமித்த களிறும் மாவும் பரந்து இயல் தேரும் பண்ணி
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்தி
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே
#264
நீள் நில மன்ன போற்றி நெடு முடி குருசில் போற்றி
பூண் அணி மார்ப போற்றி புண்ணிய வேந்தே போற்றி
கோள் நிலை குறித்து வந்தான் கட்டியங்காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சி சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான்
#265
திண் நிலை கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும்பொன் தேரும் படு மத களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான்
#266
புலி பொறி போர்வை நீக்கி பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலி கழல் மன்னர் உட்கும் உரு சுடர் வாளை நோக்கி
கலிக்கு இறை ஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம் மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான்
#267
நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்ன
கொங்கு அலர் கோதை மாழ்கி குழை முகம் புடைத்து வீழ்ந்து
செம் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள்
#268
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்தி
புல்லி கொண்டு அவலம் நீக்கி பொம்மல் வெம் முலையினாட்கு
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே
#269
சாதலும் பிறத்தல்-தானும் தம் வினை பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளை தோளி என்றான்
#270
தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கி
செல்லும் அ கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளை சுற்றமே இரங்கல் வேண்டா
#271
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம்மு உயிர்த்து இனையை ஆதல்
ஒண்_தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான்
#272
உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான்
#273
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்
#274
நீர் உடை குவளையின் நெடும் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடை குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீ திரள்
பார் உடை பனி கடல் சுடுவது ஒத்து உலம்பினான்
#275
முழை முகத்து இடி அரி வளைத்து அன்ன மள்ளரில்
குழை முக புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல்-இடை
மழை முகத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே
#276
அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர் பரு மணி பன் மயிர் செய் கேடகம்
வெயில் என திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணி கதிர் நகை கடவுள் ஒத்து உலம்பினான்
#277
மாரியின் கடும் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரிய குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன் படை
பேர் இயல் பெரும் களிறு பின்னி வந்து அடைந்தவே
#278
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதி வாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்றரும் மத களிறு மத்தகம் பிளந்தவே
#279
வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடை குருதியுள் உழக்குபு திரிதர
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே
#280
உப்பு உடைய மு நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறைமகன் இரும் களிறு நூற
அ படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி
#281
நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்தி
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பி
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்
#282
நெய் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வை முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மை முகம் அணிந்த மத யானை தவ நூறி
கை முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்
#283
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழிய
சோலை மயிலார்கள் துணை வெம் முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்
#284
புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள் வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே
#285
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக_உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மை கட்டியங்காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்தி கப்பணம் சிதறினானே
#286
குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கி
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான்
#287
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறி கொலை வாள் ஒடித்து நின்றான்
#288
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்
பேர் அமருள் அன்று பெரும் தாதையொடும் பேரா
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்
#289
போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்த
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்
#290
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்க கொடும் கோல் இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த அற செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானை சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே
#291
பால் அருவி திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் நெடும் குடை கீழ் பாய் பரி மான் தேர்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணி கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவி கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் விண்ணோர்க்கு விருந்து ஆயினானே
#292
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம் தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்து சேர்தியோ என்று இனைந்து இரங்கி பள்ளி படுத்தார்களே
#293
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணி செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்க காமன்
படை அவிழ்ந்த கண் பனி நீர் பாய விம்மா பரு முத்த நா மழலை கிண்கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவு தோய பொழி மழையுள் மின்னு போல் புலம்பினாரே
#294
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான்
கரி மாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்
#295
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலை மேல் ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கரும் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் நின்று திருவில் வீசும்
மையார் கடி பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார்
#296
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப
தேன் ஆர் மலர் சோலை செ வரையின் மேல் சிறு பிடிகள் போல துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அ உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இ கொடி இனி பூவா பிறர் பறிப்பவே
#297
செம் கண் குறுநரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு அதன் இடத்தை சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய் பெய்து அவன் பெயர்ந்து போய்
பைம் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே
#298
களி முக சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளி முக சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன்
#299
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள்
#300
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே
#301
மஞ்சு சூழ்வதனை ஒத்து பிண புகை மலிந்து பேயும்
அஞ்சும் அ மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சி மேல் வீழ்வதே போல் பல் பொறி குடுமி நெற்றி
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே
#302
வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கி
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்
#303
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனி தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண் தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்_தலை பயின்ற காட்டுள் விளங்கு_இழை தமியள் ஆனாள்
#304
இருள் கெட இகலி எங்கும் மணி விளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த ஆகி அணங்கு எலாம் வணங்கி நிற்ப
பொரு கடல் பருதி போல பொன் அனான் பிறந்த-போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே
#305
பூம் கழல் குருசில் தந்த புதல்வனை புகன்று நோக்கி
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மி திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தி திலகனை திருந்த வைத்தாள்
#306
கறை பன்னீர் ஆண்டு உடன் விடும்-மின் காமர் சாலை தளி நிறும்-மின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கி சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீ-மின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின்
#307
மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றி கொள பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்கு
கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின்
#308
அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்ப கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடி சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கி
கரும் கை களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்ப பிறப்பாய் வினை செய்தேன் காண இஃது ஓஒ பிறக்கும் ஆ
#309
வெம் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வா சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கி பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கி கூகை குழறி பாராட்ட
இவ்வாறு ஆகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே
#310
பற்றா மன்னன் நகர் புறமால் பாயல் பிணம் சூழ் சுடுகாடால்
உற்றார் இல்லா தமியேனால் ஒதுங்கல் ஆகா தூங்கு இருளால்
மற்று இ ஞாலம் உடையாய் நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே
#311
பிறந்த நீயும் பூம் பிண்டி பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர் கடலை நீந்தும் புணை மற்று ஆகா-கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தாமணியே கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ
#312
அந்தோ விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்று தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போல புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே
#313
அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இரும் கண் ஞாலத்து இருள் பருகி
சுடர் போய் மறைய துளங்கு ஒளிய குழவி மதி பெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டு படா முலையாள்
#314
தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே
#315
விம்முறு விழும வெம் நோய் அவண் உறை தெய்வம் சேர
கொம்மென உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இ இடர் உற்றது எல்லாம்
செம் மலர் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்
#316
பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய் யாம் மறைவது கருமம் என்றாள்
#317
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியை பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிர தேவி மெல்லவே ஒதுங்குகின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்
#318
ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலை பால் மடுத்து
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்தி
கோதை தாழ் குழலினாளை கொண்டு போய் மறைய நின்றாள்
#319
நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகி
கொல் வினை மாக்கள் சூழ கிடத்தியோ என்று விம்மா
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்
#320
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து என
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்
#321
வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே
#322
அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து என கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்
#323
புனை கதிர் திரு மணி பொன் செய் மோதிரம்
வனை மலர் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்ப தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே
#324
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன் பழ கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்
#325
ஒழுக்கு இயல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்ப அரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மா மணி
விழு தகு மகனொடும் விரைவின் ஏகினான்
#326
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலிய புக்க பின்
தன் உடை மதி சுட தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்
#327
பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே
#328
கள் அலைத்து இழிதரும் களி கொள் கோதை-தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்
#329
சுரி முக வலம்புரி துவைத்த தூரியம்
விரி முக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரி முக நித்திலம் ஏந்தி சேந்த போல்
கரி முக முலையினார் காய் பொன் சிந்தினார்
#330
அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழு கிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழி பெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெரு நிதி உவப்ப நல்கினான்
#331
திருமகன் பெற்று என செம்பொன் குன்று என
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செரு நிலம் பயப்பு உற செல்வன் செல்லுமே
#332
நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழி புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்ப கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்
#333
பொறி அறு பாவையின் பொம்மென விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்
#334
பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றி கேட்டே
திருமகள் தான் இனி செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே
#335
மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்
#336
அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரி கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்று அது நண்ணலம் ஆகி
#337
வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்து தாபத பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்
#338
பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அ திசை முன்னி
இருள்-இடை மின்னின் இலங்கு_இழை சென்றாள்
#339
உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகர குழை
திருவிலும் இவை தே மொழி மாதரை
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே
#340
சிலம்பு இரங்கி போற்று இசைப்ப திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறி வேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவள கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்து செல்லுற்றாள்
#341
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்டு அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே
#342
தடம் கொள் தாமரை தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே
#343
எல்லை எய்திய ஆயிர செம் கதிர்
மல்லல் மா கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்பட தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே
#344
நுணங்கு நுண் கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள்-அரோ
நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள்
#345
வைகிற்று எம் அனை வாழிய போழ்து என
கையினால் அடி தைவர கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே
#346
தூவி அம் சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியை கண்டுகண்டு
ஆவித்து ஆற்றுகிலாது அழுதிட்டவே
#347
கொம்மை வெம்முலை போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இ இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவ பள்ளியே
#348
வாள் உறை நெடும் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உற புல்லுவார் போல் தொக்கு எதிர்கொண்டு புக்கு
தாள் உறு வருத்தம் ஓம்பி தவ நெறி படுக்கல் உற்று
நாள் உற திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார்
#349
திருந்து தகர செம் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கரும் காழ் அகிலின் நறும் புகையில் கழுமி கோதை கண் படுக்கும்
திருந்து நான குழல் புலம்ப தேனும் வண்டும் இசை புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள்
#350
திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கி
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும் பொன் பூணும் அகற்றினாள்
#351
பஞ்சி அனைய வேய் மென் தோள் பகு வாய் மகரம் கான்றிட்ட
துஞ்சா கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை என துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணி காந்தள்
அஞ்ச சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள்
#352
பூ பெய் செம்பொன் கோடிகமும் பொன் ஆர் ஆலவட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள்
#353
பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி பிணை அன்னாள்
அடி கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடி பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ள தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே
#354
பால் உடை அமிர்தம் பைம்பொன் கலத்து-இடை பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்கா
சேல் அடு கண்ணி காந்தள் திரு மணி துடுப்பு முன் கை
வால் அடகு அருளி செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள்
#355
மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவி திங்கள் பொழி கதிர் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே
#356
பெண்மை நாண் வனப்பு சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே
#357
உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆயிடை
மறுவில் வெண்குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையை சேர்ந்து அறிந்து இ வழி
குறுக வம் என கூனியை போக்கினாள்
#358
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்ப சென்று
இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள்
#359
தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே
#360
மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கி களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப்பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்க பகர்கு உற்றேன்
#361
கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றி தந்த புண்ணியர் கூடி புகழோனை
சீற்ற துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்
#362
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்த
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்
#363
அம் பொன் கொம்பின் ஆய்_இழை ஐவர் நலன் ஓம்ப
பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும்
செம்பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே
#364
பல் பூம் பொய்கை தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்புற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்க குட்டியும் போன்று இ உலகு ஏத்த
செல்லும் மன்னோ சீவகன் தெய்வ பகை வென்றே
#365
மணியும் முத்தும் மாசறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கி
கணிதம் இல்லா கற்பகம் கந்துக்கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்ப கொடி ஒத்தாள்
#366
சாதி பைம்பொன் தன் ஒளி வௌவி தகை குன்றா
நீதி செல்வம் மேன்மேல் நீந்தி நிறைவு எய்தி
போதி செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்
#367
நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்
#368
முழவு என திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் என கனலும் வாள் கண் அ வளை தோளினாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியை புணர்க்கல் உற்றார்
#369
அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆக
பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதி ஏற்ப
திருந்து பொன் கண்ணியாற்கு செல்வியை சேர்த்தினாரே
#370
நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லா படை கல தொழிலும் முற்றி
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசை திலகம் ஒத்தான்
#371
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்கும தோளினாற்கு
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார்
#372
விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார்
#373
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்ன
தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை
தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்
#374
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமை
பால் நெறி பலவும் நீக்கி பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்
#375
அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினை குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனை கடலுள் நின்றார்
#376
கூற்றுவன் கொடியன் ஆகி கொலை தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்றுற போதல் தேற்றாம் அளியமோ பெரியமே காண்
#377
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம்
#378
தழங்கு குரல் முரசின் சாற்றி தத்துவம் தழுவல் வேண்டி
செழும் களியாளர் முன்னர் இருள் அற செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழும் களி உணர்வினாரை குணவதம் கொளுத்தல் ஆமோ
#379
பவழ வாய் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்தி
குழவி நாறு எழுந்து காளை கொழும் கதிர் ஈன்று பின்னா
கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா
உழவிர்காள் மேயும் சீல வேலி உய்த்திடும்-மின் என்றான்
#380
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணி பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்
#381
காட்சி நல் நிலையில் ஞான கதிர் மணி கதவு சேர்த்தி
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிர தாழ் கொளுவி பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏற திறந்தனன் அலர்ந்த தாரான்
#382
நல் அறத்து இறைவன் ஆகி நால் வகை சரணம் எய்தி
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு
புல் அற நெறி கண் நின்று பொருள்-வயின் பிழைத்தவாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அற கூறி இட்டான்
#383
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கி
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர் காவு சேர்ந்து பிறப்பினை தெருட்டல் உற்றான்
#384
பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சி பொலிவினோடு இருந்த-போழ்தில்
ஏ இயல் சிலையினானை இ பொருள் கேண்மோ என்றான்
#385
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்கு தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியை பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப்பட்டான்
#386
புலம்பொடு தேவி போகி புகற்கு அரும் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னை பயந்து பூம் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள்
#387
வானத்தின் வழுக்கி திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழ
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுற தோன்றினானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியானே
#388
அரும் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போக
திருந்திய நம்பி ஆர தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள்
#389
கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினை தேற்றி ஆங்கு அ
பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும்
சொரி மலர் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோர
திரு மலர் கண்ணி சிந்த தெருமந்து மயங்கி வீழ்ந்தான்
#390
கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழ
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலை சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அற தேற்ற தேறி
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர் கடலுள் பட்டான்
#391
இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடும் கண் நீர் துடைத்து நீவி
புனை இழை மகளிர் போல புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே
#392
மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் முழங்கி மா நீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்று
சிலையொடு பகழி ஏந்தி கூற்று என சிவந்து தோன்றும்
இலை உடை கண்ணியானை இன்னணம் விலக்கினானே
#393
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல
ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில்_வலான் அதனை நேர்ந்தான்
#394
வெவ்வினை வெகுண்டு சாரா விழு_நிதி அமிர்தம் இன் நீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கம் இல் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இ இயல் ஒருவற்கு உற்றது இற்றென கிளக்கல் உற்றான்
#395
வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமாபாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணி சிறுவனுக்கு அரசு நாட்டி
பால் நிற குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான்
#396
வெம் சினம் குறைந்து நீங்க விழு தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்கு பாவம் வந்து அடைந்தது ஆக
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இ மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான்
#397
உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் யார் அவன் வாழி என்ன
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால்
திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க என்றான்
#398
பூ தின்று புகன்று சேதா புணர் முலை பொழிந்த தீம் பால்
நீத்து அற செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி
ஏத்தரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே
#399
புடை இரு குழையும் மின்ன பூம் துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும்-போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார்
#400
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டி
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெரும் கடல் வெள்ளி குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலா புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன்
#401
சுரும்பு உடை அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன்-தானும்
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடை காளை அன்ன காளை நின் வலைப்பட்டு என்றான்
#402
நிலம் பொறுக்கலாத செம்பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னை கண்டேன்
#403
ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கி
தெய்வம்-கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்க கேட்டேன்
#404
கோட்டு இளம் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அள பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னை
சேட்டு இளம் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான்
#405
கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயா தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவ பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான்
#406
மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான்
#407
கை வரை அன்றி நில்லா கடும் சின மடங்கல் அன்னான்
தெவ்வரை செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதி செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படு கடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உற தேற்றி இட்டான்
#408
அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனை தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்
@2 கோவிந்தையார் இலம்பகம்
#409
ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழ
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்
#410
நம்பன் இத்தலை நாக நல் நகர்
பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம்பொன் நீள் கொடி தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே
#411
கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
சிலையினது அகலமும் வீணை செல்வமும்
மலையினின் அகலிய மார்பன் அல்லது இ
உலகினில் இலை என ஒருவன் ஆயினான்
#412
நாம வென்றி வேல் நகை கொள் மார்பனை
காமனே என கன்னி மங்கையர்
தாமரை கணால் பருக தாழ்ந்து உலாம்
கோமகன் திறத்து உற்ற கூறுவாம்
#413
சில் அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
முல்லை கார் என பூப்ப மொய் நிரை
புல்லு கன்று உளி பொழிந்து பால் படும்
கல்லென் சும்மை ஓர் கடலின் மிக்கதே
#414
மிக்க நாளினால் வேழம் மு மதம்
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார்
#415
மன்னவன் நிரை வந்து நண்ணுறும்
இன்ன நாளினால் கோடும் நாம் என
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
முன்னம் கூறினான் முது உணர்வினான்
#416
அடைதும் நாம் நிரை அடைந்த-காலையே
குடையும் பிச்சமும் ஒழிய கோன் படை
உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே
#417
என்று கூறலும் ஏழை வேட்டுவீர்
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும் ஒருவன் என் செயும்
இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார்
#418
வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
தொண்டக பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த-காலையே
#419
பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
கோத்த நித்தில கோதை மார்பினான்
வாய்த்த அ நிரை வள்ளுவன் சொனான்
#420
பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
எள்ளன்-மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார்
#421
காய மீன் என கலந்து கான் நிரை
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
பாய மாரி போல் பகழி சிந்தினார்
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்
#422
குழலும் நவியமும் ஒழிய கோவலர்
சுழல காடு போய் கன்று தாம்பு அரிந்து
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
மழலை தீம் சொல்லார் மறுக வாய்விட்டார்
#423
மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்
உய்த்தனர் என உடை தயிர் புளி
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார்
#424
வலை படு மான் என மஞ்ஞை என தம்
முலை படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
தலை படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார்
#425
எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
நும் அனைமார்களை நோவ அதுக்கி
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ என
தம் மனை கன்றொடு தாம் புலம்புற்றார்
#426
பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
ஆறு மட பள்ளி ஆகுலம் ஆக
மாறு பட மலைந்து ஆய் படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே
#427
புறவு அணி பூ விரி புன்புலம் போகி
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணி கேட்க உய்த்திட்டனர் பூசல்
#428
கொடு மர எயினர் ஈண்டி கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரி பைம் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே
#429
காசு இல் மா மணி சாமரை கன்னியர்
வீசு மா மகர குழை வில் இட
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான்
#430
கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
சண்ட மன்னனை தாள் தொழுது ஆயிடை
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் என
கொண்டனர் நிரை போற்று என கூறினான்
#431
செம் கண் புன் மயிர் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை
செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்
#432
கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கி
காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன்
ஏற்றை அரிமான் இடி போல இயம்பினானே
#433
கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளி திண் தேர் புனை மயிர் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம வான் உலா போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே
#434
கால் அகம் புடைப்ப முந்நீர் கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய்விட்டு இரலையும் துடியும் ஆர்ப்ப
பால் வளைந்து இரவு செற்று பகலொடு மலைவது ஒத்தார்
#435
வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனை பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக செம் நா
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றி
கொல் பழுத்து எரியும் வேலார் கொடும் சிலை குழைவித்தாரே
#436
வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கி
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனை பகழி-தம்மால்
வீட்டினார் மைந்தர்-தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனி வரை குனிவது ஒத்தே
#437
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடை படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய் மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே
#438
பல்லினால் சுகிர்ந்த நாரில் பனி மலர் பயில பெய்த
முல்லை அம் கண்ணி சிந்த கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடி படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங்காரன் ஆழ்ந்தான்
#439
வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலை தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழும் கயல் தடம் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆ கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சி திருநகர் செல்வ என்றார்
#440
மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள் கண்
பொன் இழை சுடரும் மேனி பூம் கொடி அனைய பொற்பில்
கன்னியை தருதும் என்று கடி முரசு இயம்ப கொட்டி
நல் நகர் வீதி-தோறும் நந்தகோன் அறைவித்தானே
#441
வெதிர்ம் குதை சாபம் கான்ற வெம் நுனை பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கரும் தடம் கண்ணி அன்றி காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார்
#442
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சின் ஓடும்
தேர் பரி கடாவி தேம் தார் சீவகன் அருளில் போகி
தார் பொலி புரவி வட்டம் தான் புக காட்டுகின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே
#443
தன் பால் மனையாள் அயலான் தலை கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கை பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்
#444
போர் பண் அமைத்து நுகம் பூட்டி புரவி பண்ணி
தேர் பண் அமைத்து சிலை கோலி பகழி ஆய்ந்து
கார் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே
#445
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்-கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழி தொழில் வல்ல காளை
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும்
பொழுது அன்று போதும் என புள்_மொழிந்தான் மொழிந்தான்
#446
மோட்டும் முது நீர் முதலைக்கு வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டை பசியின் இரை கவ்விய நாகம் போல்
வேட்டு அ நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே
#447
கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து-இடை முழங்க காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே
#448
கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள்செய்து ஐயன் முதல் விளையாடினானே
#449
ஆழியான் ஊர்தி புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கி பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ் துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கி சேக்கை
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார்
#450
புள் ஒன்றே சொல்லும் என்று இ புன் தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே
#451
மால் வரை தொடுத்து வீழ்ந்த மணி நிற மாரி-தன்னை
கால் இரைத்து எழுந்து பாற கல்லென புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே
#452
கானவர் இரிய வில்-வாய் கடும் கணை தொடுத்தலோடும்
ஆன் நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று அ பொருவரு சிலையினார்க்கே
#453
ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய் நூறுநூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கை நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மை நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்
#454
வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றி
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான்
#455
ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடிவேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே
#456
இரவி தோய் கொடி கொள் மாடத்து இடு புகை தவழ சுண்ணம்
விரவி பூம் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவி தேர் காளை அன்ன காளையை பொலிக என்றார்
#457
இன் அமுது அனைய செ வாய் இளம் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையை காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார்
#458
சில் அரி சிலம்பின் வள் வார் சிறுபறை கறங்க செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி
செல்வ போர் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே
#459
நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கி
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
கோல் பொர சிவந்த கோல மணி விரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்
#460
ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கி
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலை தடங்கல் தோன்ற
பாகமே மறைய நின்ற படை மலர் தடம் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார்
#461
வாள் அரம் துடைத்த வை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணி மலர் தடம் கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல்
காளை-தன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே
#462
வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரை பயந்தன மாடம் எல்லாம்
#463
மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறி
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென்
தாது உகு பிணையல் வீசி சாந்து கொண்டு எறிந்து நிற்பார்
#464
கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்-கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார்
#465
செம்மலை பயந்த நற்றாய் செய் தவம் உடையாள் என்பார்
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார்
#466
சினவுநர் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளை
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும்
#467
விண்ணகத்து உளர்-கொல் மற்று இ வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண்ணகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலை தவத்தில் தந்தார் யார்-கொலோ அளியர் என்பார்
#468
வட்டு உடை பொலிந்த தானை வள்ளலை கண்ட-போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ
அட்ட அரக்கு அனைய செ வாய் அணி நலம் கருகி காம
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார்
#469
வார் செல செல்ல விம்மும் வன முலை மகளிர் நோக்கி
ஏர் செல செல்ல ஏத்தி தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன்
தேர் செல செல்லும் வீதி பீர் செல செல்லும் அன்றே
#470
வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர் தடம் கண் கோட்டி
தோள் முதல் பசலை தீர தோன்றலை பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முக புலியோடு ஒப்பான் கொழு நிதி புரிசை புக்கான்
#471
பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணி வள்ளம் நிறைய ஆக்கி
இன் மது பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம்பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே
#472
இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டி
பட்டமும் குழையும் மின்ன பல் கலன் ஒலிப்ப சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனை கொண்டு புக்கார்
#473
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையை காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிர செம் கணான்-தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார்
#474
தகை மதி எழிலை வாட்டும் தாமரை பூவின் அம் கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலை கண்டு வண் தார்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்
#475
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறை பாரம் எல்லாம் கட்டியங்காரன்-தன்னை
பூட்டி மற்று அவன்-தனாலே பொறி முதல் அடர்க்கப்பட்டான்
#476
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறி
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கரும் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று-ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்
#477
குலத்தொடு முடிந்த கோன்-தன் குடி வழி வாரா நின்றேன்
நல தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்
#478
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்ப
கொம்படு நுசுப்பினாளை குறை இரந்து உழந்து நின்ற
நம் படை-தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்
#479
பாடகம் சுமந்த செம்பொன் சீறடி பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன்கை சுடர் மணி பூணினாளை
ஆடக செம்பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்
#480
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வன முலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்
#481
சேதா நறு நெய்யும் தீம் பால் சுமை தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைம் தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்
#482
குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்கு கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே
#483
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலை கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலை
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே
#484
கோட்டு இளம் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டு இள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான்
#485
தேன் சொரி முல்லை கண்ணி செம் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகி குடை தயிர் குழும புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர்
கான் சொரி முல்லை தாரான் கடிவினை முடிக என்றான்
#486
கனி வளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையை கொன்ற குவளை கண் கயலை கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் என சிலம்பு அரற்ற தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையை பரவி வைத்தார்
#487
நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய் தலைப்பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்த்தியர் ஆட்டினாரே
#488
நெய் விலை பசும்பொன் தோடும் நிழல் மணி குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கல கடிப்பு சேர்த்தி
பெய்தனர் பிணையல் மாலை ஓர் இலை சாந்து பூசி
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்
#489
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்து கொண்டு ஏகி மூதூர்
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வை வேல் பதுமுக குமரற்கு என்றே
#490
நல தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன் பொன்
இலக்கண பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலை குவட்டு இடை பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே
#491
கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன ஆகி
வெள் வேல் மிளிர்ந்த நெடும் கண் விரை நாறு கோதை
முள் வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்தி
கொள்ளாத இன்ப கடல் பட்டனன் கோதை வேலான்
#492
தீம் பால்கடலை திரை பொங்க கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ தட மாலை வேய் தோள்
ஆம் பால் குடவர் மகளோ என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே
@3 காந்தருவதத்தையார் இலம்பகம்
#493
இங்கு இவர்கள் இவ்வாறு இருந்து இனிது வாழ
சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்
பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர்
வங்கமொடு போகி நிதி வந்து தரல் உற்றான்
#494
மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்
கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும்
தன் வழிய காளை சீதத்தன் அவன் தன் போல்
பொன் ஒழுகு குன்றில் உறை போர் புலியொடு ஒப்பான்
#495
இம்மியன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கி
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி
அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று
உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே
#496
உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே
வெள்ள நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை
தொள்ளை உணர்வு இன்னவர்கள் சொல்லின் மடிகிற்பின்
எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே
#497
செய்க பொருள் யாரும் செறுவாரை செறுகிற்கும்
எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும்
ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும்
பொய்யில் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே
#498
தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர்
தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீ சொல்
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான்
#499
மோதுபடு பண்டம் முனியாது பெரிது ஏற்றி
மாதுபடு நோக்கினவர் அவர் வாள் கண் வடு உற்ற
தாது படு தார் கெழிய தங்கு வரை மார்பன்
கோது படல் இல்ல குறி கொண்டு எழுந்து போந்தான்
#500
வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்
தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி
ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான்
#501
ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபட செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்
கோடு பறை ஆர்ப்ப கொழும் தாள் பவழம் கொல்லா
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே
#502
திரைகள் தரும் சங்கு கலம் தாக்கி திரள் முத்தம்
கரை கடலுள் கால கணை பின் ஒழிய முந்நீர்
வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின்
நிரை இடறி பாய்ந்து இரிய ஏகியது மாதோ
#503
மின்னும் மிளிர் பூம் கொடியும் மென் மலரும் ஒப்பார்
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார்
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே
#504
தீவினுள் இழிந்து தேன் தார் செம்மலும் திரு முத்தாரம்
கோவினை குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்-தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள்
#505
புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறு மதி கழிந்த பின்றை
கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதி குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்
#506
அரசனை கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறி
கரை கடல் அழுவம் நீந்தி காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே
#507
களி தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
துளி தலை முகில்கள் ஈண்டி தூங்கு இருள் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கி கூற்றும்
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன்
#508
எண் திசை வளியும் ஈண்டி எதிரெதிர் கலாவி பவ்வம்
கொண்டு மேல் எழுவது ஒப்ப குளிறி நின்று அதிர்ந்து மேகம்
தண் துளி பளிக்கு கோல் போல் தாரையாய் சொரிந்து தெய்வம்
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும்
#509
இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்கு போல
நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக தாம் நக்க போழ்து அ
இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார்
வடுப்படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே
#510
ஆடக செம்பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார்
பாடகம் போல சூழ்ந்த பழவினை பயத்தின் என்றான்
#511
வினை அது விளைவின் வந்த வீவு அரும் துன்பம் முன்னீர்
கனை கடல் அழுவம் நீந்தி கண் கனிந்து இரங்கல் வேண்டா
நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம்
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான்
#512
பருமித்த களிறு அனானும் பை என கவிழ்ந்து நிற்ப
குருமித்து மதலை பொங்கி கூம்பு இற பாய்ந்து வல்லே
நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
உரும் இடித்திட்டது ஒப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்
#513
ஓம்பி படைத்த பொருளும் உறு காதலாரும்
வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
கூம்பு இற்ற துண்டம் தழுவி கிடந்தான் கொழித்து
தேம் பெற்ற பைம் தார் அவனை திரை உய்த்தது அன்றே
#514
நாவாய் இழந்து நடு யாரும் இல் யாமம் நீந்தி
போவாய் தமியே பொருளை பொருள் என்று கொண்டாய்
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
பாவாய் என போய் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்
#515
பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்து ஆங்கு
அரு வரை மார்பன் அவலித்து இருந்தான்
#516
ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
ஆடும் அலவனை அன்னம் அருள் செய
நீடிய நெய்தல் அம் கானல் நெடும் தகை
வாடி இருந்தான் வரும் கலம் நோக்கா
#517
ஆளிய மொய்ம்பன் இரும் தவ பூம் பொழில்
தாள் வலியான் ஓர் மகனை தலைப்பட்டு
கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்
#518
கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்
#519
மானும் மரனும் இரங்க மதவலி
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்
#520
விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
நெஞ்சில் குழைந்து நினையன்-மின் என்றான்
#521
உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
வரை அகம் ஏற வலி-மின் என்னா
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றி
குரை கழல் மைந்தனை கொண்டு பறந்தான்
#522
விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
நயந்தனர் போகி நறு மலர் சோலை
அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார்
#523
கண்டால் இனியன காண்டற்கு அரியன
தண் தாமரை அவள் தாழும் தகையன
கொண்டான் கொழும் கனி கோட்டு-இடை தூங்குவ
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்
#524
மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்
#525
கோதை அருவி குளிர் வரை மேல் நின்று
காதம் கடந்த பின் கன்னி கொடி மதில்
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு
போதும் எழுக என போயினர் சார்ந்தார்
#526
மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளி குன்றம்
மாகத்து விளங்கி தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி
பாகமே விழுங்கப்பட்ட பால் மதி போன்றது அன்றே
#527
துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம்
அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால்
இளம் கதிர பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே
#528
பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
செம் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
தங்குகின்றது போல் தகை சான்றதே
#529
கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
உடங்கு வெண் மதி உள் குளிர தம்
குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே
#530
திருவ மேகலை தெள் அரி கிண்கிணி
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே
#531
செம்பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
அம் பொன் திண் நிலை ஆய் மணி தூவிகள்
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
பைம்பொன் கொப்புள் பரந்தன போன்றவே
#532
உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து
அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே
#533
அசும்பு பொன் வரை ஆய் மணி பூண்களும்
பசும்பொன் மாலையும் பட்டுழி பட்டவை
நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே
#534
தேக்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
ஆக்க பட்ட அளவில் கொழும் புகை
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே
#535
தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய
ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில்
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணி
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே
#536
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன
பொன்னகர் பொலிய புக்கு பொங்கு மா மழைகள் தங்கும்
மின் அவிர் செம்பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்கு
பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான்
#537
மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக
கேடு இல் சீர் கலுழன் ஆய கலுழ வேகற்கு தேவி
தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண்கண்ணி
ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள்
#538
விண்ணகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல்
பண்ணகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே
எண் இடம் இன்றி மன்னர் இ மலை இறைகொண்டு ஈண்டி
அண்ணல் அம் களிற்றின் உச்சி அரும் கலம் வெறுக்கை ஈந்தார்
#539
மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கு
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான்
இந்திர திருவில் ஏய்ப்ப குலவிய புருவத்தாட்கு
வந்து அடை பான்மை மண் மேல் இராசமாபுரத்து என்றான்
#540
அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்ப
கவனம் கொள் புரவி கொட்பின் காதலும் கரந்து வைத்தான்
அவன் அதே கருத்திற்றாம்-கொல் அன்று-கொல் அறியல் ஆகாது
இவண் அதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே
#541
பால் பரந்து அன்ன பட்டு ஆர் பூ அணை பசும்பொன் கட்டில்
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
வேல் பரந்து அனைய கண்ணார் வெண் மதி கதிர் பெய் கற்றை
போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின்
#542
என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி
மன்னர் தம் முடிகள் வேந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த
பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழை தட கை கூப்ப
இன் உரை முகமன் கூறி தானத்தில் இருக்க என்றான்
#543
முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப
அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப
கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல்
மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான்
#544
இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான்
#545
மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
முந்தை தான் கேட்டவாறே முழுது எடுத்து இயம்புகின்றான்
#546
வெள்ளி வேதண்டத்து அம் கண் வீவில் தென் சேடி பாலில்
கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு
புள் அணி கிடங்கின் விச்சாலோக மாநகரில் போகா
வெள்ளி வேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன்
#547
சங்கு உடைந்து அனைய வெண் தாமரை மலர் தடங்கள் போலும்
நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறி-மின் என்ன
கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான்
#548
பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடகம் முன்கை
திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட
பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற
கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்று நின்றான்
#549
எரி மணி பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன்
திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான்
#550
தூசு உலாய் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செ வாய்
வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி
ஊசல் பாய்ந்து ஆடி காதில் குண்டலம் இலங்க நின்றாள்
காசு இல் யாழ் கணம் கொள் தெய்வ காந்தர்வதத்தை என்பாள்
#551
விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே
அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முகிழ்த்தவே போல்
இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின்
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே
#552
நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி
இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக
அன்னவற்கு உரியள் என்ன அடி பணி செய்வல் என்றான்
தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள்
#553
முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும்
தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை
கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின்
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான்
#554
நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும்
வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை
பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார்
#555
படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும்
விடைப்பு அரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே
#556
உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா
நெடும் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின்
தடம் கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆ-மின் என்றான்
#557
அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கல பேழை ஐந்நூறு
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை
திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி
குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான்
#558
பல் வினை பவள பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர்
நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி
மெல்லிய தூபமுட்டி மேதகு நான செப்போடு
அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நிணம் கொள் வேலான்
#559
விளக்கு அழல் உறுத்த போலும் விசியுறு போர்வை தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யற திரண்ட திண் கோல்
கொளத்தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான்
#560
அரக்கு எறி குவளை வாள் கண் அம் வளை தோளினாளை
பரப்பு அமை கதல் தாயர் பற்பல்-கால் புல்லி கொண்டு
திரு புற கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில்
புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே
#561
காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி
தாம் பலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாக
பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி
ஆம்பல் நாறு அமுத செ வாய் அரசனை தொழுது நின்றாள்
#562
அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம்
முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு
கொடி பல நுடங்கி ஆங்கு தோழியர் குழாத்துள் நிற்ப
அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான்
#563
வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால்
வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன
நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க
குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே
#564
இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை
பொன் புனை யூகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன்னார்
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆக
தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்
#565
வெற்றி வேல் மணி முடி கொற்றவன் ஒரு மகள்
அற்றம் இல் பெரும் படை சுற்றமோடு இயங்கினாள்
#566
கண் அயல் களிப்பன அண்ணல் யானை ஆயிரம்
விண்ணகத்து இயங்கு தேர் எண் அவற்று இரட்டியே
#567
வில்படை விலக்குவ பொன் படை புரவியும்
முற்பட கிளந்த அவற்றின் நல் புடைய நாற்றியே
#568
பாறு உடை பருதி வேல் வீறு உடை இளையரும்
ஆறு இரட்டி ஆயிரர் கூறுதற்கு அரியரே
#569
மாகம் நீள் விசும்பு-இடை மேகம் நின்று இடித்தலின்
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு ஏகல் ஆவது இல்லையே
#570
வெம் சின வெகுளியில் குஞ்சரம் முழங்கலின்
மஞ்சு தம் வயிறு அழிந்து அஞ்சி நீர் உகுத்தவே
#571
வேழம் மும்மதத்தொடு தாழ் புயல் கலந்து உடன்
ஆழ் கடல் அகம் புறம் வீழ் தர விரைந்ததே
#572
மல்லல் மா கடல்-இடை கல் என கலம் கவிழ்த்து
அல்லல் உற்று அழுங்கிய செல்வன் உற்ற செப்புவாம்
#573
பால் நிற பனி வரை மேல் நிறம் மிகுத்தன
நீல் நிற நிழல் மணி தான் நிரைத்து அகம் எலாம்
#574
வஞ்சம் இல் மனத்தினான் நெஞ்சு அகம் புகன்று உக
விஞ்சை அம் பெருமகன் வஞ்சம் என்று உணர்த்தினான்
#575
நங்கை தன் நலத்தினால் மங்குல் வெள்ளி மால் வரை
எங்கும் மன்னர் ஈண்டினர் சங்கு விம்மு தானையார்
#576
ஈர் அலங்கல் ஏந்து வேல் ஆர் அலங்கல் மார்பினான்
கார் கலந்த கை கணி சீர் கலந்து செப்பினான்
#577
மாதர் வாழ்வு மண்ணதே ஆதலால் அலங்கல் அம்
தாது அவிழ்ந்த மார்ப நின் காதலன் கடல் உளான்
#578
என்று கூற என்னையே துன்று காதல் தோழனை
சென்று நீ கொணர்க என அன்று வந்த வண்ணமே
#579
துன்பம் உற்றவர்க்கு அலால் இன்பம் இல்லை ஆதலின்
அன்ப மற்று யான் நினை துன்பத்தால் தொடக்கினேன்
#580
பீழை செய்து பெற்றனன் வாழி என்று மா கடல்
ஆழ்வித்திட்ட அம்பியை தோழர் சுட்டி காட்டினான்
#581
தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சை
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
கான்று வில் வயிரம் வீசும் கன மணி குழையினானே
#582
தோடு அலர் தெரியலான் தன் தோழரை கண்டு காதல்
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவ தார் குழைய புல்லி
பாடு இரும் பௌவம் முந்நீர் பட்டது பகர்தலோடும்
நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார்
#583
கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்
கட்டு அவிழ் தாரினான் தன் கடி மனை மகிழ்ந்து புக்கான்
#584
பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கி தோன்றும்
திரு நுதல் மனைவி செம்பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரிய புல்லி
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்
#585
சந்திரகாந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்தி
பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே
#586
பாசிழை பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க
காசு கண் பரிய வைகி கடன் தலை கழிந்த பின்னா
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறிய சொன்னான்
#587
வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி
பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுறு முலையினாளை
கண்டவர் மருள நாளை கடிவினை முடித்தும் என்றான்
#588
மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
பால் வரை மணியும் பொன்னும் பற்பல கொண்டு புக்கு
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்
#589
மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனா
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்
#590
நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன்
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
கானத்து-இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே
#591
நட்பு பகை உட்கினொடு நன் பொன் விளை கழனி
பட்டினொடு பஞ்சு துகில் பைம்பொன்னொடு காணம்
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
ஒட்டி பதினாயிரவர் உற்று முயல்கின்றார்
#592
வண்டு படு தேறல் நறவு வாய்விடொடு பருகி
கண்ட தொழில் கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து ஆங்கு
எண் திசையும் ஏற்ப படுத்து ஏற்றி அதன் மேலால்
கண்டு உருகு பொன்னின் நிலம் காமுறுவ புனைந்தார்
#593
பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி பொன் தூண்
மின் செய் பசும்பொன் நிலத்து வீறு பெற நாட்டி
மன் பவள மேல் நவின்று பளிக்கு அலகு பரப்பி
நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார்
#594
பாவை அவள் இருக்கும் இடம் பளிக்கு சுவர் இயற்றி
கோவை குளிர் முத்தின் இயல் கோதையொடு கொழும் பொன்
மாலையொடு மாலை தலை மணந்து வர நாற்றி
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார்
#595
ஆய் இதழ் பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி
வாய் அருகு வந்து ஒசித்து மறிய மழை மின் போல்
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய்
பாய திரை முத்த மணல் பரந்து பயின்று உளதே
#596
காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே
#597
உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
விழுங்கும் என பறவைகளும் பிற விலங்கும் அடையா
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
எழுந்து கொடி ஆடும் இது அ எழில் நகரின் இயல்பே
#598
ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்
#599
கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
கொண்டு உலகம் ஏத்தலின் அ கொற்றவனை ஒக்கும்
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே
#600
முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
பகல் கதிர் பரப்பிற்று ஆகி பஞ்சவர் விமானம் முட்டி
புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே
#601
அரைசனது அருளினொடு அகல் மனை அவன் எய்தி
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
விரை செலல் இளையரை வியவரின் விடவே
#602
விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
படு பணையவர் உறை பதி அது குறுகி
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
கடி நகர் இடி முரசு அறை-மின்அம் எனவே
#603
மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்
#604
வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்
#605
தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பி
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின்
அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்-மின் யாரும்
சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின்
#606
அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந்து அணங்கு சேர்ந்த
வெம் முலை பரவை அல்குல் மிடை மணி கலாபம் வேய் தோள்
செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள்
#607
மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும்
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம்
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனை கனிக்கும் நீராள்
#608
தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி
பூம் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
ஈந்திடும் இறைவர் ஆதி மூவகை குலத்து உளார்க்கும்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான்
#609
மண்ணக மடந்தை ஆகம் மார்புற முயங்கி நின்ற
அண்ணலை ஆதி ஆக அரும் கடி நகரை வாழ்த்தி
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும்
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த-காலை
#610
வணக்கரும் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த
நிண கொழும் குருதி வாள் கை நிலம் புடைபெயர்க்கும் ஆற்றல்
அணைப்ப அரும் களி கொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
கணை கவின் அழித்த உண்கண் கன்னியை கருதி வந்தான்
#611
சிதைப்ப அரும் சீற்ற துப்பின் செய் கழல் நரல வீக்கி
மத களிறு அடர்த்து குன்றம் மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
கத களி ஒளிறு வை வேல் காம்பிலி காவல் மன்னன்
பதைப்பு அரும் பரும யானை பாலமாகுமரன் வந்தான்
#612
இலை பொர எழுதி அன்ன எரி மணி கடக முன்கை
சிலை பொர திரண்ட திண் தோள் சில் அரி சிலம்பினார்-தம்
முலை பொர உடைந்த தண் தார் மொய் மது துளிப்ப வந்தான்
மலை பொர அரிய மார்பின் வாரணவாசி மன்னன்
#613
கதிர் முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது இறைஞ்சி மாலை
திரு முடி வயிர வில்லால் சேவடி திளைப்ப ஏத்தி
அரு முடி அணிந்த கொற்றத்து அவந்தியன் முரசம் ஆர்ப்ப
ஒரு பிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்துவிட்டான்
#614
வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர்-தம் முடியில் கொண்ட
கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள்
புள் அணி கொடியினானின் போர் பல தொலைத்த ஆற்றல்
அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான்
#615
நீள் நிதி வணிகர் ஈறா நில மிசை அவர்கள் எல்லாம்
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர்
மாண் மது நசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார்
#616
உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் ஆக
திரு குழல் மடந்தை செல்ல திரு நிலம் திருத்தி பின்னர்
விரை தகு நான நீரால் வெண் நிற பொடியை மாற்றி
பரப்பினர் படு வண்டு ஆர்ப்ப பல் மலர் பக்கம் எல்லாம்
#617
விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து வீதி
அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக
பல பட பரப்பி பாவை மெல் அடி பரிவு தீர
நில வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான்
#618
மண்டலம் நிறைந்த மாசு இல் மதி புடை வியாழம் போன்று ஓர்
குண்டலம் இலங்க நின்ற கொடியினை குறுகி தோழி
விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் தொழுது நீவி
பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அற பணிந்து சொன்னாள்
#619
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன
புரி மணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை
திரு மணி வீணை குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து
அரு முடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள்
#620
மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார்
ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளி மதி ஒண் பொன் ஆட்சி
தெள் நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை
கண்ணிய வீணை வாள் போர் கலாம் இன்று காண்டும் என்றே
#621
பசும் கதிர் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான்
விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்து கூற
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போல் மாந்தர் ஆர விழு நிதி சிதறினானே
#622
வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப
பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து
ஆசு அற திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ்வித்தாரே
#623
கங்கையின் களிற்றின் உச்சி கதிர் மணி குடத்தில் தந்த
மங்கல வாச நல் நீர் மணி நிறம் கழீஇயது ஒப்ப
நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி
அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார்
#624
வெண் நிற மழையின் மின் போல் வெண் துகில் கலாபம் வீக்கி
கண் நிறம் முலையும் தோளும் சந்தன தேய்வை கொட்டி
தெள் நிற சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார்
#625
எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி
திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி
புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி
விரி மணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே
#626
அரும் கயம் விசும்பில் பார்க்கும் அணி சிறு சிரலை அஞ்சி
இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ்
கரும் கயல் அல்ல கண்ணே என கரி போக்கினாரே
#627
பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா
வருந்தியும் புகழ்தல் ஆகா மரகத மணி செய் கூடத்து
இருந்து இளையார்கள் கோலம் இந்திரன் நிருமித்தால் போல்
திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்
#628
மண் கனை முழவம் விம்ம வரி வளை துவைப்ப வள் வார்
கண் கனைந்து இடியின் வெம்பி கடல் என முரசம் ஆர்ப்ப
விண் கனிந்து உருகு நீர்மை வெள் வளை தோளி போந்தாள்
பண் கனிந்து உருகு நல் யாழ் படை பொருது உடைக்கல் உற்றே
#629
பரந்து ஒளி உமிழும் பைம்பொன் கண்ணடி பதாகை தோட்டி
விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு வெண் முரசு கும்பம்
சுரந்த வெண் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும்
பொருந்து பொன் கதிர் பெய் கற்றை புணர் கயல் போந்த அன்றே
#630
வென்றவன் அகலம் பூட்ட விளங்கு ஒளி மணி செய் செப்பின்
நின்று எரி பசும்பொன் மாலை போந்தது நெறியில் பின்னர்
ஒன்றிய மணி செய் நல் யாழ் போந்தன உருவம் மாலை
தின்று தேன் இசைகள் பாட திருநகர் சுடர அன்றே
#631
ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
வீரம் பட கையை மெய்-வழி வீசி
தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
ஓரும் நடந்தன ஒண்_தொடி முன்னே
#632
வட்ட சூரையர் வார் முலை கச்சினர்
பட்டு வீக்கிய அல்குலர் பல் கணை
விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்
#633
வம்பு வீக்கி வரு முலை உள் கரந்து
அம்பின் நொய்யவர் ஆண் உடை தானையர்
பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு
செம்பொன் பாவையை சேவித்து முன்னினர்
#634
ஆணை ஆணை அகலும்-மின் நீர் என
வேணு கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணை இன்று எமதே என்று அணி நகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே
#635
கண்ணினோடு பிறந்தது காரிகை
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்
#636
இனம் சேரா ஆகி இளையார் உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்கு பூத்த போலும்
வனம் சேர் துவர் செ வாய் வாள் எயிறும் கண் மலரும் வளையல் ஆகா
கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள் வீட்டுலகம் காணார் போலும்
#637
மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம்
ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார்
#638
கள் வாய் பெயப்பட்ட மாலை கரும் குழல்கள் கண்டார் நைய
உள் வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
புள் வாய் மணி மழலை பொன் சிலம்பின் இ கொடியை ஈன்றாள் போலும்
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று ஈன்றாள் அம்மவோ கொடியவாறே
#639
செய்ய தாமரை மேல் திருவே-கொலோ
வெய்ய நோக்கின் விச்சாதரியே-கொலோ
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்
#640
வீணை வென்று இவள் வெம் முலை பூம் தடம்
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
கோணை போரில் குளிக்குவம் அன்று-எனின்
மாண நல் தவம் செய்குவம் என்மரும்
#641
குலிக செப்பு அன கொம்மை வரி முலை
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்
#642
ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
காட்டி எம்மை கொன்றாய் என கைதொழுது
ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும்
#643
திங்கள் மதி முகத்த சேலும் பவளமும் சிலையும் முத்தும்
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
அம் கை குழியா அரக்கு ஈத்த செம் தளிர் நெய் தோய்த்த போலும்
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார்
#644
பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல் தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழை கீழ் இலங்கும் ஆறும்
மன் மகர வெல் கொடியான் மால் கொள்ள கால் கொண்ட முலையினாளை
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார்
#645
கோள் வயிர நீள் அருவி குன்று இவர்ந்த செம்_சுடர் போல் கொலை வேல் மன்னர்
நீள் வயிர வெண் மருப்பின் நீல களிற்றின் மேல் நிரை தார் பொங்க
தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார்
#646
பைம்பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று
செம்பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழல சில் என்று
அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம்
செம்பொன் புரிசை அடைந்தாள் செந்தாமரை மேல் திருவோடு ஒப்பாள்
#647
பட்டு இயன்ற கண்ட திரை வளைத்து பல் மலர் நல் மாலை நாற்றி
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம்
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ்
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே
#648
புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு
அன்பு கொள் மட பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை
என்பு உருகு குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்து
தன் பெடையை குயில் தழுவ தலைவந்தது இளவேனில்
#649
தண் காஞ்சி தாது ஆடி தன் நிறம் கரந்ததனை
கண்டு ஆனா மட பெடை கிளி என போய் கை அகல
நுண் தூவி இளம் சேவல் நோக்கோடு விளி பயிற்றி
தன் சிறகால் பெடை தழுவ தலைவந்தது இளவேனில்
#650
குறும் தாள் குயில் சேவல் கொழும் காஞ்சி தாது ஆடி
வெறுத்து ஆங்கே மட பெடை விழைவு அகன்று நடப்பதனை
மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து மகிழ்வு ஆனா கொள தேற்றி
உறுப்பினால் அடி பணிய தலைவந்தது இளவேனில்
#651
தளை அவிழ் கோதை பாடி தான் அமர்ந்து இருப்ப தோழி
விளை மது கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண்
இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல்
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள்
#652
வேயே திரள் மென் தோள் வில்லே கொடும் புருவம்
வாயே வளர் பவளம் மாந்தளிரே மா மேனி
நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார்
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார்
#653
பலி கொண்டு பேராத பாசம் இவள் கண்
ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே
கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார்
இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள்
இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்
#654
நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
கண்டு அறிகிலா இடை காமவல்லி யாழ்
கொண்டவர் குழாத்து-இடை கொடியின் ஒல்கினாள்
#655
பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே
கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
அளித்து அவை இரங்க சென்று அணையில் ஏறினான்
#656
உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
மறை ஒளி மணி சுவர் இடையிட்டு இத்தலை
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலை
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே
#657
சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல்
கலை தொழில் பட எழீஇ பாடினாள் கனிந்து
இலை பொழில் குரங்கின ஈன்ற தூண் தளிர்
நிலத்து-இடை பறவை மெய்ம்மறந்து வீழ்ந்தவே
#658
கரும் கொடி புருவம் ஏறா கயல் நெடும் கண்ணும் ஆடா
அரும் கடி மிடறும் விம்மாது அணி மணி எயிறும் தோன்றா
இரும் கடல் பவள செ வாய் திறந்து இவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்
#659
இசை திறத்து அனங்கனே அனைய நீரினார்
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
விசைத்து அவர் பாடலின் வெருவி புள் எலாம்
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே
#660
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை
கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம்
போதர பாடினாள் புகுந்த போயின
தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே
#661
சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்ற பின்
நரம்பு உறு தெள் விளி நவின்ற நான்மறை
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்
#662
திரு மலர் கமலத்து அம் கண் தேனின் முரல்வது ஒப்ப
விரி மலர் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார்
எரி மலர் பவள செம் வாய் இன் நரம்பு உளர மைந்தர்
புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே
#663
வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி
கோல் பொர சிவந்த கோல குவி விரல் மடந்தை வீணை
நூல் பொர புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ
கால் பொர கரிந்த காமர் பங்கய பழனம் ஒத்தார்
#664
தேன் உயர் மகரவீணை தீம் சுவை இவளை வெல்வான்
வான் உயர் மதுகை வாட்டும் வார் சிலை காமன் ஆகும்
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான்
கான் உயர் அலங்கல் மாலை கட்டியங்காரன் அன்றே
#665
மறு முயற்கு இவர்ந்த வேக மாசுணம் அடைய பட்ட
நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய
அறு பகல் கழிந்த பின்றை அ நகர்க்கு ஆதி நாய்கன்
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான்
#666
தம்பியும் தோழன்மாரும் தானும் மற்று எண்ணி சூழ்ந்து
வெம்பிய வீணை போருள் செல்குவம் யாமும் முன்னே
தும்பு அற புத்திசேனன் சொல் இது குரவற்கு என்ன
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே
#667
ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன்
வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார்
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்கு கந்துகன் இதுவும் கூறும்
#668
மறைவல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயிலுள் நின்று மாலை
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்_கொடி வந்து கூந்தல்
உறை செல நீக்கி பைம் தாள் ஒண் மணி குவளை நீட்ட
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே
#669
நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூம் குவளை போதின்
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல்
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி
வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான்
#670
நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள்
செம்பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான்
வெம்பினான் காரி உண்டி கடவுளின் கனன்று வேந்தன்
இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றான்
#671
ஓலையை அவட்கு நீட்டி ஒண் மணி குழையும் முத்தும்
மாலையும் படுசொல் ஒற்றி வம் என மறைய நல்கி
வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான்
#672
கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப
நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து காண்பான்
குடை உடையவனொடு எண்ணி சீவகன் கொணர்-மின் என்ன
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார்
#673
நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி
அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி
குலவிய குருதி பட்டின் கலை நலம் கொளுத்தி இட்டான்
#674
திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி
பரி அகம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான்
#675
தோல் பொலி முழவும் துளை பயில் குழலும் ஏங்க
காற்கு ஒசி கொம்பு போல போந்து கை தலங்கள் காட்டி
மேல் பட வெருவி நோக்கி தானையை விட்டிட்டு ஒல்கி
தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம்
#676
தெள் மட்டு துவலை மாலை தேனொடு துளிப்ப திங்கள்
உள் நட்ட குவளை போலும் உருவ கண் வெருவி ஆட
விண் விட்டு கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம்
பண் விட்டது இருந்து காணும் பல் மணி கழலினார்க்கே
#677
செம் கதிர் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்ப கோதை
பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த
குங்கும சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச
அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்து ஆடுகின்றாள்
#678
மருங்குலும் ஒன்று தாய்க்கு ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க
அரங்கின் மேல் இவளை தந்த தாய்-கொலோ கயத்தி அன்றேல்
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர்
#679
அகிலார் புகை அலால் சாந்து அணியாள் பூச்சார செல்லாள் செல்லின்
பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம்
#680
தேம் தாமம் செம் பவள தாமம் செம்பொன் எரி தாமம் மின்னு திரள் தாமங்கள்
தாம்தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை
பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினாரே
#681
கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்கும சேறு ஆட்டினார்கள்
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்-தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்து காண்பாரும் உளரே செம் கண்
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள் முகமோ நோக்கி காணீர்
#682
நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறை
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
பை பருகு அல்குல் இலயம் பற்றி பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே
#683
ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே
#684
வள மலர் அணியப்பெற்றேன் வால் வளை திருத்தப்பெற்றேன்
களன் என கரையும் அல்குல் கையினால் தீண்டப்பெற்றேன்
இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்
#685
என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்-கண் ஆர்வம்
சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை
நின்றது மனத்தில் செற்றம் நீங்கி தன் கோயில் புக்கான்
மன்றல் மடந்தை-தன்னை வலிதில் கொண்டு ஒலி கொள் தாரான்
#686
தேன் உடைந்து ஒழுகும் செவ்வி தாமரை போது புல்லி
ஊன் உடை உருவ காக்கை இதழ் உக குடைந்திட்ட ஆங்கு
கான் உடை மாலை தன்னை கட்டியங்காரன் சூழ்ந்து
தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே
#687
கலையினில் கன்னி நீக்கி தாமரை கண்கள் தம்மால்
முலையினில் எழுதி செ வாய் பயந்த தேன் பருகி முள்கும்
சிலை வலாய் புல்லு நம்பி சீவகசாமியோ என்று
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்
#688
பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காம
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்_தொடிக்கு உருகி பின்னும்
திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்
#689
விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் என
நலம் கலந்து உரைக்குமால் இ நல் நகர்க்கு மன்னனோ
உலம் கலந்த தோளினீர் நீர் உரை-மின் நீவிர் என்னவே
#690
மட்டு அவிழ்ந்த தாரினான் இ மாநகர்க்குள் ஆயிரர்
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்
#691
வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
அம்_சில்_ஓதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான்
#692
தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
ஆங்கு நாம் பசித்து அசைந்த-காலை அன்று அ அண்ணலே
#693
இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
அன்னதால் அரில் தப அறிந்து கூத்தி கூறினாள்
இன்னதால் படை அமைத்து எழு-மின் என்று இயம்பினான்
#694
தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர் தோழன் கூற
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கை
போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தின் சூழ்ந்தார்
#695
கண் நுதல் கடவுள் சீற கனல் எரி குளித்த காமன்
மண் மிசை தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
தெள் மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்
#696
கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி
வரி நிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாள் ஆர்
திரு நிற முகத்திற்கு ஏற்ப செம்பொன் ஓர் ஓலை சேர்த்தி
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான்
#697
தென் வரை பொதியில் தந்த சந்தன தேய்வை தேம் கொள்
மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
மின் விரித்து அனையது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
இன் நுரை கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்
#698
இரும்பு அற கழுவி எஃகின் இருள் அற வடிக்க பட்ட
அரும் பெறல் சுரிகை அம் பூம் கச்சு-இடை கோத்து வாங்கி
பெரும் தகை குருசில் கொண்டு பெரு வலம் சுடர வீக்கி
திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளம் குமரன் ஒத்தான்
#699
வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி
நுரை கிழித்து அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவிய பாவை ஒத்தார்
#700
அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சன குன்றம் அன்ன
திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறு புலி அனைய நாகம்
அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்த ஆங்கு அண்ணல் தான் ஏறினானே
#701
விடு கணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளி திண் தேர்
கடு நடை கவரி நெற்றி கால் இயல் புரவி காய்ந்து
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
அடு திரை சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே
#702
தோற்றனள் மடந்தை நல் யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே
#703
சுறா நிற கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என
பொறா மன பொலிவு எனும் மணி கை மத்திகையினால்
அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே
#704
குனிகொள் பாக வெண் மதி கூர் இரும்பு தான் உறீஇ
பனி கொள் மால் வரை என படு மத களிறு இரீஇ
இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்
#705
புதிதின் இட்ட பூம் தவிசின் உச்சி மேல் நடந்து அவண்
புதிதின் இட்ட மெல்லணை பொலிந்த வண்ணம் போகு உயர்
மதி-அது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
உதயம் என்னும் மால் வரை உவந்து இருந்தது ஒத்ததே
#706
முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இ நகர்
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்
#707
முனை திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகன் இவன்
கனைத்து வண்டு உளர்ந்த தார் காளை சீவகன்-அரோ
#708
பொன்னை விட்ட சாயலாள் புணர் முலை தடத்தினால்
மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே
#709
இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்
#710
குட்ட நீர் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றா
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையை கைபோய்
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை
விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்
#711
நலத்தை மத்து ஆக நாட்டி நல் வலி இளமை வாரா
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி
கலக்கி இன் காமம் பொங்க கடைந்திடுகின்ற காளை
இலை பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும்-கொல்லோ
#712
தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
பூம் குழல் மகளிர் முன்னர் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்
#713
கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
பெண் எனும் உழலை பாயும் பெரு வனப்பு உடைய நம்பி
எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல்
ஒள் நிற உருவ செம் தீ உருவுகொண்ட அனைய வேலான்
#714
யாவனே யானும் ஆக அரு நிறை கதவம் நீக்கி
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்
#715
கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து-இடை பிணையின் மாழ்கி
விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கி தன் தோழி கூந்தல்
இழுக்கி வண்டு இரிய சேர்ந்து ஓர் கொடி புல்லும் கொடியின் புல்லி
எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்து கொடுமோ என்றாள்
#716
தடம் கணாள் பணியினால் தான் அ வீணை ஒன்றினை
நெடும் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான்
#717
சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
பரந்த கேள்வி துறைபோய பைம் தார் மார்பன் பசும்பொன் யாழ்
நரம்பு தேன் ஆர்த்து என தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்
#718
நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்
#719
கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காம தீயால் வெந்தவர் போல்
கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு
புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்
#720
இரு நில மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கைத்தாய்
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால்
ஒரு நலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான்
#721
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி
பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட
தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான்
#722
பணிவரும் பைம்பொன் பத்தர் பல் வினை பவள ஆணி
மணி கடை மருப்பின் வாளார் மாடக வயிர தீம் தேன்
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ்
கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கலுற்றான்
#723
குரல் குரல் ஆக பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇ பாடுகின்றான்
#724
கன்னி நாகம் கலங்க மலங்கி
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
மின்னும் மழையின் மெலியும் அரிவை
பொன் நாண் பொருத முலை என்கோ யான்
#725
கருவி வானம் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலை என்கோ யான்
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
மருவார் சாயல் மனம் என்கோ யான்
#726
வானம் மீன் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த கார் என்கோ யான்
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்
#727
அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும்
பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பும் நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்
#728
வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திட கிழிந்த மாலை
சூழ் மணி கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி
ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி
தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே
#729
விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம்மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம்
பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே
#730
பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்
#731
கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும்
காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப
மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள்
#732
இலையார் எரி மணி பூண் ஏந்து முலையும்
சிலையார் திரு நுதலும் செம் பசலை மூழ்க
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர்
#733
பிறையார் திரு நுதலும் பேர் அமர் உண்கண்ணும்
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
கறை வேல் உண்கண்ணினாய் காணார்-கொல் கேள்வர்
#734
அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர்
#735
பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே
#736
மையார் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை
பெய் பூம் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே
#737
மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி
ஒல்லென் உயர் தவமே செய்ம்-மின் உலகத்தீர்
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே
#738
நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
ஆகத்து பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
போகத்து நெறியை காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்
#739
செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி
வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி
விம்மித பட்டு-மாதோ விழுங்குவான் போல ஆகி
மை மலர் தடம் கண் நங்கை மரை மலர் தேவி என்றான்
#740
கோதையும் தோடும் மின்ன குண்டலம் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப
காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை
ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்
#741
வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான்
ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப
கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி-மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்
#742
வட திசை குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகும்-மின் என்றான்
#743
மல்லு பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்து
செல்வ பூமகளும் நாளை அவன் உழை செல்லும் என்றான்
முல்லை பூம் பந்து தன்னை மும்மத களிற்று வேலி
கொல்லை பூம் குன்றம் செய்தீர் குங்கும குழங்கல் மாலை
#744
திருமகள் இவளை சேர்ந்தான் தெண் திரை ஆடை வேலி
இரு நில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும்
செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான்
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங்காரன் அன்றே
#745
அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூ மணி சிவிறி நீர் தூய்
தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான்
#746
வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
பந்து அணி விரலினாள் தன் படா முலை போகம் வேண்டி
கந்து என திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
ஐம் தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கலுற்றார்
#747
பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவை தானை
கண்ணியது உணர்ந்து கல்லா கட்டியங்காரன் நெஞ்சில்
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்றுகின்றான்
#748
இசையினில் இவட்கு தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன்
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே
திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே
#749
தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் வேட்டோர்
வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும்-மாதோ
கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப்பெற்றீர்
தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான்
#750
நாறும் மும்மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
ஊறி தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்
#751
இள வள நாகு புல்லி இனத்து-இடை ஏறு நின்றால்
உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ
#752
எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டை மேல் இவர்ந்து நின்றால்
மழுங்க மேல் சென்று பாய்தல் மற புலி-தனக்கும் ஆமோ
கொழும் கயல் கண்ணினாளை சீவககுமரன் சூழ்ந்தால்
அழுங்க சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ
#753
மத்திரிப்பு உடைய நாகம் வாய் நிறை கடாத்தது ஆகி
உத்தம பிடி-கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
பத்தினி பாவை நம்பி சீவகன்-பாலள் ஆனால்
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ
#754
தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல்
தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது
ஏம் உற்றீர் இன்னும் கேண்ம்-மின் இரதியை புணர்தும் என்று
காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே
#755
எம்மை நீர் வெல்ல பெற்றீர் வென்ற பின் இருந்த வேந்தன்
நும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால்
வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான்
#756
சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள்
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி
கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்
#757
ஆழி அம் கழனி தன்னுள் அம்பொடு கணையம் வித்தி
சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி
வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா
#758
போர் பறை முழங்கி எங்கும் பொரு வளி புடைக்கப்பட்ட
கார் கடல் போன்று சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்ப
தார் பொலி மார்பன் ஓர்த்து தன் கையில் வீணை நீக்கி
வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனை சொன்னான்
#759
தேய்ந்து நுண் இடை நைந்து உக செப்பினை
காய்ந்த வெம் முலையாய் நின கண்கள் போல்
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்
#760
அண்ணல் கூறலும் அம்மனையோ எனா
துண்ணென் நெஞ்சினளாய் துடித்து ஆய்_இழை
கண்ணின் நீர் முலை பாய கலங்கினாள்
வண்ண மா கவின் சொல்லொடு மாய்ந்ததே
#761
மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
ஆவியோ நடவாய் என்று அழுது தன்
காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்
#762
பாழி நம் படை மேல் அது இ பார் எலாம்
நூழிலாட்டி நுடக்கி குடித்திடும்
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
தோழி தூ துகில் தோகையின் நீக்கினாள்
#763
எங்கள் பெண்மையும் ஈர் மலர் தார் மன்னர்
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
நங்கை வாள் படை நங்கையை சூழ்ந்ததே
#764
கூன்களும் குறளும் அஞ்சி குடர் வெந்து கொழும் பொன் பேழை
தான் கொள பாய ஓடி சாந்து கோய் புகிய செல்வ
தேன் கொள் பூ மாலை சூடி தாமம் ஆய் திரண்டு நிற்ப
வான் பளிங்கு உருவ தூணே மறைபவும் ஆய அன்றே
#765
இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரி பொன் மார்பன்
நங்கையை காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ் வாய்
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கின் சீறி
பொங்கி மேல் செல்வதே போல் பொலம் கழல் நரல சென்றான்
#766
பதுமுக குமரன் மற்று இ பாவையை காவல் ஓம்பி
மது முக மாலை நெற்றி மத களிறு உந்தி நிற்ப
நுதி முக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்தி
சதுமுகம் ஆக சேனை நமர் தலை பெய்க என்றான்
#767
வட்டு உடை மருங்குல் சேர்த்தி வாள் இரு புடையும் வீக்கி
தட்டு உடை பொலிந்த திண் தேர் தனஞ்செயன் போல ஏறி
கட்டளை புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்த அனையது ஒத்தான்
#768
புள் இரைப்பு அன்ன பொன் தார் புரவி தேர் இரவி போலா
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி
முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான்
#769
முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும்
அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப-கொல்லோ
கருதலாம் படியது அன்றி கலதி அம்பு இவையும் காய்ந்த
பொருது உலாம் புகழை வேட்டு இ எஃகமும் புகைந்த என்றான்
#770
வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார்
சேண் இகந்து உய்ய போ நின் செறி_தொடி ஒழிய என்றார்
#771
தம்முடை பண்டம்-தன்னை கொடுத்து அவர் உடைமை கோடல்
எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து
நும்முடை திருவும் தேசும் நோக்கு-மின் கொள்வல் என்றான்
#772
மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி
கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்க
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார்
#773
எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க
பொரு படை மன்னர் நுங்கள் புற கொடை கண்டு மற்று இ
முருகு உடை குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல்
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான்
#774
ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
காண் வரு காட்டு இன களிற்று நீள் வரை
நீள் நில வேந்து எனும் வேழ பேரினம்
பூண் முலை பிடிக்கு அவாய் போர் செய்குற்றவே
#775
தாழ் இரும் தட கையும் மருப்பும் தம்பியர்
தோழர் தன் தாள்களா சொரியும் மும்மதம்
ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
ஏழ் உயர் போதகம் இனத்தொடு ஏற்றதே
#776
குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
கொடி எனும் பிடி உடை குமர வேழமும்
வெடிபடு போர் தொழில் காண விஞ்சையர்
இடி உடை இன மழை நெற்றி ஏறினார்
#777
கரை பொரு கடலொடு கார் கண்ணுற்று என
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
குரை கடல் தானை போர் கோலம் செய்தவே
#778
தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
எய் கணை படு மழை சிதறி எங்கணும்
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார்
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே
#779
கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே
#780
சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே
#781
மற படை பசித்தன வயிறு இன்று ஆர்க என
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மா துணித்து
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
துறக்கம் போய் புகுக என துணிய நூறினார்
#782
ஆற்றுவீர் வம்-மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார்
கூற்றம் போல் கொடிய யானை கோடு உழுது அகன்ற மார்பம்
கீற்று பட்டு அழகிதாக கிடக்க என கொடுத்து நிற்பார்
#783
கழித்து வாள் அமலை ஆடி காட்டுவார் கண்கள் செம் தீ
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்து தேர் கயிறு வாளால் அரிந்திட்டு புரவி போக்கி
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார்
#784
ஐம் கதி கலின பாய் மா சிறிது போர் களை ஈது என்பார்
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர்கொண்டு நிற்பார்
நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மாரே
#785
ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி
இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார்
விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு
இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே
#786
கூட்டுற முறுக்கி விட்ட குய மகன் திகிரி போல
வாள் திறல் தேவ தத்தன் கலின மா மாலை வெள் வேல்
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே
#787
பாய்ந்தது கலின மாவோ பறவையோ என்ன உட்கி
வேந்தர்-தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார்
காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை
தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார்
#788
காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம்
தோயும் முள் இலவின் கூன் காய் சினை-தொறும் உதிர்வவே போல்
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண்
சேய் அனான் திருவின் பேரான் செழும் சிலை பகழியாலே
#789
நீல் நிற பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை_வலாளன்
போன் நிற புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்
#790
வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார்
ஒருமேல் ஒண் மணி சூட்டு வைக்கிய
ஆரமே அமைந்த தேர் குழிசி ஆயினார்
#791
பொன் அனாள் புணர் முலை போகம் வேண்டிய
மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
இன்னணம் இத்தலை மயங்க அத்தலை
கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்
#792
தம்பியை சீவகன் நோக்கி சாமரை
வெம் பரி மான் செவி வீர மந்திரம்
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்
#793
மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டி புகுவவே போல்
அந்தரத்து இவர்ந்த ஆழி கால் நிலம் விட்ட மாலை
சுந்தர சுண்ண மேனி மகளிர்-தம் கண்ணுள் இட்ட
மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்
#794
வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வல கையால் தாங்கி வென்றி
முடிகென புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
கடுகிய வண்ணம் மாவின் தார் ஒலி காமர் பொன் தேர்
படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே
#795
அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே
#796
அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆருயிர் மேயும் நேமி
முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி
மிகல் கொண்ட இகலை தானே விழுங்கிய சிறகர் தோற்றி
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை-தன் பைம்பொன் தேரே
#797
கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
கோல் ஒற்ற குனிந்தவாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே
#798
நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர்கொள்-மின் என்னா
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக
செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே
#799
நன் மன வேந்தர்-தங்கள் நகை மணி மார்பம் நக்கி
புன் மன வேந்தர்-தங்கள் பொன் அணி கவசம் கீறி
இன் உயிர் கவர்ந்து தீமை இனி கொள்ளும் உடம்பினாலும்
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே
#800
மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார்
#801
ஆர்ப்பு எதிர்மாரி பெய்யும் அணி நெடும் குன்றம் போல
போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில்
கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால்
ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சி குன்று ஆக்கினானே
#802
மன்னர்கள் வெகுண்டு விட்ட மற படை அழுவ மாரி
கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற
மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
தன்மையால் தானை நீந்தி தான் விளையாடுகின்றான்
#803
வேழ வெண்கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
சூழ் குடர் கண்ணி சூடி நிண துகில் உடுத்து வெள் என்பு
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான்
#804
வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி
அளித்தவை பாடி ஆட குறுநரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக்கிடந்த அன்றே
#805
கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார்
உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்ச
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார்
#806
கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழி தீயின் பதுமுகன் காட்டியிட்டான்
தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள்-தம்மால்
கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே
#807
மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா
முருக்கி தேர் தட கை-தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின்
நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான்
#808
கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
ஒண் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும்
வண் தார் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே
#809
பைம்பொன் புளக பரும களி யானை ஈட்டம்
செம்பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம்
நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால்
அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான்
#810
ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார்
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார்
#811
செம் கண் மால் தெழிக்க பட்ட வலம்புரி துருவம் கொண்ட
சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
பொங்கிய முழக்கில் வேழ பேரினம் புலம்பினால் போல்
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே
#812
அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
கருவரை குடையப்பட்ட கடல் என கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன்தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்
#813
முளி மர காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன்
தெளி நல குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
ஒளி நலம் உப்பு குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே
#814
உறு படை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றி
சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறி எயிற்று ஆளி வேழ பேரினம் செகுத்தது அன்றே
உறு புலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே
#815
நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே
#816
குழை உடை முகத்தினாள்-கண் கோணை போர் செய்த மன்னர்
மழை-இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
முழை உடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே
#817
பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
போர்முக களிற்று வெண்கோடு உழுத செம் சால் கொள் மார்பின்
சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல்
வார் முக முலையினாளை மனை-வயின் கொண்டு புக்கான்
#818
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார்
மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப்பட்டார்
கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார்
#819
முது மர பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து
பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி
நுதி மயிர் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே
#820
பார் கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி
தார் கெழு மின்னு வீசி தனி வடம் திளைக்கும் மார்பன்
போர் கெழு களத்து பாவம் புலம்பொடு போக்கினானே
#821
செய்த அ பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
வையகம் அளிக்க நீண்ட வலம்புரி தடக்கையானே
#822
கரு மணி அழுத்திய காமர் செம் கதிர்
திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை
அரு மணி அலம் வரும் அம் பொன் கொம்பு அனாள்
பெரு மண கிழமை யாம் பேசுகின்றதே
#823
நான்கு நூறு_ஆயிரம் குடத்து நல்லன
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள்
கோன் தொறு காவலன் கொண்டு முன்னினான்
#824
வளை நிற வார் செம் நெல் அரிசி பண்டியோடு
அளவு அறு சருக்கரை பண்டி ஆர்ந்தன
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்
#825
சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங்கனி
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்
#826
மரகத மணி பசும் காய் கொள்வான் குலை
கவர் பழு காய் குலை கனிய கா உறீஇ
இவர் தரு மெல் இலை காவும் ஏந்திய
உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்
#827
சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை
வண்டு இனம் மிசை கொள வாச பூ சுமை
கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஓர் பால்
#828
ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
கார் கெழு கடல் என கலந்த அல்லதூஉம்
பார் கெழு பழு மர பறவை ஒத்தவே
#829
கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
செய் தவம் நமக்கு இசைக என்ன சென்றதே
#830
வால் அரி கழுவிய வண்ண செம் புனல்
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
கோல நீர் குவளையும் மரையும் பூத்து வண்டு
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே
#831
உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே
#832
இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும்
உலம்பு மால் உவர் கடல் ஒலியின் மிக்கவே
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்
#833
மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
ஊழி வாய் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
ஆழி வாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்த
தாழி வாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார்
#834
இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
மின் இயல் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்
#835
இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம்
மட்டு அவிழ் கோதை வெய்ய வரு முலை தாங்கல் ஆற்றா
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன்கை பற்றி
கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே
#836
மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை-தன்னை
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே
#837
அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
முடி மணி அழுத்தி செய்த மூரி காழ் நெற்றி மூழ்க
கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே
#838
ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு
எந்திர எழினி வாங்கி இன் முக வாச செப்பும்
சந்தன சாந்த செப்பும் தண் மலர் மாலை பெய்த
இந்திர நீல செப்பும் இளையவர் ஏந்தினாரே
#839
கடைந்து பெய் மணி கை செம்பொன் காசு அறு தட்டின் சூழ்ந்து
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
அடைந்து வீசு ஆல வட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற
தடம் கண்கள் குவளை பூப்ப தையலோடு ஆடும் அன்றே
#840
பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க
செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க
மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து என பருகினானே
#841
இள முலை மணி கண் சேப்ப எழுது வில் புருவம் ஏற
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர்
வள மலர் கோதை தன்னை வாய்விடான் குழைய புல்லி
அளமரல் இலாத இன்ப கடல் அகத்து அழுந்தினானே
#842
இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக்காவு காண்பான்
பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றி
துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப
மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்குகின்றான்
#843
உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
பருமை குரு பளிங்கில் புகழ் பஞ்சி முழுது அடுத்த
திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்
#844
தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன
சித்தம் கரிந்து ஆங்கு கொடியான் செரு விளைத்தான்
#845
தேன் முழங்கு தார் குரிசில் செம்பொன் நெடும் தேர் மேல்
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்
#846
வந்து தரன் கூறிய இ வாய் மொழியும் அன்றி
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடி
பந்து புடை பாணி என பாயும் கலி மான் தேர்
எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்
#847
எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்தி
கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா
#848
ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா
போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
தேம் புனலை நீர் கடலும் சென்று தரல் இன்றே
வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே
#849
மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே
#850
குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி
கொங்கு உண் மலர் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்
@4 குணமாலையார் இலம்பகம்
#851
காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசு அறு விசும்பின் வெய்யோன் வட திசை அயணம் முன்னி
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி
பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான்
#852
தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி
#853
நானம் மண்ணிய நல் மண மங்கையர்
மேனி போன்று இனிதாய் விரை நாறிய
கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய
வேனிலாற்கு விருந்து எதிர்கொண்டதே
#854
கொம்பர் இன் குயில் கூய் குடை வாவியுள்
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து
உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே
#855
நாக நாள்மலர் நாறு கடி நகர்
ஏக இன்பத்து இராசபுரத்தவர்
மாகம் நந்து மணம் கமழ் யாற்று அயல்
போகம் மேவினர் பூ மர காவினே
#856
முழவம் கண் துயிலாத முதுநகர்
விழவு நீர் விளையாட்டு விருப்பினால்
தொழுவில் தோன்றிய தோமறு கேவல
கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே
#857
வள்ள நீர் அரமங்கையர் அம் கையால்
உள்ளம் கூர திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து
அள்ளலாய் அடி யானை இழுக்கின
வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே
#858
நீந்தும் நித்தில ஊர்தி நிழல் மருப்பு
ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில்
போந்து காய் பொன் சிவிகை நல் போதகம்
கூந்தல் மாலை குமரி பிடி குழாம்
#859
ஏறுவார் ஒலி ஏற்று-மினோ என
கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து
ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி
மாறுகொண்டது ஓர் மா கடல் ஒத்தவே
#860
பொன் செய் வேய் தலை பூ மரு மண்டலம்
மின் செய் வெண்குடை பிச்சம் மிடைந்து ஒளி
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா
மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே
#861
திருந்து சாமரை வீசுவ தெண் கடல்
முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை
புரிந்த தாமங்கள் ஆக அ பூம் துகள்
விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே
#862
சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள்
மாலை ஊர்திகள் வையம் இவற்று-இடை
சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன
நீல மேகம் நிரைத்தன போன்றவே
#863
வழங்கு வங்க கலிங்க கடகமும்
அழுங்கும் மாந்தர்க்கு அணிகல பேழையும்
தழங்கு வெம் மது தண்டும் தலைத்தலை
குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே
#864
வாச வெண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்
காசு இல் போக கலப்பையும் கொண்டு அவண்
மாசு இல் மாசனம் வாயில் மடுத்தவே
#865
பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும்
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும்
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும்
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே
#866
பூக்கள் நீர் விளையாடிய பொன் உலகு
ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய்யென
வீக்க மாநகர் வீழ்ந்தது போன்று அவண்
மாக்கள் மா கடல் வெள்ளம் அடுத்ததே
#867
மின்னு வாள் தடம் கண்ணியர் வெம் முலை
துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து
அன்ன வாட்டத்து அணி மலர் பூம் பொழில்
என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார்
#868
அள் உடை குவளை கயம் நீடிய
கள் உடை கழுநீர் புனல் பட்டமும்
புள் உடை கனியின் பொலி சோலையும்
உள் உடை பொலிவிற்று ஒருபால் எல்லாம்
#869
செம் புற கனி வாழையும் தேன் சொரி
கொம்பு உற பழுத்திட்டன கோ அரை
வம்புற கனி மா தொடு வார் சுளை
பைம் புற பலவிற்று ஒருபால் எல்லாம்
#870
கள்ள வானரமும் கன்னி யூகமும்
துள்ளும் மானொடு வேழ தொகுதியும்
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண்
உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே
#871
கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின்
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை
பூ கணம் பொழில் பட்டது போன்றதே
#872
கூறப்பட்ட அ கொய் மலர் காவகம்
ஊறி தேன் துளித்து ஒண் மது ஆர் மணம்
நாறி நாள்மலர் வெண் மணல் தாய் நிழல்
தேறி தெண் கயம் புக்கது போன்றதே
#873
காவில் கண்ட திரை வளைத்து ஆயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம்
பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து
ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே
#874
பௌவ நீர் பவள கொடி போல்பவள்
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி
கொவ்வை அம் கனி வாய் குணமாலையோடு
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள்
#875
தூமம் சூடிய தூ துகில் ஏந்து அல்குல்
தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள்
நாமம் சூடிய நல்_நுதல் நீட்டினாள்
காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே
#876
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறு இவையோ என
நண்ணி மாலையை நக்கனள் என்பவே
#877
பைம்பொன் நீள் உலகு அன்றி இ பார் மிசை
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில்
செம்பொன் பாவை அன்னாய் செப்பு நீ என
கொம்பு அனாளும் கொதித்து கூறினாள்
#878
சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே
#879
மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல்
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்
#880
இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே
#881
சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர்
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார்
#882
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே
#883
காளை சீவகன் கட்டியங்காரனை
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்
#884
சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல்
வண்ண மாலையினீர் என கூறினான்
#885
மற்று இ மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ
#886
ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றி புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்
#887
நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே
#888
வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம்
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள்
#889
உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான்
#890
கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்
#891
காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள்
#892
மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்
#893
சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான்
#894
வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே
#895
தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான்
#896
நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ
கோலம் ஆக எழுதிய போல் குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண்
போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள்
#897
சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம்
ஆலையத்து அழுங்கி ஆங்கு மஞ்சரி அவலம் உற்றாள்
#898
திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட
பங்கய படு ஒத்து உளை பாவாய்
நங்கை என்னொடு உரையாய் நனி ஒல்லே
இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள்
#899
மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள்
#900
கன்னி மாநகர் கன்னியர் சூழ் தர
கன்னிமாடம் அடைய கடி மலர்
கன்னி நீல கண் கன்னி நற்றாய்க்கு அவள்
கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார்
#901
கண்கள் கொண்ட கலப்பின ஆயினும்
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று
ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு
பண் கொள் தே மொழியால் பய கூறினாள்
#902
விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார்
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில்
கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும்
உண்ணலேன் இனி என்று உரையாடினாள்
#903
இன்று நீர் விளையாட்டினுள் ஏந்து_இழை
தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா
நின்று நீல கண் நித்திலம் சிந்தினாள்
#904
பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும்பொன் அல்குல்
மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள்
கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்
அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள்
#905
பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை
உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன்
வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும்
வெள்ள நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான்
#906
இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல்
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும்
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே
#907
வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி
செய் கழல் மன்னற்கு உய்த்து தன் குறை செப்பலோடும்
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப
கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே
#908
சென்று காலம் குறுகினும் சீவகன்
பொன் துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா
ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள்
#909
இன்ப காரணம் ஆம் விளையாட்டினுள்
துன்ப காரணமாய் துறப்பித்திடும்
என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன்
அன்பினால் அவலித்து அழுதிட்டாள்
#910
தண் அம் தீம் புனல் ஆடிய தண் மலர்
வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை
வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள்
#911
ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என
மாசை மா கடல் மன்னவன் ஆடலின்
மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர்
ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே
#912
மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய
சிகர செவ்வரை தீ நிற பொன் எயில்
நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா
நகரம் நால் இரு கோடி நயந்ததே
#913
உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர்
கவான் முதல் கூப்பிய கனக மாழையால்
தவா வினை அடைகரை தயங்கு சிந்தை நீர்
அவா எனும் உடை கடல் அடைக்க பட்டதே
#914
சீர் அரவ சிலம்பு ஏந்தும் மென் சீறடி
யார் அரவ கழல் ஆடவரோடும்
போர் அரவ களம் போன்று பொன்னார் புனல்
நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார்
#915
கார் விளையாடிய மின் அனையார் கதிர்
வார் விளையாடிய மென் முலை மைந்தர்
தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய
நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே
#916
விடா களி வண்டு உண விரிந்த கோதையர்
படா களி இள முலை பாய விண்ட தார்
கடா களிற்று எறுழ் வலி காளை சீவகன்
அடா களியவர் தொழில் காண ஏகினான்
#917
ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போ-மின் இவள் கண்
அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது
என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப
பொன் தோய் கொடியின் நடந்து புனல் சேர்பவளை காண்-மின்
#918
அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை-அதனை
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்-மின்
#919
கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி
ஆலி சென்று புல்லி அன்மை கண்டு நாணி
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின்
#920
மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள்
அன்ன பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய்
என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி
பொன் அம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்-மின்
#921
தூமம் கமழும் கோதை தொடுத்த துயரின் முலையா
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி
காம குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்-மின் இனிதே
#922
கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய் பொன்
மடல் அம் கமுகின் ஊசல் மடந்தை ஆட நுடங்கி
நடலை நடுவின் மகளிர் நூக்க பரிந்த காசு
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்-மின்
#923
நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின்
#924
தீம் பால் பசியின் இருந்த செ வாய் சிறு பைங்கிளி தன்
ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி
பாம்பால் என்ன வெருவி பைம்பொன் தோடு கழல
காம்பு ஏர் தோளி நடுங்கி கரை சேர்பவளை காண்-மின்
#925
துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல்
மணி ஆர் வளை சேர் முன்கை வலனும் இடனும் போக்கி
இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளை காண்-மின்
#926
திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான்
குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி
அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதி போன்று
உருவ தெண் கணாடி காண்-மின் தோன்றும் வகையே
#927
பலகை செம்பொன் ஆக பளிங்கு நாயா பரப்பி
அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள
குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி
இலவம் போது ஏர் செ வாய் இளையோர் பொருவார் காண்-மின்
#928
தீம் பால் அடிசில் அமிர்தம் செம்பொன் வண்ண புழுக்கல்
ஆம் பால் அக்காரடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம்
தாம் பாலவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின்
#929
அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்து ஆங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமை கூம்பின் கடி செய் மாலை
துள்ளு தூம கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம்
உள்ளு காற்றா உழலும் காம கலனும் காண்-மின்
#930
தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல
தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமல பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்-மின்
#931
நீல துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம் மணிகள்
கோல சுடர்விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன
ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின்
#932
வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள்
ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகி
கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப
தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின்
#933
இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன்
கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில்
சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான்
நவை இல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம்
#934
அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை
வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டு அவர்
உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர்
சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார்
#935
கல்லொடு வன் தடி கையினர் காற்றினும்
வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினையார் வலைப்பட்டதை அன்றே
#936
வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள்
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார்
தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை
நீள் கயம் பாய்ந்து அது நீந்துதலோடும்
#937
மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய
கள் குட கன்னியர் இருவரோடு உடன்
துட்கென யாவரும் நடுங்க தூய்மை இல்
உட்கு உடை களிமகன் ஒருவன் தோன்றினான்
#938
தோன்றிய புண் செய் வேலவற்கு தூமது
வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர்
கான்றிடு கதிர் மதி இரண்டு போன்றவே
#939
அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலை சொற்களின் வைது இவை கூறினான்
#940
புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர்
கடுக்க பேர்த்தனிர் தம்-மின் கலாய்க்குறின்
தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின்
உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான்
#941
நல்வினை ஒன்றும் இலாதவன் நான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று
அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான்
#942
மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன்
ஈண்டிய தோழரோடு எய்தினன் ஆகி
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது
காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான்
#943
நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி
காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர்
சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம்
நீ உடம்பட்டு நினை-மதி என்றான்
#944
என்றலும் தன் செவியோர்த்து இரு கண்களும்
சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும்
குன்று அனையான் பதம் கூற வலித்தான்
#945
நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின்
முன் செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான்
#946
உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் உண்டால்
பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே
#947
மனத்து-இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும்
நினைத்திடு நின்-கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி
எனை பகல்-தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனை பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே
#948
பாடு பாணி முகம் எனும் பான்மையின்
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சி மேல்
கூடி கோலம் குயிற்றி படம் களைந்து
ஆடு கூத்தரின் ஐயென தோன்றினான்
#949
ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர்
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல்
வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு
ஆயினார் பரியாளம் அடைந்ததே
#950
மிடைந்த மா மணி மேகலை ஏந்து அல்குல்
தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து
அடைந்த சாயல் அரம்பையர் தம் உழை
மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான்
#951
கற்ற ஐம்பதங்கள் நீரா கருவினை கழுவ பட்டு
மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி
இற்ற தன் உடம்பும் இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி
உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான்
#952
இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து
அரும் பொன் ஆக்கிய ஆருயிர் தோழனை
விரும்பி விண் இறுத்து ஒய்யென தோன்றினான்
சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே
#953
ஓசனை நறும் புகை கமழ் ஒள் நிலா
வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன்
மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசு உறு பருதியில் பொலிந்து தோன்றினான்
#954
குன்று என திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி
நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி
நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான்
#955
குங்கும குவட்டின் வீங்கி கோலம் வீற்றிருந்த தோளாய்
இங்கு நின் அருளில் போகி இயக்கருள் இறைவன் ஆகி
சங்க வெண் மலையின் மற்று சந்திர உதயத்தின் உச்சி
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான்
#956
என்று அவன் உரைப்ப கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றா
பொன் தரு மாரி வண் கை புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம்
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான்
#957
சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான்
பாடல் வண்டு அரற்றும் பிண்டி பகவனது இறைமை போல
மூடி இ உலகம் எல்லாம் நின் அடி தருவல் இன்னே
ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான்
#958
வாளொடு வயவர் ஈண்டி வாரண தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லா
கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான்
#959
இன் நிழல் இவரும் பூணான் இரு விசும்பு இவர்தலுற்று
பொன் எழு அனைய தோளான் புல்லி கொண்டு இனைய கூறி
நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று
மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான்
#960
சொல்லிய நன்மை இல்லா சுணங்கன் இ உடம்பு நீங்கி
எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா
கொல் உலை அகத்து இட்டு ஊதி கூர் இரும்பு இரதம் குத்த
எல்லை இல் செம்பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே
#961
எரி மாலை வேல் நுதியின் இறக்கி காமன் அடு கணையால்
திருமாலை வெம் முலை மேல் திளைக்கும் தேவர் திரு உறுக
அரு மாலை எண் வினையும் அகற்றி இன்ப கடல் ஆக்கி
தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ
#962
ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கை செறு உழுது
நன்று ஆய நல் விரத செந்நெல் வித்தி ஒழுக்க நீர்
குன்றாமல் தாம் கொடுத்து ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின்
வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே
#963
இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி
அத்தலை அலற முந்நீர் கடைந்தவர் அரவம் ஒப்ப
மை தலை நெடும் கணாரும் மைந்தரும் மறலி ஆட
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார்
#964
கலந்து எழு திரை நுண் ஆடை கடி கய மடந்தை காமர்
இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரை பரப்பும் ஆக
அலர்ந்த தண் கமலத்து அம் போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப
நலம் கெழு குவளை வாள் கண் நன்_நுதல் நலத்தை உண்டார்
#965
தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை
எண்ணிய விரலோடு அங்கை புறங்கையின் இசைய ஆக்கி
திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி
ஒண் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார்
#966
சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேம் கொள்
உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்கு
தவறு என தாமம் பூட்டி தரு திறை கொண்டும் இன்பத்து
இவறினார் காம வெள்ளத்து ஏத்து அரும் தன்மையாரே
#967
சாந்து அகம் நிறைந்த தோணி தண் மலர் மாலை தோணி
பூம் துகில் ஆர்ந்த தோணி புனை கலம் பெய்த தோணி
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டுகொண்டு எறிய ஓடி
தாம் திரை கலங்கள் போல தாக்குபு திரியும் அன்றே
#968
கலி வளர் களிறு கை நீர் சொரிவ போல் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கி பூம் சிகை அலமந்து ஆட
குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர்
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே
#969
வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல
மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து இறந்தது அன்றே
#970
உரைத்த வெண்ணெயும் ஒள் நறும் சுண்ணமும்
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும்
நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம்
இரைத்து நீர் கொழித்து இன்பம் இறந்ததே
#971
கத்தி கை கண்ணி நெற்றி கைதொழு கடவுள் அன்ன
வித்தக இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி
முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கி
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே
#972
திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி
கரும் கய களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம்
கரும் கடற்கு இவர்ந்த வண்ணம் கடி நகர்க்கு எழுந்த அன்றே
#973
கடல் என காற்று என கடும் கண் கூற்று என
உடல் சின உரும் என ஊழி தீ என
தொடர் பிணி வெளில் முதல் முருக்கி தோன்றியது
அடல் அரும் கடா களிற்று அசனி வேகமே
#974
பொருது இழி அருவி போன்று பொழி தரு கடாத்தது ஆகி
குருதி கொள் மருப்பிற்று ஆகி குஞ்சரம் சிதைந்தது என்ன
கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர்
பருதியின் முன்னர் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார்
#975
கரும்_தடம்_கண்ணி-தன் மேல் காமுகர் உள்ளம் போல
இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக
அரும் பெறல் அவட்கு தோழி ஆடவர் இல்லையோ என்று
ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள்
#976
என்னை கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி
இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என்-கண் மாய்ந்தால்
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி
மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள்
#977
மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால்
அணி இரும் குஞ்சி ஏற கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து
தணி அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச
பணி வரும் குருசில் செல்வான் பாவை-அது இடரை கண்டான்
#978
பெண் உயிர் அவலம் நோக்கி பெருந்தகை வாழ்வில் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா
வண்ண பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா
அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே
#979
குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் விழும் மின் போல்
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ
மண்டில முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே
#980
படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல
மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில்
குட வரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான்
#981
கூற்று என முழங்கி கையால் கோட்டு-இடை புடைப்ப காய்ந்து
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி
ஆற்றல் அம் குமரன்-தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான்
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான்
#982
மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே
பதி அமை பருதி-தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்கு
பொதி அவிழ் கோதை-தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார்
கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே
#983
கையகப்படுத்தலோடும் கார் மழை மின்னின் நொய்தா
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ்
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப
செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே
#984
மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள்
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அ
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல்
பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே
#985
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம்
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேன் ஆர்
முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர்
அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே
#986
மணி செய் கந்து போல் மருள வீங்கிய
திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய
அணி பொன் கொம்பினை அழுங்கல் என்று தன்
தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார்
#987
முழங்கு தெண் திரை மூரி நீள் நிதி
வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான்
விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய்
குழைந்த கோதையை கண்டு கூறினாள்
#988
நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய
கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம்
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என
உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார்
#989
முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை
பருகி வண்டு உலாம் பல் குழலினாள்
வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து
உருகும் நுண் இடை ஒசிய புல்லினாள்
#990
கடம்பு சூடிய கன்னி மாலை போல்
தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும்
குடங்கை உண்கணாள் கொண்ட பண்ணையுள்
அடைந்த துன்பம் என்று அறிவின் நாடினாள்
#991
கம்ம பல் கலம் களைந்து கண்டு தெறூஉம்
விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து
அம் மென் மாலையும் அடைச்சி குங்குமம்
கொம்மை மட்டித்தார் கொடி அனாளையே
#992
அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம்
கொம்பின் அவ்வையை கொணர்-மின் சென்று என
பைம்பொன் அல்குலை பயிரும் பைங்கிளி
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள்
#993
நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல்
திறத்தை வெளவிய சேய் அரி கண்ணினாள்
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம்
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள்
#994
குமரி மாநகர் கோதை அம் கொம்பு அனாள்
தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை
அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல்
குமரன் ஆக்கிய காதலின் கூறினாள்
#995
கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
முலை தடத்து இடை மொய் எரு குப்பையா
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான்-அரோ
#996
பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால்
வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல்
தாம மார்பனை சீவகசாமியை
காமனை கடிதே தம்-மின் தேவிர்காள்
#997
கையினால் சொல கண்களின் கேட்டிடும்
மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன்
செய் தவம் புரியா சிறியார்கள் போல்
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம்-கொலோ
#998
கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால்
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா
பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே
#999
சோலை வேய் மருள் சூழ் வளை தோளி தன்
வேலை மா கடல் வேட்கை மிக்கு ஊர்தர
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை
கால வேல் தடம் கண்ணி கருதினாள்
#1000
உய்யுமாறு உரை உன்னை அல்லால் இலேன்
செய்ய வாய் கிளியே சிறந்தாய் என
நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில்
தையலாய் சமழாது உரை என்றதே
#1001
தெளி கயம் அம் மலர் மேல் உறை தேவியின்
ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள்
களி கொள் காமத்தில் கையறவு எய்தி தன்
கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே
#1002
பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள்
நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட
வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து
ஆணு பைங்கிளி ஆண்டு பறந்ததே
#1003
கூட்டினான் மணி பல தெளித்து கொண்டவன்
தீட்டினான் கிழி மிசை திக வாள்_நுதல்
வேட்ட மால் களிற்று-இடை வெருவி நின்றது ஓர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே
#1004
நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே
மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும்
முகிழ்ந்து வீங்கு இள முலை முத்தம் தைவரும்
புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே
#1005
படை மலர் நெடும் கணாள் பரவை ஏந்து அல்குல்
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில்
புடை திரள் வன முலை பூணும் நோற்றன
அடி மலர் தாமரை சிலம்பு நோற்றவே
#1006
மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு
இன்னணம் இறைமகன் புலம்ப யாவதும்
தன் அணங்குறு மொழி தத்தை தத்தையை
மன் அணங்குறலொடு மகிழ்ந்து கண்டதே
#1007
ஆடும் பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல்
சூடிய கலை புறம் சூழ்ந்த பூம் துகில்
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை
கூடி மற்று அதன் புறம் குலாய கொள்கைத்தே
#1008
கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன
மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர்
இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன
பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே
#1009
குண்டலம் ஒருபுடை குலாவி வில்லிட
விண்டு அலர்ந்து ஒருபுடை தோடு மின்செய்
மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே
ஒண்_தொடி திருமுகத்து உருவ மாட்சியே
#1010
பூண் நிறம் முலையவள் பொருவில் பூ நுதல்
மாண் நிற கரும் குழல் மருங்கில் போக்கிய
நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி
வாள் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே
#1011
கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை
வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது
நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர்
கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே
#1012
சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம்
அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி
நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இ
இலங்கு அரி தடம் கணாள் யாவள் ஆம்-கொலோ
#1013
யாவளே-ஆயினும் ஆக மற்று இவள்
மேவிய பொருளொடு மீண்ட பின் அலால்
ஏவலால் சேர்கலேன் என்று பைங்கிளி
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே
#1014
மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர்
கத களி வேலினான் கண்டு காம நீர்
புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள்
#1015
இது என உரு என இயக்கி என்றலும்
புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால்
மது விரி கோதை அம் மாலை நின் மனம்
அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமே
#1016
முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெம் சிலை
வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே
கிளை கழுநீர் கணும் சிவப்பில் கேழ்த்தவே
#1017
பாவை நீ புலவியில் நீடல் பாவியேற்கு
ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர்
கூவல் வாய் வெண் மணல் குறுக செல்லுமே
மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே
#1018
பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள்
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி
கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே
ஆர்வுறு கணவன்-மாட்டு அமிர்தின் சாயற்கே
#1019
புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி
சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல்
அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம்
இலங்க பேர்ந்து இன மலர் சிதறி ஏகினாள்
#1020
துனிப்புறு கிளவியால் துணைவி ஏகலும்
இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா
கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன்
பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே
#1021
வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே
தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என
சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட
யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான்
#1022
பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு
என்னை-கொல் வரவு என இனிய செப்பினான்
#1023
மையல் அம் களிற்றொடு பொருத வண் புகழ்
ஐயனை செவ்வி கண்டு அறிந்து வம் என
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு
கை இலங்கு எஃகினாய் காண வந்ததே
#1024
வெம் சின வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக
நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி
அஞ்சன துவலை ஆடி நடுங்கினாள் நிலைமை என்னை
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே
#1025
பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண்
பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால்
ஆவியா அழல் என உயிர்க்கும் ஐயென
மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே
#1026
பணி தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள்
மணி கழங்கு ஆடலள் மாமை தான் விளர்த்து
அணி தகை யாழினோடு அமுதம் விட்டு ஒரீஇ
துணை பெரு மலர் கணில் துயிலும் நீங்கினாள்
#1027
திருந்து வேல் சீவகசாமியோ எனும்
கரும் கடல் வெள் வளை கழல்பவோ எனும்
வருந்தினேன் மார்புற புல்லு வந்து எனும்
பொருந்து பூம் கொம்பு அன பொருவின் சாயலே
#1028
கன்னியர் உற்ற நோய் கண் அனார்க்கும் அஃது
இன்னது என்று உரையலர் நாணின் ஆதலான்
மன்னும் யான் உணரலேன் மாதர் உற்ற நோய்
துன்னி நீ அறிதியோ தோன்றல் என்றதே
#1029
புள்ளின் வாய் உரை கேட்டலும் பொன் செய்வேல்
எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன் உரை
உள்ளினார் உழை கண்டது ஒத்தான்-அரோ
வள்ளல் மா தடிந்தான் அன்ன மாண்பினான்
#1030
சொல் மருந்து தந்தாய் சொல்லு நின் மனத்து
என் அமர்ந்தது உரைத்து கொள் நீ என
வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் அவட்கு
இன் மருந்து இவை வேண்டுவல் என்றதே
#1031
பொன் குன்று-ஆயினும் பூம் பழனங்கள் சூழ்
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான்
கல் குன்று ஏந்திய தோள் இணை கண் உறீஇ
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான்
#1032
சேலை வென்ற கண்ணாட்கு இவை செப்ப அரிது
ஓலை ஒன்று எழுதி பணி நீ என
மாலை மார்பன் கொடுப்ப தினை குரல்
ஓலையோடு கொண்டு ஓங்கி பறந்ததே
#1033
திருந்து கோதை சிகழிகை சீறடி
மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள்
பொருந்து பூம் பொய்கை போர்வையை போர்த்து உடன்
கரும் கண் பாவை கவின் பெற வைகினாள்
#1034
மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல்
கறங்க ஏகி தன் காதலி ஊடலை
உறைந்த ஒண் மலர் சென்னியின் நீக்கினான்
நிறைந்தது இன்ப நெடும் கணிக்கு என்பவே
#1035
தன் துணைவி கோட்டியினின் நீங்கி தனி இடம் பார்த்து
இன் துணைவன் சேர்வான் இருந்தது-கொல் போந்தது-கொல்
சென்றது-கொல் சேர்ந்தது-கொல் செவ்வி அறிந்து உருகும்
என் துணைவி மாற்றம் இஃது என்றது-கொல் பாவம்
#1036
செம் தார் பசுங்கிளியார் சென்றார்க்கு ஓர் இன் உரைதான்
தந்தாரேல் தந்தார் என் இன் உயிர் தாம் தாராரேல்
அந்தோ குணமாலைக்கு ஆ தகாது என்று உலகம்
நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே
#1037
சென்றார் வரைய கருமம் செரு வேலான்
பொன் தாங்கு அணி அகலம் புல்ல பொருந்துமேல்
குன்றாது கூடுக என கூறி முத்த ஆர் மணல் மேல்
அன்று ஆங்கு அணி இழையாள் ஆழி இழைத்தாளே
#1038
பாக வரை வாங்கி பழுதாகின் பாவியேற்கு
ஏகுமால் ஆவி என நினைப்ப பைங்கிளி யார்
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தாள்
ஆகும் யான் சேர்வல் என சென்று அடைந்ததே
#1039
கண்டாள் நெடிது உயிர்த்தாள் கைதொழுதாள் கை அகத்தே
கொண்டாள் தினை குரல் தான் சூடினாள் தாழ் குழல் மேல்
நுண் தார் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி
வண் தாரான் செவ்வி வாய் கேட்டாள் தன் மெய் மகிழ்ந்தாள்
#1040
தீம் பால் அமிர்து ஊட்டி செம்பொன் மணி கூட்டில்
காம்பு ஏர் பணை தோளி மென் பறவை கண்படுப்பித்து
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள்
#1041
கொடும் சிலையான் ஓலை குணமாலை காண்க
அடும் துயரம் உள் சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன்
நெடும் கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக
#1042
ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ்
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து
வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய வேய் மென் தோள்
பூட்டார் சிலை நுதலாள் புல்லாது ஒழியேனே
#1043
குங்குமம் சேர் வெம் முலை மேல் கொய்தார் வடு பொறிப்ப
செம் கயல் கண் வெம் பனியால் சிந்தை எரி அவித்து
மங்கை மகிழ உறையேனேல் வாள் அமருள்
பங்கப்பட்டார் மேல் படை நினைந்தேன் ஆக என்றான்
#1044
நூல் புடைத்தால் போல் கிடந்த வித்தகம் சேர் நுண் வரிகள்
பால் மடுத்து தீம் தேன் பருகுவாள் போல் நோக்கி
சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால் படுத்தான் மார்பில் மணந்தாளே போல் மகிழ்ந்தாள்
#1045
பால் அவியும் பூவும் புகையும் படு சாந்தும்
கால் அவியா பொன் விளக்கும் தந்து உம்மை கைதொழுவேன்
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே
நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள்
#1046
மவ்வல் அம் குழலினாளை மதியுடன்படுக்கலுற்று
செவ்வியுள் செவிலி சொல்லும் சிலை இவர் நுதலினாய் நின்
அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு இன்று உன் தாதை
நவ்வியம் பிணை கொள் நோக்கி நகை முக விருந்து செய்தான்
#1047
பண்டியால் பண்டி செம்பொன் பல் வளை பரியம் ஆக
கொண்டு வந்து அடிமை செய்வான் குறை உறுகின்றது அன்றி
கண்டவர் கடக்கல் ஆற்றா கிழி மிசை உருவு தீட்டி
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள்
#1048
மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதி கிழவன் காளை
உத்தமன் உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான்
இத்திறத்து இவன்-கண் நின்னை எண்ணினார் என்னலோடும்
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள்
#1049
மணி மத களிறு வென்றான் வருத்த சொல் கூலி ஆக
அணி மத களிறு அனானுக்கு அடி பணி செய்வது அல்லால்
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள்
பணிவரும் பவள பாவை பரிவு கொண்டு அனையது ஒப்பாள்
#1050
கந்துக புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு
எந்தையும் யாயும் நேராராய்விடின் இறத்தல் ஒன்றோ
சிந்தனை பிறிது ஒன்று ஆகி செய் தவம் முயறல் ஒன்றோ
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள்
#1051
தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று
தானையால் தடம் கண் நீரை துடைத்து மெய் தழுவி கொண்டாள்
#1052
துகள் மனத்து இன்றி நோற்ற தொல் வினை பயத்தின் அன்றே
தகண் இலா கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும்
மகள் மனம் குளிர்ப்ப கூறி மறுவலும் புல்லி கொண்டு ஆங்கு
அகல் மனை தாய்க்கு சொன்னாள் அவளும் தன் கேட்கு சொன்னாள்
#1053
வினையமாமாலை கேள்வன் குபேரமித்திரற்கு சொல்ல
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான்
வனையவே பட்ட போலும் மணி மருள் முலையினாளை
புனையவே பட்ட பொன் தார் புண்ணியற்கு ஈதும் என்றான்
#1054
கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும்
நல் தேர் மேலார் நால்வரை விட்டாற்கு அவர் சென்றார்
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன்
பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான்
#1055
சீந்தா நின்ற தீ முக வேலான் மணி செப்பின்
ஈந்தான் கொண்டார் இன் முக வாசம் எரி செம்பொன்
காந்தா நின்ற கற்பகம் அன்னீர் வர பெற்றேன்
சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார்
#1056
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும்
தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில்
பூமகள் வைகும் புண்ணிய பொன் குன்று அனையானுக்கு
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார்
#1057
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழலாற்கு
குற்றேல் செய்தும் காளையும் யானும் கொடியாளை
மல் சேர் தோளான் தன் மருமானுக்கு அருள் செய்ய
பெற்றேன் என்ன பேசினன் வாசம் கமழ் தாரான்
#1058
விடை சூழ் ஏற்றின் வெல் புகழான் தன் மிகு தாதை
கடல் சூழ் வையம் கை படுத்தான் போன்று இது கூற
குடர் சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் அ
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார்
#1059
மறையார் வேள்வி மந்திர செம் தீ கொடியே போல்
குறையா கற்பில் சீவகன் தாயும் கொலை வேல் கண்
பொறை ஒன்று ஆற்றா போது அணி பொன் கொம்பு அனையாளை
நறையார் கோதை நன்று என இன்புற்று எதிர்கொண்டாள்
#1060
பொன் கச்சு ஆர்த்த பூண் அணி பொம்மல் முலையாளை
அற்க செய்த யாப்பினர் ஆகி அவண் வந்தார்
பொற்ப கூறி போகுதும் என்றார்க்கு எழுக என்றார்
வற்கம் இட்ட வண் பரி மாவின் அவர் சென்றார்
#1061
மடந்தை திறத்தின் இயைய அம் மகள் கூறி வந்தார்
விடம் தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு அவன் மெய்ம்மகிழ்ந்தான்
நுடங்கும் கொடி போல்பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து
தடம் கண்ணவள் தாய் அது கேட்டலும் தக்கது என்றாள்
#1062
திருவிற்கு அமைந்தான் திசை பத்தும் அறிந்த தொல் சீர்
உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் என யாரும் ஒட்ட
பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால்
பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கலுற்றார்
#1063
கரை கொன்று இரங்கும் கடலில் கலி கொண்டு கல் என்
முரசம் கறங்க முழவு விம்ம வெண் சங்கம் ஆர்ப்ப
பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான்
விரை சென்று அடைந்த குழலாளை அ வேனிலானே
#1064
மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார்
இழை முற்று அணிந்தார் எழு நூற்றவர் கோடி செம்பொன்
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர்
குழை முற்று காதின் மணி கொம்பொடு நாய்கன் ஈந்தான்
#1065
கண்ணார் கதிர் மென் முலை காம்பு அடும் மென் தோள்
விண்ணோர் உலகினொடும் இ நிலத்து இல்லா
பெண்ணார் அமிர்தே அவன் பெற்ற அமிர்தே
பண்ணார் கிளவி பவழம் புரை செ வாய்
#1066
தேதாவென வண்டொடு தேன் வரி செய்ய
போது ஆர் குழலாள் புணர் மென் முலை பாய
தாது ஆர் கமழ் தார் மது விண்டு துளிப்ப
ஈதாம் அவர் எய்திய இன்பம் அதே
#1067
முந்நீர் பவளத்து உறை நித்தில முத்தம்
அ நீர் அமிர்து ஈன்று கொடுப்ப அமர்ந்தான்
மை நீர் நெடும் கண் புருவங்கள் மலங்க
பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இடவே
#1068
கம்பு ஆர் களி யானை கலக்க மலங்கி
அம்பேர் அரிவாள் நெடும் கண் புதைத்து அஞ்சி
கொம்பே குழைவாய் எனக்கே குழைந்திட்டாய்
வம்பே இது வையகத்தார் வழக்கு அன்றே
#1069
பூவார் புனல் ஆட்டினுள் பூ நறும் சுண்ணம்
பாவாய் பணை தோள் சுரமஞ்சரி தோற்றாள்
காவாது அவள் கண்ணற சொல்லிய வெம் சொல்
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய்
#1070
நல் தோளவள் சுண்ண நலம் சொல்லுவான்
உற்றீர் மறந்தீர் மனத்துள் உறைகின்றாள்
செற்றால் அரிதால் சென்-மின் போ-மின் தீண்டாது
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான்
#1071
தூமம் கமழ் பூம் துகில் சோர அசையா
தாமம் பரிந்து ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு
ஏமன் சிலை வாள் நுதல் ஏற நெருக்கா
காமன் கணை ஏர் கண் சிவந்து புலந்தாள்
#1072
மின் நேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும்
சொல் நீர் அவள் அற்பு அழலுள் சொரிந்து ஆற்ற
இ நீரன கண் புடைவிட்டு அகன்று இன்பம்
மன் ஆர்ந்து மதர்ப்பொடு நோக்கினள்-மாதோ
#1073
இன் நீர் எரி மா மணி பூண் கிடந்து ஈன்ற
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள்
பொன் ஆர் கொடியே புகழின் புகழ் ஞாலம்
நின் வாள் நெடும் கண் விலை ஆகும் நிகர்த்தே
#1074
தோளால் தழுவி துவர் தொண்டை அம் செ வாய்
மீளா மணிமேகலை மின்னின் மிளிர
வாள் ஆர் மணி பூண் அவன் மாதர் அம் பாவை-தன்னை
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான்
#1075
சித்திர மணி குழை திளைக்கும் வாள் முகத்து
ஒத்து ஒளிர் பவள வாய் ஓவ கைவினை
தத்தரி நெடும் கணாள் தன்னொடு ஆடும் நாள்
வித்தகற்கு உற்றது விளம்புகின்றதே
#1076
அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணி
கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது
இரும்பு செய் குழவி திங்கள் மருப்பு-இடை தட கை நாற்றி
சுரும்பொடு வண்டு பாட சுளிவொடு நின்றது அன்றே
#1077
பகை புறம் கொடுத்த வேந்தின் பரிவொடு பகடு நிற்ப
தகை நிற குழைகள் தாழ்ந்து சாந்தின் வாய் நக்கி மின்ன
புகை நிற துகிலில் பொன் நாண் துயல் வர போந்து வேந்தன்
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான்
#1078
கொற்றவன் குறிப்பு நோக்கி குஞ்சர பாகன் கூறும்
இற்றென உரைத்தல் தேற்றேன் இறைவ நின் அருளினாம்-கொல்
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால்
மற்று இதற்கு உடற்சி செய்ய மதம் இது செறித்தது என்றான்
#1079
ஈண்டு அழல் குட்டம் போல எரி எழ திருகி நோக்கி
கோண் தரு குறும்பர் வெம் போர் கோக்குழாம் வென்றது உள்ளி
மாண்டது இல் செய்கை சூழ்ந்த வாணிகன் மகனை வல்லே
ஆண் திறம் களைவென் ஓடி பற்றுபு தம்-மின் என்றான்
#1080
கன்றிய வெகுளி வேந்தன் கால் வலி இளையர் காய்ந்து
கொன்று உயிர் கொணர ஓடும் கொழும் குடர் கண்ணி மாலை
ஒன்றிய உதிர செச்சை ஒள் நிணம் மீக்கொள் தானை
தென் திசைக்கு இறைவன் தூதின் செம்மலை சென்று சேர்ந்தார்
#1081
சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி
விண் புக நாறு சாந்தின் விழு முலை காமவல்லி
கொண்டு எழுந்து உருவு காட்டி முகத்து-இடை குளித்து தோள் மேல்
வண் தளிர் ஈன்று சுட்டி வாள்_நுதல் பூப்ப வைத்தான்
#1082
பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம்
கண்ணடி கரும் கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால்
புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்கு பெற்றாய்
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே
#1083
திங்கள் சேர் முடியினானும் செல்வியும் போன்று செம்பொன்
இங்கு வார் கழலினானும் கோதையும் இருந்த போழ்தில்
சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார்
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள்
#1084
என்று அவள் உரைப்ப கேட்டே இடிபட முழங்கி செம் தீ
நின்று எரிவதனை ஒத்து நீள் முழை சிங்க ஏறு
தன் துணை பெட்டையோடு தான் புறப்பட்டது ஒத்தான்
குன்று இரண்டு இருந்த போலும் குங்கும குவவு தோளான்
#1085
பொன் அரி மாலை தாழ போது அணி கூந்தல் ஏந்தி
பன்னரு மாலையாற்கு பட்டதை எவன்-கொல் என்னா
பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்குற்று நின்றாள்
மன்னரு மாலை நாகம் மழை இடிப்பு உண்டது ஒத்தாள்
#1086
கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி
அடு சிலை அழல ஏந்தி ஆருயிர் பருகற்கு ஒத்த
விடு கணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தா
தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான்
#1087
அடி நிழல் தருக என்று எம் ஆணை வேந்து அருளி செய்தான்
வடி மலர் தாரினாய் நீ வருக என வானின் உச்சி
இடி உரும் ஏற்றின் சீறி இரு நிலம் சுடுதற்கு ஒத்த
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான்
#1088
வாள் இழுக்குற்ற கண்ணாள் வரு முலை நயந்து வேந்தன்
கோள் இழுக்குற்ற பின்றை கோ தொழில் நடாத்துகின்றான்
நாள் இழுக்குற்று வீழ்வது இன்று-கொல் நந்த திண் தேர்
தோள் இழுக்குற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே
#1089
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழில் அது ஆகும்
காய்ந்திடு வெகுளி நீக்கி கை கட்டி இவனை உய்த்தால்
ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் அது பொருள் என்று நல்ல
சாந்து உடை மார்பன் தாதை தன் மனத்து இழைக்கின்றானே
#1090
ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால்
தான் புறம் கட்டப்பட்டு தன் சினம் தணிந்து நிற்ப
தேன் பிறங்கு அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன் தானும்
கோன் புறம் காப்ப சேறல் குணம் என கூறினாரே
#1091
ஈன்ற தாய் தந்தை வேண்ட இ இடர் உற்றது என்றால்
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முட்டினும் முருக்கும் ஆற்றல்
வான் தரு மாரி வண் கை மதவலி பிணிக்கப்பட்டான்
#1092
குழல் உடை சிகழிகை குமரன் தோள் இணை
கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின்
அழல் உடை கடவுளை அரவு சேர்ந்து என
விழவு உடை முதுநகர் விலாவிக்கின்றதே
#1093
தோள் ஆர் முத்தும் தொல் முலை கோட்டு துயல் முத்தும்
வாள் ஆர் உண்கண் வந்து இழி முத்தும் இவை சிந்த
காளாய் நம்பி சீவகசாமி என் நல் தாய்
மீளா துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள்
#1094
பாலார் ஆவி பைம் துகில் ஏந்தி பட நாகம்
போல் ஆம் அல்குல் பொன் தொடி பூம் கண் குணமாலை
ஏலாது ஏலாது எம் பெருமானுக்கு இஃது என்னா
நூலார் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள்
#1095
எரி தவழ் குன்றத்து உச்சி இரும் பொறி கலாப மஞ்ஞை
இரிவன போன்று மாடத்து இல் உறை தெய்வம் அன்னார்
பரிவுறு மனத்தின் ஓடி பட்டதை உணர்ந்து பொன் தார்
அரி உறழ் மொய்ம்பவோ என்று ஆகுல பூசல் செய்தார்
#1096
கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி
அங்கு அவர்க்கு உற்றது உள்ளி அவல நீர் அழுந்துகின்ற
குங்கும கொடியோடு ஏந்தி கோலம் வீற்றிருந்த கொம்மை
பொங்கு இள முலையினார்க்கு புரவலன் இதனை சொன்னான்
#1097
கண் துயில் அனந்தர் போல கதிகளுள் தோன்றுமாறும்
விட்டு உயிர் போகுமாறும் வீடு பெற்று உயருமாறும்
உள்பட உணர்ந்த யானே உள் குழைந்து உருகல் செல்லேன்
எள் பகவு அனைத்தும் ஆர்வம் ஏதமே இரங்கல் வேண்டா
#1098
நல் மணி இழந்த நாகர் நல் இளம் படியர் போல
இன் மணி இழந்து சாம்பி இரு நிலம் இவர்கள் எய்த
மின் அணி மதியம் கோள் வாய் விசும்பு-இடை நடப்பதே போல்
கல் மணி உமிழும் பூணான் கடை பல கடந்து சென்றான்
#1099
வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று
அந்துவர் பவள வாய் அம் மழலை இன்சொலார்
பந்து பாவை பைம் கழங்கு பைம்பொன் முற்றில் சிற்றிலுள்
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார்
#1100
மல்லிகை மலிந்த மாலை சோர ஆர்ந்த குண்டலம்
வில் இலங்க மின்னு கோட்ட வீணை விட்டு வெய்து உராய்
ஒல் என சிலம்பு அரற்ற வீதி மல்க ஓடினார்
சில் சுணங்கு இள முலை செழு மலர் தடம் கணார்
#1101
நெய் தலை கரும் குழல் நிழன்று எருத்து அலைத்தர
முத்து அலைத்து இள முலை முகம் சிவந்து அலமர
கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து அவண்
மை தலை நெடும் தடம் கண் மங்கையர் மயங்கினர்
#1102
கோதை கொண்ட பூம் சிகை கொம்மை கொண்ட வெம் முலை
மாது கொண்ட சாயல் அம் மடந்தையர் மனம் கசிந்து
ஓதம் முத்து உகுப்ப போல் உண்கண் வெம் பனி உகுத்து
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர்
#1103
செம்பொன் ஓலை வீழவும் செய் கலங்கள் சிந்தவும்
அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும்
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர்
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார்
#1104
பூ அலர்ந்த தாரினான் பொற்பு வாடும் ஆயிடின்
போ உடம்பு வாழ் உயிர் பொன்று நீயும் இன்று எனா
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார்
#1105
தேன் மலிந்த கோதை மாலை செய் கலம் உகுத்து உராய்
கால் மலிந்த காமவல்லி என்னது அன்னர் ஆயரோ
பால் மலிந்த வெம் முலை பைம் துகில் அரிவையர்
நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார்
#1106
மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மா மணி கலை
தீது இல் ஆரம் நூல் பெய்வார் சிதர்ந்து போக சிந்துவார்
போது உலாம் அலங்கலான் முன் போந்து பூம் தெரிவையர்
ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார்
#1107
வட்டிகை மணி பலகை வண்ண நுண் துகிலிகை
இட்டு இடை நுடங்க நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின்
கட்டு அழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக
மட்டு அவிழ்ந்த கோதையார்கள் வந்து வாயில் பற்றினார்
#1108
வினையது விளைவு காண்-மின் என்று கை விதிர்த்து நிற்பார்
இனையனாய் தெளிய சென்றால் இடிக்கும்-கொல் இவனை என்பார்
புனை நலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோடு என்பார்
வனை கல திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார்
#1109
நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார்
கூற்றத்தை கொம்மை கொட்டி குலத்தொடு முடியும் என்பார்
ஏற்றது ஒன்று அன்று தந்தை செய்த இ கொடுமை என்பார்
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார்
#1110
தூக்கு-மின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார்
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார்
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார்
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார்
#1111
பூ வரம்பு ஆய கோதை பொன் அனார் புலவி நீக்கி
நூபுரம் திருத்தி சேந்த நுதி விரல் நொந்த என்பார்
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின்
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார்
#1112
கரும் சிலை மறவர் கொண்ட கண நிரை விடுக்க வல்ல
இரும் சிலை பயின்ற திண் தோட்கு இது தகாது என்று குன்றில்
கரும் கடல் துளுப்பிட்டு ஆங்கு கல் என கலங்கி காமர்
அரும் கடி அரண மூதூர் ஆகுலம் மயங்கிற்று அன்றே
#1113
இங்ஙனம் இவர்கள் ஏக எரி அகம் விளைக்கப்பட்ட
வெம் கணை விடலை தாதை வியன் நகர் அவலம் எய்தி
அங்கு அவர் உகுத்த கண்ணீர் அடி துகள் அவிப்ப நோக்கி
பொங்கு அமர் உழக்கும் வேலான் புலம்பு கொண்டு அழேற்க என்றான்
#1114
மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான்
துன்னினான் துளங்கின் அல்லால் துளங்கல் அ மலையிற்கு உண்டே
அன்னதே துணிந்த நீதி அரு நவை நமனும் ஆற்றான்
என்னை நேர் நின்று வாழ்தல் இரு நிலத்து ஆவது உண்டே
#1115
வளை கடல் வலையின் சூழ்ந்து மால் வரை வேலி கோலி
உளை அரி படுக்கல் உற்றான் படுப்பினும் படுக்க மற்று என்
கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான்
தளை அவிழ் கண்ணி சிந்த தன் தலை நிலத்தது அன்றே
#1116
நீர் அகம் பொதிந்த மேகம் நீல் நிற நெடு நல் யானை
போர் முகத்து அழலும் வாள் கை பொன் நெடும் குன்றம் அன்னான்
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான்
சீர் உறு சிலம்பி நூலால் சிமிழ்ப்பு உண்ட சிங்கம் ஒத்தான்
#1117
மன்னர் தம் வெகுளி வெம் தீ மணி முகில் காணம் மின்னி
பொன் மழை பொழியின் நந்தும் அன்று எனின் புகைந்து பொங்கி
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன்
பன்னிரு கோடி உய்த்து கந்துகன் பணிந்து சொன்னான்
#1118
மன்னவ அருளி கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர்
நின் மத களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி
என் மகன் அதனை நீக்கி இன் உயிர் அவளை காத்தான்
இன்னதே குற்றம் ஆயின் குணம் இனி யாது வேந்தே
#1119
நாண் மெய் கொண்டு ஈட்ட பட்டார் நடுக்குறும் நவையை நீக்கல்
ஆண் மக்கள் கடன் என்று எண்ணி அறிவு இன்மை துணிந்த குற்றம்
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும்
நீண்மை கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான்
#1120
வாழியர் இறைவ தேற்றான் மா நிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை
சூழ் கதிர் ஆரம் வீழ் நூல் பரிந்து அற நிமிர்ந்து திண் தோள்
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவ சொன்னான்
#1121
ஆய் களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக
சீவகன் அகன்ற மார்பம் ஓலையா திசைகள் கேட்ப
காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே
நீ பரிவு ஒழிந்து போய் நின் அகம் புகு நினையல் என்றான்
#1122
நஞ்சு அனான் உரைப்ப கேட்டே நாய்கனும் நடுங்கி உள்ளம்
வெம் சின வேழம் உண்ட விளங்கனி போன்று நீங்கி
எஞ்சினன் போல நின்றான் ஏத்த அரும் தவத்தின் மிக்க
வஞ்சம் இல் கொள்கையான் சொல் அமிர்தினால் வற்புற்றானே
#1123
மின் இலங்கு எஃகினானை பெறுகலான் தந்தை மீண்டு
தன் இலம் குறுகலோடும் தாய் அழுது அரற்றுகின்றாள்
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான்
#1124
மது மடை திறந்து தீம் தேன் வார் தரு கோதை நீ முன்
செது மக பலவும் பெற்று சிந்தை கூர் மனத்தை ஆகி
இது மகவு அழியின் வாழேன் இறப்பல் யான் என்னும் ஆங்கண்
கதுமென கடவுள் தோன்றி கடை முகம் குறுக வந்தான்
#1125
கறவை காண் கன்றின் வெஃகி கண்டு அடி பணிந்து காமர்
நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி
அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த
பறவை தாது உண்ட வண்ணம் பட்டினி பரிவு தீர்ந்தான்
#1126
ஆய் மணி பவள திண்ணை அரும் பெறல் கரகத்து அங்கண்
தூய் மணி வாசம் நல் நீர் துளங்கு பொன் கலத்துள் ஏற்று
வேய் மணி தோளி நிற்ப விழுத்தவன் நியமம் முற்றி
வாய் மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன்
#1127
ஆறு எலாம் கடலுள் வைகும் அரும் தவத்து இறைவன் நூலுள்
வேறு எலா பொருளும் வைகும் விழு தவ அறிதி நீயே
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள்
பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன்
#1128
வம்பு அவிழ் கோதை தந்த வான் துவர் காயை வீழ்த்து ஓர்
செம் பழு காயை வாங்கி திருநிலத்து எடுத்து கொண்டு ஆங்கு
அம்பு அழ நீண்ட வாள் கண் அலமரும் அணி செய் அம் பூம்
கொம்பு அடு நுசுப்பினாய்க்கு தந்தனென் பேணி கொண்டாய்
#1129
பெற்ற அ நிமித்தத்தானும் பிறந்த சொல் வகையினானும்
அற்றம் இல் மணியை அம் கை கொண்டு அவர் கண்டு காட்ட
கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்-மின் என்று
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே
#1130
ஒன்றும் நீர் கவலல் வேண்டா உலகு எலாம் ஆளும் சீர்த்தி
பொன் திகழ் உருவினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன
நின்ற நீ உவந்து நீங்க நிகழ் பொருள் எனக்கு செப்பி
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான்
#1131
நிலவு உறழ் பூணினானை நெடு நகர் இரங்க கையாத்து
அலபல செய்து கொல்வான் அருளிலான் கொண்ட போழ்தில்
குலவிய புகழினானை கொண்டு போம் இயக்கன் அஞ்சல்
சில பகல் கழிந்து காண்டி சிந்தி ஈது என்று சொன்னான்
#1132
வசை அற நிறைந்த கற்பின் மாலையும் மாமி-தானும்
தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் ஆங்கண்
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில்
கசிவு எனும் கடலை நீந்தி கரை எனும் காலை கண்டார்
#1133
திரு குழல் மகளிர் நைய சீவகசாமி திண் தோள்
வரி கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன கேட்டே
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற
மருப்புடன் இழந்தது ஒத்தார் மன் உயிர் தோழன்மாரே
#1134
நட்டவற்கு உற்ற கேட்டே பதுமுகன் நக்கு மற்று ஓர்
குட்டியை தின்னலாமே கோள் புலி புறத்தது ஆக
கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியை பாய
ஒட்டி இஃது உணரலாமே உரைவல்லை அறிக என்றான்
#1135
சிலையொடு செல்வன் நின்றால் தேவரும் வணக்கல் ஆற்றார்
முலை உடை தாயொடு எண்ணி தந்தை இ கொடுமை செய்தான்
கலை வல்லீர் இன்னும் கேண்-மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண்
விரைவொடு சென்ற ஒற்றாள் விளைந்தவா பேசுகின்றான்
#1136
இட்டி வேல் குந்தம் கூர்வாள் இரும் சிலை இருப்பு சுற்றார்
நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி
எட்டு எலா திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர்
கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்து கொண்டார்
#1137
பிடியொடு நின்ற வேழம் பெரு வளைப்புண்ட வண்ணம்
வடி மலர் கோதையோடும் வளைத்தலின் மைந்தன் சீறி
விடு கணை சிலையொடு ஏந்தி வெருவர தோன்றலோடும்
அடு புலி கண்ட மான் போல் ஆறல ஆயினாரே.
#1138
சூழ் கழல் மள்ளர் பாற சூழ்ச்சியின் தந்தை புல்லி
வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்கு தோள் பிணிப்ப மற்று என்
தோழரை வடு செய்திட்டேன் என்று தான் துளங்கி நின்றான்
ஊழ் திரை பாம்பு சேர்ந்த ஒளி மிகு பருதி ஒத்தான்
#1139
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான்
உற்ற இ இடரை தீர்க்கும் உபாயம் நீர் உரை-மின் என்றான்
பொன் திரள் குன்றம் போல பொலிவு கொண்டு இருந்த தோளான்
#1140
நிறை திங்கள் ஒளியோடு ஒப்பான் புத்திசேன் நினைந்து சொல்லும்
மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும்
இறை குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்க
சிறை குற்றம் நீங்க செற்றான் செகுத்து கொண்டு எழுதும் என்றான்
#1141
கால தீ நகரை மேய கடி அரண் கடிந்த அம்பின்
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி
கோல தீ வேலினானை கோயிலுள் வளைப்ப இப்பால்
ஆலை தீ இடங்கள்-தோறும் ஆகுலம் செய்தும் என்றான்
#1142
சிறை புறம் காத்து செல்லு மதனனை தெருவில் வீழ
பிறை தலை அம்பில் சென்னி பெருநிலத்து இடுவல் இட்டால்
மறுக்கு உற்று மள்ளர் நீங்க மைந்தனை கொண்டு போகி
அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான்
#1143
மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடா கொண்டு நொய்தா
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம்
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடு-மின் என்றான்
கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான்
#1144
காலனை சூழ்ந்த நோய் போல் நபுல மா விபுலர் சூழ
வேலினை ஏந்தி நந்தன் வெருவர தோன்றலோடும்
மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி
பாலவர் பிறரும் ஈண்டி பாய் புலி இனத்தின் சூழ்ந்தார்
#1145
மட்டு வாய் அவிழ்ந்த தண் தார் தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன் மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப
பட்டு உலாய் கிடந்த செம்பொன் கலை அணி பரவை அல்குல்
இட்டு இடை பவள செ வாய் தத்தையும் இதனை கேட்டாள்
#1146
மணி இயல் யவன செப்பின் மங்கல துகிலை வாங்கி
கணை புரை கண்ணி ஏற்ப உடுத்த பின் செம்பொன் செப்பில்
பிணையலும் நறிய சேர்த்தி பெரு விலை ஆரம் தாங்கி
துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய தொடங்கினாளே
#1147
பொன் அணி மணி செய் ஓடை நீரின் வெண்சாந்து பூசி
தன்னுடை விஞ்சை எல்லாம் தளிர் இயல் ஓதலோடும்
மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும்
மன்னுடன் ஏந்தி தெய்வ மாதரை சூழ்ந்த அன்றே
#1148
ஆரம் மின்னும் பணை வெம் முலை ஆடு அமை தோளினாள்
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ
பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்ததே
#1149
மன்னன் செய்த சிறை மா கடலுள் குளித்து ஆழ்வுழி
தன்னை எய்தி சிறை மீட்டனள் தன் மனையாள் எனின்
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன்
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே
#1150
செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் பழி
இல்லை-ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே
சொல்லின் வெள்ளி மலை தோடு அவிழ் தாமரை பொன் மலர்
எல்லை ஆகும் பொது பெண் அவள் யான் குல மங்கையே
#1151
ஆவது ஆக புகழும் பழியும் எழும் நாள் அவை
தேவர் மாட்டும் உள மக்களுள் இல்வழி தேர்கலேன்
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன்
காவல் கன்றின் புனிற்று ஆ அன கார் மயில் சாயலே
#1152
மாநகர் சுடுதல் ஒன்றோ மதனனை அழித்தல் ஒன்றோ
வான் நிகர் இல்லா மைந்தர் கருதியது அதுவும் நிற்க
வேய் நிகர் இல்ல தோளி விஞ்சையால் விடுத்து கொள்ள
போய் உயிர் வாழ்தல் வேண்டேன் என பொருள் சிந்திக்கின்றான்
#1153
கச்சு அற நிமிர்ந்து மாந்தர் கடாவிடு களிறு போல
உச்சியும் மருங்கும் பற்றி பிளந்து உயிர் பருகி கோண்மா
அச்சுற அழன்று சீறி ஆட்டு இனம் புக்கது ஒப்ப
குச்சென நிரைத்த யானை குழாம் இரித்திடுவல் என்றான்
#1154
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர்
பொன் இலங்கு இவுளி தேரால் புடைத்து வெம் குருதி பொங்க
இன் உயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்தது இல்லை
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான்
#1155
தோழனும் தேவிமார் தம் குழாத்து உளான் துளும்பும் முந்நீர்
ஏழ் தரு பருதி-தன் மேல் இளம் பிறை கிடந்ததே போல்
தாழ் தகை ஆர மார்பின் சீவகன் குணங்கள் தம்மை
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான்
#1156
வயிரம் வேய்ந்த மணி நீள் முடி வால் ஒளி வானவன்
செயிரின் தீர்ந்த செழும் தாமரை கண் இடன் ஆடலும்
உயிர் அனானை நினைந்தான் உற்றது ஓதியின் நோக்கினான்
மயில் அனார்க்கு படி வைத்தவன் மால் விசும்பு ஏறினான்
#1157
இடியும் மின்னும் முழக்கும் இவற்றான் உலகம் நிறைந்து
ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என
நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின்
கடலை ஏந்தி நிலத்து இட்டு என மாரி கலந்ததே
#1158
விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்-தம்
கண்ணும் வாயும் இழந்து ஆம் கடல் கொண்டது காண்க என
பெண்ணும் ஆணும் இரங்க பெருமான் மகன் சாமியை
அண்ணல் ஏந்தி அகம் புலி கொண்டு எழுந்து ஏகினான்
#1159
குன்று உண்டு ஓங்கு திரள் தோள் அவன் கொண்டு எழுந்து ஏகலும்
நன்று உண்டாக என நல் நுதல் வாழ்த்தினள் வாழ்த்தலும்
ஒன்று உண்டாயிற்று அவள் உள் அழி நோயுறு காளையை
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே
#1160
சந்த மாலை தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள்
வந்த விண்ணோர்களை வாழ்த்தி ஏத்தி இ மலர் மாலை தூய்
எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல்
சிந்தை செய்யும் சிறகர் கிளி தோற்கும் அம் தீம் சொலாள்
#1161
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான்
கொலை தொகை வேலினானை கொல்லிய கொண்டு போந்தான்
நலத்தகை அவனை காணான் நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி
சிலை தொழில் தட கை மன்னற்கு இற்றென செப்புகின்றான்
#1162
மன்னனால் சீறப்பட்ட மைந்தனை கொல்ல போந்தாம்
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம்
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மை
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான்
#1163
வாழ்வதோர் உபாயம் நாடி மதி உடம்பட்டு வல்லே
சூழ்வினையாளர் ஆங்கண் ஒருவனை தொடர்ந்து பற்றி
போழ் பட பிளந்து வாளின் புரட்டி இட்டு அரிய கண்டே
ஆழ் கல மாந்தர் போல அணி நகர் அழுங்கிற்று அன்றே
#1164
காய் சின வெகுளி வேந்தே களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிதும் மொய்த்து மழையினோடு இருளும் காற்றும்
பேசின் தான் பெரிதும் தோன்ற பிழைத்து உய்ய போதல் அஞ்சி
வாசம் கொள் தாரினானை மார்பு போழ்ந்து உருட்டி இட்டேம்
#1165
அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம்
திரு மலி ஈகை போகம் திண் புகழ் நண்பு சுற்றம்
ஒருவர் இ உலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்
பெரிது அரிது இவனை கொன்றாய் பெறுக என சிறப்பு செய்தான்
@5 பதுமையார் இலம்பகம்
#1166
வீட்டரும் சிறையில் தேவன் விடுத்து உய கொள்ளப்பட்ட
கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான்-கொல் என்னில்
கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும்
தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே
#1167
விலங்கி வில் உமியும் பூணான் விழு சிறைப்பட்ட-போழ்தும்
அலங்கல் அம் தாரினான் வந்து அரும் சிறைவிடுத்த-போழ்தும்
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றி பொன் ஆர்ந்து
உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ்வினை என்று விட்டான்
#1168
வானரம் உகள நாக மலர் துதைந்து ஒழுக அஞ்சி
தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் என சென்று மொய்க்கும்
கான் அமர் அருவி குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள்
மேல் நிமிர்ந்து ஏறி ஆங்கு தேவன் வெற்பு ஏறினானே
#1169
திங்களை தெளித்திட்டு அன்ன பால்கடல் திரை செய் தெண்ணீர்
வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை-தன்னால்
மங்கல வகையின் ஆட்டி மணி அணி கலங்கள் சேர்த்தி
பங்கய நெடும் கணாளை பவித்திர குமரன் என்றான்
#1170
பொன் அணி காம்பு செய்த பொழி கதிர் திங்கள் போலும்
பின்னிய முத்த மாலை பிணையல் தாழ் குடையின் நீழல்
கன்னியர் கவரி வீச கன மணி குழை வில் வீச
இன் இசை கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான்
#1171
இரு மலர் குவளை உண்கண் இமைப்பு இலா பயத்தை பெற்ற
அரி மலர் தாரினான் தன் அழகு கண்டு அளிய என்னா
திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப
எரி மணி பூணினானும் இன்னணம் இயம்பினானே
#1172
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து
அணி தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
கணிப்பு அரும் குண தொகை காளை என்றனன்
மணி கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான்
#1173
கடல் சுறவு உயரிய காளை அன்னவன்
அடற்கு அரும் பகை கெடுத்து அகன்ற நீள் நிலம்
மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம்
கொடுக்குவம் என தெய்வ மகளிர் கூறினார்
#1174
செரு நிலத்து அவன் உயிர் செகுத்து மற்று எனக்கு
இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ
திருநில கிழமையும் தேவர் தேயமும்
தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர்
#1175
மண் மிசை கிடந்தன மலையும் கானமும்
நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும்
கண் மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு
எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய்
#1176
ஆற்றினது அமைதி அங்கு அறிய கூறினான்
ஊற்று நீர் கூவலுள் உறையும் மீன் அனார்
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார்
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு
#1177
இ மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் இருண்டு தோன்றும்
அ மலை அரண பாதம் என்ப அதன் தாள் வாய் தோன்றும்
தம் வினை கழுவுகின்றார் சாரணர் தரணி காவல்
வெம்மையின் அகன்று போந்து விழைவு அற துறந்து விட்டார்
#1178
சிந்தையில் பருதி அன்னார் சேவடி இறைஞ்சலோடும்
வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர்கொண்டு பேணி
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய்
#1179
அங்கு நின்று அகன்ற பின் ஐ ஐம் காவதம்
வெம் களி விடும் மத வேழ பேரினம்
தங்கிய காடு அது தனி செல்வார் இலை
கங்கையின் கரையது கடலின் தோன்றுமே
#1180
புனல் எரி தவழ்ந்து என பூத்த தாமரை
வனம் அது வாள் என வாளை பாய்வன
மனம் மகிழ் பெரும் தடம் வலத்து இட்டு ஏகுதி
இன மலர் தாரினாய் இரண்டு காதமே
#1181
காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து
ஏந்தல் நின் தோள் என இரண்டு குன்று போய்
பூம் துகில் மகளிரில் பொலிந்து போர்த்தது ஓர்
பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே
#1182
இள வெயில் மணி வரை எறித்திட்டு அன்னது ஓர்
அளவு அரு குங்குமத்து அகன்ற மார்பினாய்
களவினின் அணி நலம் கவர்ந்த கள்வ என்று
உளர் மணி கொம்பனார் உருகி நைபவே
#1183
பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என
முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தர
தழும் பதம் இது என சார்ந்து புல்லலும்
பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே
#1184
கண்ட பேய் நகரின் நீங்கி காவதம் கடந்து தோன்றும்
வெண் தலை புணரி வீசி கிடந்த பொன் தீவிற்று ஆகி
கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி
நுண் துகில் நுழைந்த அல்குல் பவளம் ஒத்து இனியது ஒன்றே
#1185
படு மழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும்
தட மலர் குவளை பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு
இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால்
கட நெறி கடத்தற்கு இன்னா கல் அதர் அத்தம் உண்டே
#1186
நுதி கொண்டன வெம் பரல் நுண் இலை வேல்
பதி கொண்டு பரந்தன போன்று உளவால்
விதி கண்டவர் அல்லது மீது செலார்
வதி கொண்டது ஓர் வெவ் அழல் வாய் சொலின் வேம்
#1187
குழவி பிடி குஞ்சரம் மாழ்கும் என
தழுவி சுடு வெவ் அழல் தாங்குவன
கெழுவி பெடையை கிளர் சேவல் தழீஇ
தொழுதி சிறகில் துயர் ஆற்றுவன
#1188
கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து
இலையின் நிழல் அவ்வயின் இன்மையான்
நிலையின் நிழல் தான் அது நின்று கொடுத்து
உலையும் வெயில் நின்று உருகும் உரவோய்
#1189
கட நாகம் மதம் கலந்து உக்க நிலத்து
உடை நாண் என மின் என ஒண் மணி அம்
பட நாகம் அழன்று பதைத்து வரும்
மடனாம் அயலார் மனம் வைப்பதுவே
#1190
நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகி
பொறியில் தளர்வார் புரிவார் சடையார்
அறி மற்றவர் தாபதர் அவ்வழியார்
கறை முற்றிய காமரு வேலவனே
#1191
குலை வாழை பழுத்த கொழும் பழனும்
நிலை மாத்தன தேம் உறும் தீம் கனியும்
பலவு ஈன்றன முள் உடை அள் அமிர்தும்
மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே
#1192
வளர் பைம்பொனும் வாள் ஒளி நீள் மணியும்
ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும்
தளர்வு ஒன்று இலர் தாபதர் தாம் விழையும்
குளிர் கொண்டது ஓர் சித்திர கூடம் அதே
#1193
முழவின் இசை மூரி முழங்கு அருவி
கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து
இழியும் வயிரத்தொடு இனம் மணி கொண்டு
அழியும் புனல் அஞ்சனமாநதியே
#1194
இது பள்ளி இடம் பனி மால் வரைதான்
அது தெள் அறல் யாறு உவை தே மர மா
கதி தள்ளி இராது கடைப்பிடி நீ
மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே
#1195
வருந்தும் நீர்மை அ மாதவர் பள்ளியுள்
குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை
பொருந்து கேள்வரை புல்லிய பொன் அனார்
மருங்கு போன்று அணி மா கவின் கொண்டதே
#1196
குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய்
வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின்
அரவ வண்டொடு தேன் இனம் யாழ் செயும்
பரவை மா நிலம் பன்னிரு காதமே
#1197
ஆங்கு அ எல்லை இகந்து அடு தேறலும்
பூம் கள் பொன் குடமும் நிறைத்து ஈண்டிய
ஏங்கு கம்பலத்து இன் இசை சூழ் வயல்
தாங்கு சீர் தக்க நாட்டு அணி காண்டியே
#1198
பாளை வாய் கமுகின் நெற்றி படு பழம் உதிர விண்டு
நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி
வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப
காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே
#1199
அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழி
பொங்கு பூம் சண்பக போது போர்த்து உராய்
அங்கு அ நாட்டு அரிவையர் கூந்தல் நாறி தேன்
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே
#1200
மின் உடை மணி பல வரன்றி மேதகு
தன் உடை நலம் பகிர்ந்து உலகம் ஊட்டலின்
பொன் உடை கலை அல்குல் கணிகை பூம் புனல்
மன் உடை வேலினாய் வல்லை நீந்தினால்
#1201
யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
மான மா கவரி வெண் மயிரின் வேய்ந்தன
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே
#1202
கடும் துடி குரலொடு கடையும் கள் குரல்
நெடும் கை மான் குரல் மணி அருவி நீள் குரல்
அடும் புலி குரலொடு மயங்கி அஞ்சிய
இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே
#1203
பொன் அணி திகிரி அம் செல்வன் பொற்பு உடை
கன்னிய மகளிரின் காண்டற்கு அரியன
நல் மணி புரித்தன வாவி நான்கு உள
கல் நவில் தோளினாய் காட்டு-வாயவே
#1204
அரும் கல சே இதழ் ஆர்ந்த வாவி ஒன்று
இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று
ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று
அரும்பு அவிழ் குவளை நீர் வாவி ஆகுமே
#1205
கை அடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர்
ஐ என தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து
உய் வகை அரிது என உடலம் கொள்பவே
#1206
அண்ணல் மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து அவண்
மண்ணின் மேல் மாந்தர்கள் மொய்க்கும் வாவியை
எண்ணம் ஒன்று இன்றியே இடத்து இட்டு ஏகினால்
துண்ணென சிலையவர் தொழுது காண்பவே
#1207
பாடல் வண்டு யாழ் செயும் பசும்பொன் கிண்கிணி
தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை
ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல் போல்
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐம் காதமே
#1208
கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகை
போது வேய்ந்து இன மலர் பொழிந்து கற்பு உடை
மாதரார் மனம் என கிடந்த செந்நெறி
தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே
#1209
மணி இயல் பாலிகை அனைய மா சுனை
அணி மணி நீள் மலர் அணிந்தது ஆயிடை
இணை மலர் படலிகை போலும் ஈர்ம் பொழில்
கணை உமிழ் சிலையினாய் கண்டு சேறியே
#1210
இலை பொலி பூண் முலை எரி பொன் மேகலை
குலத்தலை மகளிர்-தம் கற்பின் திண்ணிய
அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ்
வலத்தது வனகிரி மதியின் தோன்றுமே
#1211
கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடி
பெரியவன் திருமொழி பிறழ்தல் இன்றியே
மரியவர் உறைதலின் மதன கீதமே
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே
#1212
ஏற்றரு மணி வரை இறந்து போன பின்
மாற்றரு மண நெறி மகளிர் நெஞ்சமே
போல் பல கவர்களும் பட்டது ஆயிடை
ஆற்றல் சால் செந்நெறி அறிய கூறுவாம்
#1213
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை
மருங்கில் ஓர் மணி சிலா வட்டம் உண்டு அவண்
விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின்
மருங்கில் ஓர் செந்நெறி வகுக்க பட்டதே
#1214
கை மலர்ந்து அனைய காந்தள் கடி மலர் நாறு கானம்
மொய் மலர் குவளை கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வை மலர்த்து இலங்கும் வெள் வேல் மத்திம தேயம் ஆளும்
கொய் மலர் தாரினானை கண்ணுறு குணம் அது என்றான்
#1215
மண்ணகம் காவல் மன்னன் மாதரம் பாவை மாசு இல்
ஒண் நுதல் மகளை தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள்
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற
அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான்
#1216
நெட்டு-இடை நெறிகளும் நிகர் இல் கானமும்
முட்டு உடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும்
நட்பு உடை இடங்களும் நாடும் பொய்கையும்
உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான்
#1217
செல்கதி மந்திரம் செவியில் செப்பிய
மல்லல் அம் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க என
சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே
#1218
கடும் தொடை கவர் கணை காமன் காமுற
படும் குரல் தரும் இது பாம்பும் அல்லவும்
கடும் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய
உடம்பு இது தரும் என உணர கூறினான்
#1219
கந்து அடு களிறு கொல்லும் கருவரை உழுவை அன்னான்
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைம் தார்
இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கி
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான்
#1220
மனை பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில்
நினைத்தலும் தோழன் நக்கு நிழல் உமிழ்ந்து இலங்கு செம்பொன்
பனை திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான்
#1221
ஆறு இரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து மற்று உன்
வீறு உயர் முடியும் சூடி விழு நில கிழமை பூண்டு
சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று
கூறினன் கதிர்கள் பொங்கும் குளிர் மணி முடியினானே
#1222
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறுவேறு உரைப்ப கேட்டே
சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான்
கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான்
#1223
சேட்டு இளம் செம் கயல் காப்ப செய்து வில்
பூட்டி மேல் வைத்து அன புருவ பூமகள்
தீட்டரும் திரு நுதல் திலகமே என
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே
#1224
அழல் பொதிந்த நீள் எஃகின் அலர் தார் மார்பற்கு இ மலை மேல்
கழல் பொதிந்த சேவடியால் கடக்கல் ஆகாது என எண்ணி
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கி கொண்டு ஏந்தி
நிழல் பொதிந்த நீள் முடியான் நினைப்பில் போகி நிலத்து இழிந்தான்
#1225
வண் தளிர் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை
மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என புல்லி
கொண்டு எழுந்தான் வானவனும் குருசில் தானே செலவு அயர்ந்தான்
#1226
வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும்
தாள் ஒழிய போர் ஏறு தனியே போந்தது என எண்ணி
நீள் அருவி கண்ணீர் வீழ்த்து அலறி வண்ணம் கரிந்து உருகி
கோள் உழுவை அன்னாற்கு குன்றமும் நின்று அழுதனவே
#1227
மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லா சிறியார் போல்
நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை
தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே
தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றி துளங்கினவே
#1228
கொல்லை அகடு அணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனி நும்மை
பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தி
தொல்லை நிறம் கருகி தும்பி பாய்ந்து துகைத்தனவே
#1229
தோடு ஏந்து பூம்_கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல்
பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல்
கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட கூடா பிடி நிற்கும்
காடு ஏந்து பூம் சாரல் கடந்தான் காலின் கழலானே
#1230
காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான்
ஆழ் அளை உடும்பு பற்றி பறித்து மார்பு ஒடுங்கி உள்ளான்
வாழ் மயிர் கரடி ஒப்பான் வாய்க்கு இலை அறிதல் இல்லான்
மேழக குரலினான் ஓர் வேட்டுவன் தலைப்பட்டானே
#1231
கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழும் தடி நறவொடு ஏந்தி
பிடி முதிர் முலையினாள் தன் தழை துகில் பெண்ணினோடும்
தொடு மரை தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற
வடி நுனை வேலினான் கண்டு எ மலை உறைவது என்றான்
#1232
மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா
மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்கு தென்மேல்
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான்
#1233
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி
மோழலம் பன்றியோடு முளவுமா காதி அட்ட
போழ் நிண புழுக்கல் தேன் நெய் பொழிந்து உக பெய்து மாந்தி
தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான்
#1234
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழி-மின் என்ன
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால்
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான்
#1235
ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ
ஊன் தினாது உடம்பு வாட்டி தேவராய் உறைதல் நன்றோ
ஊன்றி இ இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்
#1236
உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர் கதி சேறி ஏடா
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உண காட்டுள் இன்றே
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய்
இறுதி கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்
#1237
என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
குன்று உறை குறவன் போக கூர் எரி வளைக்கப்பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டு இன பரிவு தீர்த்தான்
#1238
இலங்கு ஒளி மரகதம் இடறி இன் மணி
கலந்து பொன் அசும்பு கான்று ஒழுகி மான் இனம்
சிலம்பு பாய் வருடையொடு உகளும் சென்னி நீள்
விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான்
#1239
அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ்
வெந்து எரி பசும்பொனின் விழையும் வெல் ஒளி
மந்திர வாய்மொழி மறு இல் மாதவர்
இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான்
#1240
முனிவரும் முயன்று வான் கண் மூப்பு இகந்து இரிய இன்ப
கனி கவர் கணனும் ஏத்த காதி கண் அரிந்த காசு இல்
தனி முதிர் கடவுள் கோயில் தான் வலம் கொண்டு செல்வான்
குனி திரை முளைத்த வெய்யோன் குன்று சூழ்வதனை ஒத்தான்
#1241
தண் கயம் குற்ற போதும் தாழ் சினை இளிந்த வீயும்
வண் கொடி கொய்த பூவும் வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தி
திண் புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி
பண்பு கொள் குணம் கொள் கீதம் பாணியில் பாடுகின்றான்
#1242
ஆதி வேதம் பயந்தோய் நீ அலர் பெய்ம் மாரி அமைந்தோய் நீ
நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகர் இல் காட்சிக்கு இறையோய் நீ
நாதன் என்ன படுவோய் நீ நவை செய் பிறவி கடலகத்து உன்
பாத கமலம் தொழுவேங்கள் பசை யாப்பு அவிழ பணியாயே
#1243
இன்னா பிறவி இகந்தோய் நீ இணை இல் இன்பம் உடையோய் நீ
மன்னா உலகம் மறுத்தோய் நீ வரம்பு இல் காட்சிக்கு இறையோய் நீ
பொன்னார் இஞ்சி புகழ் வேந்தே பொறியின் வேட்கை கடல் அழுந்தி
ஒன்னா வினையின் உழல்வேங்கள் உயப்போம் வண்ணம் உரையாயே
#1244
உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ
திலகம் ஆய திறலோய் நீ தேவர் ஏத்தப்படுவோய் நீ
அலகை இல்லா குண கடலே யாரும் அறியப்படாய் ஆதி
கொலை இல் ஆழி வலன் உயர்த்த குளிர் முக்குடையின் நிழலோய் நீ
#1245
அடி உலகம் ஏத்தி அலர் மாரி தூவ
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று
கடி மதிலும் கட்டு அழித்த காவலன் நீ அன்றே
#1246
முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின்
தரணி மேல் தந்து அளித்த தத்துவன்-தான் யாரே
தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி
அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீ அன்றே
#1247
தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து
வாரா கதி உரைத்த வாமன்-தான் யாரே
வாரா கதி உரைத்த வாமன் மலர் ததைந்த
கார் ஆர் பூம் பிண்டி கடவுள் நீ அன்றே
#1248
அ மலை சினகரம் வணங்கி பண்ணவர்
பொன் மலர் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம் மலை தெய்வதம் விருந்து செய்த பின்
செம்மல் போய் பல்லவ தேயம் நண்ணினான்
#1249
அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடை
கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர்
வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர்
இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான்
#1250
அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரை
பன் மலர் கிடங்கு சூழ் பசும்பொன் பாம்புரி
கன்னி மூதெயில் கடல் உடுத்த காரிகை
பொன் அணிந்து இருந்து என பொலிந்து தோன்றுமே
#1251
அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின்
முகில் தலை விலங்கிய மொய் கொள் நீள் கொடி
பகல் தலை விலங்கு சந்திராபம் பான்மையின்
இகல் தலை விலங்கு வேல் காளை எய்தினான்
#1252
மலர் அணி மணி குடம் மண்ணும் நீரொடு
பலர் நலம் பழிச்சுபு பரவ ஏகினான்
அலர் கதிர் கரும்பிளை மடுப்ப ஆய் நகர்
உலகு அளந்தவன் என உள்புக்கான்-அரோ
#1253
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை
வந்து வீழ் மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து
இந்திர குமரன் போல இறைமகன் இருந்து காண
அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார்
#1254
குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும்
அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி
நிழல் அவிர் அல்குல் காசு சிலம்பொடு சிலம்ப நீள் தோள்
அழகி கூத்து ஆடுகின்றாள் அரங்கின் மேல் அரம்பை அன்னாள்
#1255
தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில தண் பூம்
கண்ணொடு புருவம் கை கால் கலை அல்குல் நுசுப்பு காமர்
ஒள்_நுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே
#1256
பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும்
கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா
ஈடு அமை பசும்பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்
#1257
வாள் நுதல் பட்டம் மின்ன வார் குழை திருவில் வீச
பூண் முலை பிறழ பொன் தோடு இட-வயின் நுடங்க ஒல்கி
மாண் இழை வளை கை தம்மால் வட்டணை போக்குகின்றாள்
காண் வரு குவளை கண்ணால் காளை மேல் நோக்கினாளே
#1258
நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு
வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினை பருக இப்பால்
ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு அனாள் நெடும் கண் பில்கி
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே
#1259
செரு கயல் நெடும் கணாள் அ திருமகன் காண்டல் அஞ்சி
நெருக்கி தன் முலையின் மின்னும் நிழல் மணி வடத்தை மாதர்
பொருக்கு நூல் பரிந்து சிந்தா பூ எலாம் கரிந்து வாட
தரிக்கிலாள் காம செம் தீ தலை கொள சாம்பினாளே
#1260
கன்னிமை கனிந்து முற்றி காமுற கமழும் காமத்து
இன் நறும் கனியை துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை
பொன்னினால் உடையும் கற்பு என்று உரைத்தவர் பொய்யை சொன்னார்
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள்
#1261
கரும் சிறை பறவை ஊர்தி காமரு காளை-தான்-கொல்
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல்
அரும் பெறல் குமரன் என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள்
திருந்து இழை அணங்கு மென் தோள் தேசிக பாவை அன்னாள்
#1262
போது என கிடந்த வாள் கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி
மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையை தானும் கண்டான்
காதலில் களித்தது உள்ளம் காளையை கொணர்-மின் என்றான்
#1263
கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின்
எய் கணை சிலையினோடு இவன்-கண் இல்லையால்
மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார்
#1264
மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்குகின்ற
அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான்
#1265
போது அவிழ் தெரியலானும் பூம் கழல் காலினானும்
காதலின் ஒருவர் ஆகி கலந்து உடன் இருந்த-போழ்தின்
ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கி
போது கண்டு அனைய வாள் கண் புருவத்தால் கலக்குகின்றாள்
#1266
தேன் உகுக்குகின்ற கண்ணி திருமகள் ஆட இப்பால்
ஊன் உகுக்குகின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி
வான் உகுக்குகின்ற மீன் போல் மணி பரந்து இமைக்கும் மார்பில்
கான் உகுக்குகின்ற பைம் தார் காவலன் தொழுது சொன்னான்
#1267
கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல்
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ
கை தரு மணியின் தெள் நீர் மது கலந்து ஊட்டி மாலை
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே
#1268
பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி
தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள்
புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை
அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ
#1269
வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ்
அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி
கம்பலம் போர்த்த போலும் கடி மலர் காவு புக்காள்
#1270
நற விரி சோலை ஆடி நாள்மலர் குரவம் பாவை
நிறைய பூத்து அணிந்து வண்டும் தேன்களும் நிழன்று பாட
இறைவளை தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து
பெறல் அரும் பாவை கொள்வாள் பெரிய தோள் நீட்டினாளே
#1271
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக
கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர்
செம் கயல் கண்ணி தோழி திருமகள் சென்று சேர்ந்தாள்
#1272
அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளை தொழுது நங்கை
அடிகளை புல்லி ஆர தழுவிக்கொண்டு ஒளவைமாரை
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு
மிடை மின்னின் நிலத்தை சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான்
#1273
பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என குருசில் ஏகி
கதுமென சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த
மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான்
#1274
வள்ளல் தான் வல்ல எல்லாம் மாட்டினன் மற்றும் ஆங்கண்
உள்ளவர் ஒன்றலாத செயச்செய ஊறு கேளாது
அள் இலை பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன
வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே
#1275
பைம் கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம்
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும்
வங்க மா நிதியம் நல்கி மகள் தரும் மணி செய் மான் தேர்
எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே
#1276
மண்டலி மற்றிது என்பார் இராசமாநாகம் என்பார்
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில்
பிண்டித்து பெருகிற்று என்பார் பெரு நவை அறுக்கும் விஞ்சை
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார்
#1277
சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார்
குரை புனல் இடுதும் என்பார் கொந்து அழல் உறுத்தும் என்பார்
இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார்
உரையன்-மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார்
#1278
கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார்
உய் வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார்
மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார்
#1279
வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார்
மந்திரம் மறையும் வல்லார் எழாயிரர் மறு இல் வாய்மை
அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அம் கை கொட்டி
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார்
#1280
பாம்பு எழ பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல்
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று
காம்பு அழி பிச்சம் ஆக கணி எடுத்து உரைப்ப கல்லென்
தூம்பு அழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது அன்றே
#1281
நங்கைக்கு இன்று இறத்தல் இல்லை நரபதி நீயும் கோண்மோ
கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ் முகட்டின் அங்கண்
தங்கு தேன் அரவ யாழின் தான் இருந்து ஆந்தை பாடும்
இங்கு நம் இடரை தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான்
#1282
பன் மணி கடகம் சிந்த பருப்பு உடை பவள தூண் மேல்
மன்னவன் சிறுவன் வண் கை புடைத்து மாழாந்து சொன்னான்
இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி
தன்னை கூய் கொணர்-மின் என்றான் தர வந்து ஆங்கு அவனும் கண்டான்
#1283
பறவை மா நாகம் வீழ்ந்து பல உடன் பதைப்ப போன்றும்
சிறகுற பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றும்
கறவை கன்று இழந்த போன்றும் கிடந்து அழுகின்ற கண்ணார்
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான்
#1284
ஊறு கொள் சிங்கம் போல உயக்கமோடு இருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழு நிதி நிலத்து மற்று உன்
வீறு உயர் புகழை வித்தி கேண்மையை விளைத்தி இன்னே
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான்
#1285
புற்று-இடை வெகுளி நாகம் போக்கு அற கொண்டதேனும்
மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்ததேனும்
பொன்_தொடிக்கு இறத்தல் இல்லை புலம்பு கொண்டு அழேற்க என்றான்
கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான்
#1286
பொழிந்து நஞ்சு உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம்
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும்
பிழிந்து உயிர் உண்ணும் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர்
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான்
#1287
அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
நந்தியாவட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
தந்தியாம் உரைப்பின் தாழை தட மலர் வணிகன் நாறும்
பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான்
#1288
கன்னியை கடித்த நாகம் கன்னியே கன்னி நோக்கம்
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த
கொன்னும் மா நாகம் கொண்டால் கொப்புள் ஆம் விரலின் தேய்த்தால்
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான்
#1289
குன்று இரண்டு அனைய தோளான் கொழு மலர் குவளை போது அங்கு
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கு-இடை மயில் அனாள் தன்
சென்று இருண்டு அமைந்த கோல சிகழிகை அழுத்தி செல்வன்
நின்று இரண்டு உருவம் ஓதி நேர் முகம் நோக்கினானே
#1290
நெடும்தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோல
கடும் கதிர் கனலி கோப்ப கார் இருள் உடைந்ததே போல்
உடம்பு-இடை நஞ்சு நீங்கிற்று ஒண்_தொடி உருவம் ஆர்ந்து
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே
#1291
நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில்
போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன் நிற பசலை மூழ்கிற்று
ஆக்கினாள் அநங்கன் அப்பு தூணியை அமருள் ஆனாது
ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள்
#1292
ஆட்சி ஐம்பொறியாளன் உடம்பு எனும்
பூட்சி நீள் கொடி புற்றின் அகத்து உறை
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல்
வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள்
#1293
மாழ்கி வெய்து உயிர்த்தாள் மடவாள் என
தோழிமார்களும் தாயரும் தொக்கு உடன்
சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும்
வாழி என்றனர் வம்பு அலர் கோதையர்
#1294
கண்ணின் காணினும் கட்டுரை கேட்பினும்
நண்ணி தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று
எண்ணி ஏந்து_இழை தன்னை உடம்பு எலாம்
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான்
#1295
மற்ற மாதர் தன் வாள் தடம் கண்களால்
உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில்
சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள்
அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள்
#1296
விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார்
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார்
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையை கொடுக்கும் என்பார்
#1297
விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின் போல்
வளம் கெழு வடத்தை சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்ப சேந்த
இளம் கதிர் முலைகள் தம்மால் இவனை மார்பு எழுதி வைகின்
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார்
#1298
அரும் தவம் செய்து வந்த ஆய் இழை மகளிர் யார்-கொல்
பெருந்தகை மார்பில் துஞ்சி பெண்மையால் பிணிக்கும் நீரார்
கரும் கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லி
திருந்து ஒளி முறுவல் செ வாய் தீம் சொலார் மயங்கினாரே
#1299
பல் மலர் படலை கண்ணி குமரனை பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி வாச நெய் பூசி நல் நீர்
துன்னினர் ஆட்டி செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும்
இன் நறும் புகையும் பூவும் கலத்தொடும் ஏந்தினாரே
#1300
ஏந்திய ஏற்ப தாங்கி எரி மணி கொட்டை நெற்றி
வாய்ந்த பொன் குயிற்றி செய்த மரவடி ஊர்ந்து போகி
ஆய்ந்த நல் மாலை வேய்ந்த அரும் பெறல் கூடம் சேர்ந்தான்
பூம் தொடி மகளிர் போற்றி பொன் கலம் பரப்பினாரே
#1301
கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்ப
பொன் அடி கழீஇய பின்றை புரிந்து வாய் நன்கு பூசி
இன் மலர் தவிசின் உச்சி இருந்து அமிர்து இனிதின் கொண்டான்
மின் விரிந்து இலங்கு பைம் பூண் வேல் கணார் வேனிலானே
#1302
வாச நல் பொடியும் நீரும் காட்டிட கொண்டு வாய்ப்ப
பூசறுத்து அம் கை நீரை மும்முறை குடித்து முக்கால்
காசு அற துடைத்த பின்றை கை விரல் உறுப்பு தீட்டி
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான்
#1303
சீர் கொள செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல
வார் கழல் குருசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண்
போர் கொள்வேல் மன்னன் எல்லா கலைகளும் புகன்று கேட்டு
நீர் கொள் மா கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான்
#1304
பரிதி பட்டது பன் மணி நீள் விளக்கு
எரிய விட்டனர் இன்னியம் ஆர்த்தன
அரிய பொங்கு அணை அம் என் அமளி மேல்
குரிசில் ஏறினன் கூர்ந்தது சிந்தையே
#1305
பூம் கண் அவ்வயின் நோக்கம் பொறாத போல்
வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின வெம் முலை
ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது
பாங்கு இலாரின் பரந்து உள அல்குலே
#1306
முருகு வார் குழலாள் முகிழ் மெல் முலை
பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று
உருகும் நுண் இடை ஓவிய பாவை-தன்
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே
#1307
புகை அவாவிய பூம் துகில் ஏந்து அல்குல்
வகைய ஆம் மணி மேகலை வார் மது
முகை அவாவிய மொய் குழல் பாவியேன்
பகைய வாய் படர் நோய் பயக்கின்றவே
#1308
போது உலாம் சிலையோ பொரு வேல் கணோ
மாது உலாம் மொழியோ மட நோக்கமோ
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள்
காதலால் கடைகின்றது காமமே
#1309
அண்ணல் அவ்வழி ஆழ் துயர் நோய் உற
வண்ண மா மலர் கோதையும் அவ்வழி
வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து
உள் நையா உருகா உளள் ஆயினாள்
#1310
பெயல் மழை பிறழும் கொடி மின் இடை
கயல் மணி கணின் நல்லவர் கை தொழ
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி
மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள்
#1311
வணங்கு நோன் சிலை வார் கணை காமனோ
மணம் கொள் பூ மிசை மை வரை மைந்தனோ
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை
அணங்குகாள் அறியேன் உரையீர்களே
#1312
கடை கந்து அன்ன தன் காமரு வீங்கு தோள்
அடைய புல்லினன் போன்று அணி வெம் முலை
உடைய ஆகத்து உறு துயர் மீட்டவன்
இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே
#1313
இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி அன்று
அறிவின் நாடிய அம் மலை மத்தமா
நெறியின் நின்று கடைந்திடப்பட்ட நீர்
மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே
#1314
நகை வெண் திங்களும் நார் மடல் அன்றிலும்
தகை வெள் ஏற்று அணல் தாழ் மணி ஓசையும்
பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும்
புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே
#1315
பூ மென் சேக்கையுள் நாற்றிய பூம் திரள்
தாமம் வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇ
காமர் பேதை தன் கண்தரு காமநோய்
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே
#1316
மாது யாழ் மழலை மொழி மாதராள்
தாதி அவ்வையும் தன் அமர் தோழியும்
போது வேய் குழல் பொன் அவிர் சாயலுக்கு
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார்
#1317
அழுது நுண் இடை நைய அலர் முலை
முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின்
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார்
எழுது கொம்பு அனையார் இளையாளையே
#1318
வேந்து காயினும் வெள் வளை ஆயமோடு
ஏந்து பூம் பொழில் எய்தி அங்கு ஆடுதல்
ஆய்ந்தது என்று கொண்டு அம் மயில் போல் குழீஇ
போந்தது ஆயம் பொழிலும் பொலிந்ததே
#1319
அலங்கல் தான் தொடுப்பார் அலர் பூ கொய்வார்
சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை
கலங்க பாய்ந்து உடன் ஆடுநர் காதலின்
இலங்கு பாவை இரு மணம் சேர்த்துவார்
#1320
தூசு உலாம் நெடும் தோகையின் நல்லவர்
ஊசல் ஆடுநர் ஒண் கழங்கு ஆடுநர்
பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர்
ஆகி எத்திசையும் அமர்ந்தார்களே
#1321
முருகு விம்மிய மொய் குழல் ஏழை-தன்
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட
அரிவை ஆடிய காவகம் காணிய
எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே
#1322
மயிலின் ஆடலும் மந்தியின் ஊடலும்
குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண்
வெயிலின் நீங்கிய வெண் மணல் தண் நிழல்
பயிலும் மாதவி பந்தர் ஒன்று எய்தினான்
#1323
காது சேர்ந்த கடி பிணை கையது
தாது மல்கிய தண் கழுநீர் மலர்
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண்
கோதை வெம் முலை மேல் கொண்ட கோலமே
#1324
விண் புதைப்பன வெண் மலர் வேய்ந்து உளால்
கண் புதைப்பன கார் இரும் பூம் பொழில்
சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி
நண்பனை நினையா நறு மேனியே
#1325
கறந்த பாலினுள் காசு இல் திரு மணி
நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள்
மறைந்த மாதவி மாமை நிழற்றலின்
சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான்
#1326
வரையின் மங்கை-கொல் வாங்கு இரும் தூங்கு நீர்
திரையின் செல்வி-கொல் தே மலர் பாவை-கொல்
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ
விரை செய் கோலத்து வெள் வளை தோளியே
#1327
மாலை வாடின வாள் கண் இமைத்தன
காலும் பூமியை தோய்ந்தன காரிகை
பாலின் தீம் சொல் பதுமை இ நின்றவள்
சோலை வேய் மருள் சூழ் வளை தோளியே
#1328
தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
மேவர் தென் தமிழ் மெய் பொருள் ஆதலின்
கோவத்து அன்ன மென் சீறடி கொம்பு அனாள்
பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான்
#1329
அல்லி சேர் அணங்கு அன்னவட்கு ஆயிடை
புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது
கல் செய் தோளவன் காமரு பேர் உணர்வு
எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே
#1330
களித்த கண் இணை காம்பு என வீங்கு தோள்
தெளிர்த்த வெள் வளை சேர்ந்தது மாமையும்
தளித்த சுண்ணம் சிதைந்தன குங்குமம்
அளித்த பூம் பட்டு அணிந்து திகழ்ந்ததே
#1331
குவளை ஏய்ந்த கொடும் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர் தண் கொடி முல்லையே
#1332
பொன் துஞ்சு ஆகத்து பூம் கண்கள் போழ்ந்த புண்
இன்று இ பூண் கொள் இள முலை சாந்து அலால்
அன்றி தீர்ப்பன யாவையும் இல்லையே
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்
#1333
கண்ணி வேய்ந்து கரும் குழல் கைசெய்து
வண்ண மாலை நடு சிகையுள் வளைஇ
செண்ண அம் சிலம்பு ஏறு துகள் அவித்து
அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் ஆற்றினாள்
#1334
திங்களும் மறுவும் என சேர்ந்தது
நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ
இங்கு ஒளித்திடுவேன் நுமர் எய்தினார்
கொங்கு ஒளிக்கும் குழலாய் என கூறினான்
#1335
மழை-இடை குளித்திட்டது ஓர் வாள் மினின்
தழை-இடை குளித்தான் தகை வேலினான்
இழை-இடை குளித்து ஏந்திய வெம் முலை
வழை-இடை குளித்தார் வந்து தோன்றினார்
#1336
மின் ஒர் பூம் பொழில் மேதக செல்வது ஒத்து
அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி
மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள்
நல் நலம் அவற்கே வைத்த நங்கையே
#1337
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி
நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார்
அங்கு அ ஆயம் அடிப்பணி செய்த பின்
தங்கள் காதலினால் தகை பாடினார்
#1338
தழையும் கண்ணியும் தண் நறு மாலையும்
விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார்
முழையுள் மூரி முழங்கு அரி ஏறு அனான்
பழைய நண்பனை பண்புளி எய்தினான்
#1339
பூமியை ஆடற்கு ஒத்த பொறியினன் ஆதலானும்
மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும்
நேமியான் சிறுவன் அன்ன நெடும்தகை நேரும் ஆயின்
நாம் அவற்கு அழகிதாக நங்கையை கொடுத்தும் என்றான்
#1340
மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி சொல்ல கேட்டே
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும்
விதி தர வந்தது ஒன்றே விளங்கு பூண் முலையினாளை
கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான்
#1341
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான்
தெள்ளிதின் தெரிய சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி
வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான்
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான்
#1342
பொன்றிய உயிரை மீட்டான் பூஞ்சிகை போது வேய்ந்தான்
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான்
ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா
வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே
#1343
கோப்பெருந்தேவி கொற்ற கோமகன் இவைகள் நாடி
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன
தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும்
பூ புரிந்து அணிந்து கோயில் புதுவது புனைந்தது அன்றே
#1344
கணி புனைந்து உரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள்
மணி புனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
அணி உடை கமலம் அன்ன அம் கை சேர் முன்கை-தன் மேல்
துணிவு உடை காப்பு கட்டி சுற்றுபு தொழுது காத்தார்
#1345
மழ களிற்று எருத்தில் தந்த மணி குடம் மண்ணும் நீரால்
அழகனை மண்ணு பெய்து ஆங்கு அரும் கடிக்கு ஒத்த கோலம்
தொழுதக தோன்ற செய்தார் தூ மணி பாவை அன்னார்
விழு மணி கொடி அனாளும் விண்ணவர் மடந்தை ஒத்தாள்
#1346
கயல் கணாளையும் காமன் அன்னானையும்
இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார்
மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய
இயற்கை அன்பு உடையார் இயைந்தார்களே
#1347
வாளும் வேலும் மலைந்து அரி ஆர்ந்த
கண்ணாளும் வார் கயல் மைந்தனும் ஆயிடை
தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ
#1348
தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும்
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன்
மணி கண் வெம் முலை தாம் பொர வாய் அவிழ்ந்து
அணி கந்து அன்னவன் தார் அங்கு உடைந்ததே
#1349
பரிந்த மாலை பறைந்தன குங்குமம்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியின்
அரிந்த மேகலை ஆர்த்தன அம் சிலம்பு
பிரிந்த வண்டு இளையார் விளையாடவே
#1350
கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை
கழுமு சேக்கையுள் காலையும் மாலையும்
தழுவு காதல் தணப்பு இலர் செல்பவே
எழுமையும் இயைந்து எய்திய அன்பினார்
#1351
நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை
கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்
ஊறு இன் வெம் முலையால் உழப்பட்டும் அ
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே
#1352
விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து திங்கள்
தெரி கதிர் திரட்டி வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும்
சொரி கதிர் முத்தம் மின்னும் துணை முலை தடத்தில் வீழ்ந்தான்
புரி கதிர் பொன் செய் மாலை புகை நுதி புலவு வேலான்
#1353
எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகி
குழல் மாலை கொம்பு ஆகி கூர் எயிறு நா போழ்தல் அஞ்சி அஞ்சி
உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும்
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி
#1354
மா நீர் மணி முகிலின் மின்னு கொடி நுசுப்பின் மயில் அம் சாயல்
ஏ நீர் இரு புருவம் ஏறி இடை முரிந்து நுடங்க புல்லி
தூ நீர் மலர் மார்பன் தொல் நலம் தான் பருகி துளும்பும் தேறல்
தேனீர் மலர் மாலை தேன் துளித்து மட்டு உயிர்ப்ப சூட்டினானே
#1355
தேன் அடைந்து இருந்த கண்ணி தெண் மட்டு துவலை மாலை
ஊன் அடைந்து இருந்த வேல் கண் ஒண் தொடி உருவ வீணை
தான் அடைந்து இருந்த காவில் பாடினாள் தனிமை தீர்வான்
கூன் அடைந்திருந்த திங்கள் குளிர் முத்த முலையினாளே
#1356
வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில்
சீர் கெழு குருசில் புக்கான் தேசிகப்பாவை என்னும்
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடை கமழ் தண் கோதை
ஏர் கெழு மயில் அனாளை இடை-வயின் எதிர்ப்பட்டானே
#1357
சிலம்பு எனும் வண்டு பாட மேகலை தேன்கள் ஆர்ப்ப
நலம் கவின் போது பூத்த பூம்_கொடி நடுங்கி நாண
கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்ட
புலம்பு போய் சாயல் என்னும் புது தளிர் ஈன்றது அன்றே
#1358
சாந்து-இடை குளித்த வெம் கண் பணை முலை தாம மாலை
பூம் தொடி அரிவை பொய்கை பூமகள் அனைய பொற்பின்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கள் நாளும்
ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான்
#1359
இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் ஏக வேலான்
அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் முலை போகம் நீக்கி
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள்-இடை ஏகல் உற்றான்
தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கோர் தேராக நின்றான்
#1360
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள்
வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
இயங்கு இடையறுத்த கங்குல் இருள்-இடை ஏகினானே
#1361
நீல் நிற குழல் நேர் வளை தோளியை
தான் உறக்கு-இடை நீத்தலும் தன் பினே
வேல் நிற கண் விழித்தனள் என்பவே
பால் நிற துகில் பை அரவு அல்குலாள்
#1362
ஆக்கை உள் உறை ஆவி கெடுத்து அவண்
யாக்கை நாடி அயர்வது போலவும்
சேக்கை நாடி தன் சேவலை காணிய
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள்-அரோ
#1363
புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என
மல்லல் காளையை வைது மிழற்று வாய்
இல்லின் நீக்கம் உரைத்திலை நீ என
செல்வ பைங்கிளி தன்னையும் சீறினாள்
#1364
ஓவிய கொடி ஒப்பு அரும் தன்மை எம்
பாவை பேதுற பாயலின் நீங்கி நீ
போவதோ பொருள் என்றிலை நீ என
பூவையோடும் புலம்பி மிழற்றினாள்
#1365
தன் ஒப்பாரை இல்லானை தலைச்சென்று எம்
பொன் ஒப்பாளொடும் போக என போகடாய்
துன்னி தந்திலை நீ என தூ சிறை
அன்ன பேடையொடு ஆற்ற கழறினாள்
#1366
மை இல் வாள் நெடும் கண் வளராதன
மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ
ஐயன் சென்றுழி கூறுக என்று ஆய் மயில்
கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள்
#1367
வளர்த்த செம்மையை வாலியை வான் பொருள்
விளக்குவாய் விளக்கே விளக்காய் இவண்
அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர்
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள்
#1368
பருகி பாய் இருள் நிற்பின் அறாது என
கருகி அ இருள் கான்று நின் மெய் எலாம்
எரிய நின்று நடுங்குகின்றாய் எனக்கு
உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள்
#1369
கோடி நுண் துகிலும் குழையும் நினக்கு
ஆடு சாந்தமும் அல்லவும் நல்குவேன்
மாடமே நெடியாய் மழை தோய்ந்து உளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்று-அரோ
#1370
ஆடக கொழும் பொன் வரை மார்பனை
கூட புல்லிவையா குற்றம் உண்டு எனா
நீடு எரி திரள் நீள் மணி தூணொடு
சூடக திரள் தோள் அணி வாட்டினாள்
#1371
கொலை கொள் வேலவன் கூடலன் ஏகினான்
இலை கொள் பூண் நுமக்கு என் செயும் ஈங்கு எனா
மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன்
முலை கொள் பேர் அணி முற்றிழை சிந்தினாள்
#1372
அரும் கலம் கொடி அன்னவன் ஏகினான்
இருந்து இ ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா
மருங்குல் நோவ வளர்ந்த வன முலை
கரும் கண் சேந்து கலங்க அதுக்கினாள்
#1373
மஞ்சு சூழ் வரை மார்பனை காணிய
துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர்
அஞ்சனத்தொடு மை அணி-மின் என
நெஞ்சின் நீள் நெடும் கண் மலர் சீறினாள்
#1374
அரக்கு உண் தாமரை அன்ன தன் கண் மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇ-கொலோ
வருத்தம் உற்றனள் என்று-கொல் மேகலை
குரல் கொடாது குலுங்கி குறைந்ததே
#1375
துனியாயின துன்னுபு செய்து அறியேன்
தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடு-தான்
இனியான் இங்ஙனே உளனே உரையீர்
பனி ஆர் மலர் மேல் படு வண்டு இனமே
#1376
நிரை வீழ் அருவி நிமிர் பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரி வெண் நிலவே
உரையீர் உயிர் காவலன் உள் வழியே
#1377
எரி பொன் உலகின் உறைவீர் இதனை
தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின்
பரிவு ஒன்றிலிரால் படர் நோய் மிகுமால்
அரிதால் உயிர் காப்பு அமரீர் அருளீர்
#1378
புணர்வின் இனிய புலவி பொழுதும்
கணவன் அகலின் உயிர் கை அகறல்
உணர்வீர் அமரர் மகளீர் அருளி
கொணர்வீர் கொடியேன் உயிரை கொணர்வீர்
#1379
நகை மா மணி மாலை நடை கொடி நின்
வகை மா மணி மேகலை ஆயினதேல்
அகையாது எனது ஆவி தழைக்கும் என
தகை பாட வலாய் தளர்கோ தளர்கோ
#1380
புனை தார் பொர நொந்து பொதிர்ந்த என
வினை ஆர் எரி பூண் முலை கண் குளிர
உன கண் மலரால் உழுது ஓம்ப வலாய்
நினையாது நெடும்தகை நீத்தனையே
#1381
அருள் தேர் வழி நின்று அறனே மொழிவாய்
பொருள் தேர் புலன் எய்திய பூம் கழலாய்
இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய்
உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே
#1382
மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ
உகவா உனது உள்ளம் உவர்த்ததுவோ
இகவா இடர் என்-வயின் நீத்திட நீ
தகவா தகவு அல்லது செய்தனையே
#1383
குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால்
தளர் அன்ன நடையவள் தாங்கலளாய்
ஒளிர் பொன் அரி மாலை ஒசிந்து இஙனே
மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே
#1384
தழும் மாவலி மைந்த என தளரா
எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா
விழும் மீ நிலம் எய்தி மிளிர்ந்து உருகா
அழுமால் அவலித்து அ அணங்கு_இழையே
#1385
கரப்பு நீர் கங்கை அம் கள் கடி மலர் கமல பள்ளி
திருத்தகு திரைகள் தாக்க சேப்புழி சேவல் நீங்க
பரல் தலை முரம்பின் சில் நீர் வறும் சுனை பற்று விட்ட
அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள்
#1386
மெழுகினால் புனைந்த பாவை வெய்து உறுத்தாங்கு ஓவாது
அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை தோழி துன்னி
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள்
கழி பெரும் கவலை நீங்க காரண நீர சொன்னாள்
#1387
தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி
அள் உற அளிந்த காமம் அகமுற பிணித்ததேனும்
உள்ளுற வெந்த செம்பொன் உற்ற நீர் புள்ளி அற்றால்
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காதல் என்றாள்
#1388
ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளி மலர் நெடும் கணாரை
கூடு அரி உழுவை போல முயக்கு இடை குழைய புல்லி
ஆடவர் அழுந்தி வீழ்ந்தும் பிரிவு-இடை அழுங்கல் செல்லார்
பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள்
#1389
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும்
வேதனை மரங்கள் நாறி வேட்கை வேர் வீழ்த்து முற்றி
காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு அவலம் பூத்து
மா துயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும்
#1390
தேன் சென்ற நெறியும் தெள் நீர் சிறு திரை போர்வை போர்த்து
மீன் சென்ற நெறியும் போல விழித்து இமைப்பவர்க்கு தோன்றா
மான் சென்ற நோக்கின் மாதே மாய்ந்து போம் மக்கள் யாக்கை
ஊன் சென்று தேய சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள்
#1391
பிரிந்தவற்கு இரங்கி பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா
முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய்
பரிந்து அழுவதற்கு பாவாய் அடியிட்டவாறு கண்டாய்
#1392
அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது நங்கள்
என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது சேர்ந்த
துன்பத்தால் துகைக்கப்பட்டார் துகைத்த அ துன்பம் தாங்கி
இன்பம் என்று இருத்தல் போலும் அரியது இ உலகில் என்றாள்
#1393
மயற்கை இ மக்கள் யோனி பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு
இயற்கையே பிரிவு சாதல் இமைப்பு-இடை படாதது ஒன்றால்
கயல் கணின் அளவும் கொள்ளார் கவற்சி உள் கவற்சி கொண்டார்
செயற்கை அம் பிறவி நச்சு கடல் அகத்து அழுந்துகின்றார்
#1394
இளமையில் மூப்பும் செல்வத்து இடும்பையும் புணர்ச்சி-போழ்தில்
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி
விளை மது கமழும் கோதை வேலினும் வெய்ய கண்ணாய்
களை துயர் அவலம் வேண்டா கண் இமைப்பு அளவும் என்றாள்
#1395
முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய் மலர் தாரினான் நம்
கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் கவல வேண்டா
பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் பொன்னே
நித்தில முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் கண்டாய்
#1396
வடி மலர் காவின் அன்று வண் தளிர் பிண்டி நீழல்
முடி பொருள் பறவை கூற முற்றிழை நின்னை நோக்கி
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன்
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள்
#1397
அலங்கலும் குழலும் தோழி அம் கையின் அடைச்சி அம் பூம்
பொலம் கல கொடி அனாள் தன் கண் பொழி கலுழி ஒற்றி
கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது அன்றே
#1398
கண் கனிந்து இனிய காம செவ்வியுள் காளை நீங்க
தெண் பனி அனைய கண்ணீர் சே_இழை தாயர் எல்லாம்
தண் பனி முருக்கப்பட்ட தாமரை காடு போன்றார்
பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி ஆங்கு
#1399
சில் அரி சிலம்பு சூழ்ந்த சீறடி திருவின் நற்றாய்
முல்லை அம் குழலினாய் நின் முலை முதல் கொழு நன் மேல் நாள்
சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள்
#1400
வினைக்கும் செய்பொருட்கும் வெயில் வெம் சுரம்
நினைத்து நீங்குதல் ஆண் கடன் நீங்கினால்
கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன்
மனை கண் வைகுதல் மாண்பொடு என சொன்னாள்
#1401
விரை செய் தாமரை மேல் விளையாடிய
அரைச அன்னம் அமர்ந்துள-ஆயினும்
நிரை செய் நீல நினைப்பில என்றனன்
வரை செய் கோல மணம் கமழ் மார்பினான்
#1402
பொன் விளைத்த புணர் முலையாள் சொல
இன் அளி குரல் கேட்ட அசுணமா
அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள்-அரோ
மின் வளைத்தன மேகலை அல்குலாள்
#1403
அன்னம் தான் அவன் தாமரை போது நீ
நின்னை நீங்கினன் நீங்கலன் காதலான்
இன்னதால் அவன் கூறிற்று என சொன்னாள்
மன்னன் ஆருயிர் மா பெரும் தேவியே
#1404
சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே
பரிவுறும் நலத்த அன்றே பங்கயம் அன்னதே போல்
வரி வளை தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால்
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள்
#1405
நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது
அம் சிறை கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும்
அம் சிறை கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்றே
மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள்
#1406
பொய்கையுள் கமலத்து அம் கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப
வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கு ஒளி தட கை நீட்டி
மை இருள் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கி பனி வரை நெற்றி சேர்ந்தான்
#1407
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம்
அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு அரசனும் அவலம் எய்தி
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே
இவ்வழி தம்-மின் என்றான் இவுளி தேர் தானையானே
#1408
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக
தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு
முன்னினான் வட திசை முகம் செய்து என்பவே
பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான்
#1409
வீக்கினான் பைம் கழல் நரல வெண் துகில்
ஆக்கினான் இரு துணி அணிந்த பல் கலன்
நீக்கினான் ஒரு மகற்கு அருளி நீள் நெறி
ஊக்கினான் உவவுறும் மதியின் ஒண்மையான்
#1410
வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையை கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே
போந்ததும் போய கங்குல் போம் வழி கண்டது உண்டேல்
யாம் தலைப்படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார்
#1411
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடும் கணாள் காதலானை
ஐ_இரு திங்கள் எல்லை அகப்பட காண்பிர் இப்பால்
பொய் உரை அன்று காணீர் போ-மினம் போகி நுங்கள்
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான்
@6 கேமசரியார் இலம்பகம்
#1412
வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின்
தேனும் வழங்கும் பைம் தார் விசையை சிறுவன் தேம் கொள்
நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய
கானம் வழங்கல் மேவி காலின் ஏகினானே
#1413
சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர்-தம்
இலை கொள் பூம் தார் உழுத இன்ப வருத்தம் நீங்க
முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன்
மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்
#1414
கனி கொள் வாழை காட்டுள் கருமை மெழுகியவை போன்று
இனிய அல்லா முகத்த முசுவும் குரங்கும் இரிய
துனிவு தீர நோக்கி தோன்றல் செல்லும் முன்னால்
பனி வெண் திரை சூழ் கடல் போல் பழுவம் தோன்றிற்று அவணே
#1415
பருகுவாரின் புல்லி பயம் கண்மாற துறக்கும்
முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி
உருவ பூம் கொம்பு ஒசிய புல்லி தீம் தேன் பருகி
அருகு வாய்விட்டு ஆர்ப்ப வண்ணன் மெல்ல சென்றான்
#1416
செல்வர் மனத்தின் ஓங்கி திரு இல் மாந்தர் நெஞ்சின்
எல்லை இருளிற்று ஆகி பூம் தாது இனிதின் ஒழுகி
கொல்லும் அரவின் மயங்கி சிறியார் கொண்ட தொடர்பின்
செல்ல செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான்
#1417
சுனைகள் கண்கள் ஆக சூழ்ந்த குவளை விழியா
அனையல் ஆகா உருவ நோக்கி மைந்தற்கு இரங்கி
இனைவ போலும் அருவியின் அருவி இனிதின் ஆடி
நனை கொள் போது வேய்ந்து நாதன் பாடுகின்றான்
#1418
செய்தான் இருவினையின் பயத்தை சேரும் சென்று என்றி
எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி
கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர் பூம் பிண்டி கோமனே
இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னை தொழுதேனே
#1419
உண்டே தனது இயல்பின் உணரும்-காலை உயிர் என்றி
உண்டாய அ உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி
வண்டு ஆர்ந்து நால் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து
கொண்டு ஏந்து பூம் பிண்டி கோமான் நின்னை தொழுதேனே
#1420
காதலால் எண் வினையும் கழிப என்றி அ காதல்
ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால்
போது உலாய் தேன் துளித்து பொழிந்து வண்டு திவண்டு உலாம்
கோதை தாழ் பூம் பிண்டி கோமன் நின்னை தொழுதேனே
#1421
இனிதின் இங்ஙனம் ஏத்தி வலம்கொண்டு
முனிவர் சித்திர கூடம் முனாது என
தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர்
பனி கொள் பூம் பொழில் பள்ளி கண்டான்-அரோ
#1422
புல்லும் அல்லியும் போகு உயர் நீள் கழை
நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும்
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா
நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்
#1423
அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள்
மருவி வீடு வளைக்குறும் மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார்
#1424
வள்ளி இன் அமுதும் வரை வாழையின்
தெள்ளு தீம் கனியும் சில தந்த பின்
வெள்ள மாரி அனாய் விருந்து ஆர்க என
உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார்
#1425
பாங்கின் மாதவர் பால் மதி போன்று இவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருள் கேள்வியன்
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம்
ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார்
#1426
ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்
உய்யுமேல் தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும்
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான்
#1427
வீடு வேண்டி விழு சடை நீட்டல் மெய்
மூடு கூறையின் மூடுதல் வெண் தலை
ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை
பீடு இலா பிறவிக்கு வித்து என்பவே
#1428
ஏம நல் நெறி எ நெறி அ நெறி
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம்
காமன் தாதை நெறியின்-கண் காளை நீ
தீமை உண்டு எனில் செப்பு என செப்பினான்
#1429
தூங்கு உறி கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல்
பாங்கரில் பழங்கள் துய்ப்ப பழ வினை பரியும் அன்றே
#1430
அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று
சொல்லிய வகையின் நோற்ப துணியும் வெம் வினைகள் என்னின்
கல் உண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம்
புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே
#1431
நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னின்
காட்டு-இடை கரடி போகி கய மூழ்கி காட்டில் நின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்று உரை விடு-மின் என்றான்
#1432
கலை வளர் கிளவியார்-தம் காமர் மென் சேக்கை நீங்கி
இலை வளர் குரம்பை அங்கண் இரு நிலம் சேக்கை ஆக
முலை வளர் ஆகம் தோய முழு வினை முரியும்-ஆயின்
மலை வளர் குறவர்க்கு அ மா வினைகளும் மாயும் அன்றே
#1433
வெள் நிற துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற
ஒள் நிற உதிரம்-தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே
பண் நிற கிளவியார்-தம் பசையினால் பிறந்த பாவம்
கண் நிற முலையினார்-தம் கலவியால் கழிக்கலாமே
#1434
நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கி
கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே
கண்டத்தின் நாவியார் தம் கடி மனை துறந்து காட்டுள்
பண்டை செய் தொழிலின் பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே
#1435
நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா
காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இ யாக்கை இன்னே
வேய் முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்று
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரி-மின் என்றான்
#1436
மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை
பொய் வகை இன்றி தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி
உய் வகை உயிரை தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இ வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்
#1437
குன்று அனான் உரைப்ப கேட்டே பாகத்தார் குடும்பம் நீக்கி
இன்று கண்விடுக்கப்பட்டேம் யாம் என எழுந்து போகி
வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நன்னெறியை பெற்றார்
சென்றது பருதிவட்டம் செம்மலும் அசைவு தீர்ந்தான்
#1438
அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே
வசையின் நீங்கியினார் வழி காட்டலின்
திசையும் யாறும் தெரிந்துகொண்டு ஏகினான்
மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான்
#1439
படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கய
தடம் பல தழீஇயது தக்க நாடு அது
வடம் கெழு வரு முலை மகளிர் மாமை போன்று
இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான்
#1440
தேம் கயத்து அணி மலர் தெகிழ்த்த நாற்றமும்
பூம் குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும்
ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும்
தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே
#1441
சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து
ஒண் பழுக்காயினோடு உருவம் மெல் இலை
உண்பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது
வண் புகழ் நாட்டாது வண்ணம் இன்னதே
#1442
கரும்பு அணி வள வயல் காமர் தாமரை
வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல்
அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல்
சுரும்பு சூழ் இலம்பக தோற்றம் ஒத்ததே
#1443
வண்டு வாழ் கொடும் துறை கன்னி வாளை மேல்
நண்டு உகிர் உற்றென நடுங்கி நாணினால்
விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ் புனல்
கொண்ட பூம் கிடங்கு அணி நகரம் கூறுவாம்
#1444
அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்புரி
புகழ் தகு மேகலை நாயில் பூண் முலை
திகழ் மணி கோபுரம் திங்கள் வாள் முகம்
சிகழிகை நெடும் கொடி செல்விக்கு என்பவே
#1445
நாட்டிய மணி வரை கடைந்து நல் அமிர்து
ஊட்டினும் அதனை விட்டு உறைநர் இன்மையால்
ஈட்டிய வள நிதி இறைகொள் மா நகர்
சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே
#1446
எறி சுறாவு இளையவர் ஏந்து பூம் கொடி
மறி திரை வரை புரை மாடம் மா கலம்
பெறல் அரும் திரு அனார் அமுதம் பேர் ஒலி
அறை கடல் வள நகர் ஆயது என்பவே
#1447
மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம் நீள் மறுகு-தோறும்
பொதி அவிழ் மாலை வீழ்ந்து பொன் செய் நன் கலன்கள் சிந்தி
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி
புதியவர்க்கு இயங்கல் ஆகா பொற்போடு பொலிந்தது அன்றே
#1448
கேமமாபுரம் எனும் கேடு இல் நல் இசை
பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன் நகர்
தாமம் நீள் நெடும் குடை தரணி காவலன்
நாமம் வேல் நரபதி தேவன் என்பவே
#1449
அ நகர்க்கு அரசனே அனைய ஆண்டகை
மெய் நிகர் இலாதவன் வேத வாணிகன்
கை நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான்
மை நிகர் மழை கணார் மருட்ட வைகுவான்
#1450
வார் சிலை வடிப்ப வீங்கி வரை என திரண்ட தோளான்
சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற
சீர் நலம் கடந்து கேமசரி என திசைகள் எல்லாம்
பேர் நலம் பொறித்த பெண்மை பெரு விளக்கு ஆகி நின்றாள்
#1451
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி
காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான்
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று
பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான்
#1452
தாழ்தரு பைம்பொன் மாலை தட மலர் தாமம் மாலை
வீழ் தரு மணி செய் மாலை இவற்றிடை மின்னின் நின்று
சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே
#1453
சே_இழை கணவனாகும் திருமகன் திறத்து நாளும்
ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி
ஏயின வகையினாலே ஆறிரண்டு எல்லை ஆண்டு
போயின என்ப மற்று அ பூம் கொடி சாயலாட்கே
#1454
முருக்கு இதழ் குலிகம் ஊட்டி வைத்து அன முறுவல் செ வாய்
திரு கவின் நிறைந்த வெம் கண் பணை முலை தேம் பெய் கோதை
புரி குழல் பொன் செய் பைம் பூண் புனை_இழை கோலம் நோக்கி
தரிக்கிலாது உருகி நையும் தட மலர் கோதை நற்றாய்
#1455
மாவடு மருட்டும் நோக்கின் மதி முகம் மழை கண் மாசு இல்
பூவொடு புரையும் சாயல் புனை நலம் தனித்து வைக
ஏ அடு பிணையின் நோக்கி இறை வளை கழல நின்ற
தாய் படும் துயரம் எல்லாம் தாரவன் நீக்கினானே
#1456
போது வாய் திறந்த போதே பூம் பொறி வண்டு சேர்ந்து ஆங்கு
ஊதுமே மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே
யாதும் நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறும் நாளை என்றான்
#1457
பொன் நிலத்து எழுந்தது ஓர் பொரு இல் பூம் கொடி
மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள்
பின்னிவிட்டு அன குழல் பெரும் கண் பேதை ஊர்
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே
#1458
மல்லிகை மணம் கமழ் மாலை வார் குழல்
சில் சுணங்கு இள முலை சிறுமி தந்தையும்
செல்வனை திருநகர் சேட்பட்டான்-அரோ
பல் கதிர் மணி ஒளி பரந்த பூணினான்
#1459
தென் திசை முளைத்தது ஓர் கோல செம் சுடர்
ஒன்றி மற்று உத்தரம் வருவது ஒத்து அவண்
மன்றல் கொள் மார்பினான் வந்து ஒரு ஆல் நிழல்
நன்று உவந்து இருந்தனன் நாதன் சிந்தியா
#1460
குடை கவித்து அனையது கோல மா முடி
அடி இணை யாமையின் வடிவு கொண்டன
புடை திரள் விலாவும் வில் வளைந்த பொற்பின
கடி கமழ் தாமரை கண்ணின் வண்ணமே
#1461
குறங்கு அணி மயிலொடு கோலம் ஆர்ந்தன
பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின
கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு
மறம் கெழு பெரும் புலி வாயின் வண்ணமே
#1462
வரை அகல் மார்பு-இடை வரியும் மூன்று உள
புரை தபு பொன் புரை நாவும் முள் உடைத்து
அரு வரை தோள்களும் அமரர் கோன் களிற்று
உருவு கொள் தட கையின் உருவு கொண்டவே
#1463
இலங்கு பொன் இறுவரை அனைய ஏந்தலுக்கு
அலங்கு இதழ் தாமரை கொட்டை அன்னதாய்
வலம் சுழிந்து அமைவர குழிந்த வாய்ப்பொடு
நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே
#1464
தடித்து இறை திரண்டு தம் அளவிற்கு ஏற்ற சூல்
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய
கடிப்பகை நுழைவு அற கதிர்த்த கை விரல்
அடுத்த மூக்கு அரு மணி வயிர தோட்டியே
#1465
வார்ந்து இலங்கு எயிறு அணி பவழம் மாண்ட வாய்
ஆர்ந்த பூ அங்கையும் அடியும் தாமரை
தேர்ந்தனன் திருமகள் கணவனாம் என
தீர்ந்தனன் சொல் அளைஇ தேர் கொண்டு ஏறினான்
#1466
தேர் இவர் ஊர்ந்தனர் செல்ல இல் தலை
கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை
பேர் இசை வீணையில் சூட்டி பெண் கொடி
கரிகை உலகு உணர் கடவுள் பாடுமே
#1467
வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டி
தேங்கு ஓதம் முக்குடை கீழ் தேவர் பெருமானை
தேவர் பெருமானை தேன் ஆர் மலர் சிதறி
நாவின் நவிற்றாதார் வீட்டுலகம் நண்ணாரே
#1468
அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடை கீழ் காசு இன்று உணர்ந்தான்
காசு இன்று உணர்ந்தான் கமல மலர் அடியை
மாசு இன்றி பாடாதார் வானுலகம் நண்ணாரே
#1469
பூத்து ஒழியா பிண்டி கீழ் பொங்கு ஓத வண்ணனை
நா தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே
வீட்டுலகம் நண்ணார் வினை கள்வர் ஆறலைப்ப
ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராவே
#1470
முத்து உமிழும் முந்நீர் மணி வண்ணன் மூன்று உலகும்
பத்திமையால் பாடப்படுவான் தாள் பாட கேட்டு
ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளொடு ஒப்பான் ஓர்
வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள்
#1471
நிலம் தின கிடந்து அன நிதி அ நீள் நகர்
புலம்பு அற பொலிவொடு புக்க-காலையே
இலங்கு பூம் கொடி அன ஏழை நோக்கமும்
உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே
#1472
கண்ணுற காளையை காண்டலும் கை வளை
மண் உற தோய்ந்து அடி வீழ்ந்தன மாமையும்
உள் நிறை நாணும் உடைந்தன வேட்கையும்
ஒள் நிற தீ விளைத்தாள் உருக்குற்றாள்
#1473
வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு அவள்
நோக்கு அணங்காய் மனநோய் செய நொந்து அவன்
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடும் தோளி ஓர்
தாக்கு அணங்கோ மகளோ என தாழ்ந்தான்
#1474
நல் வளம் தாமரை நாணிய வாள் முகம்
கொல் வளர் வேல் கணினாள் குழைந்தாள் என
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர் குழல்
மல் வளர் மார்பனை வந்து வளைந்தார்
#1475
நினைப்பரு நீள் நிறை நிப்புதி சேர்ந்து ஆங்கு
இனத்து-இடை ஏறு அனையான் எழில் நோக்கி
புன கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினையே கண்டு வாள் கண் அகன்றாள்
#1476
வள்ளலை வாச நெய் பூசி மணி குடம்
தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை
உள்ளுற உண்ட கலிங்கம் உடுத்த பின்
கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார்
#1477
மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்த பின்
கொங்கு அலர் கோதையர் கண்டு அகம் எய்தி
அம் கதிர் பொன் கலத்து ஆர் அமிர்து ஏந்தினர்
செம் கயல் கண்ணியர் சீரின் அயின்றான்
#1478
பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணை மேல்
சித்திர தவிசினுள் செல்வன் சீர் பெற
நித்தில மணி உறழ் கரக நீரினால்
அ துறை விடுத்தனன் அலர்ந்த தாரினான்
#1479
இளிந்த காய் கமழ் திரை வாசம் ஈண்டி ஓர்
பளிங்கு போழ்ந்து அருகு பொன் பதித்த பத்தியின்
விளிம்பு முத்து அழுத்திய யவன கைவினை
தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே
#1480
பாசிலை சுருட்டுபு கறித்து பல்லினை
தேசிகம் பட துடைத்து உமிழ்ந்து தேம் கமழ்
வாசம் வாய்க்கொண்டனன் மணி செய் குண்டலம்
வீசி வில் விலங்கி விட்டு உமிழ என்பவே
#1481
பண் உலாம் கிளவி-தன் பரவை ஏந்து அல்குல்
வண்ண மேகலை இவை வாய்ந்த பூம் துகில்
உள் நிலாய் பசும் கதிர் உமிழ்வ பாவியேன்
கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்டவே
#1482
கடி கமழ் குழலினால் கட்டி மெய் எலாம்
நடு ஒசி நோன் சிலை புருவத்தால் புடைத்து
அடும் மலர் நெடும் கணால் ஆவி போழ்ந்திடா
கொடியவள் இள முலை கொல்லும் கொல்லுமே
#1483
கடியன கச்சினால் கட்டப்பட்டன
கொடியன குங்குமம் கொட்டப்பட்டன
வடி நிலம் பரந்து முத்து அணிந்த வெம் முலை
இடை நிலம் செகுப்பன என்னை என் செயா
#1484
கரிய உள் வெறியன கட்டப்பட்டன
புரிவொடு புறத்து இடப்பட்ட பூம் குழல்
தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன
பெரிய கண் போலவும் பேது செய்யுமே
#1485
காதன்மை கண்ணுளே அடக்கி கண் எனும்
தூதினால் துணிபொருள் உணர்த்தி தான் தமர்க்கு
ஏதின்மைபட கரந்திட்ட வாள் கண் நோக்கு
ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே
#1486
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும்
நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக்கொண்டு எழுதி நல் பொன்
முகபடாம் வைப்ப ஆள் செற்று அழன்று கண் கரிந்த முல்லை
தொகு கள் தாம் கோதை வெய்ய துணை மணி முலைகள் தாமே
#1487
தேன் கறி கற்ற கூழை செண்பக மாலை வேல் கண்
ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல்
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம்
யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே
#1488
திருவிற்கும் கற்பக தெரியல் மாலையார்
உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண் பொன் பூம்_கொடி
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய் சடை
ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே
#1489
கலை தொகை நலம் பல கடந்த காளை-தான்
நலத்தகையவள் நலம் நினைப்ப நாய்கனும்
மலை தொகை மதம் தவழ் யானை மன்னவன்
நிலத்தவர்க்கு அறிவுற நெறியின் செப்பினான்
#1490
இடி உமிழ் எறி திரை முழக்கில் பல்லியம்
கொடி அணி வியல் நகர் குழுமி ஆர்த்து எழ
கடி மணம் இயற்றினார் கடவுள் நாளினால்
வடி மலர் கோதையை மைந்தற்கு என்பவே
#1491
மணி குடம் அழுத்தி வைத்த அனைய தோளினான்
கணிக்கு இடம் கொடா நலம் கதிர்த்த காரிகை
அணிக்கு இடன் ஆகிய அரிவை தன்னொடும்
பிணித்து இடைவிடாது அவன் பெற்ற இன்பமே
#1492
பூம் துகில் பொரு திரை பொம்மல் வெம் முலை
ஏந்திய மணி வரை இரக்கம் நீர்த்தரங்கு
ஆய்ந்த வன் தோள் இணை நாகம் ஆக வைத்து
ஈந்தது அ கடல் அவற்கு அமுதம் என்பவே
#1493
சந்தன சேற்று-இடை தாம வார் குழல்
பைம் தொடி படா முலை குளிப்ப பாய்தலின்
மைந்தன தார் குழைந்து உடைய வாய் திறந்து
அம் சிலம்பு அணி அல்குல் கலையொடு ஆர்த்தவே
#1494
கோதையும் குழலும் பொங்க குவி முலை குழங்கன் மாலை
போது உக பொருது பூணும் பொரு கடல் முத்தும் மூழ்க
காதலும் களிப்பும் மிக்கு கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பும் இல்லா தன்மை பெற்றவர்கள் ஒத்தார்
#1495
புனை மலர் தாரினானும் போது அணி கொம்பு அனாளும்
நனை மலர் காவும் அம் தண் வாவியும் நல்ல ஆடி
சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி
வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார்
#1496
பொழிந்து உகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்ல
கழிந்தன இரண்டு திங்கள் காளையும் மற்றோர் நாளால்
பிழிந்து கொள்வு அனைய பெண்மை பெய் வளை தோளி-தன்னோடு
அழிந்து வீழ் அருவி குன்றில் ஆய் மலர் காவு புக்கான்
#1497
காஞ்சன கமுகு காய் பொன் கனி குலை வாழை சூழ்ந்து
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை
மா சினை மயில்கள் ஆட சண்பக மலர்கள் சிந்தும்
தீம் சுனை அருவி குன்றம் சீர் பெற ஏறினானே
#1498
தினை விளை சாரல் செ வாய் சிறு கிளி மாதர் ஓப்ப
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா
நனை விளை கோதை நாணி பொன் அரி மாலை ஓச்ச
கனை கழல் குருசில் நண்ணி கவர் கிளி ஓப்பினானே
#1499
கொந்து அழல் வேல் கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே
செம் தழை அலங்கல் ஏந்தி சீறடி பரவ வந்தேன்
உய்ந்து இனி பணி செய்வேனோ உடம்பு ஒழித்து ஏகுவேனோ
பைம் தழை அல்குல் பாவாய் பணி என பரவினானே
#1500
வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னா
பூண் முலை பொதிர்ப்ப புல்லி புனை நலம் பருகினானே
#1501
திங்கள் அம் குளவி செ வான்-இடை கிடந்து இமைப்பதே போல்
குங்குமம் மார்பில் பூண்ட குளிர் கதிர் ஆரம் மின்ன
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான்
கங்குல் தான் நீங்கலுற்று கமழ் மலர் அணிந்த தாரான்
#1502
மணி வண்டு இ மாதர் கோதை மது உண வந்த போழ்து அங்கு
இணை வண்டு அங்கு இறந்து பாடு இன்று இருக்குமே இரங்கல் இன்றாய்
துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று நின்-கண்
பணிகொண்டது இன்மையால் தான் பரிவொடும் இருக்கும் அன்றே
#1503
குழவியாய் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால்
விழைவு தீர் கிழவன் ஆகி விழு கதிர் உலந்து வீழ
மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி
குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான்
#1504
திரு துயில் பெற்ற மார்பன் திருந்து தார் உழக்க இன்ப
வருத்தமுற்று அசைந்த கோதை வாள் ஒளி தடம் கண் நீலம்
பொருத்தலும் பொன் அனாளை புறக்கணித்து எழுந்து போகி
பரு சுதர் பவழம் நோன் தாழ் பல் மணி கதவு சேர்ந்தான்
#1505
அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட்டு இலங்கு பைம் பூண்
கொல் சின மடங்கல் அன்னான் கொழு நிதி மாடம் நீந்தி
பல் கதிர் பருதி போல பாய் இருள் ஏகினானே
#1506
தாள் உடை தடம் கொள் செவ்வி தாமரை போது போலும்
வாள் உடை முகத்தினாள் தன் வரு முலை தடத்தின் வைகி
நாளினும் பெருகுகின்ற நகை மதி அனைய காதல்
கேள்வனை கனவில் காணாள் கிளர் மணி பூணினாளே
#1507
அரம் தின பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை
கரந்தவன் கங்குல் நீங்க கதிர் வளை அணங்கும் மென் தோள்
வரம் தரு தெய்வம் அன்னாள் வைகு இருள் அனந்தல் தேறி
பரந்து எலா திசையும் நோக்கி பையவே பரிவு கொண்டாள்
#1508
திரு மணி குயின்ற செம்பொன் திருந்து பூம் கொம்பு அனாள் தன்
கரு மணி பாவை அன்னான் கரந்துழி காண்டல் செல்லாள்
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு-காறும் ஓடி
அரு மணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள்
#1509
யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர்
ஈண்டு உடம்பு ஒழித்து ஏக வலிக்குமால்
நீண்ட தோளவனே நிறை யான் இலேன்
தீண்டு வந்து என தேனின் மிழற்றினாள்
#1510
கனி கொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின்
இனியர் மங்கையர் என்பது கூறுவாய்
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான்
தனியள் ஆவது தக்கதுவோ சொலாய்
#1511
கழலும் நெஞ்சொடு கை வளை சோருமால்
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ
#1512
திருந்தும் மல்லிகை தேம் கமழ் மாலை யான்
புரிந்து சூடினும் பூம் கொடி நுண் இடை
வருந்துமால் மடவாய் எனும் வஞ்ச நீ
கரிந்து யான் நைய காண்டலும் வல்லையோ
#1513
தொண்டை வாய் இவள் தொய்யில் வன முலை
கண்டு தேவர் கனிப என்று ஏத்துவாய்
வண்டு கூறிய வண்ணம் அறிந்திலேன்
விண்டு தேன் துளிக்கும் விரை தாரினாய்
#1514
முலை வைத்த தடத்து-இடை முள்கலுறின்
தலை வைத்து நிலத்து அடி தைவருவாய்
சிலை வித்தகனே தெருளேன் அருளாய்
உலைவித்தனை என் உயிர் காவலனே
#1515
கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின்
இடன் எத்துணை அத்துணையும் எழுதி
உடன் ஒத்து உறைவான் உழை வாரலனேல்
மடன் ஒத்து உளது என் உயிர் வாழ்வதுவே
#1516
பெறும் அன்பினள் என்பது பேசின் அலால்
அறும் அன்பினள் என்று அறைவார் இலையால்
இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி
நறு மென் கமழ் தாரவனே நணுகாய்
#1517
நுன சீறடி நோவ நடந்து செலேல்
எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ
புனை தாரவனே பொய் உரைத்தனையால்
வினையேன் ஒழிய தனி ஏகினையே
#1518
பரு முத்து உறையும் பணை வெம் முலை நின்
திரு முத்து அகலம் திளையாது அமையா
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரி புண்
மருமத்து அனலும் வகை செய்தனையே
#1519
புன மா மயிலே பொழிலே புனலே
வனம் ஆர் வழையே வரையே திரையே
இன மா மணி சூழ் எரி பூணவனை
துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர்
#1520
கொடு வெம் சிலை வாய் கணையில் கொடிதாய்
நடுநாள் இரவின் நவை-தான் மிகுமால்
நெடு வெள் நிலவின் நிமிர் தேர் பரியாது
அடுமால் வழிநின்று அறனே அருளாய்
#1521
கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து
அயலேன் அறியாமை உரைத்தது எலாம்
இயலாததுவோ இனியேற்கு இனியீர்
உயலாவது கண் மலர்காள் உரையீர்
#1522
நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும்
பொறி நீர புனைந்து எழுதி புகழும்
வெறி தாரவன் எ வழி ஏகினன் நீர்
அறிவீர் உரையீர் அமர் தோள் இணைகாள்
#1523
இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து
உழு நீர் உடன் வெம் முலைகாள் வயிர
தொழுவாய் விடையை தொடர்கிற்றிலிர் என்று
அழுதாள் தடம் ஆக அணங்கு_இழையே
#1524
தகை வாடிய தன் நிழல் கண் உகு நீர்
வகை வாடி வருந்தி அழுவது கண்டு
அகையேல் அமர் தோழி அழேல் அவரோ
பகையாபவர் என்றனள் பால் மொழியே
#1525
வெறி மலைகள் வீழ்ந்து நிலம் புதைய
பொறி மாலை புனை நிழல் காணலளாய்
நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு
எறி வால் வளை கொண்டுவரும் இனியே
#1526
மட மா மயிலே குயிலே மழலை
நடை மாண் அனமே நலம் ஆர் கிளியே
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே
#1527
மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து
கல் உறை நாகு வேய் தோள் கதிர் மணி முறுவல் செ வாய்
வில் உறை புருவம் மாதர் வெந்தனள் கிடப்ப மின் தோய்
இல் உறை தெய்வம் நோக்கி இரங்கி நின்று உரைக்கும் அன்றே
#1528
புண் அவாம் புலவு வாள் கை பொலன் கழல் புனைந்த பை தார்
கண் அவாம் வனப்பினானை காமனே கண்ட-போழ்தும்
பண் அவாம் பவள செ வாய் படா முலை பரவை அல்குல்
பெண் அவா நிற்கும் என்றால் பிணை அனாட்கு உய்தல் உண்டோ
#1529
கடத்து-இடை கவளம் தேன் நெய் கனியை தோய்த்து இனிய துற்ற
தட கையால் கொடுத்து புல்லும் தவழ் மத களிறு நீங்கின்
மட பிடிக்கு உய்தல் உண்டோ வால் அடி குஞ்சி சூட்டும்
கொடைக்கையான் பிரிந்த பின்றை கோதையாட்கு உய்தல் உண்டோ
#1530
முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ் முலை தெய்வம் சேர
உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி
இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் என்ப போலும்
வயங்கு பொன் ஈன்ற நீல மா மணி முலையினாளே
#1531
வஞ்ச வாய் காமன் சொன்ன மணி நிற வண்டுகாள் நீர்
துஞ்சுவேன் துயரம் தீர தொழு தகு தெய்வம் ஆவீர்
மஞ்சு தோய் செம்பொன் மாடத்து என் மனை-தன்னுள் என்றாள்
பஞ்சி மேல் மிதிக்கும் போதும் பனிக்கும் சீறடியினாளே
#1532
நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர்
பந்து எடுக்கலாத நங்கை பால் கடை வெண்ணெய் பாவை
வெந்து உடன் வெயிலுற்ற ஆங்கு மெலிந்து உக விளங்கும் வெள்ளி
வந்து வான் இட்ட சுட்டி வனப்பொடு முளைத்தது அன்றே
#1533
எரி நுதி உற்ற மாவின் இளம் தளிர் போன்று மாழ்கி
புரி நரம்பு இசையின் தள்ளி புன்கணுற்று அழுதலாலே
அரி குரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப ஈண்டி
திரு விரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்
#1534
விழு திணை பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து
வழுக்குதல் இன்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்து அனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள்
#1535
பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின்
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி
கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள்
#1536
எரி தலை கொண்ட காமத்து இன்பம் நீர் புள்ளி அற்றால்
பிரிவின்-கண் பிறந்த துன்பம் பெரும் கடல் அனையது ஒன்றால்
உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி
இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே
#1537
மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை இன்பம்
மின்னின் ஒத்து இறக்கும் செல்வம் வெயில் உறு பனியின் நீங்கும்
இன் இசை இரங்கும் நல் யாழ் இளியினும் இனிய சொல்லாய்
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள்
#1538
பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து
நஞ்சு இறைகொண்ட நாக படம் பழித்து அகன்ற அல்குல்
வெம் சிறை பள்ளியாக விழு முலை தடத்து வைக
தம் சிறைப்படுக்கலாதார் தம் பரிவு ஒழிக என்றாள்
#1539
வாசம் மிக்கு உடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்ற
பாசத்தால் ஆக்கப்பட்ட ஆவியள் அல்லது எல்லாம்
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள்
தூசு உலாம் பரவை அல்குல் தூ மணி பாவை அன்னாள்
#1540
பை அர விழுங்கப்பட்ட பசும் கதிர் மதியம் ஒத்து
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும்
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து
கை அரிக்கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான்
#1541
காழக சேற்றுள் தீம் பால் கதிர் மணி குடத்தின் ஏந்தி
வீழ்தர சொரிவதே போல் விளங்கு ஒளி திங்கள் புத்தேள்
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார்
மாழை கொள் முகத்தின் தோன்றி வளை கடல் முளைத்தது அன்றே
#1542
ஏறு அனாற்கு இருளை நீங்க கைவிளக்கு ஏந்திய ஆங்கு
வீறு உயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறு இலா பருதிவட்டம் வரு திரை முளைத்த ஆங்கண்
ஆறு செல் ஒருவற்கு அண்ணல் அணிகலம் அருளலுற்றான்
#1543
எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள்
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு
இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள்
ஒவ்வாதார்-தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன்
#1544
ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன்
தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்ப கேட்கின்றானே
#1545
நல் தானம் சீலம் நடுங்கா தவம் அறிவர் சிறப்பு இ நான்கும்
மற்று ஆங்கு சொன்ன மனைவியர் இ நால்வரவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒரு மகனே மேற்கதிக்கு கொண்டுபோம் உரவோன் தன்னை
பெற்றார் மக பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர்
#1546
பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு
உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்து ஈதல் தானமாகும்
திடனாக தீம் தேனும் தெள் மட்டும் உயிர் குழாம் ஈண்டி நிற்றற்கு
இடன் ஆகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார்
#1547
ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல்
தாவா தவம் என்றார் தண் மதி போல் முக்குடை கீழ் தாதை பாதம்
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும்
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரைகண்டாரே
#1548
இ நால்வர் துணைவியரா காதல் மகன் இவனா உடையார் போகி
பொன் ஆர மார்பின் புரந்தரராய் பூமி முழுதும் ஆண்டு
மன் ஆகி முக்குடை கீழ் வாமன் சிறப்பு இயற்றி வரம்பு இல் இன்பம்
பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே
#1549
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர்
முட்டாத இன்ப புதா திறக்கும் தாள் உடைய மூர்த்தி பாதம்
எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இ உலகில் இன்பமே போல்
ஒட்டாவே கண்டீர் வினை அவனை தேறாதார்க்கு உணர்ந்தீர் அன்றே
#1550
வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்று உணா கொள்ளாது அடி புறத்து வைப்பீரே அல்லீர் போலும்
கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின்
ஆற்று உணா கொள்ளீர் அழகு அலால் அறிவு ஒன்றும் இலிரே போலும்
#1551
அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால்
தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம் முலை போல் வீங்கி கண் சேந்து
உளைய உறுதி உரைப்பாரை ஓ பாவம் உணராரே காண்
#1552
இழுது அன்ன வெள் நிணத்த செம் தடிக்கே ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த
பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மர செவியர் கேளார் பால் போன்று
ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன் செய் கோட்டக்கு
கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார்
#1553
கையால் பொதி துணையே காட்ட கயல் கண்ணாள் அதனை காட்டாள்
ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என்
செய்கோ என சிறந்தாள் போல் சிறவா கட்டுரையால் குறித்த எல்லாம்
பொய்யே பொருள் உரையா முன்னே கொடுத்து உண்டல் புரி-மின் கண்டீர்
#1554
பனி மதியின் கதிர் பருகும் ஆம்பல் போல்
முனி மதி முகத்தியர் முறுவல் நம்பினார்
துனி வளர் கதிகளுள் தோன்றி நாடகம்
கனிய நின்று ஆடுவர் கடையில் காலமே
#1555
நிழல் நிமிர் நெடு மதி நிகர் இல் தீம் கதிர்
பழனம் வெள் தாமரை பனிக்கும் ஆறு போல்
குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார்
தொழ நிமிர்ந்து அமரராய் துறக்கம் ஆள்வரே
#1556
இன்னவாறு உறுதி கூறி எரி மணி வயிரம் ஆர்ந்த
பொன் அவிர் கலங்கள் எல்லாம் பொலிவொடு புகன்று நீட்டி
செல்-மின் நீர் என்று கூற வலம்கொண்டு தொழுது சென்றான்
வில் மரீஇ நீண்ட தோளான் வெயில் கடம் நீந்தலுற்றான்
@7 கனகமாலையார் இலம்பகம்
#1557
இரங்கு மேகலை அல்குல் இன் கனி தொண்டை அம் துவர் வாய்
அரங்க கூத்திகண் அன்பின் மனையவள் துறந்து செல்பவர் போல்
பரந்த தீம் புனல் மருதம் பற்று விட்டு இன மயில் அகவும்
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான்
#1558
கலவ மா மயில் எருத்தில் கடி மலர் அவிழ்ந்தன காயா
உலக மன்னவன் திருநாள் ஒளி முடி அணிந்து நின்றவர் போல்
பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின்
உலவு காஞ்சுகியவர் போல் பூத்தன மரவம் அங்கு ஒருங்கே
#1559
ஓங்கு மால் வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெரும் தேன்
தாங்கு சந்தனம் தரள தழுவி வீழ்வன தகைசால்
ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி
தேம் கொள் மார்பு-இடை திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்து உளவே
#1560
வீழ்ந்து வெண் மழை தவழும் விண் உறு பெரு வரை பெரும் பாம்பு
ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த மற்று அவற்று அருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின மதுகரம் பாட
சூழ்ந்து மா மயில் ஆடி நாடகம் துளக்குறுத்தனவே
#1561
கருவி தேன் என தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ்
பொருவில் யானையின் பழு போல் பொங்கு காய் குலை அவரை
அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும்
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே
#1562
யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த
தேன் நெய் வாசவல் குவவி தீம் கனி வாழையின் பழனும்
ஊனை உண்டவர் உருகும் பசும் தினை பிண்டியும் ஒருங்கே
மானின் நோக்கியர் நோக்கி வழி-தொறும் ஈவது அ வழியே
#1563
குறிஞ்சி எல்லையின் நீங்கி கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆட
செறிந்த பொன் இதழ் பைம் தார் கொன்றை அம் செல்வற்கு குரவம்
அறிந்து பாவையை கொடுப்ப தோன்றி அம் சுடர் ஏந்த
நிறைந்த பூம் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே
#1564
அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி அரு மணி மரகத பலகை
பரப்பி இட்டன போல கோபங்கள் பயிர் மிசை பரவ
உரைத்த மென் தயிர் பித்தை கோவலர் தீம் குழல் உலவ
நிரை கண் மா மணி கறங்க நீள் நிலம் கடந்தனன் நெடியோன்
#1565
வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும்
சுள்ளி வேலியின் நீங்கி துறக்கம் புக்கிடும் என சூழ்ந்து
வெள்ளி வெண் திரள் விசித்து நிலத்தொடு தறி புடைத்தவை போல்
துள்ளி வீழ் உயர் அருவி வன கிரி தோன்றியது அவணே
#1566
அண்ணல் தான் செலும் முன்னா அணி மலர் பூம் பொழில் அதனுள்
வண்ண மா சுனை மா நீர் மணி தெளித்து அனையது ததும்பி
தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல்
எண் இல் பன் மலர் கஞலி இன வண்டு பாண் முரன்று உளதே
#1567
கானகத்தின் ஏகுகின்றான் கடி பொழில் கவின் கண்டு எய்தி
தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி-தானே
வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள்
நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள்
#1568
குறிஞ்சி பூம் கோதை போலும் குங்கும முலையினாள் தன்
நிறைந்த பொன் கலாபம் தோன்ற நெடும் துகில் விளிம்பு ஒன்று ஏந்தி
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா
நறும் புகை தூதுவிட்டு நகை முகம் கோட்டி நின்றாள்
#1569
அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும்
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி
மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல்
துணிவரும் சாயல் நின்றாள் தோன்றல் தன் கண்ணின் கண்டான்
#1570
கண்டவன் கண்ணின் நோக்க நடுங்கி தன் காதில் தாழ்ந்த
குண்டலம் சுடர ஒல்கி கொடி நடுக்குற்றது ஒப்ப
நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான்
#1571
எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா
வண்ண பூம் கண்கள் அம்பா வாள் நுதல் புருவம் வில்லா
உள் நிறை உடைய எய்வான் உருவ சாதகத்துக்கு ஏற்ப
பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள்
#1572
முறுவல் முன் சிறிய தோற்றா முகை நெறித்து அனைய உண்கண்
குறு நெறி பயின்ற கூந்தல் குறும் பல் கால் ஆவி கொள்ளா
சிறு நுதல் புருவம் ஏற்றா சேர் துகில் தானை சோர
அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள்
#1573
வடு பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட
படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப
அடி பொலிந்தார்க்கும் செம்பொன் அணி மணி கழலினான் அம்
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்து இது சிந்திக்கின்றான்
#1574
கடி மாலை சூடி கருப்பூரம் முக்கி
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர்
கடை மாலை மற்று அவரே கண் புதைப்ப செல்லும்
நடை மாலைத்து இ உலகம் நன்று-அரோ நெஞ்சே
#1575
நாவி அகலம் எழுதி நறு நுதலார்
ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார்
தூவி ஒழி புள்ளின் தோன்றி துயர் உழப்ப
காவி நெடும் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே
#1576
இன் புகை ஆர்ந்த இழுதார் மென் பள்ளி மேல்
அன்பு உருகு நல்லார் அவர் தேள் மேல் துஞ்சினார்
தம் புலன்கள் குன்றி தளர தம் காதலார்
அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் நெஞ்சே
#1577
என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்தி
புன் புறம் தோலை போர்த்து மயிர் புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயில் ஆக்கி ஊன் பயில் குரம்பை செய்தான்
மன் பெரும் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்
#1578
வினை பெரும் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால்
எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும்
நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான்
மனத்தையும் குழைய செத்தும் மாண்பினன் மாதோ என்றான்
#1579
என்று அவன் இருப்ப மாதர் என் வரவு இசைப்பின் அல்லால்
ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள்
மன்றல் அம் தோழிமாருள் வனத்து-இடை பண்ணை ஆட
குன்று-இடை குளிர்க்கும் மின் போல் குழாம் மழை முகட்டில் செல்வான்
#1580
மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மட மயில் தழுவி கொண்ட
வெயில் இளம் செல்வன் போல விஞ்சையன் என் கொண்டு ஏக
துயிலிய கற்பினாள் தன் துணைவி கண்டு இடுவித்திட்டாள்
அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் அநங்க மா வீணை என்பேன்
#1581
தாய் இலா குழவி போல சா துயர் எய்துகின்றேன்
வேய் உலாம் தோளினார்-தம் விழு துணை கேள்வ நின் கண்டு
ஆயினேன் துறக்கம் பெற்றேன் அளித்து அருளாதுவிட்டால்
தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள்
#1582
மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும்
தணிவரும் கயத்து பூத்த தாமரை அனைய கண்ணும்
பணிவரும் பகுதி அன்ன முகமும் என்று அயர்ந்து காம
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான்
#1583
போதொடு நானம் மூழ்கி பூம் புகை தவழ்ந்து முல்லை
கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய்
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை
கோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பிது என்றான்
#1584
விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் உமிழ் கண் பீளை
புழு பயில் குரம்பை பொல்லா தடி தடி கீழ்ந்த-போழ்தில்
விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை
கொழிப்பரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்தால் கொடியே என்றான்
#1585
உருவம் என்று உரைத்தி-ஆயின் நிறைந்த தோல் துருத்தி தன்னை
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால்
கருதுவது ஆங்கு ஒன்று உண்டோ காப்பிய கவிகள் காம
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப்போர் இதனை என்றான்
#1586
காதல் மாமன் மட மகளே கரும் குழல் மேல் வண்டு இருப்பினும்
ஏதம் உற்று முரியும் நுசுப்பு என்று உன் இயல்பு ஏத்துவேன்
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரை
கோதை போல்வாய் ஒளித்து ஒழிதல் கொம்பே குணன் ஆகுமே
#1587
வண்ண திங்கள் மதி முகத்த வாளோ கரும் கயல்களோ
உண்ணும் கூற்றோ ஒளி வேலோ போதோ உணர்கலேனால்
பண்ணின் தீம் சொலாய் படா முலை பாவாய் கொடியே பாங்கின்
உண்ணும் தேனே அமிர்தே என் இன்னுயிரே எங்கணாயோ
#1588
இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி
புலவன் சித்திரித்த பொன் சிலம்பு நக பூ நிலத்து மேல்
உலவும்-போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய்
கலவ மஞ்ஞை அனையாய் கண் காதல் ஒழிகல்லேனால்
#1589
பணி செய் ஆயத்து பந்தாடுகின்றாயை கண்டு மாழ்கி
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும்
துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ
மணி செய் மேகலையாய் மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ
#1590
இயக்கி நின்னோடு இணை ஒக்கும் என்று நலம் செகுப்பான்
மயக்கி கொண்டு போய் வைத்தாய் என் மாதரை தந்து அருள் நீ
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன்
வய பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான்
#1591
மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை
புல்லும் பேரூர் புகழ் தத்தன் காதல் சின தத்தைக்கும்
செல்வ நாமற்கும் சித்திரமாமாலைக்கும் சுற்றத்தார்க்கும்
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ
#1592
உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்ப காட்டுள் நாடி
நண்ணி பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள்
பண்ணி நீர் கொண்டு வந்தேன் படா முலை பாவாய் என்று
அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே
#1593
குழை கொள் வாள் முகத்து கோல் வளையை காணான் குழைந்து அழுகின்ற
அழகன் சொல்லும் அணி செய் கோதை காமமும் கண்டும் கேட்டும்
முழவு தோளான் முறுவலித்து ஈங்கே இரு நீ என்று
இழைய சொல்லி இறையான் இளையானை எய்தினானே
#1594
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு
பொன் அம் குன்றின் பொலிந்த தோள் நம்பி ஒரு பொன் பூம் கொடி
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால்
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான்
#1595
கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்ற பின் கண்ணும் ஆகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழும் ஆம் துணைவி ஆக்கும்
இ பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான்
#1596
அன்பு நூலாக இன் சொல் அலர் தொடுத்து அமைந்த காதல்
இன்பம் செய் காம சாந்தின் கைபுனைந்து ஏற்ற மாலை
நன் பகல் சூட்டி விள்ளாது ஒழுகினும் நங்கைமார்க்கு
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே
#1597
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா
உள் நிறை உடைய அல்ல ஓர் ஆயிரம் மனத்தவாகும்
எண்ணி பத்து அங்கை இட்டால் இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய் குன்று எரி உற்றால் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே
#1598
சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை
பூமனும் புனைதல் இன்றி பொற்புடன் புலம்ப வைகி
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார்
தே மலர் திருவோடு ஒப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பர்
#1599
அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னை கண்ட கண்ணால்
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு
அன்னளோ என்று நக்கான் அணி மணி முழவு தோளான்
#1600
இனையல் வேண்டா இ மந்திரத்தை ஓதி நீ ஒருவில் ஏ அளவு
அனைய எல்லை சென்றால் இயக்கி கொணர்ந்து அருளும் நீ
புனை செய் கோல் வளையை கைப்படுதி என்று ஆங்கு அவன் போதலும்
அனைய மாதரை கண்டு ஆங்கு அடி புல்லி வீழ்ந்து அரற்றினான்
#1601
பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள்
விட்டாள் ஆர்வம் அவன்-கண் இவன் மேல் மைந்து உறவினால்
மட்டார் கோதை மனை துறந்தாள் மைந்தனும் மங்கை மேலே
ஒட்டி விள்ளா ஆர்வத்தனன் ஆகி உருவம் ஓதினான்
#1602
மெழுகு செய் படம் வீழ் முகில் மத்தகத்து
ஒழுகும் வெள் அருவி திரள் ஓடை சூழ்ந்து
இழுகு பொன் மதத்தின் வரை குஞ்சரம்
தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான்
#1603
நிரைத்த தீவினை நீங்க நெடும் கணார்
வரை-கண் ஏறலின் வால் அரி பொன் சிலம்பு
உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து
அரைத்து அலத்தகம் ஆர்ந்தது ஒர் பால் எலாம்
#1604
சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும்
ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து
ஏந்து பொன் விளக்கு ஏந்தி இடம் பெறா
மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம்
#1605
துறந்த மன்னவர் தூ முடி தோள் வளை
நிறம் கொள் ஆரம் பைம் பூண் நிழல் குண்டலம்
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து
உறங்குகின்றன போன்ற ஒர் பால் எலாம்
#1606
கருவி தேன் கலை கையுற கீண்டுடன்
மருவி பைம் கறி வாரி பழம் தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய்
அருவி நின்று அதிரும் ஒரு பால் எலாம்
#1607
வெம் கதிர் கடவுள் வியன் தேர் வரை
தங்கு சந்தன கோட்டு-இடை பட்டு என
பொங்கு மான் குளம்பின் குடை பொன் துகள்
மங்குலாய் திசை யாவையும் அல்கின்றே
#1608
சுனைய நீலமும் சுள்ளியும் சூழ் மலர்
நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர்
சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு
முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான்
#1609
முனிமை முகடு ஆய மூவா முதல்வன்
தனிமை தலைமை தனது தான் என்ப
தனிமை தலைமை தனது தான் என்றால்
பனி மலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே
#1610
மலர் ஏந்து சேவடிய மால் என்ப மாலால்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுவான்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுமேல்
இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே
#1611
களி சேர் கணை உடைய காமனையும் காய்ந்த
அளி சேர் அற வழி அண்ணல் இவன் என்பர்
அளி சேர் அற வழி அண்ணல் இவனேல்
விளியா குண துதி நாம் வித்தாவாறு என்னே
#1612
இன்னணம் ஏத்தி இறைவன் அடி தொழுது
அன்னம் உறங்கும் மணி வரை மேல் நின்று
பொன் அம் கழலான் இழிந்து பொழி மழை
மின்னின் நடந்து மிகு சுரம் சென்றான்
#1613
மாலை கதிர் வேல் மலங்க மணி மலர்க்கு
ஓலை விடு கண் உருகு கொடி இடை
ஏலம் கமழ் குழல் ஏழையவர் அன்ன
ஆலை கரும்பின் அக நாடு அணைந்தான்
#1614
வழைச்சறு சாடி மட்டு அயின்று மள்ளர் தாம்
கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம்
மழை குரல் என மயில் அகவ வார் செந்நெல்
புழை கடை புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்றே
#1615
தாமரை மலர் தலை அடுத்து தண் கமழ்
தூ மலர் குவளை கால் அணைத்து தோல் அடி
காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும்
தே மலர் தடம் தழீஇ திசைகள் மல்கின்றே
#1616
கண் பயில் இளம் கமுகு எருத்தின் காய் பரீஇ
கொண்டு இள மந்திகள் எறிய கோட்டு-இடை
திண் கனி முசு கலை சிதறும் தேம் பொழில்
மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான்
#1617
களிறு மாய் கதிர் செந்நெல் கழனி நாட்டு-இடை
ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய்யென
பிளிறு வார் இடி முரசு ஆர்ப்ப பெய் கழல்
வெளிறு இலா கேள்வியான் விருப்பொடு எய்தினான்
#1618
புற நகர் மணமகன் ஒருவன் போதர்வான்
இறைமகன் வினாயினான் என்ன பேரவே
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என
அறிக என்று அலரி வாய் கமழ கூறினான்
#1619
மத்திம தேசமாம் நாடு மற்று இ நாட்டு
எ திசை நிதியமும் இறைகொண்டு இல்லவர்க்கு
உய்த்தும் ஊர் கொடுப்பவரே ஏமமாபுரம்
இ திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என
#1620
அன்னதே என்றலின் அடிசில் காலமால்
என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு என
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான்
வில் மரீஇ வாங்கிய வீங்கு தோளினான்
#1621
புணர் மருப்பு யானையின் புயல் கொள் மும்மதம்
மணமகள் கதுப்பு என நாறும் மாநகர்
துணை மலர் கண்ணியும் செம்பொன் மாலையும்
இணை மலர் தாரினான் இடறி ஏகினான்
#1622
வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனை
கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற
மண்டப பளிக்கு அறை மருங்கு ஒர் மா நிழல்
கொண்டு அவற்கு அளித்தது ஓர் குளிர் கொள் பொய்கையே
#1623
வண் சிறை பவள செ வாய் பெடை அன்ன மடமை கூர
தண் கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி
கண்டனம் கள்வ மற்று உன் காதலி தன்னை நீர் கீழ்
பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே
#1624
செயிர்ப்பொடு சிவந்து நோக்கி சேவலின் அகல சேவல்
அயிர்ப்பது என் நின்னை அல்லால் அறியலேன் அன்றி மூக்கின்
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால்
பயிர்ப்பு அற சிறகால் புல்லி பணிந்து பாண் செய்தது அன்றே
#1625
கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல்
நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப
அலர் மிசை பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி
குலவிய புணர்ச்சி நோக்கி குன்று அனான் சிந்திக்கின்றான்
#1626
தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும்
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண்
பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் என்
முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள்
#1627
பரிவு உற்றால் பயன் இன்றியும் பாவைமார்
முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்
பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும்
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ
#1628
வாளி அம்பு அன வாள் தடம் கண்ணி தன்
தோளும் மென் முலை பாரமும் தொல் நலம்
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ
#1629
உருகி வாடி என் உற்றது-கொல் என
கருகி வாடிய காமரு கோதை தன்
இரு கண் நீரும் இடை முலை பாய்ந்து உக
குருகு பாய் தடம் ஆக அழும்-கொலோ
#1630
வண்டு வாழ் பயில் கோதை மணம் முதல்
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால்
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று
உண்டு என் ஆவி உருக்கி இடுவதே
#1631
காதலாள் உடலுள் உயிர் கைவிடின்
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று
ஆதலால் அழிவு ஒன்று இலள் அல்லதூஉம்
மாதர் விஞ்சையும் வல்லளும் அல்லளோ
#1632
காதல் மிக்குழி கற்றவும் கைகொடா
ஆதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்
தாது துற்றுபு தங்கிய வண்டு அனார்க்கு
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ
#1633
நற வெம் கோதையர் நல் நலம் காதலான்
மற வெம் காமத்து வந்துற்ற தீவினை
பறவை தேர் நரகத்து பதைக்குங்கால்
அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார்
#1634
வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய
மாட்சி உள்ளத்தை மாற்றி மலர் மிடை
காட்சிக்கு இன் பொய்கை காமர் நலன் உண்டு
மீட்டும் அங்கு இருந்தான் விடை ஏறு அனான்
#1635
நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில்
ஆரா வெம் போர் ஆய் தடமித்தன் அரசற்கும்
நாரார் கற்பின் நாகு இள வேய் தோள் நளினைக்கும்
சீரால் தோன்றி செல்வமோடு எல்லாம் திருத்தக்கான்
#1636
விண்டார் தேய்க்கும் வெம் பரி மான் தேர் விசயன் என்று
உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த
வண்டு ஆர் சோலை வார் மணம் நாற புகுகின்றான்
கண்டான் சேர்ந்தான் காளையை கல்வி கடலானே
#1637
இ நாட்டு இ ஊர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார்
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான்
பொய்ம் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன்
#1638
வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம்
கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான்
ஏ மாறு இல்லா இந்திரனேயும் இவன் ஒவ்வான்
போமாறு ஆய்வென் பொற்போடு கூடும் வகை என்றான்
#1639
பூம் கழலானை புண்ணிய நம்பி முகம் நோக்கி
ஈங்கு இது நின் நாடு இ பதி நின் ஊர் இது நின் இல்
வீங்கிய திண் தோள் வெல் புகழாய் நின் கிளை என்றாற்கு
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான்
#1640
மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப
பொன் அவிர் கழலினான் அ பொரு சிலை கணையின் வாங்கி
இன் அமிர்து ஊறுகின்ற இரும் கனி அற எய்திட்டான்
#1641
எய்த அ கணையும் மாவின் இரும் கனி அதுவும் பூமிக்கு
எய்த அ சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு
எய்த சென்று ஐயன் ஆர தழுவிக்கொண்டு இதனை சொன்னான்
#1642
வண் சிலை கொண்டவாறும் வார் கணை தொடுத்தவாறும்
கண் கணை வைத்தவாறும் கல் செய் தோள் இருந்தவாறும்
திண் சரம் விட்டவாறும் சென்ற கோல் போந்தவாறும்
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடை கடவுள் என்றான்
#1643
மரா மரம் ஏழும் எய்த வாங்கு வில் தட கை வல் வில்
இராமனை வல்லன் என்பது இசை அலால் கண்டது இல்லை
உரா மனம் இவன் கண் இன்றி உவக்குமா செய்வல் என்று
குரா மலர் காவின் நீங்கி கோயிலே கொண்டு புக்கான்
#1644
வழிவரல் வருத்தம் ஓம்பி வயிர பூண் அணிந்த மார்பன்
அழி கவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறிய சொன்னான்
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு
கழி பெரு முகமன் கூறி காதலம் காளை என்றான்
#1645
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து
நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம்
சிலை தழும்பியானை தோலின் நூற்று உரை சிறுமீன் ஒத்த
இலக்கண கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான்
#1646
அண்ணல் அம் சிலை வலாருள் அமோக மா ஆசானின் பின்
விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால்
மண்ணகத்து இல்லை என்பார் வாயினை மடங்க வந்தான்
புண்ணகத்து உறையும் வேலான் என புகழ்ந்து அரசன் சொன்னான்
#1647
வில் திறல் நம்பி தேற்றான் விருந்தினன் இவனும் அன்றி
மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை
கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை என குருசில் நேர்ந்தான்
அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார்
#1648
கழலின் செந்தாமரை அடிகள் புல்லி தம் காதல் கூர
நிழலின் நீங்கார் நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி
அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகி
பொழிலின் மிக்கதனில் புக்கான் மணமகளிர் போல் பொலிந்ததே
#1649
பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை
மாசில் வெண் துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல்
காசில் மட்டு ஒழுக பூத்த அழிஞ்சில் கண் ஆர் கவின் கொண்டன
பேசில் செம் தலைய வெண் கறைய புன்கம் பொரி அணிந்தவே
#1650
கோடு தையா குழிசியோடு ஆரம் கொள குயிற்றிய
ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழி கொழு முள் அரும்பின அம் கோசிக
ஆடை பூத்தன பாதிரி வெண்கடம்பு பந்து அணிந்தவே
#1651
வெருகு வேட்ப சிரிப்பன போல் முகைத்த முல்லை வெய்ய வாய்
அரவு பைத்து ஆவித்து அன்ன அம் காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன
குரவம் கொண்ட குறும்பூழ் போல் கொழும் கால் முகை சுமந்தன
குருதி கூர் எயிறு கூத்தியர் கண் கொண்ட கொடி தளவமே
#1652
சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும்
நன்மை நூலின் நயம் தோன்ற நன் பொன் விரல் நுதியினால்
பன் மணியும் முத்தும் பவளமும் பைம்பொன்னும் கோத்தால் ஒப்ப
என்ன அமரரும் மருள தொடுத்தான் இன மாலையே
#1653
ஊன் உண் சிங்க குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான்
தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின்
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள்
#1654
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம்
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான்
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண்
அடி அம் சிலம்பினாட்கு உய்த்து இறைஞ்சி காட்ட அவள் கொண்டாள்
#1655
கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள் வரும் முலைகள் பாய வண் தார்
விண்டு தேன் துளிப்ப வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம்
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே
#1656
ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார்
பாம்பு பைத்து ஆங்கு அனைய பவழ பட அரவு அல்குலார்
தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணை
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே
#1657
ஆகம் தான் ஓர் மணி பலகையாக முலைகள் நாய் ஆக
போகக்கு ஏற்ற புனை பவழ அல்குல் கழகம் ஆக
ஏக இன்ப காம கவறாடல் இயைவது அன்றேல்
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே
#1658
பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார்
கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள்
மின்னு குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி
என்னும் இமையாள் நினைந்து இருந்தாள் இயக்கி இருந்த எழில் ஒத்தாள்
#1659
கொடு வெம் சிலையை கொளை அமைத்து கொதி நீர் பகழி கொள வாங்கி
கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னி பிணையின் நிலை கலங்கி
தொடி தோள் நடப்ப தோள் தேம்ப துணை வெம் முலைகள் பசப்பு ஊர
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்
#1660
ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் உலகத்தை அங்காந்து
நின்றால் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க
இன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இ மாலை அளியேன் ஆவி யாதாம்-கொல்
#1661
வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள்
முருந்தின்-காறும் கூழையை முனிவார் நின்னை என் முனிவார்
பொருந்திற்று அன்றால் இது என்னாய் பொன்றும் அளித்து இ உயிர் என்னாய்
திருந்து சோலை கரும் குயிலே சிலம்ப இருந்து கூவுதியால்
#1662
பெரு வெண் திங்கள் மால் அக பூ மலைந்து பெட்ப நகுகின்றது
உருவு கொண்ட குரல் அன்றில் உயிர் மேல் ஆம்பல் உலாய் நிமிரும்
ஒரு பெண்பாலேன் யான் ஆக உலகம் எல்லாம் பகை ஆகி
எரி கொன்று ஈன்ற இலை பலி போல் இருத்தியால் என் இன்னுயிரே
#1663
வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்
பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவது ஆயினேன்
தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக
யாம கடலை நீந்துவேன் யாரும் இல்லா தமியேனே
#1664
செம்பொன் கடம்பன் செ வேலும் காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த
அம்பும் வென்ற வரி நெடும் கண் அ மா மதி வாள் முகத்தினாள்
வம்பு பூத்து முருகு உலாய் தேன் கொப்புளித்து நின்றது ஓர்
கொம்பு வெம் தீயிடைப்பட்டது ஒத்தாள் விரை செய் கோதையே
#1665
மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும்
அணி நிற போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்று
பணி நலம் புதியது உண்டான் பன் மலர் மாலை கொண்டேன்
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான்
#1666
காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண்
போது உலாம் கோதை மாதர் புனைந்து அலர் தொடுத்த மாலை
ஆதலால் அலரது ஆகாது ஒழியுமே அழுங்கல் என்று
மாது உலாம் மழலை செ வாய் மட கிளி மொழிந்தது அன்றே
#1667
என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ம் தாரினான்
தன்னை யானும் பிணிப்பேன் என தன் மணி செப்பினுள்
மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு உய்த்து ஈ என தொழுது கொண்டு
அன்னம் என்ன ஒதுங்கி சிலம்பு அரற்ற சென்று அணுகினாள்
#1668
அணுகி முன் நின்ற அநங்கவிலாசினி அம் கை கூப்பி
பிணையல் நீட்ட பெரும் தகை அஃது ஏலான் முகம் நோக்கலும்
துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ
மணி செய் மென் தோள் மருந்து நீ ஆருயிரும் நீயேல் என்றாள்
#1669
மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே
என்ன அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு அஃது அன்று கோதாய்
இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன இலங்கு எயிற்றினாள்
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான்
#1670
குலிகம் ஆர்ந்த கொழும் தாமரை அன்ன வண் கை நீட்டி
ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன
இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி கனகமாலை
மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள்
#1671
நீர் செய் காந்த மணி கூந்தளம் பாவை நீண்டு அழகிய
ஏர் செய் சாந்தின் கழுநீர் விரை கமழும் பூக்கள் கோத்த
வார் செய் தண் தாமரை வளை அமை வரையின் வெள் அருவி நீர்
சீர் செய் கோமகளை சேர்த்தினாள் சீதம் செய்யாது ஒழிந்தனவே
#1672
பவ்வ தங்கண் பிறந்து பனி பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி
எவ்வம் மன்னர் பட உலகம் விற்கும் அரு மணியினை
செவ்வன் நூலில் சித்திரிக்கப்பட்டதனை சேர்த்தி பின்னும்
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள்
#1673
களி செய் கோசிக நீர் விழ கடி மாலை மேல் தொடர்ந்து கீழ்
நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய்
குளிர் கொள் சாந்து ஆற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச
சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள்
#1674
கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட
அம் மென் மாலை முகம் கரிய நீர் துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை
பொம்மல்_ஓதிக்கு தானே துணை ஆம் புணை ஆயிற்றே
#1675
வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து
ஓசனை கண் உடையும் நெடும் கண் கனகமாலை
தாசி தூது ஆக தாமம் புணை ஆக செல்லும் நாளுள்
காசில் கல்வி கடலை கரைகண்டார் காளைமாரே
#1676
பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்குமாறும்
வரு கணை விலக்குமாறும் வாள் அமர் நீந்துமாறும்
கருவியுள் கரக்குமாறும் கணை புறம் காணுமாறும்
விரிய மற்று அவர்க்கு காட்ட வீற்று இருந்து அவரும் கற்றார்
#1677
வேல் உடை தடக்கையார்கள் வேழ மேல் சென்ற-போழ்தில்
கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும்
வால்-இடை மறியுமாறும் மருப்பு-இடை குளிக்குமாறும்
நூல் இடை கிடந்தவாறே நுனித்தவன் கொடுப்ப கொண்டார்
#1678
கொடி நெடும் தேரின் போரும் குஞ்சரம் குறித்த போரும்
கடு நடை புரவி போரும் கரப்பற கற்று முற்றி
இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும்
உடன் அறிந்து உம்பரார்க்கு உரைப்பரும் தகையர் ஆனார்
#1679
தானையுள் அன்றி நின்ற தனி இடம் ஒற்றி மன்னர்
தானை மேல் சென்ற-போழ்தும் வென்றியில் தளர்தல் இன்றி
தானையை உடைக்கும் வெம் போர் தருக்கினார் மைந்தர் என்று
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான்
#1680
மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கி
குழை முகம் நெற்றி நக்க கோல வில் பகழி வாங்கி
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல்
விழைவுறு குமரர் புக்கு சாரியை வியத்தர் ஆனார்
#1681
விசயனே விசயன் வில் போர் கதம்பனே முருகன் வேல் போர்
திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம்பொன் நாமன்
அசைவு இலான் யானை தேர் போர்க்கு அலசனே அசல கீர்த்தி
வசை இலான் புரவி சேன் என்று யாவரும் புகழப்பட்டார்
#1682
காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி
ஏவலான் அரசன் ஒன்றோ இரு_பிறப்பாளன் அல்லார்க்கு
ஆவது அன்று இன்ன மாட்சி அவனை யான் நிகளம் பெய்து
காவல் செய்திடுவல் வல்லே காளையை கொணர்-மின் என்றான்
#1683
கல்வியும் கொடிது போலும் காவலன் காளை-தன்னை
ஒல்லலன் சிறைசெய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார்
பல் சனம் பரிந்து நிற்ப பார்த்திப குமரன் சேர்ந்தான்
வில் வலான் கொண்டு வேந்தன் வேறு இருந்து இதனை சொன்னான்
#1684
புள் முழுது இறைஞ்சும் கோட்டு பொரு களிறு அனைய தோன்றல்
மண் முழுது அன்றி வானும் வந்து கைகூட தந்தாய்
கண் முழுது உடம்பில் பெற்றேன் காளை கைம்மாறு காணேன்
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான்
#1685
முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான்
வடிவு அமை மனன் ஒன்று ஆக வாக்கு ஒன்றா மறுத்தலோடும்
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி
இடி முரசு அனைய சொல்லால் இற்றென விளம்புகின்றான்
#1686
பூ இயல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய நங்கை
காவியம் கண்ணி வந்து பிறத்தலும் கணிகள் ஈண்டி
மூவியல் திரிதல் இன்றி சாதக முறையில் செய்தார்
ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று உரைப்ப நேர்ந்தான்
#1687
வார் உலாம் முலையினாட்கும் வரி சிலை தடக்கையாற்கும்
சீர் உலாம் கோலம் செய்தார் செப்பினார் வதுவை நல் நாள்
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்ப தீ வேட்டு
ஏர் உலாம் கோதை இன்பத்து இள நலம் பருகுகின்றான்
#1688
மோட்டு இளம் குரும்பை அன்ன முலை கடா களிறு முத்தம்
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி
ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து வெம் போர்
ஓட்டற ஓட்டி பைம் தார் உழக்கி இட்டு வந்த அன்றே
#1689
ஒண் மணி குழை வில் வீச ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன
வண்ண மேகலைகள் ஆர்ப்ப வான் சிலம்பு ஒலிப்ப முத்தும்
கண்ணியும் பசும்பொன் நாணும் கதிர் முலை புடைப்ப காமர்
அண்ணல் அம் குமரன் தன்னொடு ஆய்_இழை ஆடினாளே
#1690
மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும்
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண்
ஆசு அறு வயிர தோட்டி நுதல் அணிந்து அமுத செ வாய்
காசு அறு கவளம் ஆக களிறு கோள் பட்டது அன்றே
#1691
ஒப்பு இணை தனக்கு இலாதான் உறு வரை அகலம் மூழ்கி
செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை பொருது சேப்ப
கற்பக மரத்தை புல்லி கைவிடாது ஒழிந்து காம
துப்புரவு உமிழும் காமவல்லியின் தோற்றம் ஒத்தாள்
#1692
காய்வுறு வேட்கை தன்னால் கங்குலும் பகலும் விள்ளான்
வேய் வெறுத்து அமைந்த தோளான் விழு திரை அமுதம் என்று
சேய் நலம் கடந்த செல்வன் திரு நலம் தெளித்திட்டு ஆற்ற
வாய்விடாள் பருகி இட்டாள் மட கிள்ளை மருட்டும் சொல்லாள்
#1693
திரை இடை கொண்ட இன் நீர் அமுது உயிர்பெற்றது என்னும்
உரை உடை கோதை மாதர் ஒளி நலம் நுகர்ந்து நாளும்
வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ
கரை கடல் அனைய தானை காவலன் காதலானே
#1694
வாளினால் மிடைந்த கண்ணாள் வரு முலை தடத்துள் வைகி
தோளினால் மிடைந்து புல்லி தொண்டை வாய் அமுதம் மாந்தி
காளை செல்கின்ற நாளுள் கட்டியங்காரன் மூதூர்
மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பலுற்றேன்
#1695
வெண் மதி இழந்த மீன் போல் விடலைக்கு தம்பி மாழாந்து
ஒண் மதி சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான்
புள் மதித்து உடைந்த போது பொழிந்து மட்டு ஒழுகும் நன் நாட்டு
உள் மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே
#1696
வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒரு மகள் வேல் கண் பாவை
ஒள் இழை அவளை கேட்பான் உறு வலி செல்லும் ஆங்கண்
வள் இதழ் கோதை தானே இட்டது ஓர் வண்ணம்-தன்னை
கொள்ள தான் முரலலுற்று கோல் அமை வீணை கொண்டாள்
#1697
ஆடக செம்பொன் ஆணி ஆன் நெய் வார்ந்து அனைய நுண் கோல்
மாடகம் நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கி
சூடகம் அணிந்த முன் கைத்தொகு விரல் சேப்ப எற்றி
தோடு அலர் கோதை கீதம் துணிவினில் பாடுகின்றாள்
#1698
இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து கையின்
நறு மலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனி வளையும் தோள் துறப்ப
கண் ஓவா முத்து உறைப்ப தோழி கழிவேனோ
#1699
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல்
ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார்
எண்ணார் துறப்ப இன வளையும் தோள் துறப்ப
மண் ஆர் வேல் கண் துயிலா தோழி மருள்வேனோ
#1700
வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை
கொண்டு ஓச்சும் காதலார் கூடார் துறந்தார்
கூடார் அவர் துறப்ப கோல் வளையும் தோள் துறப்ப
தோடார் பூம் கண் துயிலா தோழி துயர்வேனோ
#1701
ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும்
தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைம் காய்
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி
தேன் தயங்கு இணர் பெய் கோதை சிந்தையின் நீட்டினாளே
#1702
நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய்
அண்ணலை நினைந்து வெய்துயிர்ப்ப ஆய் நலம்
வண்ணத்தின் மழுங்கி வாள் கண்ணி வாடினாள்
#1703
மின் தவழ் மணி வரை மாலை மார்பனை
பொன் தவழ் இள முலை பொருது புல்லும் நாள்
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள்
சென்றனன் சீவகற்கு இளைய செல்வனே
#1704
ஐ விலின் அகல நின்று ஆங்கு அடி தொழுது இறைஞ்சினாற்கு
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி
கை விலும் கணையும் இல்லா காமன் போந்து இருக்க என்ன
மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான்
#1705
திங்கள் வாள் முகமும் நோக்கான் திரு முலை தடமும் நோக்கான்
அம் கதிர் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான்
செம் கயல் கண்ணினாள் தன் சீறடி சிலம்பு நோக்கி
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே
#1706
பொறி குலாய் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல்
வெறி குலாய் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி
நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்றான்
#1707
காய் தழல் கவரப்பட்ட கற்பக மரத்தின் கன்றி
ஆய் கழல் குருசில் வாடி அற்பு தீ அழலுள் நிற்ப
வாய் மொழிந்து உரைக்கல் உற்றாள் வனை குழல் கற்றை வண் தார்
தோய் பிழி துளிக்கும் கண்ணி சுரும்பு சூழ் கொம்பு அனாளே
#1708
மது முகத்து அலர்ந்த கோதை மாற்றம் மைந்தற்கு உரைப்பாள்
கொதி முக குருதி வை வேல் குருசிலோ நம்மை உள்ளான்
விதி முக மணங்கள் எய்தி வீற்று இருந்து இன்பம் உய்ப்ப
மதி முகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள்
#1709
வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரை
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள்
நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று அன்றே
#1710
பொற்பு உடை அமளி அங்கண் பூவணை பள்ளி மேலால்
கற்பக மாலை வேய்ந்து கரும் குழல் கை செய்வானை
முற்பட கண்டு நோக்கி முறுவல் கொள் முகத்தன் ஆகி
வில் படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான்
#1711
செய்த விஞ்சையை தே_மொழி மாற்றலும்
மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான்
பொய்யது அன்மையின் பூம் கழலான் அடிக்கு
எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான்
#1712
மதுக்கை மாலையும் வண்டு இமிர் சாந்தமும்
புது கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும்
கதுப்பின் நானமும் காமர் கலங்களும்
பதி-கண் தம் என பாவையும் ஏவினாள்
#1713
மணியின் மேல் புறம் போர்த்து அன்ன மா கதிர்
துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன்
பணியின் பல் கலம் தாங்குபு சென்ற பின்
அணி செய் கோதை அம் காமினி ஓதினாள்
#1714
சாந்தினால் மெழுகி தட மா மலர்
ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை
ஏந்தி இட்டு இளையாரொடு நீங்கினாள்
காந்தி வண்டு உணும் கற்பக கோதையே
#1715
தூமம் ஆர்ந்த துகில் அணை பள்ளி மேல்
காமன் தம்பியின் காளை கிடந்த பின்
ஏமமாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம்
நாம நல் ஒளி நந்தனை என்பவே
#1716
மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும்
பொன்னும் பூத்தது ஓர் கற்பக பூ மரம்
அன்ன காளை அமர் துயில் தேறினான்
மன்னும் வெம் சுடர் மாக்கல் இவர்ந்ததே
#1717
செய்ய வாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட
வெய்ய வாள் தட கை வீரன் இருத்தலும் விசயன் என்பான்
கையவாம் சிலையினானை கண்டு வந்து அருகு சேர்ந்தான்
பையவாய் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான்
#1718
தெய்வமே கமழும் மேனி திரு ஒளி கலந்த மார்பின்
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாதுவிட்டான்
பையவே பெயர்ந்து போகி பனி மலர் கோதை மார்பின்
மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனை சொன்னான்
#1719
சந்தன களியும் பூவும் தமனிய குடத்துள் நீரும்
கெந்தம் நாறு அகிலும் முத்து கிளர் ஒளி விளக்கும் ஏந்தி
அந்தில் வில் பயிற்றும் தானம் வழிபட ஆங்கு சென்றாள்
மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்
#1720
ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி
சேர் துணை கழற சென்றேன் செல்வியோடு ஆங்கு கண்டேன்
போர் பல கடந்த வேலோய் மாயம்-கொல் போற்றி என்றாள்
#1721
கணை கடி கண்ணி சொல்ல காணிய யானும் சென்றேன்
மணி இலங்கு ஒண் பொன் வை வாள் கேடக மருங்கு வைத்த
இணை கடி சீயம் அன்னான் இளமையும் வனப்பும் ஏரும்
துணை அமை வடிவும் சொல்லி நின் பொறி ஒற்றிக்கொண்டான்
#1722
நீண்ட தோள் நெடிய செம் கண் நீலமாய் சுரிந்த குஞ்சி
பூண்டது ஓர் ஆர மேனி பொன் உரைத்து இட்டது ஒக்கும்
காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளை பைம் தார்
ஆண்தகை அழகன் யார்-கொல் அறியலன் அவனை என்றான்
#1723
இனத்து-இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம்
மனத்து-இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம்
புனத்து-இடை மயில் அனாளால் பொருள் உரை பெற்று வந்தான்
என தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே
#1724
கரு முகில் பொடித்த வெய்யோன் கடல்-இடை நடப்பதே போல்
திருமுகம் சுடர நோக்கி சீவகன் சென்று சேர்ந்தான்
தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போல தம்பி
திரு மலர் தட கை கூப்பி சேவடி தொழுது வீழ்ந்தான்
#1725
தாமரை தட கை கூப்பி தாள் முதல் கிடந்த தம்பி
தாமரை தடத்தை ஒத்தான் தமையனும் பருதி ஒத்தான்
தாமரை குணத்தினானை மு முறை தழுவிக்கொண்டு
தாமரை செம் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான்
#1726
என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடி
பொன் உறு மேனி கன்றி போயினீர் பொறி இலாதேன்
முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான்
#1727
ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலை
பூ குலாம் அலங்கல் மாலை புள் கொடியாற்கும் உண்டே
வீக்கு வார் முலையினார் போல் வெய்துயிர்த்து உருகி நைய
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான்
#1728
குரவரை பேணல் இன்றி குறிப்பு இகந்து ஆய பாவம்
தரவந்த பயத்தினால் இ தாமரை பாதம் நீங்கி
பருவரும் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி
திருவடி மிசையின் வைத்து சிலம்ப நொந்து அழுதிட்டானே
#1729
பரிந்து அழுகின்ற தம்பி பங்கயம் அனைய செம் கண்
பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று
மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான்
அருந்ததி கற்பினாளை அடி பணிந்து அவனும் கண்டான்
#1730
கொழுநனை குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்க
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள்
கொழு மலர் தடம் கண் செ வாய் குவி முலை கொம்பு அனாளே
#1731
குட வரை அனைய மார்பில் குங்குமம் எழுதி கோல
வட வரை வைர சாதி வால் ஒளி கலந்த பைம் பூண்
தட வரை மார்பின் மின்ன தம்பியோடு அமிர்தம் உண்டான்
பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள்
#1732
விருந்து அவள் செய்த பின்றை தம்பியும் தானும் வேறா
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்ன
கரும் கழல் செம் கண் பைம் தார் காளை ஈது உரைக்கின்றானே
#1733
புண் உமிழ் குருதி போர்த்த பொரு களம் போன்று தோன்றி
அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து செ வான் கொள் அந்தி
துண்ணென களத்தின் நீங்கி தொல் நகர் புறத்து தொக்கே
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான்
#1734
மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய
கல் நவில் தோளினானை காண்கலேம்-ஆயின் இன்னே
மன்னனை வாளினாலே வானகம் காட்டி மூதூர்
தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான்
#1735
சிலையொடு திரண்ட திண் தோள் தேவ மாதத்தன் என்பான்
மலை உடை உருமின் சீறி மாற்றலன் உயிரை உண்டல்
இலை உடை கண்ணியீர்க்கு இஃது எளிது நம் குருசில் உண்மை
உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணி-மின் என்றான்
#1736
பவ்வத்து பிறந்த வெய்ய பருதி போல் திறலினாற்கு
தெவ்வரை கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே
எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும்
மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனை சொன்னான்
#1737
நம்பி நந்தட்டன் கேட்க நங்கட்கு குரவர் உள்ளார்
தம் பரிவு அகற்றி ஓம்பி நீர் கடன் மரபு தாங்கு இ
கம்பம் செய் பரிவு நீங்கி கற்பிப்பார்க்கு உவர்த்து சொல்லார்
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான்
#1738
ஓம் படை சாற்றல்-பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே
ஆம் புடை என்-கண் இல்லை அங்கை என் கண்களாக
தேம் படு தாரினீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன்
காம்பு அடு காட்டு தீயின் கனன்று உடன் எழுக என்றேன்
#1739
கோட்டு இளம் குழவி திங்கள் இரண்டு அன்ன எயிற்று கோளே
வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய
வாள் படை எழுந்து வாழ்க சீவகன் என்னும் ஆங்கண்
பாட்டினை ஒருவன் எங்கள் பரிவற பாடினானே
#1740
வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா
அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழி கார் என்று எண்ணி
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான்
#1741
பாட்டினை கேட்டலோடும் பழம் பகை நட்பும் ஆமே
ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால்
நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா
ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே
#1742
மணி பொதி துகிலின் தோன்றும் மஞ்சு சூழ் வரைகள் நாடி
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன்
துணை மலர் காந்தள் ஊழ்த்து சொரிவ போல் தோன்றி முன்கை
அணி வளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள்
#1743
என்னை கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்க
பொன்னை கண்டு அனைய சாயலவர் புரிந்து அடிசில் ஏந்த
துன்னி நோய் உற்ற மஞ்ஞை தோற்றம் போல் இருந்த நங்கை
பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி
#1744
அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர்
கடியிர் நீர் ஐய நீரே என கசிந்து உருகி காய் பொன்
கொடி துகள் ஆர்ந்த வண்ணம் குழைந்து மாநிலத்து வீழ்ந்த
பெடை மயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன்
#1745
செல்வனை இன்று நாடி சேவடி தொழுதல் ஒன்றோ
அல்லது இ உடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ
எல்லை இ இரண்டின் ஒன்றை இ பகல் முடிப்பல் என்னா
மல்லிகை கோதை ஐம்பால் மலைமகள் மனையை சேர்ந்தேன்
#1746
மணி ஒலி வீணை பண்ணி மாண்ட கோல் தடவ மாதர்
அணி முலை தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றி
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று
இணை மலர் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன்
#1747
சொல்லிய என்னை நோக்கி துளங்கல் நும் அடிகள் பாதம்
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய் பட்ட பின்றை
எல் இருள் விஞ்சை ஓதி இ வழி இடுவித்திட்டாள்
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான்
#1748
தாதையார் உவப்ப செய்வான் தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய
போதரா நின்ற-போழ்தில் போர் புலி குழாத்தின் சீறி
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி
சாதலே புரிந்து தோன்றும் தன்மை அ நகரில் கண்டேன்
#1749
கண்ட பின் நின்னை காண்பேன் கரு வரை உலம்பி பல்-கால்
விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா
எண்திசையோரும் எள்க குஞ்சரம் இரிய பாயும்
ஒண் திறல் சிங்கம் அன்ன கதழ் ஒளி உடற்சி கண்டேன்
#1750
சினம் தலை பெருக்கி தீ கோள் உறுப்பினை சுருக்கி தீ போல்
அனன்று நில்லாத கண்ணால் நிறுத்தின செவியிற்று ஆகி
முனம் புக அடக்கி பின் போந்து இருந்து பாய்வான் அமைந்த
இனம் தலை புலியோடு ஒக்கும் தோழர் நின்னிடத்தில் கண்டேன்
#1751
கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர்
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா
மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே
ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்-கண் என்றான்
#1752
பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாதலே பெரிது நன்று என்று
எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப்பட்டு
கண்ணி நான் இயக்கன் தன்னை சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
அண்ணல் வந்து அழுங்க தோன்றி ஆங்கு என்னை கொண்டு போந்தான்
#1753
மந்திரம் மூன்றும் தந்து வானவன் விடுப்ப செல்வேற்கு
இந்திர திருவில் சூழ்ந்த இன மழை குழாத்தின் வேழம்
கொந்து அழல் காட்டு தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கி
சிந்தித்து கவன்று நிற்ப திரு மழை பொழிந்தது அன்றே
#1754
வெல் களிற்று அச்சம் நீக்கி விரைவொடு வனத்தின் ஏகி
பல்லவ தேயம் நண்ணி தனபதி என்னும் மன்னன்
நல் வனப்பு உடைய தேவி திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன் மற்று உலோகபாலன் திருமகள் பதுமை என்பாள்
#1755
அரி குரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்தது ஆக
திரு விழை அவளை தீர்த்தேன் தீர்வு இலா நண்பு வேண்டி
பொரு களி யானை மன்னன் புனை இழை அவளை தந்தான்
இரு மதி கழிந்த பின்றை இடை இரா பொழுதில் போந்தேன்
#1756
வாவி புள் நடையினாளை வஞ்சித்து தக்க நாட்டை
மேவி யான் காணலுற்று சார்தலும் இப்பர் உள்ளான்
தூவி பொன