** 1 களவு
@1. இயற்கைப் புணர்ச்சி
** காட்சி
#1
பூ மரு கண் இணை வண்டாப் புணர் மெல் முலை அரும்பாத்
தே மரு செவ் வாய் தளிராச் செருச் செந்நிலத்தை வென்ற
மா மரு தானை எம் கோன் வையை வார் பொழில் ஏர் கலந்த
காமரும் பூங்கொடி கண்டே களித்த எம் கண் இணையே
**ஐயம்
#2
உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் தென்னாட்டு ஒளி சேர்
விரை உறை பூம் பொழில் மேல் உறை தெய்வம்-கொல் அன்றி விண் தோய்
வரை உறை தெய்வம்-கொல் வான் உறை தெய்வம்-கொல் நீர் மணந்த
திரை உறை தெய்வம்-கொல் ஐயம் தரும் இத் திரு_நுதலே
** துணிபு
#3
பா அடி யானைப் பராங்குசன் பாழிப் பகை தணித்த
தூ வடி வேல் மன்னன் கன்னித் துறை சுரும்பு ஆர் குவளைப்
பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல்
சேவடி தோய்வ கண்டேன் தெய்வம் அல்ல அளிச் சே_இழையே
** நயப்பு
#4
வேறும் என நின்று இகல் மலைந்தார் விழிஞத்து விண் போய்
ஏறும் திறம் கண்ட கோன் தென் பொதியில் இரும் பொழில்-வாய்த்
தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய்
நாறும் தகைமையவே அணி ஆம்பல் நறு மலரே
#5
தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லாக்
கோ உண்டை கோட்டாற்று அழிவித்த கோன் கொங்க நாட்ட செம் கேழ்
மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும்
பூ உண்டை தாம் உளவோ நுங்கள் கானல் பொழிவிடத்தே
#6
இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில் கல் சாய்ந்து அழியப்
பெரும் கழல் வீக்கிய பூழியன் மாறன் தென் பூம் பொதியில்
மருங்கு உழலும் களி வண்டினங்காள் உரையீர் மடந்தை
கரும் குழல் நாறும் மெல் போது உளவோ நும் கடி பொழிலே
#7
விண்டே எதிர்ந்த தெவ் வேந்தர் பட விழிஞத்து வென்ற
ஒண் தேர் உசிதன் என் கோன் கொல்லிச் சாரல் ஒளி மலர்த் தாது
உண்டே உழல்வாய் அறிதி அன்றே உளவேல் உரையாய்
வண்டே மடந்தை குழல் போல் கமழும் மது மலரே
#8
பொரும் கழல் வானவற்காய் அன்று பூலந்தைப் போர் மலைந்தார்
ஒருங்கு அழல் ஏற என்றான் கொல்லிச் சாரல் ஒண் போதுகள்-தம்
மருங்கு உழல்வாய் நீ அறிதி வண்டே சொல் எனக்கு மங்கை
கரும் குழல் போல் உளவோ விரை நாறும் கடி மலரே
#9
தேற்றம் இல்லாத தெவ் வேந்தரைச் சேவூர் செரு அழித்துக்
கூற்றம் அவர்க்கு ஆயவன் கொல்லிச் சாரல் கொங்கு உண்டு உழல்வாய்
மாற்றம் உரை நீ எனக்கு வண்டே மங்கை வார் குழல் போல்
நாற்றம் உடைய உளவோ அறியும் நறு மலரே
** பிரிவச்சம்
#10
மின்னின் பொலிந்த செவ் வேல் வலத்தான் விழிஞத்து எதிர்ந்த
மன்னிற்கு வானம் கொடுத்த செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய்
நின்னின் பிரியேன் பிரியினும் ஆற்றேன் நெடும் பணைத் தோள்
பொன்னின் பசந்து ஒளி வாட என்னாம்-கொல் புலம்புவதே
#11
அணி நிற நீள் முடி வேந்தரை ஆற்றுக்குடி அழியத்
துணி நிற வேல் வலம் காட்டிய மீனவன் தொண்டி அன்ன
பிணி நிற வார் குழல் பெய் வளைத் தோளி நின்னைப் பிரியேன்
மணி நிறம் பொன் நிறம் ஆக என் ஆவி வருந்துவதே
#12
பொன் ஆர் புனை கழல் பூழியன் பூலந்தைப் பூ அழிய
மின் ஆர் அயில் கொண்ட வேந்தன் விசாரிதன் வெண் திரை மேல்
முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி
அன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றேன் அழுங்கற்கவே
@2. வன்புறை
#13
பா அணை இன் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற
வேவணை வெம் சிலையான் வஞ்சி அன்ன இனையல் எம் ஊர்த்
தூ வண மாடச் சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர்
ஆவண வீதி எல்லாம் நிழல் பாய நின்று அணவருமே
#14
திணி நிற நீள் தோள் அரசு உகத் தென்ன நறையாற்று மின் ஆர்
துணி நிற வேல் கொண்ட கோன் தொண்டி அன்னாய் துயரல் எம் ஊர்
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர்
அணி நிற மாளிகை மேல் பகல் பாரித்து அணவருமே
#15
ஒன்றக் கருதா வயவர் நறையாற்றுடன் அழிந்து
பொன்றப் படை தொட்ட கோன் புனநாடு அனையாய் நுமர்கள்
குன்றத்திடை புனம் காவல் இட்ட குரூஉச் சுடர் எம்
மன்றத்திடை இருள் நீக்கும் படித்து எங்கள் வாழ் பதியே
#16
சேல் அங்கு உளர் வயல் சேவூர் எதிர்நின்ற சேரலனை
மால் அங்கு அடைவித்த மன்னன் வரோதயன் வஞ்சி அன்ன
ஏலம் கமழ் குழல் ஏழை எம் ஊர் எழில் மாடத்து உச்சிச்
சூலம் துடைக்கும் நும் ஊர் மணி மாடத் துகில் கொடியே தலைவன்
** பாங்கியை உணர்தல்
#17
யாழ் இயல் மென் மொழியார் தம்முள் வைத்து எனக்கு எவ்விடத்தும்
தோழி என் ஆருயிர் என்பது காட்டும் செறி பொழில் சூழ்
கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன் வண்டு அறை தார்ப்
பூழியன் மாறன் புகார் அனையாள் படைப் போர் விழியே
** தலைவன் தலைவியது அருமை நினைதல்
#18
சின வேல் வலம் கொண்டு செந்நிலத்து ஏற்ற தெவ் வேந்தர்கள் போய்
இன வேய் நரல் குன்றம் ஏற என்றோன் இரும் தண் சிலம்பின்
புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லாம்
கனவே நனவாய் விடினும் எய்தாது இனிக் கண்ணுறவே
#19
இரு நிலம் காரணமாக நறையாற்று இகல் மலைந்த
பொரு நில வேந்தரைப் பொன் உலகு ஆள்வித்த பூ முக வேல்
பெருநிலம் காவலன் தென் புனல் நாடு அன்ன பெண் அணங்கின்
திரு நலம் சேர்ந்தது எல்லாம் கனவே என்று சிந்திப்பனே
#20
கை ஏர் சிலை மன்னர் ஓடக் கடையல் தன் கண் சிவந்த
நெய் ஏர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்-வாய்
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம்
பொய்யே இனி மெய்மை ஆயினும் இல்லைப் புணர் திறமே
** ஆற்றாமை
#21
தேயத்தவர் உயிரைப் புலன் அன்று என்பர் செந்நிலத்தைக்
காயக் கனன்று எரிந்தார் மருமத்துக் கடும் கணைகள்
பாயச் சிலை தொட்ட பஞ்சவன் வஞ்சிப் பைம் பூம் பொழில்-வாய்
ஆயத்திடை இதுவோ திரிகின்றது என் ஆருயிரே
#22
இன் உயிர் கண்டறிவார் இல்லை என்பர் இகல் மலைந்தோர்
மன் உயிர் வான் சென்று அடையக் கடையல் உள் வென்று வையம்
தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லித் தாழ் பொழில்-வாய்
என் உயிர் ஆயத்திடை இதுவோ நின்று இயங்குவதே
@3. பாங்கற் கூட்டம்
** பாங்கனை நினைதல்
#23
கயில் அணி ஆர் கழல் காவலர் ஓடக் கடையல் வென்ற
அயில் அணி வேல் அரிகேசரி ஒன்னார் என்பது
உயிர் அனையான்-தனைக் கண்டு உரைசெய்தால் ஒழிதல் உண்டே
குயில் மொழியாள்-தனைச் சென்று யான் இன்னமும் கூடுதலே
** உற்றது வினாதல்
#24
நீடிய பூம் தண் கழனி நெல்வேலி நகர் மலைந்தார்
ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அழுங்கி
வாடிய காரணம் என்னை-கொல்லோ உள்ளம் வள்ளலுக்கே
#25
வண்டு உறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல்
கொண்டு உறை நீக்கிய தென்னவன் கூடல் கொழும் தமிழின்
ஒண் துறை மேல் உள்ளம் ஓடியதோ அன்றி உற்றது உண்டோ
தண் துறைவா சிந்தை வாடி என்னாம்-கொல் தளர்கின்றதே
#26
தெவ்வாய் எதிர்நின்ற சேரலர்கோனைச் செருக்கு அழித்துக்
கை வான் நிதியம் எல்லாம் உடனே கடையல் கவர்ந்த
நெய் வாய் அயில் நெடுமாறன் பகை போல் நினைந்து பண்டை
ஒவ்வா உருவும் மொழியும் என்னோ வள்ளல் உள்ளியதே
** உற்றதுரைத்தல்
#27
அளை ஆர் அரவின் குருளை அணங்க அறிவு அழிந்து
துளை ஆர் நெடும் கைக் களிறு நடுங்கித் துயர்வது போல்
வளை ஆர் முனை எயிற்றார் மன்னன் மாறன் வண் கூடல் அன்ன
இளையார் ஒருவர் அணங்க நைந்தால் யான் நினைகின்றதே
#28
அலை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அழல் ஏறச் செற்ற
கொலை ஆர் அயில் படைக் கொற்றவன் கூடல் அன்னார் ஒருவர்
முலையாய் முகிழ்த்து மென் தோளாய்ப் பணைத்து முகத்து அனங்கன்
சிலையாய் குனித்துக் குழலாய் சுழன்றது என் சிந்தையே
#29
பொரு நெடும் தானைப் புல்லார்-தமைப் பூலந்தைப் பூ அழித்த
பரு நெடும் திண் தோள் பராங்குசன் கொல்லிப் பனி வரை-வாய்த்
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்துக்
கரு நெடும் கண் கண்டு மீண்டின்று சென்றது என் காதன்மையே
** கற்றறி பாங்கன் கழறியுரைத்தல்
#30
ஆய்கின்ற தீம் தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான்
தோய்கின்ற முத்தக்குடை மன்னன் கொல்லி அம் சூழ் பொழில்-வாய்
ஏய்கின்ற ஆயத்திடை ஓர் இளம்_கொடி கண்டேன் உள்ளம்
தேய்கின்றது என்பது அழகியது அன்றோ சிலம்பனுக்கே
#31
தண் தேன் அறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளரத்
திண் தேர் கடாய் செற்ற கொற்றவன் கொல்லிச் செழும் பொழில்-வாய்
வண்டு ஏர் நறும் கண்ணியாய் அங்கு ஒர் மாதர் மதி முகம் நீ
கண்டு ஏர் தளரின் நல்லார் இனி யார் இக் கடலிடத்தே
** கழற்றெதிர்மறை
#32
விண்டார் பட விழிஞக் கடல் கோடியுள் வேல் வலங்கைக்
கொண்டான் குடை மன்னன் கொல்லிக் குடவரைக் கொம்பர் ஒக்கும்
வண்டார் குழல் மட மங்கை மதர்வை மெல் நோக்கம் என் போல்
கண்டார் உளரோ உரையார் பிறவி அன்ன கட்டுரையே
#33
விண்டு அலங்கு எஃகொடு வேணாட்டு எதிர்நின்ற வேந்து அவித்து இ
மண்டலம் காக்கின்ற மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாள்
குண்டலம் சேர்த்த மதி வாள் முகத்த கொழும் கயல் கண்
கண்டிலீர் கண்டால் உரையீர் உரைத்த இக் கட்டுரையே
#34
மண் கொண்டு வாழ வலித்து வந்தார்-தம் மதன் அழித்துப்
புண் கொண்ட நீர் மூழ்கப் பூலந்தை வென்றான் புகார் அனைய
பண் கொண்ட சொல் அம் மடந்தை முகத்துப் பைம் பூம் குவளை
கண் கண்ட பின் உரையீர் உரைத்த இக் கட்டுரையே
** பாங்கன் கவன்றுரைத்தல்
#35
வன் தாள் களிறு கடாஅய் அன்று வல்லத்து மன் அவியச்
சென்றான் கரும் கயல் சூட்டிய சென்னிச் செம்பொன் வரை போல்
நின்றான் நிறையும் அறிவும் கலங்கி நிலைதளரும்
என்றால் தெருட்ட வல்லார் இனி யார் இவ் இரு நிலத்தே
** இயலிடங்கேட்டல்
#36
வல்லிச் சிறு மருங்குல் பெரும் தோள் மடவார் வடிக் கண்
புல்லிப் பிரிந்து அறியாத மந்தாரத்து எம் கோன் புனல் நாட்டு
அல்லித் தடம் தாமரை மலரோ அவன் தண் அளியார்
கொல்லிக் குடவரையோ அண்ணல் கண்டது அக் கொம்பினையே
#37
கண்டார் மகிழும் கடி கமழ் தாமரையோ கடையல்
விண்டார் விழு நிதிக் குப்பையும் வேழக் குழாமும் வென்று
கொண்டான் மழை தவழ் கொல்லிக் குடவரையோ உரை நின்
ஒண் தார் அகலம் மெலிவித்த மாதர் உறைவிடமே
** இயலிடங்கூறல்
#38
அடி வண்ணம் தாமரை ஆடு அரவு அல்குல் அரத்தம் அங்கை
கொடி வண்ணம் நுண் இடை கொவ்வைச் செவ் வாய் கொங்கைக் கோங்கரும்பின்
படி வண்ணம் செங்கோல் பராங்குசன் கொல்லிப் பனி வரை-வாய்
வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே
#39
திரு மா முகத் திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர்
வரும் மா முலை மணிச் செப்பு இணை வானவன் கானம் முன்னக்
குரு மா நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட தென்னன் கன்னிப்
பெருமான் வரோதயன் கொல்லை அம் சாரல் அப் பெண்_கொடிக்கே
** குறிவழிச்சேறல்
#40
பொன் அம் கனை கழல் பூழியன் பூலந்தைப் போர் மலைந்த
தென்னன் பொதியில் செழும் புனம் காக்கும் சிலை நுதல் பூண்
அன்னம்-தனை ஆரணங்கினை ஆடு அமைத் தோளியை ஏழ்
மன்னும் கடல் அமிழ்தம்-தனைக் கண்டு வருகுவனே
#41
கடித் தடம் விண்ட கமலம் முகம் கமலத்து அரும்பு ஏர்
பொடித்து அடங்கா முலை பூலந்தைத் தெவ் மன்னர் பூ அழிய
இடித்து அடங்கா உரும் ஏந்திய கோன் கொல்லி ஈர்ம் பொழில்-வாய்
வடித் தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே
** குறிவழிக்காண்டல்
#42
தண் தாது அலர் கண்ணி அண்ணல்-தன் உள்ளம் தளர்வு செய்த
வண்டு ஆர் குழலவளே இவள் மால் நீர் மணற்றிமங்கை
விண்டார் உடல் குன்றம் ஏறி விழி கண் கழுது உறங்கக்
கண்டான் பொதியில் இதுவே அவன் சொன்ன கார்ப் புனமே
#43
சினமும் அழிந்து செரு இடை தோற்ற தெவ் வேந்தர்கள் போய்க்
கனவும்படி கடையல் செற்ற வேந்தன் கனம் குழலார்
மனமும் வடிக் கண்ணும் தங்கும் மந்தாரத்து எம் மன்னன் கொல்லிப்
புனமும் இது இவளே அவன் தான் கண்ட பூங்கொடியே
** தலைவனை வியந்துரைத்தல்
#44
இரு நெடும் தோள் அண்ணலே பெரியான் வல்லத்து ஏற்ற தெவ்வர்
வரு நெடும் தானையை வாட்டிய கோன் கொல்லி மால் வரை-வாய்த்
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்துக்
கரு நெடும் கண் கண்டும் மற்று வந்தாம் எம்மைக் கண்ணுற்றதே
#45
பெரிய நிலைமை அவரே பெரியர் பிறை எயிற்றுக்
கரிய களிறு உந்தி வந்தார் அவியக் கடையல் வென்ற
வரிய சிலை மன்னன் மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாள்
அரிய மலர் நெடும் கண் கண்டு மால் அண்ணல் ஆற்றியதே
** கண்டமை கூறல்
#46
மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னைப்
பொன் நேர் புது மலர் தாய்ப் பொறி வண்டு முரன்று புல்லா
மன் ஏர் அழிய மணற்றி வென்றான் கன்னி ஆர் துறை-வாய்த்
தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே
#47
களி மன்னு வண்டு உளர் கைதை வளாய்க் கண்டல் விண்டு தண் தேன்
துளி மன்னு வெண் மணல் பாய் இனிதே சுடர் ஓர் மருமான்
அளி மன்னு செங்கோல் அதிசயன் ஆற்றுக்குடியுள் வென்ற
ஒளி மன்னு முத்தக்குடை மன்னன் கன்னி உயர் பொழிலே
#48
தேன் உறை பூம் கண்ணிச் சேரலன் சேவூர் அழியச் செற்ற
ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல்
கான் உறைப் புன்னைப் பொன் ஏர் மலர் சிந்திக் கடி கமழ்ந்து
வான் உறைத் தேவரும் மேவும் படித்து அங்கு ஓர் வார் பொழிலே
@4 இடந்தலைப்பாடு
** மொழிபெற வருந்தல்
#49
மேவி ஒன்னாரை வெண்மாத்து வென்றான் கன்னி வீழ் பொழில்-வாய்
தேவி என்றாம் நின்னை யான் நினைக்கின்றது சேய் அரி பாய்
காவி வென்று ஆய கண்ணாய் அல்லையேல் ஒன்று கட்டுரையாய்
ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே
#50
திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த
உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில்
வரை உறை தெய்வம் என்றேற்கு அல்லையேல் உன்றன் வாய் திறவாய்
விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே
** அவயவம் தேறல்
#51
பொதியில் அம் தென்மலைப் பூழியன் பூலந்தைப் போர் மலைந்தான்
பதி வளம் கொண்டு பவளத்திடை நித்திலம் பதித்து
மதியிடம்-தன்னில் குவளை செலுத்தி ஒர் வஞ்சி நின்ற
அதிசயம் கண்டனையே அதுவே எனது ஆருயிரே
** இரந்து குறையுறுதல்
#52
மண்ணகம் காலால் அளந்தவன் மாறன் மலர்ப் பொழில் சூழ்
கண் அகன் காவிரிநாடு அனையீர் இக் கமழ் நறவத்
தண் நறும் போதும் தழையும் கொள்வீர் என்னில் தண்டி எம் மேல்
எண்ணும் ஐ காம சரம் படும் பட்டால் எளிவரவே
** மருங்கணைதல்
#53
அரும்பு உடைத் தொங்கல் செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன
சுரும்பு உடைக் கோதை நல்லாய் இவற்குத் துயர் செய்யும் என்று உன்
பெரும் படைக் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர்
கரும்பு உடைத் தோளும் அன்றோ எனை உள்ளம் கலக்கியதே
#54
தேம் தண் பொழில் அணி சேவூர் திருந்தார் திறல் அழித்த
வேந்தன் விசாரிதன் தெவ்வரைப் போல் மெலிவிக்கும் என்று உன்
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ்க்
காந்தள் விரலும் அன்றோ எம்மை உள்ளம் கலக்கியதே
** பொழிலிடைச்சேறல்
#55
ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர்
கோமான் குல மன்னர் கோன் நெடுமாறன் கொல்லிச் சிலம்பில்
ஏ மாண் சிலை நுதல் ஏழையை முன் எதிர்ப்பட்டு அணைந்த
தூ மாண் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே
#56
பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லாப்
பொரும் பார் அரசரை பூலந்தை வாட்டிய கோன் பொதியில்
கரும்பு ஆர் மொழி மட மாதரைக் கண்ணுற்று முன் அணைந்த
சுரும்பு ஆர் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே
** மொழிபெறாது கூறல்
#57
தன்னும் புரையும் மழை உரும் ஏறும் தன் தானை முன்னாத்
துன்னும் கொடி மிசை ஏந்திய கோன் கொல்லிச் சூழ் பொழில்-வாய்
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால்
மன்னும் சுடர் மணி போந்துகுமோ நுங்கள் வாயகத்தே
@5 மதியுடம்படுத்தல்
** பொழில் கண்டு உவத்தல்
#58
துனிதான் அகல மண் காத்துத் தொடு பொறி ஆய கெண்டை
பனி தாழ் பரு வரை வேல் வைத்த பஞ்சவன் பாழி வென்ற
குனி தாழ் சிலை மன்னன் கூடல் அன்னாளது கூடலைப் போல்
இனிதாய் எனது உள்ளம் எல்லாம் குளிர்வித்தது ஈர்ம் பொழிலே
#59
தேர் மன்னு தானை பரப்பித் தென் சேவூர்ச் செரு மலைந்த
போர் மன்னர்-தம்மைப் புறம்கண்டு நாணிய பூம் கழல் கால்
ஆர் மன்னு வேல் அரிகேசரி அம் தண் புகார் அனைய
ஏர் மன்னு கோதையைப் போல் இனிதாயிற்று இவ் ஈர்ம் பொழிலே
** பதியும் பெயரும் வினாதல்
#60
நீரின் மலிந்த செவ் வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார்
போரின் மலிந்த வெம் தானை உரம் கொண்ட கோன் பொதியில்
காரின் மலிந்த பைம் பூம் புனம் காக்கின்ற காரிகையீர்
ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே
#61
நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன் நெல்வேலி ஒன்னார்
கதியின் மலிந்த வெம் மாவும் களிறும் கவர்ந்து கொண்டான்
பொதியில் மணிவரைப் பூம் புனம் காக்கும் புனை_இழையீர்
பதியின் பெயரும் நும் பேரும் அறிய பகர்-மின்களே
#62
அறை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அமர் சாய்ந்து அழியக்
கறை ஆர் அயில் கொண்ட கோன் கன்னிக் கார்ப் புனம் காக்கின்ற வான்
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர்
மறையாது உரை-மின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே
#63
கறையின் மலிந்த செவ் வேல் வலத்தால் தென் கடையல் வென்ற
அறையும் கழல் அரிகேசரி அம் தண் புகார் அனைய
பிறையின் மலிந்த சிறு நுதல் பேர் அமர்க் கண் மடவீர்
உறையும் பதியும் நும் பேரும் அறிய உரை-மின்களே
** வேழம் வினாதல்
#64
வரும் மால் புயல் வண் கை மான் தேர் வரோதயன் மண் அளந்த
திருமாலவன் வஞ்சி அன்ன அம் சீறடிச் சே_இழையீர்
கரு மால் வரை அன்ன தோற்றக் கரும் கை வெண் கோட்டுப் பைம் கண்
பொரும் மால் களிறு ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே
#65
முடி உடை வேந்தரும் மும்மத யானையும் மொய் அமருள்
பொடி இடை வீழத் தென் பூலந்தை வென்றான் புகார் அனைய
வடி உடை வேல் நெடும் கண் மடவீர் நுங்கள் வார் புனத்தில்
பிடியொடு போந்தது உண்டோ உரையீர் ஒர் பெரும் களிறே
** கலைமான் வினாதல்
#66
சின மாண் கடல் படைச் சேரலன் தென் நறையாற்று வந்து
மன மாண்பு அழிய வை வேல் கொண்ட கோன் வையை நாடு அனைய
கன மாண் வன முலைக் கை ஆர் வரி வளைக் காரிகையீர்
இன மான் புகுந்ததுவோ உரையீர் நும் இரும் புனத்தே
#67
சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைத்த
கொலை மாண் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன கோல் வளையீர்
இலை மாண் பகழியின் ஏவுண்டு தன் இனத்துள் பிரிந்து ஓர்
கலை மான் புகுந்தது உண்டோ உரையீர் உங்கள் கார்ப் புனத்தே
#68
கண்ணுற்று எதிர்ந்த தெவ் வேந்தர் படக் கடையல் கொடி மேல்
விண்ணுற்ற கோள் உரும் ஏந்திய வேந்தன் வியன் பொதியில்
பண்ணுற்ற தே மொழிப் பாவை நல்லீர் ஒர் பகழி மூழ்கப்
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே
** வழி வினாதல்
#69
வெல்லும் திறம் நினைந்து ஏற்றார் விழிஞத்து விண் படரக்
கொல்லில் மலிந்த செவ் வேல் கொண்ட கோன் கொல்லிச் சாரலின் தேன்
புல்லும் பொழில் இள வேங்கையின் கீழ் நின்ற பூங்கொடியீர்
செல்லும் நெறி அறியேன் உரையீர் நும் சிறுகுடிக்கே
** இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
#70
செறிந்தார் கரும் கழல் தென்னவன் செந்நிலத்துச் செருவின்
மறிந்தார் புறம்கண்டு நாணிய கோன் கொல்லிச் சாரல் வந்த
நெறிந்து ஆர் கமழ் குஞ்சியானோடு இவளிடை நின்றது எல்லாம்
அறிந்தேன் பல நினைந்து என்னை ஒன்றே இவர் ஆருயிரே
#71
வண்ண மலர்த் தொங்கல் வானவன் மாறன் வை வேல் முகமும்
கண்ணும் சிவப்பக் கடையல் வென்றான் கடல் நாடு அனைய
பண்ணும் புரை சொல் இவட்கும் இவற்கும் பல நினைந்து இங்கு
எண்ணும் குறை என்னை ஒன்றே இருவர்க்கும் இன் உயிரே
#72
பங்கய நாள்_மலர் தான் வறிதாகப் படித்தலம் மேல்
இங்கு இரு பாதங்கள் நோவ நடந்து வந்து இப் பொழில்-வாய்த்
தங்கிய காரணம் என் நீ நினைந்து தட வரை-வாய்ச்
செங்கயல் தாம் வைத்த தென்னவன் நாடு அன்ன சே_இழையே
** கோலஞ்செய்துரைத்தல்
#73
கொடி ஆர் நுணுகு இடை தான் புனை கோலம் எனக் குலவும்
படி நான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலை-வாய்
வடிவு ஆர் இலங்கு அயில் மன்னரை வென்ற வழுதிச் செம்பொன்
அடி நாள்_மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே
** இன்றறிந்தேன்
#74
சுடர் திரி வானிடம் போதா வகை தொல் உலகில் வந்த
கடவுளர் தாம் என யான் நினைந்தேன் எழு காசினி காத்து
அடல் புரி தானை அரிகேசரி வட கொல்லியின்-வாய்
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே
** கொண்டு நீங்கல்
#75
வில் வளர் தானை விறல் மிகும் வேணாட்டு அரசர் வெம்மைக்
கல் வளர் கானம் புகச் செற்ற கைதவன் கார்ப் பொழில்-வாய்
மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரைத் தேன்
நல் வளர் கூந்தற்கு யான் கொணர்ந்தேன் மலர் ஆய்_இழையே
** பொழுதினுக்கு இரங்கல்
#76
வெய்யவன் போயினன் மேவிப் புணர்ந்தவர் விட்டு அகன்றார்
உய்ய நெஞ்சு எவ்வகை ஒன்றையும் காண்பன் ஒலி கடல் சூழ்
வையகம் காவலன் மாறன் குமரியின்-வாய் இரை தேர்
நொய்ய வண் தோகை வண்டானமும் சேக்கைகள் நோக்கினவே
** வருந்துதல் கிளத்தல்
#77
வரையாவிடின் மதி வாள்_நுதல் வாடும் வரைவு உரைத்தால்
விரை ஆடிய கண்ணி வேந்த நீ வாடுதி விண்டு எதிர்ந்த
நிரை தார் அரசரை நெல்வேலி வென்ற நெடுந்தகை சீர்
உரையாதவர் என யானே புலம்புதல் உற்றனனே
#78
பொரும் கண்ணி சூடி வந்தார் பாடப் பூலந்தைப் பொன் முடி மேல்
இரும் கண்ணி வாகை அணிந்தான் பொதியில் இரும் பொழில்-வாய்
மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள்
கரும் கண்ணும் தம்மில் கலந்தது உண்டாம் இங்கு ஓர் காரணமே
@6 முன்னுற உணர்தல்
** வாட்டம் வினாதல்
#79
கந்து ஆர் அடு களி யானைக் கழல் நெடுமாறன் கன்னிக்
கொந்து ஆடு இரும் பொழில்-வாய்ப் பண்ணை ஆயத்துக் கோல மென் பூம்
பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல்
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே
#80
பொருந்திய பூம் தண் புனல் தான் குடைந்து-கொல் பொன் கயிற்றுத்
திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர்ச் செரு அடர்த்த
பருந்து இவர் செம் சுடர் வெல் வேல் பராங்குசன் பற்றலர் போல்
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே
@7 குறையுற உணர்தல்
** இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
#81
விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரிதன் கொல்லி விண் தோய்
வரை ஆடிய புனம் காவலும் மானின் வழி வரவும்
நிரை ஆடிய குழலாட்கும் இவற்கும் நினைப்பின் இல்லை
உரையாடுப கண்ணினான் உள்ளத்து உள்ளதும் ஒன்று உளதே
** குறையற உணர்தல்
#82
மழையும் புரை வண் கை வானவன் மாறன் மை தோய் பொதியில்
வழையும் கமழும் மணி நெடும் கோட்டு வண் சந்தனத்தின்
தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தி இத் தண் புனத்தின்
நுழையும் பிரியல் உறான் அறியேன் இவன் உள்ளியதே
#83
திண் பூ முக நெடு வேல் மன்னர் சேவூர்ப் பட முடி மேல்
தண் பூ மலர்த் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும்
வண் பூம் சிலம்பின் வரைப் புனம் நீங்கான் வரும் சுரும்பு ஆர்
ஒண் பூம் தழையும் தரும் அறியேன் இவன் உள்ளியதே
@8 நாண நாட்டம்
** சுனையாடல் கூறி நகைத்தல்
#84
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓடச் செரு விளைத்த
போர் மன்னு தென்னன் பொதியில் புன மா மயில் புரையும்
ஏர் மன்னு காரிகை எய்தல் உண்டாம் எனின் யானும் நின் போல்
நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே
** சுனையாடல் கூறி நகை
#85
மதி மரபாம் திரு மா மரபில் திகழ் மாறன் எம் கோன்
அதிசய பாண்டியனாம் அரிகேசரி யானை தங்கும்
பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய்
விதியது தான் கொடுபோய்ப் புனலாட்டு விளைவித்ததே
#86
புண்தாம் அரு நிறத்து உற்றுத் தென் பூலந்தைப் போர் மலைந்த
ஒண் தார் அரசர் குழாமுடனே ஒளி வான் அடையக்
கண்டான் பொதியில் மயில் அன்ன காரிகை எய்தல் நின் போல்
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே
#87
திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ் வான் முகட்டுக்
கரு மா மலர்க் கண்ணி கைதொழ தோன்றிற்றுக் காண் வந்து ஒன்னார்
செரு மால் அரசு உகச் செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர்
பெருமான் தனது குலம் முதலாய பிறைக் கொழுந்தே
** தகையணங்குறுத்தல்
#88
மண் தான் நிறைந்த பெரும் புகழ் மாறன் மந்தாரம் என்னும்
தண் தாரவன் கொல்லித் தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள்
ஒண் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும்
வண்டு ஆர் குழலவள் வந்தால் இயங்கு வரை அணங்கே
** சுனை வியந்துரைத்தல்
#89
ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில்
சேண் நெடும் குன்றத்து அருவி நின் சேவடி தோய்ந்தது இல்லை
வாள் நெடும் கண்ணும் சிவப்பச் செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர்
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அத் தடம் சுனையே
@9 நடுங்கல் நாட்டம்
#90
கலவா வயவர் களத்தூர் அவியக் கணை உகைத்த
கொலை ஆர் சிலை மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன்
புலவு ஆர் குருதி அளைந்த வெம் கோட்டு ஒர் பொரு களிறே
#91
பொருது இவ் உலகம் எல்லாம் பொது நீக்கிப் புகழ் படைத்தல்
கருதி வந்தார் உயிர் வான் போய் அடையக் கடையல் வென்ற
பரிதி நெடு வேல் பராங்குசன் கொல்லிப் பைம் பூம் புனத்துக்
குருதி வெண் கோட்டது கண்டேன் மடந்தை ஒர் குஞ்சரமே
@10 மடல் திறம்
#92
படல் ஏறிய மதில் மூன்று உடைப் பஞ்சவன் பாழி வென்ற
அடல் ஏறு அயில் மன்னன் தெவ் முனை போல் மெலிந்து ஆடவர்கள்
கடல் ஏறிய கழி காமம் பெருகின் கரும் பனையின்
மடல் ஏறுவர் மற்றும் செய்யாதன இல்லை மாநிலத்தே
#93
பொரு நெடும் தானைப் புல்லார்-தம்மைப் பூலந்தைப் போர் தொலைத்த
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய்
அரு நெடும் காமம் பெருகுவதாய் விடின் ஆடவர்கள்
கரு நெடும் பெண்ணைச் செம் கேழ் மடல் ஊரக் கருதுவரே
** இடத்துய்த்தல்
#94
ஏனலும் காத்துச் சிலம்பு எதிர்கூவி இள மரப் பூம்
கானமும் காணுதும் போதரு நீ தண் கமழ் மதத்த
கானகம் சேர் களி வேழப் படை சங்கமங்கை வென்ற
மீனவன் கோலப் பொழில் சூழ் பொதியில் எம் வெற்பிடத்தே
** கணியென உரைத்தல்
#95
மொய் வார் மலர் முடி மன்னவர் சாய முசிறி வென்ற
மெய் வான் வரோதயன் கொல்லியில் வேங்கை கணிமை சொல்லச்
செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினைப் போகம் எல்லாம்
கொய்வான் தொடங்கினர் என் ஐயர் தா நிரை கோல்_வளையே
** அருளால் அரிதென விலக்கல்
#96
பல மன்னு புள் ஈனும் பார்ப்பும் சினையும் அவை அழிய
உலம் மன்னு தோள் அண்ணல் ஊரக்கொளாய்-கொல் ஒலி திரை சூழ்
நில மன்னன் நேரியன் மாறன் நெடுங்களத்து அட்ட திங்கள்
குல மன்னன் கன்னிக் குலை வளர் பெண்ணைக் கொழு மடலே
** அவயவம் எழுதல் அரிது எனக் கிளத்தல்
#97
அண்ணல் நெடும் தேர் அரிகேசரி அகல் ஞாலம் அன்னாள்
வண்ணம் ஒருவாறு எழுதினும் மா மணி வார்ந்து அனைய
தண் என் கரும் குழல் நாற்றமும் மற்று அவள்-தன் நடையும்
பண் என் மொழியும் எழுத உளவே படிச்சந்தமே
#98
களி சேர் களிற்றுக் கழல் நெடுமாறன் கடையல் வென்ற
தெளி சேர் ஒளி முத்த வெண்குடை மன்னன் தென் நாடு அனையாள்
கிளி சேர் மொழியும் கரும் குழல் நாற்றமும் கேட்பின் ஐய
எளிதே எழுத எழுதிப் பின் ஊர்க எழில் மடலே
#99
வில்தான் எழுதிப் புருவக் கொடி என்றிர் தாமரையின்
முற்றா முகை நீர் எழுதி முலை என்றிர் மொய் அமருள்
செற்றார் படச் செந்நிலத்தை வென்றான் தென்னன் கூடல் அன்னாள்
சொல்தான் எனக் கிள்ளையோ நீர் எழுதத் துணிகின்றதே
** உடம்பட்டு விலக்கல்
#100
ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறு கலியை
நீங்கும்படி நின்ற கோன் வையை-வாய் நெடு நீரிடை யான்
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின்
ஆங்கும் வரும் அன்னதால் இன்ன நாள் அவள் ஆர் அருளே
#101
காடு ஆர் கரு வரையும் கலி வானும் கடையல் அன்று
கூடார் செலச் செற்ற கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன
ஏடு ஆர் மலர்க் குழலாள் எங்கு நிற்பினும் என்னை அன்றி
ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே
@11 குறை நயப்புக் கூறல்
** மென்மொழியாற் கூறல்
#102
பா மாண் தமிழுடை வேந்தன் பராங்குசன் கொல்லிப் பைம் பூம்
தேமா தழையொடு கண்ணியும் கொண்டு இச் செழும் புனத்தில்
ஏ மாண் சிலை அண்ணல் வந்து நின்றார் பண்டு போல இன்று
பூ மாண் குழலாய் அறியேன் உரைப்பது ஓர் பொய் மொழியெ
#103
கொடி ஆர் நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட கோன் பொதியில்
கடி ஆர் புனத்து அயல் வைகலும் காண்பல் கருத்து உரையான்
அடி ஆர் கழலன் அலங்கல் அம் கண்ணியன் மண் அளந்த
நெடியான் சிறுவன்-கொலோ அறியேன் ஒர் நெடுந்தகையே
#104
நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த
மண் இவர் செங்கோல் வரோதயன் வையை நல் நாடு அனையாய்
கண்ணியன் தண் அம் தழையன் கழலன் கடும் சிலையன்
எண்ணியது யாது-கொல்லோ அகலான் இவ் இரும் புனமே
#105
பன்னிய தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற
மன்னிய சீர் மன்னன் கொல்லி நம் வார் புனம் கட்டழித்துத்
தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன் தந்த
பொன் இயல் பூண் மங்கை வாடுபவோ மற்று இப் பூம் தழையே
#106
அரை தரு மேகலை அன்னம் அன்னாய் பண்டு அகத்தியன்-வாய்
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில்
வரை தரு வார் புனம் கையகலான் வந்து மா வினவும்
விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே
#107
பொரும் பார் அரசரைப் பூலந்தை வாட்டிய கோன் பொதியில்
அரும்பு ஆர் தழையும் கொண்டு யான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான்
பெரும்பான்மையும் இன்று வாராவிடான் வரின் பேர் அமர்க் கண்
சுரும்பு ஆர் கரும் குழலாய் அறியேன் இனிச் சொல்லுவதே
#108
தெவ் மாண்பு அழிந்து செந்தீ மூழ்கச் சேவூர்ச் செருவின் அன்று
வெம் மாப் பணி கொண்ட வேந்தன் தென் நாடு அன்ன மெல்_இயலாய்
இ மா தழையன் அலங்கல் அம் கண்ணியன் யாவன்-கொல்லோ
கைம்மா வினாய் வந்து அகலான் நமது கடிப் புனமே
#109
சிலை உடை வானவன் சேவூர் அழியச் செரு அடர்த்த
இலை உடை வேல் நெடுமாறன் கழல் இறைஞ்சாதவர் போல்
நிலை இடு சிந்தை வெம் நோயொடு இ நீள் புனம் கையகலான்
முலை இடை நோபவர் நேரும் இடம் இது மொய்_குழலே
** வன்மொழியால் கூறல்
#110
பாடும் சிறை வண்டு அறை பொழில் பாழிப் பற்றா அரசர்
ஓடும் திறம் கொண்ட கோன் கொல்லிக் கானல் உறு துணையோடு
ஆடும் அலவன் புகழ்ந்து என்னை நோக்கி அறிவு ஒழிய
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே
#111
பொன்றா விரி புகழ் வானவன் பூலந்தைப் பூ அழிய
வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பெடை மெய் அளிப்ப
நன்றாம் இதன் செய்கை என்று என்னை நோக்கி நயந்து உருகிச்
சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இச் செழும் புனத்தே
#112
கணி நிற வேங்கையும் கொய்தும் கலாவம் பரப்பி நின்று
மணி நிற மாமயில் ஆடலும் காண்டும் வல்லத்து வென்ற
துணி நிற வேல் மன்னன் தென்னர் பிரான் சுடர் தோய் பொதியில்
அணி நிற மால் வரைத் தூ நீர் ஆடுதுமே
#113
விரை வளர் வேங்கையும் காந்தளும் கொய்தும் வியல் அறை மேல்
நிரை வளர் மா மயில் ஆடலும் காண்டும் நிகர் மலைந்தார்
திரை வளர் பூம் புனல் சேவூர்ப் படச் செற்ற தென்னன் கொல்லி
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே
@12 சேட்படை
** தழை வியப்பு உரைத்தல்
#114
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன்
மலை மிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சி அன்னாள்
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய்த் தன் மொய் பூம் குழல் சேர்
தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே
#115
கழுது குருதி படியக் கலி நீர்க் கடையல் வென்ற
இழுதுபடு நெடு வேல் மன்னன் ஈர்ம் புனல் கூடல் அன்னாள்
தொழுது தலை மிசை வைத்துக்கொண்டாள் வண்டும் தும்பியும் தேன்
கொழுதும் மலர் நறும் தார் அண்ணல் நீ தந்த கொய் தழையே
**காப்பு உடைத்து என்று மறுத்தல்
#116
மண் இவர் செங்கோல் வரோதயன் வல்லத்து மாற்றலர்க்கு
விண் இவர் செல்வம் விளைவித்த வேந்தன் விண் தோய் பொதியில்
கண் இவர் பூம் தண் சிலம்பிடை வாரல்-மின் காப்பு உடைத்தால்
பண் இவர் வண்டு அறை சோலை வளாய எம் பைம் புனமே
#117
புல்லா வயவர் நறையாற்று அழியப் பொருது அழித்த
வில்லான் விளங்கு முத்தக்குடை வேந்தன் வியன் நிலத்தோர்
எல்லாம் இறைஞ்ச நின்றோன் கொல்லி மல்லல் அம் சாரல் இங்கு
நில்லாது இயங்கு-மின் காப்பு உடைத்து ஐய இ நீள் புனமே
#118
பூ அலர் தண் பொழில் பூலந்தைப் புல்லா அரசு அழித்த
மாவலர் தானை வரோதயன் கொல்லி மணி வரை-வாய்
ஏ அலர் திண் சிலையார் எமர் நீங்கார் இரு பொழுதும்
காவலராய் நிற்பர் வாரன்-மின் நீர் இக் கடிப் புனத்தே
** மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
#119
மின்னை மறைத்த செவ் வேல் வலத்தால் விழிஞத்துள் ஒன்னார்
மன்னை மறைத்த எம் கோன் வையம் சூழ் பௌவ நீர் புலவு-
தன்னை மறைத்து இள ஞாழல் கமழும் தண் பூம் துறைவா
என்னை மறைத்து இவ் இடத்து இயலாது-கொல் எண்ணியதே
#120
திண் தேர் வய மன்னர் சேவூர் அகத்துச் செரு அழியக்
கண்டே கதிர் வேல் செறித்த எம் கோன் கொல்லிக் கார்ப் புனத்து
வண்டு ஏய் நறும் கண்ணி கொண்டே குறையுற வந்ததனால்
உண்டே முடித்தல் எனக்கு மறப்பினும் உள்ளகத்தே
** நீயே கூறு என்று மறுத்தல்
#121
சேயே என நின்ற தென்னவன் செந்நிலத்து ஏற்ற தெவ்வர்
போயே விசும்பு புகச் செற்ற கோன் அம் தண் பூம் பொதியில்
வேயே அனைய மென்_தோளிக்கு நின்-கண் மெலிவுறு நோய்
நீயே உரையாய் விரை ஆர் அலங்கல் நெடுந்தகையே
#122
புரைத்து ஆர் அமர்செய்து பூலந்தைப் பட்ட புல்லாத மன்னர்
குரைத்து ஆர் குருதிப் புனல் கண்ட கொன் கொல்லிப் பாவை அன்ன
நிரைத்து ஆர் கரு மென் குழலிக்கு நீயே நெடுந்துறைவா
உரைத்தால் அழிவது உண்டோ சென்று நின்று நின் உள் மெலிவே
** அறியாள் போன்று நினைவு கேட்டல்
#123
பொறி கெழு கெண்டை பொன் மால் வரை வைத்து இப் பூமி எல்லாம்
நெறி கெழு செங்கோல் நடாம் நெடுமாறன் நெல்வேலி வென்றான்
வெறி கமழ் பூம் கன்னிக் கானல் விளையாட்டு அயர நின்ற
செறி குழலார் பலர் யார்-கண்ணதோ அண்ணல் சிந்தனையே
#124
திளையா எதிர்நின்ற தெவ் மன்னர் சேவூர் படச் சிறு கண்
துளை ஆர் கரும் கைக் களிறு உந்தினான் தொண்டிச் சூழ் துறை-வாய்
வளையார் வன முலையார் வண்டல் ஆடும் வரி நெடும் கண்
இளையார் பலர் உளர் யார்-கண்ணதோ அண்ணல் இன் அருளே
** குறியாள் கூறல்
#125
மன்னன் வரோதயன் வல்லத்து ஒன்னார்கட்கு வான் கொடுத்த
தென்னன் திருமால் குமரி அம் கானல் திரை தொகுத்த
மின்னும் சுடர்ப் பவளத்து அருகே விரை நாறு புன்னை
பொன் அம் துகள்கள் சிந்தி வானவில் போன்றது இப் பூம் துறையே
#126
கார் அணி சோலைக் கடையல் இடத்துக் கறுத்து எதிர்ந்தார்
தேர் அணி தானை சிதைவித்த கோன் கன்னித் தென் துறை-வாய்
நீர் அணி வெண் முத்தினால் இ நெடு மணல் மேல் இழைத்த
ஏர் அணி வண்டல் சிதைக்கின்றதால் இவ் எறி கடலே
** படைத்து மொழியால் மறுத்தல்
#127
பொன் அயர் வேங்கை அம் பூம் தழை ஏந்திப் புரிந்து இலங்கு
மின் அயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார்
மன் அயர்வு எய்த வை வேல் கொண்ட வேந்தன் மரந்தை அன்னாள்
தன்னையர் தீயர் பல்கால் வருவர் இத் தண் புனத்தே
#128
பூட்டிய மா நெடும் தேர் மன்னர் பூலந்தைப் பூ அழிய
ஓட்டிய திண் தேர் உசிதன் பொதியின் உயர் வரை-வாய்
ஈட்டியர் நாயினர் வீண் அயர் வாளியர் எப்பொழுதும்
கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்-மின் இக் கொய் புனத்தே
** தலைவி தன்குறிப்பினள் அல்லள் என்றல்
#129
ஆடு இயல் மா நெடும் தேர் மன்னர் ஆற்றுக்குடி அழியக்
கோடிய திண் சிலைக் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்னாள்
நீடிய வார் குழல் நீலமும் சூடாள் நினைந்து நின்றாள்
தோடு இயல் பூம் தொங்கலாய் அறியேன் சென்று சொல்லுவதே
** அருமை சாற்றல்
#130
புள் புலம் பூம் புனல் பூலந்தைப் போரிடைப் பூழியர் கோன்
உள் புலம்போடு செலச் செற்ற வேந்தன் உறந்தை அன்னாள்
கட்புலனாச் செல்லும் தெய்வம் கண்டாய் கமழ் பூம் சிலம்பா
வட்கிலன் ஆகி எவ்வாறு மொழிவன் இ மாற்றங்களே
** குலமுறை கூறி மறுத்தல்
#131
நடை மன்னும் என்று எம்மை நீர் வந்து நண்ணன்-மின் நீர் வள நாட்
டிடை மன்னு செல்வர் நுமர் எமர் பாழி இகல் அழித்த
படை மன்னன் தொல் குல மா மதி போல் பனி முத்து இலங்கும்
குடை மன்னன் கோடு உயர் கொல்லி அம் சாரல் குறவர்களே
#132
உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின்
மற்று எமராய்விடின் வானவன் தான் உடை மான் இனையச்
செற்று அமர் சேவூர் புறம்கண்ட திங்கள் திருக்குலத்துக்
கொற்றவன் மாறன் குடக் கொல்லி வாழும் குறவர்களே
#133
இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ
மழை வளர் மானக் களிறு உந்தி மா நீர்க் கடையல் வென்ற
தழை வளர் பூம் கண்ணி மூன்று உடை வேந்தன் தண் அம் பொதியில்
குழை வளர் ஆரத்து அருவி அம் சாரல் குறவர்களே
** குடித்திறம் கூறல்
#134
வானவர் நாதன் மணி முடி மேல் பொன் வளை எறிந்த
கோன் அவன் ஆரம் புனைந்தவன் சூழ் பொழில் கொல்லியின்-வாய்
ஏனல் எம் காவலர் யாய் தந்தை இந்தப் பெரும் புனத்துக்
கானவரான இது என் நீ உரைப்பது காவலனே
** தழை எதிர்தல்
#135
வேழம் வினவுதிர் மென் பூம் தழையும் கொணர்ந்து நிற்றிர்
ஆழம் உடைய கருமத்திர் போல்திர் அணைந்து அகலீர்
சோழன் சுடர் முடி வானவன் தென்னன் துன்னாத மன்னர்
தாழ மழை உரும் ஏந்திய கோன் கொல்லித் தண் புனத்தே
#136
பா உற்ற தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிப் பற்றாக்
கோ உற்ற அல்லல் கண்டான் கொல்லிச் சாரல் எம் கொய் புனத்துள்
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா
மா உற்ற புண்ணிற்கு இடு மருந்தோ நின் கை வார் தழையே
#137
வேல் நக நீண்ட கண்ணாளும் விரும்பும் சுரும்பு அரற்றும்
தேன் நக விண்ட வண்டு ஆர் கண்ணியாய் சிறிது உண்டு தெவ்வர்
வானகம் ஏற வல்லத்து வென்றான் கொல்லி மால் வரை-வாய்க்
கானக வாழ்நரும் கண்டறியார் இக் கமழ் தழையே.
#138
துடி ஆர் இடை வடி வேல் கண் மடந்தை தன் சொல் அறிந்தால்
கடி ஆர் கமழ் கண்ணியாய் கொள்வல் யான் களத்தூரில் வென்ற
வடி ஆர் இலங்கு இலை வேல் மன்னன் வான் ஏற அணிந்த வென்றிக்
கொடியான் மழை வளர் கொல்லி அம் சாரல் இக் கொய் தழையே
#139
அம் கேழ் அலர் நறும் கண்ணியினாய் அருளித் தரினும்
எம் கேழவருக்கு இயைவன போலா இரும் சிறை-வாய்
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய் பொதியிலின்-வாய்
செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே
#140
வேரித் தடம் தொங்கல் அண்ணல் விருந்தாய் இருந்தமையால்
பூரித்த மென் முலை ஏழை புனையின் பொல்லாது-கொல்லாம்
பாரித்த வேந்தர் பறந்தலைக்கு ஓடி படப் பரி மா
வாரித்த கோமான் மணி நீர் மலயத்து மாந்தழையே
** தாய் துயில் அறிதல்
#141
கதம் சார்தரும் படைக் கைதவன் காவிரி நாட்டு அரசன்
பதம் பாழ்படுத்திய பஞ்சவன் கூடல் பதி அனையாய்
மதம் பாய் கர ஒண் கண் மா மலை ஒன்று நம் வார் புனத்துள்
இதண் கால் பறிந்து இறத் தாளால் உதையும் இரும் பொழிற்கே
** நீங்குதல் உரைத்தல்
#142
ஆய் போல் அருளும் கொடை அரிகேசரி அம் பொதியில்
வேய் போலிய இரு தோள் மடவாய் விரைத் தேன் கமழ் நின்
வாய் போல் மலரும் குமுதங்கள் கொய்து வருமளவும்
நீ போது இவை கொய்து நிற்பது சால நெறி உடைத்தே
@13 ஒருவழித் தணத்தல்
** கடல் ஒலி ஒலித்தல்
#143
அறம் புரி செங்கோல் அரிகேசரி திருத்தாள் அடையார்
பறந்தலை-வாய்ப் பட வென்றவன் கூடல் பதி அனையாள்
நிறம் தவ வாட நிறமும் திருவும் உடன் அழிந்து
கறங்குவது என்று மொழியாய் கழி ஆர் கரும் கடலே
#144
ஏ மாண் சிலை நுதல் ஏழையும் ஏற்கும் இன் தேன் அகலாப்
பூ மாண் கமழ் கண்ணியாய் நின்றது ஒன்று உண்டு பூழியர் கோன்
பா மாண் தமிழின் பராங்குசன் கொல்லிப் பனி வரை-வாய்த்
தே மாண் பொழிலின் அகத்து அன்றி இல்லை இத் தேம் தழையே
#145
செந்நிலத்துக் கணையால் சிலை உந்திக் கறுத்து எதிர்ந்தார்
செந்நிலத்துப் பட சீறிய கோன் செழும் தண் பொதியில்
இ நிலத்து இ மலை மேல ஒவ்வா இரும் தண் சிலம்பா
எம் நிலத்து எம் மலை மேல இச் சந்தனத்து ஈர்ம் தழையே
** அறத்தொடு நிற்றல்
#146
கந்து ஆர் களிறு கடாய் செந்நிலத்தைக் கறுத்து எதிர்ந்து
வந்தார் அவிய வை வேல் கொண்ட கோன் கன்னி வார் துறை-வாய்ப்
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்டப் பைம் போது ஓருவர்
தந்தார் தர அவை கொண்டு அணிந்தாள் இத் தடம் கண்ணியே
#147
திண் போர் அரசரைச் சேவூர் அழிவித்த தென்னன் நல் நீர்
மண் போய் அழிக்கும் செங்கோல் மன்னன் வையை நல் நாடு அனையாள்
கண் போல் குவளை அம் போது அங்கு ஓர் காளையை கண்டு இரப்பத்
தண் போது அவன் கொடுத்தான் அணிந்தாள் இத் தடம் கண்ணியே
** குறியெதிர்ப்படுதல்
#148
வெவ் வினை ஆர் படை வேந்தர்கள் வெண்மாத்து இடைப்பட வென்று
அவ்வவர் பாழ் பதி கொண்டவன் கூடல் அகன் பொழில்-வாய்ச்
செவ் விரை நாள்_மலர்ப் பாதம் சிவக்கச் சிலம்பு ஒதுக்கி
இவ் இருள்-வாய் வர என் நீ நினைந்தனை ஏந்து_இழையே
** களிறுதரு புணர்ச்சி
#149
உறு கற்புடைமையின் உள்ளும் இப் பேதை உசிதன் ஒன்னார்
மறுகத் திறல் உரும் ஏந்திய கோன் கொல்லி மால் வரை-வாய்த்
துறுகல் புனமும் சிதைத்து எங்கள்-தம்மையும் துன்ன வந்த
சிறு கண் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே
#150
கனம் சேர் முலை மங்கை உள்ளும் இப்போதும் கடையல் ஒன்னார்
மனம் சேர் துயர் கண்ட வானவன் மாறன் மை தோய் பொதியில்
புனம் சேர் தினையும் கவர்ந்து எம்மைப் போகா வகை புகுந்த
சினம் சேர் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே
** தோழி இற்செறிவு அவன் அறியச் சொல்லல்
#151
தாள் இணையாம் மலர் சூடா அரசரைச் சங்கமங்கை
வாள் இனத்தால் வென்ற மாறன் திருக்குல மா மதி எம்
கேளினர் தாம் வரும் போதின் எழா தாய்க்கு உறாலியரோ
நாளினும் நீ குறையாதே விளங்க நலிவு இன்றியே
** புனல்தரு புணர்ச்சி
#152
ஓங்கிய வெண்குடைப் பைம் கழல் செங்கோல் உசிதன் வையை
வீங்கிய தண் புனல் ஆடி விளையாட்டு அயர் பொழுதில்
தேங்கிய தெள் திரை வாங்க ஒழுகி நின் சே_இழையாள்
நீங்கிய போது அருள்செய்தனன் வந்து ஓர் நெடுந்தகையே
#153
சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர்ச் செரு மலைந்த
மன் ஆள் செலச் செற்ற வானவன் மாறன் வையைத் துறை-வாய்ப்
பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஒர் பூம் கணை வேள்
அன்னான் ஒருவன் அணைந்து எமக்கு செய்த ஆர் அருளே
@14 வரைபொருள் பிரிதல்
** வெறியெடுத்தல்
#154
வெறியாடுக திறல் வேலன் புகுந்து வியந்து வெள்ளை
மறியே அறுக்க மலர்ப் பலி தூவுக வண் தமிழ் நூல்
குறிவான் இகந்த செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன
சிறியாள் இவள்-தன்னை இப்படி ஆக்கிய தீங்கினுக்கே
** வெறி விலக்கல்
#155
வண்டு ஆர் இரும் பொழில் வல்லத்துத் தென்னற்கு மாறு எதிர்ந்த
விண்டார் உடலின் மறி அறுத்து ஊட்டி வெறியயர்ந்து
தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணும்-கொலோ நின் உறு பலியே
** அறிவிலன் வேலன் என்று அயலோர்க்கு உரைத்தல்
#156
வார் அணங்கும் கழல் வானவன் மாறன் வண் கடல் கூடல் அன்ன
ஏர் அணங்கும் இள மென் முலையாட்கு இரும் தண் சிலம்பன்
தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால்
ஆர் அணங்கு ஆயினும் ஆக இச் செவ்வேள் அறிவிலனே
** முருகற்கு உரைத்தல்
#157
பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த
மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன்
தன் அணங்கு அன்மை அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால்
மன் அணங்கு ஆயினும் ஆக இச் செவ்வேள் மதியிலனே
** அல்ல குறிப்பாட்டினை அண்ணற்கு உரைத்தல்
#158
அறை வாய் அதிர் கழல் வேந்து உக வல்லத்து அமர் அழித்த
கறை வாய் இலங்கு இலை வேல் மன்னன் கன்னி அம் கானல் அன்ன
இறை-வாய் அணி வளையாய் என்னை-கொல்லோ இரவின் எல்லாம்
துறை-வாய் இளம் புன்னை மேல் அன்னம் ஒன்றும் துயின்றிலவே
#159
பூ நின்ற வேல் மன்னன் பூலந்தை வான் புகப் பூட்டு அழித்த
வேல் நின்ற வெம் சிலை வேந்தன் இரணாந்தகன் அறியும்
பா நின்ற இன் தமிழ் அன்ன நல்லாய் நம் பைம் கானலின்-வாய்த்
தூ நின்ற மென் சிறகு அன்னம் இன்று ஒன்றும் துயின்றிலவே
** குறியெதிர் பெறாது நெஞ்சொடு கூறல்
#160
ஒளி ஆர் திரு நுதலாளை எளியள் என்று உன்னி வந்து
விளியா வரும் துயர் செய்தமையால் விழிஞத்து வென்ற
களி ஆர் களிற்றுக் கழல் நெடுமாறன் கடி முனை மேல்
தெளியா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே
** இரவுக்குறி கழிதல்
#161
ஏர் ஆர் குழல் மடவாளை எளியள் என்று உன்னி வந்து
தீரா விழுமம் தந்தாய் தென்னன் சேவூர் செரு அடர்த்த
கார் ஆர் களிற்றுக் கழல் நெடுமாறன் கழல் பணிந்து
சேரா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே
** குறியிடம் தலைவன் கொள்ளக் கூறல்
#162
மருள் போல் சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல்
இருள் போல் கொழு நிழல் பாய் அறிந்தார்கட்கு இன் தீம் தமிழின்
பொருள் போல் இனிதாய்ப் புகழ் மன்னன் மாறன் பொதியிலின் கோன்
அருள் போல் குளிர்ந்து அன்னமும் துன்னும் நீர்த்து எங்கள் ஆடிடமே
#163
காவி அம் தண் துறை சூழ்ந்து கடையல் கறுத்தவர் மேல்
தூவி அம்பு எய்தவன் தொண்டி வண்டு ஆர் புன்னைத் தூ மலர்கள்
தாவிய வெண் மணற்றாய் அறிந்தார்கட்குத் தண் தமிழின்
ஆவியும் போல இனிதாய் உளது எங்கள் ஆடிடமே
** குறியிடத்து உய்த்து மறைபவன் உரைத்தல்
#164
அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன்
பஞ்சு உறை தேர் அல்குலாய் வரற்பாற்று அன்று பாழி ஒன்னார்
நெஞ்சு உறையாச் செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய்
மஞ்சு உறை சோலை வளாய் தெய்வம் மேவும் வரையகமே
#165
நீ விரி கோதை இங்கே நில் நின்னால் வரற்பாலது அன்று
தீ விரி காந்தள் சென்று யான் தருவேன் தெய்வம் அங்கு உடைத்தால்
பூ விரி வார் பொழில் பூலந்தை வானவன் பூ அழித்த
மா விரி தானை எம் கோன் கொல்லி சூழ்ந்த வரையகமே
** நெஞ்சொடு வருந்தல்
#166
பொரு மா மணி முடி மன்னரைப் பூலந்தை பூ அழித்த
குரு மா மணிவண்ணன் கோன் நெடுமாறன் குமரி முந்நீர்
அரு மா மணி திகழ் கானலின்-வாய் வந்து அகன்ற கொண்கன்
திரு மா மணி நெடும் தேரொடும் சென்றது என் சிந்தனையே
** ஆற்றும் வாயில் அகன்றமை உணர்த்தல்
#167
அன்னம் புரையும் நடையாள் புலம்பு எய்த அத்தம் என்னும்
பொன் அம் சிலம்பு கதிரோன் மறைதலும் போயினவால்
தென்னன் திருமால் கழல் நெடுமாறன் திருந்து செங்கோல்
மன்னன் குமரிக் கரும் கழி மேய்ந்த வண்டானங்களே
#168
பொரும் கழல் மாறன் புல்லா மன்னர் பூலந்தைப் பூம் குருதி
மருங்கு அழி நீர் மூழ்கக் கண்ட எம் கோன் தொண்டிக் கானல் வண்டு ஆர்
கரும் கழி மேய்ந்த செம் கால் வெள்ளை அன்னம் கதிரொடும் தம்
பெரும் கழி காதன்மை நீங்கி இவனில் பிரிந்தனவே
#169
மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீப்
பாயின மாலைக்குக் காட்டிக்கொடுத்து பரந்து மண் மேல்
ஆயின சீர் அரிகேசரிக்கு அன்று அளநாட்டு உடைந்து
போயின தெவ்வரின் போயின கானலில் புள் இனமே
** தாயறிவுரைத்தல்
#170
நீர் வண்ணன் வெண் திரை மேல் நின்ற வேந்தன் நெல்வேலி ஒன்னார்
போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த
கார் வண்ணன் போல் வண்ணன் காவிரி நாடு அன்ன காரிகையாள்
ஏர் வண்ணம் நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே
#171
உளம் அலையாமை திருத்திப் பொருவான் உடன்று எழுந்தார்
களம் மலையாமைக் கடையல் வென்றான் கடல் தானை அன்ன
வள முலை வால் முறுவல் தையல் ஆகத்து வந்து அரும்பும்
இள முலை நோக்கி நின்று என்னையும் நோக்கினள் எம் அனையே
** புனத்தொடு வைத்துக் குறிப்புரை கிளத்தல்
#172
செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற
கயல் மன்னு வெல் பொறிக் காவலன் மாறன் கடி முனை மேல்
அயல் மன்னர் போல் கொய்து மாள்கின்றதால் அணி வான் உரிஞ்சும்
புயல் மன்னு கோட்ட மணி வரைச் சாரல் எம் பூம் புனமே
#173
என் நேர் அழியாவகை என்னை வெற்ப இரும் சிறை-வாய்
மன் ஏர் அழிய வென்றான் முனை போல் கொய்து மாள்கின்றதால்
மின் ஏர் திகழும் மழை கால் கழிய வியல் அறை-வாய்ப்
பொன் நேர் திகழும் அணி வரைச் சாரல் புனத் தினையே
** பணிமொழிப் பாங்கி கணியொடு கூறல்
#174
திரை ஆர் குருதிப் புனல் மூழ்கச் செந்நிலத்து அன்று வென்ற
உரை ஆர் பெரும் புகழ்ச் செங்கோல் உசிதன் ஒண் பூம் பொதியில்
வரை ஆர் தினைப் புனம் கால் கொய்ய நல் நாள் வரைந்து நின்ற
விரை ஆர் மலர் இள வேங்காய் நினக்கு விடை இல்லையே
#175
வான் உடையான் முடி மேல் வளை எற்றியும் வஞ்சியர்-தம்
கோன் உடையாப் படை கோட்டாற்று அழிவித்தும் கொண்ட வென்றி
தான் உடையான் தென்னன் சத்ரு துரந்தரன் பொன் வரை மேல்
மீன் உடையான் கொல்லி வேங்காய் நினக்கு விடை இல்லையே
** நனைகெடச் செய்திலம்
#176
நன்று செய்தாம் அல்லம் நல் நுதலாய் நறையாற்று வெம் போர்
நின்று செய்தார் உந்தி வந்த நெடும் கைக் களிற்று உடலால்
குன்று செய்தான் கொல்லி வேங்கையை மெல் அரும்பாகக் கொய்தல்
அன்று செய்தாம் எனில் நிற்பது அன்றோ நம் அகல் புனமே
** சிறைப்புறக் கிளவி
#177
உலம் புனை தோள் மன்னர் ஓட வல்லத்து அட்டவர் உரிமை
நலம் புனை கோதையர்க்கு அல்லல் கண்டான் கொல்லிச் சாரல் நண்ணி
வலம் புனை வில்லோடு இருவிப் புனம் கண்டு வாடி நின்றால்
சிலம்பனை நையற்க என்னும்-கொல் வேங்கைச் செழும் பொழிலே
** ஏறு விடுத்தல்
#178
கூற்று எனவே வரும் வேந்தரைக் கோட்டாற்று அழித்து அவர் மேல்
பாற்று இனம் மேவிடக் கண்டவன் கூடல் பதியதன்-வாய்
ஏற்று இரு கோடு திருத்திவிட்டார் இனி ஏறு தழூஉம்
ஆற்றலினார் மணம்செய்வான் அமைந்தனர் அண்டர்களே
#179
பொரும் கண்ணி சூடி வந்தார் படப் பூலந்தைப் பொன் முடி மேல்
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில்
கரும் கண்ணி காக்கின்ற பைம் புனம் கால் கொய்ய நாள் வரைந்த
பெரும் கண்ணியாரைப் பொன் வேங்கை என்றோ இன்னும் பேசுவதே
#180
பை நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த
இ நின்ற வேங்கை குறையாது இளம் சந்தனம் குறைத்தார்
மெய் நின்ற செங்கோல் விசயசரிதன் விண் தோய் பொதியில்
மை நின்ற சாரல் வரையக வாணர் மடவியரே
** சூளுறூஉம் தோன்றற்குத் தோழி கூறல்
#181
நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர் இழை இ
மை ஒன்று வாள் கண் மடந்தை திறத்திட்டு அறம் திரிந்து
பொய் ஒன்றும் நின் கண் நிகழும் என்றால் பின்னைப் பூம் சிலம்பா
மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே
#182
திரைப் பால் இரும் புனல் சேவூர் எதிர்நின்ற சேரலர்கோன்
வரைப் பால் அடையச் செற்றான் வையை அன்னாள் திறத்து வண்டு ஆர்
விரைப் பால் நறும் கண்ணியாய் பொய்மை நீ சொல்லின் மெய்ம்மை என்பது
உரைப்பார் பிறர் இனி யாவர்-கொல்லோ இவ் உலகினுள்ளே
@15 இரவுக்குறி
** குறியிடம் கூறல்
#183
வந்து இணங்கா மன்னர் தேய முன் நாள் மழை ஏறு உயர்த்த
கந்து அணங்கு ஆம் மத யானைக் கழல் மன்னன் கார்ப் பொதியில்
சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூத் தழல் போல் விரியும்
கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே
#184
காந்தள் அம் போது எம் கரும் குழல் போது கடையல் ஒன்னார்
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில்
சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும்
பூந்தளம் பிண்டி எரி போல் விரியும் பொழில் அகமே
** வரவுணர்ந்து உரைத்தல்
#185
அணி நிற மாப் பகடு உந்தி வந்தார் வல்லத்து அன்று அவிய
துணி நிற வேல் கொண்ட கோன் கொல்லிச் சாரலின் சூழ் பொழில்-வாய்
மணி நிற மா மயில் என்னை-கொல் பொன் ஏர் மலர் ததைந்த
கணி நிற வேங்கையின் மேல் துயிலாது கலங்கினவே
#186
கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல்-கண் வேந்து
அயில் கொண்ட கோன் அரிகேசரி கொல்லி அரு வரை-வாய்
பயில் வண்டும் தேனும் பண் போல் முரல் வேங்கைப் பசும் பொழில்-வாய்த்
துயில்கொண்டில துணையோடும் என் செய்தன தோகைகளே
** குறியிடத்துக் கொண்டு சேறல்
#187
ஆழிக் கடல் வையம் காக்கின்ற கோன் அரிகேசரி தென்
பாழிப் பகை செற்ற பஞ்சவன் வஞ்சிப் பைம் பூம் புறவில்
பூழிப் புற மஞ்ஞை அன்ன நல்லாய் கொள்கம் போதுதியேல்
தாழிக் குவளை நின் கண் போல் விரியும் தட மலரே
#188
விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து
திளைக்கின்ற மன்னரைச் சேவூர் அழித்தவன் தீம் தமிழ் போல்
வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்றுகோடும் நின் வாயுள் வந்து
முளைக்கின்ற முள் எயிற்று ஏர் கொண்ட அரும்பின் முல்லைகளே
** அலர் அறிவுறுத்தல்
#189
பலராய் எதிர் நின்று பாழிப் பட்டார் தங்கள் பைம் நிணம்-வாய்
புலரா அசும்பு உடை வேல் மன்னன் வேம்பொடு போந்து அணிந்த
மலர் ஆர் மணி முடி மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாட்கு
அலராய் விளைகின்றதால் அண்ணல் நீ செய்த ஆர் அருளே
#190
பொருள் தான் என நின்ற மானதன் பூலந்தைத் தோற்றுப் புல்லார்
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய்
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த
அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆய்_இழைக்கே
@16 உடன்போக்கு
** மகள் பேச்சுரைத்தல்
#191
நீர் அணி வேலி நெடுங்களத்து ஒன்னார் நிணம் அளைந்த
போர் அணி வேல் மன்னன் கன்னி அன்னாள்-தன்னைப் பொன் அணிவான்
கார் அணி வார் முரசு ஆர்ப்பப் பிறரும் கருதி வந்தார்
வார் அணி பூம் கழல் அண்ணல் என் ஆகி வலிக்கின்றதே
#192
வேலைத் துளைத்த கண் ஏழை திறத்து இன்று விண் உரிஞ்சும்
சோலைச் சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த
மாலைக் குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய்க்
காலைத் திருமனை முற்றத்து இயம்பும் கடி முரசே
#193
போர் மலி தெவ்வரைப் பூலந்தை வென்றான் புகார் அனைய
வார் மலி கொங்கை மடந்தையை வேறு ஓர் மணம் கருதிக்
கார் மலி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார்
ஏர் மலி தார் அண்ணல் என்னோ இதன் திறத்து எண்ணுவதே
#194
வேயும் புரையும் மென் தோளி திறத்து இன்று எல்லையுள் விண்
தோயும் சிலம்ப துணிவு ஒன்று அறிந்து தொல் நூல் புலவர்
ஆயும் தமிழ் அரிகேசரி கூடல் அகல் நகர்-வாய்
ஏயும் திருமனை முற்றத்து இயம்பும் எறி முரசே
** பொன்னணி உரைத்தல்
#195
குன்று ஒத்த யானைச் செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன
மென் தொத்து அணி குழல் ஏழை திறத்து விளைவு அறிந்தே
இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர்
மன்றத்து நின்று முழங்கும்-கொல் நாளை மணமுரசே
#196
நலம் புரி தெய்வம் அன்னாய் செய்வது என் நறையாற்று வென்ற
உலம் புரி தோள் மன்னன் தென் புனல் நாட்டு ஒருவற்கு இயைந்து
குலம் புரி கோதையைக் காப்பு அணிந்தார் கொடி மாட முன்றில்
வலம்புரியோடு முழங்கும் கொல் நாளை மணமுரசே
** முலைவிலை உரைத்தல்
#197
என்னால் இது செய்க என்று என் சொல்லல் ஆம் இகல் பாழி வென்ற
மின் ஆர் அயில் படைச் செங்கோல் விசாரிதன் வீங்கு ஒலி நீர்த்
தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய்த் தமர் சீர் செய் வண்டு
முன் நாள் மலர் என்று அணையும் கண் ஏழை முகிழ் முலைக்கே
** ஆதரம் கூறல்
#198
மால் புரை யானை மணி முடி மாறன் மண் பாய் நிழற்றும்
பால் புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக்கோடி வென்ற
வேல் புரை வெம்மைய கானம் எனினும் அவ் வேந்தன் செய்ய
கோல் புரை தண்மைய ஆம் நும்மொடு ஏகின் இக் கொம்பினுக்கே
#199
கழல் அணி போர் மன்னர் கால் நீர்க் கடையல் படக் கடந்த
தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன்-தன் முனை போன்று
அழல் அணி வெம்மைய ஆயினும் கானம் அவன் குடையின்
நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே
** நாண் இழந்து வருந்தல்
#200
ஏணும் இகலும் அழிந்து தெவ் வேந்தர் எல்லாம் இறைஞ்சிக்
காணும் கழல் நெடுமாறன் செங்கோல் நின்று காக்கும் மண் மேல்
சேணும் அகலாது உடன் என்னொடு ஆடித் திரிந்துவந்த
நாணும் அழியத்தகு கற்பு மேம்பட நைகின்றதே
** தலைவனைச் செலவழுங்குவித்தல்
#201
பாயப் புரவி கடாய் அன்று பாழிப் பகை மலைந்தார்
தேயச் சிலை தொட்ட தென்னவன் தேம் தண் பொதியிலின்-வாய்
வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன்
ஆயத்தவரை நினைந்து கணீர் கொண்டு அலமந்தவே
** ஓம்படுத்துரைத்தல்
#202
கொங்கை தளரினும் கூந்தல் நரைப்பினும் ஏந்தல் மற்று இவ்
அங்கை அடைக்கலம் என்றே கருதி அருள்க கண்டாய்
கங்கை மணாளன் கலிமதனன் கடி மா மணற்றி
மங்கை அமர் அட்ட கோன் வையை நாடு அன்ன மாதரையே
** கையடை
#203
மென் முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண் உரிஞ்சும்
நல் மலை நாட இகழல் கண்டாய் நறையாற்றில் வென்ற
வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான்
கொன் மலி வேல் நெடும் கண் இணைப் பேதைக் கொடியினையே
** மெல்லக்கொண்டு ஏகல்
#204
பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலை-வாய்
விண்டார் படச் செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல்
வண்டு ஆர் பொழிலும் மணி அறல் யாறும் மருங்கு அணைந்து
கண்டார் மகிழும் தகைமையது யாம் செல்லும் கானகமே
#205
சிறிய பைம் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று எதிர்ந்தார்
மறிய வை வேல் கொண்ட தென்னவன் வையை நல் நாட்டகம் போல்
முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும்
நறிய பைம் கானம் நையாது நடக்க என் நல்_நுதலே
@17 நெறி விலக்கிக் கூறல்
** விருந்து விலக்கு
#206
அலை மன்னு பைம் கழல் செங்கோல் அரிகேசரி அளி ஆர்
இலை மன்னு மாலை முத்தக்குடையான் இகல் வேந்தரைப் போல்
மலை மன்னும் வெய்யோன் மறைந்தனன் மாது மெய் வாடி நைந்தாள்
சிலை மன்னு தோள் அண்ணல் சேந்தனை செல் எம் சிறுகுடிக்கே
#207
நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து
வென்றான் விசாரிதன் கூடல் அன்னாளும் மிக மெலிந்தாள்
குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கிச்
சென்றால் அழிவது உண்டோ அணித்தால் எம் சிறுகுடியே
** நகர் அணிமை கூறல்
#208
நீயும் இவளும் இன்றே சென்று சேர்திர் நெல்வேலி ஒன்னார்
தேயும்படிச் செற்ற தென்னவன் தென் புனல் நாட்டு இளையோர்
வாயும் முகமும் மலர்ந்த கமல மணித் தடத்துப்
பாயும் கயல் அவர் கண் போல் பிறழும் பழனங்களே
** கவன்றுரைத்தல்
#209
ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-
கண் முத்தம்கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய்
விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற
தண் முத்த வெண்குடையான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலே
** சுரத்து அருமை நினைந்து இரங்கல்
#210
வேடு அகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல்
பாடகம் தாங்கி நடந்தது எவ்வாறு-கொல் பாழி வென்ற
கோடக நீள் முடிக் கோன் நெடுமாறன் தென் கூடலின்-வாய்
ஆடக மாடம் கடந்து அறியாத என் ஆரணங்கே
** அடி நினைந்து இரங்கல்
#211
நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய்
முளியுற்ற கானம் இறந்தன போலும் நிறம் திகழும்
ஒளி முத்த வெண்குடைச் செங்கோல் உசிதன் உறந்தை அன்ன
தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே
** குரவொடு வருந்தல்
#212
மழை கெழு கார் வண் கை வானவன் மாறன் வண் கூடல் அன்ன
இழை கெழு கொங்கை என் பேதை ஓர் ஏதிலனோடு இயைந்து இக்
கழை கெழு குன்றம் கடப்பவும் நீ கண்டு நின்றனையே
தழை கெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண் குரவே
#213
நினைப்பு அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து
வினைப் பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்து ஓர்
மனைப் பொலி பாவை பயந்தேன் வருந்தவும் நீ கடத்துள்
எனைப்பல பாவை பயந்தும் எய்தாய் ஒர் இரும் துயரே
#214
வில்லவன் தானை நறையாற்று அழிந்து விண் ஏற வெல்ல
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள்
சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்குச் சொல்லுமே
பல்லவம் ஆக்கித் தன் பாவை வளர்க்கின்ற பைம் குரவே
** சுரத்திடை கண்டோர் குறிப்பொடு கூறல்
#215
வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்து அன்ன
பல்லாள் இணை அடி மேலன பாடகம் பஞ்சவற்கு
நெல் ஆர் கழனி நெடுங்களத்து அன்று நிகர் மலைந்த
புல்லாதவர் என யார்-கொல் அரும் சுரம் போந்தவரே
** வேதியரை வினாதல்
#216
நிழல் ஆர் குடையொடு தண்ணீர் கரகம் நெறிப்படக் கொண்டு
அழல் ஆர் அரும் சுரத்தூடு வருகின்ற அந்தணிர்காள்
கழலான் ஒருவன் பின் செங்கோல் கலிமதனன் பகை போல்
குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இக் குன்றிடத்தே
#217
குடை ஆர் நிழல் உறி சேர் கரகத்தொடு குன்றிடத்து
நடையால் மெலிந்து வருகின்ற அந்தணிர் ஞாலம் எல்லாம்
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒண் தீம் தமிழ் போல்
இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே
** வியந்துரைத்தல்
#218
செறி கழல் வேந்தரைச் சேவூர் அமர் வென்ற தென்னன் செய்ய
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து
வெறி கமழ் கோதை இங்கே நின்றது இஃதாம் விடலை தன் கைப்
பொறி கெழு திண் சிலை வாளியின் எய்த பொரு களிறே
#219
கொடு வில் படை மன்னர் கோட்டாற்று அழியக் கணை உகைத்த
நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால்
இடு வில் புருவத்தவள் நின்ற சூழல் இது உதுவாம்
கடு வில் தொடு கணையால் அண்ணல் எய்த கதக் களிறே
**அழுங்கு தாய்க்கு உரைத்தல்
#220
ஆளையும் சீறும் களிற்று அரிகேசரி தெவ்வரைப் போல்
காளையும் காரிகையும் கடம் சென்று இன்று காண்பர் வெம் கேழ்
வாளையும் செம் கண் வராலும் மடல் இளம் தெங்கு உகுத்த
பாளை அம் தேறல் பருகிக் களிக்கும் பழனங்களே
#221
நகு வாயன பல பேய் துள்ள கோட்டாற்று அரு வரை போன்று
உகு வாய் மதக் களிறு உந்தி வென்றான் மனம் போன்று உயர்ந்த
தொகு வாயன சுனை சேர் குன்றம் நீங்கலும் துன்னுவர் போய்ப்
பகு வாயன பல வாளைகள் பாயும் பழனங்களே
** உலகியல்பு உரைத்தல்
#222
கட வரை காதலனோடு கடந்த கயல் நெடும் கண்
பட அரவு அல்குல் உம் பாவைக்கு இரங்கல்-மின் பண்டு கெண்டை
வடவரை மேல் வைத்த வானவன் மாறன் மலயம் என்னும்
தட வரை தானே அணிந்து அறியாது தன் சந்தனமே
#223
வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு
இ நீர்மையீர் இரங்கல்-மின் நறையாற்று இகல் அரசர்-
தம் நீர் அழிவித்த சத்ருதுரந்தரன் தண் குமரி
முந்நீர் பயந்தால் அணிவார் பிறர் என்ப முத்தங்களே
#224
நெருங்கு அடல் வேல் நெடுமாறன் நெடுங்களத்து அன்று வென்றான்
பெரும் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார்
இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர்க்
கரும் கடல் வெண் சங்கு அணிந்து அறியா தண் கதிர் முத்தமே
** வழிச்செல்வாரை வரைவு உரைமின் என்றல்
#225
செம்மைத் தனிக் கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்-
தம்மைப் புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல்
வெம்மைச் சுரம் வருகின்றனள் என்று விரைந்து செல்வீர்
அம் மைத் தடம் கண் என் ஆயத்தவருக்கு அறி-மின்களே
#226
கோடரில் நீள் மதில் கோட்டாற்று அரண் விட்டுக் குன்றகம் சேர்
காடரில் வேந்தர் செலச் செற்ற மன்னன் கை வேலின் வெய்ய
வேடர் இல் வெம் சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர்
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே
** வேலனை வினாதல்
#227
அம் கண் மலர்த் தார் அரிகேசரி தென்னர் கோன் அயில் போல்
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர்
நங்கள் மனைக்கே வர நல்குமோ சொல்லு வேல நல்கு
தங்கள் மனைக்கே செல உய்க்குமோ மற்று என் தையலையே
#228
உருமினை நீள் கொடி மேல் கொண்ட செங்கோல் உசிதன் எம் கோன்
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வத்
திருமனைக்கே வர நல்கும்-கொல் அன்றாய்விடில் தனது
பெரு மனைக்கே உய்க்குமோ உரையாய் மற்று என் பேதையையே
** நற்றாய் மணன் அயர் வேட்கையில் செவிலியை வினாதல்
#229
தாளை வணங்காதவர் படச் சங்கமங்கைத் தனது
வாளை வலம்கொண்ட மாறன் இவ் வையத்தவர் மகிழ
நாளை நம் இல்லுள் வதுவை அயர்தர நல்கும்-கொல்லோ
காளையை ஈன்ற கடன் அறி நல் நெஞ்சின் காரிகையே
#230
புல்லா வய மன்னர் பூலந்தை வான் புகப் பூட்டு அழித்த
வில்லான் விசாரிதன் கூடல் விழவினைப் போல் நம் இல்லுள்
நல்லார் மகிழ்வு எய்த நாளை மணம்செய்ய நல்கும்-கொல்லோ
கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே
#231
மை ஏறிய பொழில் மா நீர்க் கடையல் மன் ஓட வென்றான்
மெய் ஏறிய சீர் மதுரை விழவினைப் போல் நம் இல்லுள்
நெய் ஏர் குழலி வதுவை அயர்தர நேரும்-கொல்லோ
பொய்யே புரிந்த அக் காளையை ஈன்ற பொலம்_குழையே
** ஊர்மேல் வைத்துரைத்தல்
#232
மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண் திரை மேல்
நின்றான் நில மன்னன் நேரியன் மாறன் இகல் முனை போல்
கொன்று ஆறலைக்கும் சுரம் அன்பர் நீங்க என் கோல் வளைகள்
சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே
** இயற்பழித்தல்
#233
இகலே புரிந்து எதிர்நின்ற தெவ் வேந்தர் இருஞ்சிறை வான்
புகலே புரிய வென்றான் கன்னி அன்னாள் புலம்புறு நோய்
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி-வாய்ப்
பகலே புரிந்து இரை தேர்கின்ற நாணாப் பறவைகளே
** தோழி கூற்று
#234
அடும் மலை போல் களி யானை அரிகேசரி உலகின்
வடு மலையாத செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய் மகிழ்ந்து
படுமலை போல் வண்டு பாடிச் செங்காந்தள் பைம் தேன் பருகும்
நெடு மலை நாடனை நீங்கும் என்றோ நீ நினைக்கின்றதே
** நற்றாய் தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல்
#235
சான்றோர் வரவும் விடுத்தவர்-தம் தகவும் நுமது
வான் தோய் குடிமையும் நோக்கின் அல்லால் வண் பொருள் கருதின்
தேன் தோய் கமழ் கண்ணிச் செம்பியன் மாறன் செங்கோல் மணந்த
மீன் தோய் கடலிடம் தானும் விலை அன்று எம் மெல்_இயற்கே
#236
நடையால் இது என்று நேரின் அல்லால் நறையாற்று வென்ற
படையான் பனி முத்த வெண்குடை வேந்தன் பைம் கொன்றை தங்கும்
சடையான் முடி மிசைத் தண் கதிர்த் திங்கள்-தன் தொல் குலமா
உடையான் உசிதன் உலகும் விலை அன்று எம் மெல்_இயற்கே
** காமம் மிக்க கழிபடர் கிளவி
#237
தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரிப்
போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய
ஏதலர் நோய் செய்வதோ நின் பெருமை என நெருங்கிக்
காதலர்-தம்மைக் கழறின் என் ஊனம் கரும் கடலே
** காப்புச் சிறை மிக்க கையறு கிளவி
#238
மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்
மன் கண் படாத மயங்கு இருள் நாள் வந்த நீர்த் துறைவற்கு
என் கண் படாத நிலைமை சொல்லாய் இளம் சேவல் தழீஇத்
தன் கண் படா நின்ற அன்னத்ததே இத் தகவின்மையே
** தாய் துஞ்சாமை
#239
ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல்
தேயும் நினைவொடு துஞ்சாள் மடந்தை இச் சே_இழையாள்
தாயும் துயிலலுறாள் இன்ன நாள் தனித் தாள் நெடும் தேர்க்
காயும் கதிரோன் மலை போய் மறைந்த கனை இருளே
** நாய் துஞ்சாமை
#240
வார் உந்து பைம் கழல் செங்கோல் வரோதயன் வஞ்சி அன்னாள்
சேரும் திறம் என்னை தேன் தண் சிலம்பனைத் திங்கள் கல் சேர்ந்து
ஊரும் துயின்று இடம் காவலரோடு அன்னை உள்ளுறுத்து எல்
லாரும் துயிலினும் துஞ்சா ஞமலி அரையிருளே
** ஊர் துஞ்சாமை
#241
மாவும் களிறும் மணி நெடும் தேரும் வல்லத்துப் புல்லாக்
கோவும் துமிய வை வேல் கொண்ட கோன் அம் தண் கூடல் அன்னாய்
பூவும் புகையும் கமழ்ந்து பொன்னாம் உம்பர் பேர் உலகு
மேவும் விழவொடு துஞ்சாது இரவும் இவ் வியல் நகரே
** காவலர் கடுகுதல்
#242
அடிக்-கண் அதிரும் கழல் அரிகேசரி தெவ் அழியக்
கொடிக்-கண் இடி உரும் ஏந்திய கோன் தமிழ்க் கூடல் அன்னாய்
வடிக் கண் இரண்டும் வள நகர் காக்கும் வை வேல் இளைஞர்
துடிக் கண் இரண்டும் கங்குல்-தலை ஒன்றும் துயின்றிலவே
** நிலவு வெளிப்படல்
#243
சென்று செரு மலைந்தார்கள் செந்நீர் மூழ்கச் செந்நிலத்தை
வென்று களம்கொண்ட கோன் தமிழ்நாடு அன்ன மெல்_இயலாய்
இன்று இவ் இரவின் இருள் சென்று இடம்கொண்டது எங்கு-கொல்லோ
நின்று விசும்பில் பகல் போல் விரியும் நிலா மதியே
** ஆறு பார்த்துற்றல்
#244
உருள் தங்கு மா நெடும் திண் தேர் உசிதன் உலகு அளிக்கும்
அருள் தங்கு செங்கோல் அடல் மன்னன் கொல்லி அரு வரை-வாய்
மருள் தங்கு வண்டு அறை சோலைப் பொதும்பில் வழங்கற்கு இன்னா
இருள் தங்கு நீள் நெறி எம்-பொருட்டால் வந்து இயங்கல்-மினே
** அச்சக் கிளவி
#245
பண் குடை சொல் இவள் காரணமாப் பனி முத்து இலங்கும்
வெண்குடை வேந்தன் விசாரிதன் மேற்கரை ஏற்று எதிர்ந்தார்
புண் குடை வேல் மன்னன் தென்னன் பொதியில் புன வரை-வாய்
எண்கு உடை நீள் வரை நீ அரையெல்லி இயங்கல்-மினே
#246
அன்பு எதிர்ந்தாலும் வருதல் பொல்லாது ஐய ஆர் அமருள்
முன்பு எதிர்ந்தார் படச் சேவை வென்றான் முகில் தோய் பொதியில்
பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று
இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு கிளைத்து உண்ணும் ஈண்டு இருளே
#247
கை அமை வேல் விளக்காகக் கனை இருள் நள்ளிரவின்
ஐ அமை தோய் வெற்ப வாரல் நறையாற்று அமர் கடந்து இவ்
வையம் எல்லாம் கொண்ட மன்னவன் மாறன் மை தோய் பொதியில்
தெய்வம் எல்லாம் மருவிப் பிரியாத சிறு நெறியே
#248
தோள்-வாய் மணி நிறம் மங்கைக்கு வாட்டவும் துன்னுதற்கே
நாள்-வாய் வருதி விண் தோய் சிலம்பா நறையாற்று நண்ணார்
வாள் வாய் உகச் செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில்
கோள் வாய் இளம் சிங்கம் நீங்கா திரிதரும் குன்றகமே
#249
காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை-தன் காரணமாப்
பூம் தண் சிலம்ப இரவின் வருதல் பொல்லாது-கொலாம்
வேந்தன் விசாரிதன் விண் தோய் குடுமிப் பொதியில் என்றும்
தேம் தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீ நெறியே
#250
அழுதும் புலம்பியும் நையும் இவள்-பொருட்டாக ஐய
தொழுதும் குறையுற்றும் வேண்டுவல் வாரல் துன்னார் நிணமும்
இழுதும் மிடைந்த செவ் வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல்
கழுதும் துணிந்து வழங்கல் செல்லாத கனை இருளே
#251
பொய்தலை வைத்த அருளொடு பூம்_குழலாள்-பொருட்டா
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல்
கை தலை வைத்துக் கழுது கண் சோரும் கனை இருளே
** தலைவிக்குரிய அச்சக்கிளவி
#252
பணி கொண்டு வாழாது எதிர்ந்து பறந்தலைக்கோடிப் பட்டார்
துணி கொண்டு பேய் துள்ள வேல் கொண்ட கோன் சுடர் தோய் பொதியின்
அணி கொண்ட தார் அண்ணல் வாரல் விடர் நின்று அரவு உமிழ்ந்த
மணி கொண்டு கானவர் வேழம் கடியும் மயங்கு இருளே
** இரவினும் பகலினும் நீ வருக என்றல்
#253
உரவும் கடல் சூழ் உலகு உடை வேந்தன் உசிதன் ஒன்னார்
பரவும் கழல் மன்னன் கன்னி அம் கானல் பகலிடம் நீ
வரவு மகிழ்ந்திலள் தையல் வெய்யோன் போய் மலை மறைந்த
இரவும் வரவு என்ன ஊனம் என்று ஆயினது இன் அருளே
** பகல்வருக என்றல்
#254
அடி மேல் அகல் இடம் எல்லாம் வணங்க அமரர்-தம் கோன்
முடி மேல் வளை உடைத்தோன் நெடுமாறன் முன் நாள் உயர்த்த
கொடி மேல் உரும் அதிர் கூர் இருள் வாரல்-மின் நீர் மகிழும்
படி மேல் பகல் வம்-மின் வந்தால் விரும்பும் என் பல்_வளையே
** இரவு வருக என்றல்
#255
அஞ்சாது எதிர் மலைந்தார் அளநாட்டுடனே மடிய
நஞ்சு ஆர் இலங்கு இலை வேல் கொண்ட தென்னவன் நாடு அனைய
பஞ்சு ஆர் அகல் அல்குல்-பால் பகல் வந்தால் பழி பெரிதாம்
மஞ்சு ஆர் சிலம்பா வரவு என்ன ஊனம் மயங்கு இருளே
** இரவும் பகலும் வரவு விலக்கல்
#256
ஓதம் கடைந்து அமரர்க்கு அமுது ஆக்கி உணக் கொடுத்துப்
பூதம் பணிகொண்ட பூழியன் மாறன் பொதியிலின்-வாய்
ஏதம் பழியினொடு எய்துதலால் இரவும் பகலும்
மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே
** தன்னுள் கையாறு எய்திடு கிளவி
#257
தன் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னித் தாது உறையும்
பொன் போல் மலர்ப் புன்னைக் கானலும் நோக்கிப் புலம்புகொண்ட
என் போல் இரவின் எல்லாம் துயிலாது நின்று ஏங்குதியால்
அன்போடு ஒருவற்கு அறிவு அழிந்தாயோ அலை கடலே
#258
பொன்தான் பயப்பித்து நல் நிறம் கொண்டு புணர்ந்து அகன்று
சென்றார் உளரோ நினக்கும் சொல்லாய் செந்நிலத்து வெம் போர்
வென்றான் வியன் நில வேந்தன் விசாரிதன் வெல் கழல் சேர்ந்து
ஒன்றார் முனை போல் கலங்கித் துஞ்சாயால் ஒலி கடலே
** நிலை கண்டு உரைத்தல்
#259
நெய் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன் அம் தண் நேரி என்னும்
மை நின்ற குன்றச் சிறுகுடி நீர் ஐய வந்து நின்றால்
கை நின்று கூப்பி வரை உறை தெய்வம் என்னாது கண்டோர்
மெய் நின்று உணர்வர் எனின் உய்யுமோ மற்று இவ் ஏந்து_இழையே
** படைத்து மொழி கிளவி
#260
அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேள் அயல் வேந்து இறைஞ்சும்
பொன் ஆர் கழல் நெடுமாறன் குமரி அம் பூம் பொழில்-வாய்
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே
என்னா முகம் சிவந்து எம்மையும் நோக்கினள் எம் அனையே
** தோழி வரைவு கடாயது
#261
பண் இவர் சொல்லி கண்டாள் நென்னல் பாழிப் பகை தணித்த
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலயம் என்னும்
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ்
கண் இவர் காதல் பிடியொடு நின்ற கரும் களிறே
#262
தொடுத்தால் மலரும் பைம் கோதை நம் தூதாய்த் துறைவனுக்கு
வடுத்தான் படா வணம் சொல்லும்-கொல் வானோர்க்கு அமிழ்து இயற்றிக்
கொடுத்தான் குட மன்னன் கோட்டாற்று அழித்துத் தென் நாடு தன் கைப்
படுத்தான் பராங்குசன் கன்னி அம் கானல் பறவைகளே
@18 கற்பு
** ஓதற்பிரிவு உரைத்தல்
#263
மைதான் இலாத தம் கல்வி மிகுத்து வருவது எண்ணிப்
பொய்தான் இலாத சொல்லார் செல்வர் போலும் புல்லாது அமரே
செய்தார் படச் செந்நிலத்தைக் கணை மழை திண் சிலையால்
பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே
** காவல்பிரிவு உரைத்தல்
#264
தேக்கிய தெள் திரை முந்நீர் இரு நிலம் தீது அகலக்
காக்கிய செல்வது காதலித்தார் அன்பர் காய்ந்து எதிரே
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள்
நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே
** பிரிவு கூறல்
#265
தாக்கிய போர் வய வேந்தர் இருவர்க்கும் சந்து இடைநின்று
ஆக்கிய செல்வது காதலித்தார் நமர் ஆர் அமருள்
வீக்கிய வார் கழல் வேந்தர்-தம் மானம் வெண்மாத்துடனே
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேர்_இழையே
** வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவுணர்த்தல்
#266
வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவற்காச்
சேரார் முனை மிசைச் சேறலுற்றார் நமர் செந்நிலத்தை
ஓராது எதிர்ந்தார் உடல் மீது உலாவி உருள் சிவந்த
தேரான் திரு வளர் தென் புனல் நாடு அன்ன சே_இழையே
#267
கல் நவில் தோள் மன்னன் தெவ் முனை மேல் கலவாரை வெல்வான்
வில் நவில் தோள் அன்பர் செல்வர் விசயசரிதன் எனும்
தென்னவன் சேரர் பட நறையாற்றுச் செரு அடர்த்த
மன்னவன் கூடல் வண் தீம் தமிழ் அன்ன மட_மொழியே
** பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
#268
படலைப் பனி மலர்த் தாரவர் வைகிய பாசறை மேல்
தொடலைக் கமழ் நறும் கண்ணியினாய் சென்று தோன்றும்-கொல்லோ
அடலைப் புரிந்த செவ் வேல் அரிகேசரி தென் குமரிக்
கடலைப் பருகி இரும் விசும்பு ஏறிய கார் முகிலே
** தோழி கூறல்
#269
வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர்
தேமா நறும் கண்ணியாய் சென்று தோன்றும்-கொல் சேரலர்-தம்
கோமான் கடல் படை கோட்டாற்று அழியக் கணை உகைத்த
ஏ மாண் சிலையவன் கன்னி நல் நீர் கொண்ட ஈர் முகிலே
** நிலைமை நினைந்து கூறல்
#270
இன் பார்ப்பு ஒடுங்க வலம் சிறை கோலி இடம் சிறையால்
அன்பால் பெடை புல்லி அன்னம் நடுங்கும் அரும் பனி நாள்
என்-பால் படரொடு என் ஆம்-கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர்
தென்பால்படச் செற்ற கோன் வையை நாடு அன்ன சே_இழையே
#271
அன்பு உடை மாதர் கண்டு ஆற்றும்-கொல் ஆற்றுக்குடி அடங்கா
மன் புடை வாட வென்றான் தமிழ்நாட்டு வலம் சிறைக் கீழ்
இன்பு உடை ஏர் இளம் பார்ப்புத் துயிற்றி இடம் சிறைக் கீழ்
மென் பெடை புல்லிக் குருகு நரல்கின்ற வீழ் பனியே
** வினை முற்றி நினைதல்
#272
கடி ஆர் இரும் பொழில்-கண் அன்று வாட்டி இன்றும் கலவாப்
படியார் படை மா மதில் மேல் பனி வந்து பாரித்ததால்
வடி ஆர் அயில் நெடுமாறன் எம் கோன் கொல்லி வண்டு இமிர் பூம்
கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே
#273
கய-வாய் மலர் போல் கரும் கண் பிறழ வெண் தோடு இலங்க
நயவார் முனை மிசைத் தோன்றின்று கோட்டாற்று எதிர்ந்த தன்னை
வியவார் படை இட்டு எண் காதம் செலச் சென்று மீன் திளைக்கும்
வய வாள் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே
#274
தங்கு அயல் வெள் ஒளி ஓலையதாய்த் தட மா மதில் மேல்
பொங்கு அயல் வேந்தர் எரி மூழ்கத் தோன்றின்று போதுகள் மேல்
பைம் கயல் பாய் புனல் பாழிப் பற்றாரைப் பணித்த தென்னன்
செங்கயலோடு சிலையும் கிடந்த திரு முகமே
** பாகற்கு உரைத்தல்
#275
வென்றே களித்த செவ் வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்
சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது
இன்றே புகும் வண்ணம் ஊர்க திண் தேர் இள வஞ்சி என்ன
நின்றே வணங்கும் நுடங்கு இடை ஏழை நெடு நகர்க்கே
#276
பட்டு ஆர் அகல் அல்குல் பாவையும் காணும்-கொல் பாழி வெம் போர்
அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள்
இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில்
கட்டு ஆர் கமழ் கண்ணி போல் மலர்கின்றன கார்ப் பிடவே
#277
புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்துப் போர் எதிர்ந்தார்
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென் நாட்டு இரும் சுருள் போய்
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது
திரிந்த திண் கோட்ட கலைமா உகளும் செழும் புறவே
#278
செறி கழல் வானவன் செம்பியன் தென் நாடு அனைய வென்றி
வெறி கமழ் கோதை கண் வேட்கை மிகுத்தன்று வெள்ளம் சென்ற
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண்
பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே
#279
ஆழித் திருமால் அதிசயற்கு ஆற்றுக்குடி உடைந்தார்
சூழிக் களிற்றின் துனைக திண் தேர் துயர் தோன்றின்று காண்
கோழிக் குடுமி அம் சேவல் தன் பேடையைக் கால் குடையாப்
பூழித்-தலை இரை ஆர்வித்துத் தான் நிற்கும் பூம் புறவே
#280
கைம்மாப் புறவின் சுவடு தொடர்ந்து கனல் விழிக்கும்
மெய் மா மத களி வேழங்கள் பின் வர முன்னுக தேர்
நெய் மாண் அயில் நெடுமாறன் நிறை புனல் கூடல் அன்ன
மை மாண் குழலாள் பரம் அன்று வானிடை வார் புயலே
#281
முன் தான் உறத் தா அடி முள் உறீஇ முடுகாது திண் தேர்
என்றால் இழைத்தவற்றோடு இற்றை நாளும் இழைக்கும்-கொலாம்
ஒன்றா வயவர் தென் பாழிப் பட ஒளி வேல் வலத்தால்
வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே
#282
கடிக் கண்ணி வேந்தரை ஆற்றுக்குடிக் கன்னி வாகை கொண்டே
முடிக் கண்ணியா வைத்த மும்மதில் வேந்தன் முசிறி அன்ன
வடிக் கண்ணி வாட வள மணி மாளிகைச் சூளிகை மேல்
கொடிக்கு அண்ணிதாம் வண்ணம் நண்ணி வந்து ஆர்த்தன கொண்டல்களே
** முகிலொடு கூறல்
#283
பண் தேர் சிறை வண்டு அறை பொழில் பாழிப் பற்றாத மன்னர்
புண் தேர் குருதிப் படியச் செற்றான் புனல் நாடு அனையாள்
கண்டு ஏர் அழிந்து கலங்கும் அவள்-தன் கடி நகர்க்கு என்
திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே
** வரவு எடுத்துரைத்தல்
#284
கொல் தாங்கு அயில் மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன
முற்றா இள முலை மாதே பொலிக நம் முன் கடைவாய்ச்
செற்றார் பணி திறை கொண்ட நம் அன்பர் செழு மணித் தேர்ப்
பொன் தார்ப் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே
#285
ஆரும் அணி இளம் போந்தையும் வேம்பும் அலர்ந்து தண் தேன்
வாரும் கமழ் கண்ணி வானவன் மாறன்-தன் மரந்தை அன்னாய்
காரும் கலந்து முழங்கி மின் வீசின்று காதலர்-தம்
தேரும் சிலம்பிப் புகுந்தது நங்கள் செழு நகர்க்கே
** பருவம் தூதாயிற்று எனப் பாங்கி உரைத்தல்
#286
முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு
சென்றார் வரவிற்குத் தூது ஆகி வந்தது தென் புலிப்பை
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல்
நின்றான் மணி கண்டம் போல் இருள் கூர்கின்ற நீள் முகிலே
** தலைவன் தோழிக்கு மறவாமை கூறல்
#287
மடை ஆர் குவளை நெடும் கண் பனி மல்க வந்து வஞ்சி
இடையாள் உடனாய் இனிது கழிந்தன்று இலங்கும் முத்தக்
குடையான் குல மன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற
படையான் பகை முனை போல் சென்று நீடிய பாசறையே
** பொருள் பிரிவுணர்த்தல்
#288
இல்லார் இருமையும் நன்மை எய்தார் என்று இருநிதிக்குக்
கல் ஆர் சுரம் செல்வதே நினைந்தார் நமர் காய்ந்து எதிர்ந்த
புல்லார் அவிய நெல்வேலிப் பொரு கணை மாரி பெய்த
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே
** தலைமகள் ஆற்றது உரைத்தல்
#289
ஊனம் கடந்த உயர் குடை வேந்தன் உசிதன் ஒன்னார்
மானம் கடந்து வல்லத்து அமர் ஓட்டிய கோன் இ மண் மேல்
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய்
கானம் கடந்து சென்றோ பொருள் செய்வது காதலரே
** தலைவி நிலைமை தோழி கூறல்
#290
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல்
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள்
நிரை தங்கு சங்கு கழலக் கண் நித்திலம் சிந்த நில்லா
அரை தங்கு மேகலை மெல் அடி மேல் வீழ்ந்து அரற்றினவே
#291
மன் ஏந்திய புகழ் வாள் நெடுமாறன்-தன் மரந்தை அன்ன
மின் ஏந்திய இடையாய் நமர் செல்வர் வெம் கானம் என்னப்
பொன் ஏந்து இள முலை பூம் தடம் கண் முத்தம் தந்தன போய்
என் ஏந்திய புகழீர் இனிச் செய்யும் இரும் பொருளே
** தோழி கங்குல் மிசை வைத்துக்கூறல்
#292
வரு நெடும் கங்குல் எவ்வாறு இனி நீந்தும் வல்லத்து வென்ற
செரு நெடும் தானை எம் கோன் தெவ்வர் போலச் சென்று அத்தம் என்னும்
ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் உலாய்க் குண-பால்
திரு நெடும் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே
#293
படம் தாழ் பணை முக யானைப் பராங்குசன் பாழி வென்ற
இடம் தாழ் சிலை மன்னன் வெல் களம் போல விரிந்த அந்தி
நடந்தால் இடை இருள் போய்க் கடையாம நல் ஊழி மெல்லக்
கடந்தால் அதன் பின்னை அன்றே வருவது காய் கதிரே
** கானத்து இயல்பு தோழி உரைத்தல்
#294
தேன் நக்க தாரவர் காண்பர் செல்லார் அவர் செல்ல ஒட்டி
நானக் குழல் மங்கை நன்று செய்தாய் வென்று வாய் கனிந்த
மானக் கதிர் வேல் வரோதயன் கொல்லி வரை அணிந்த
கானத்திடைப் பிடி கையகலாத கரும் களிறே
** தலைவன் வரவு தோழி உரைத்தல்
#295
இருள் மன்னும் மேகமும் கார்செய்து எழுந்தன வெள் வளையாய்
மருள் மன்னு வண்டு அறை தாரவர் தாமும் இ மாநிலத்தார்க்கு
அருள் மன்னு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
பொருள் மன்னும் எய்திப் புகுந்தனர் வந்து நம் பொன் நகர்க்கே
** வன்பொறை எதிரழிந்து சொல்லியது
#296
தகரக் குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற
சிகரக் களிற்று செங்கோல் நெடுமாறன் தென் கூடலின்-வாய்
மகரக் கொடியவன் தன் நெடு வேல் நின் மலர் விலைக்குப்
பகரக் கொணர்ந்து இல்லம்-தோறும் திரியும் இப் பல்_வளையே
** தோழி வாயில் மறுத்தல்
#297
மை வார் இரும் பொழில் வல்லத்துத் தெவ்வர்க்கு வான் கொடுத்த
நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய்
இவ்வாய் வருவர் நம் காதலர் என்ன உற்றேற்கு எதிரே
செவ் வாய் துடிப்பக் கரும் கண் சிவந்தன சே_இழைக்கே
** பாணன் புலந்துரைத்தல்
#298
சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்னத் தந்த
கன்றே அமையும் கல் வேண்டா பல் யாண்டு கறுத்தவரை
வென்றே விழிஞம் கொண்டான் கடல் ஞாலம் மிக அகலிது
அன்றே அடியேன் அடி வலம்கொள்ள அருளுகவே
** பொறாமை நீங்கத் தோழி சொல்லியது
#299
இழுது நிணம் தின்று இரும் சிறைத் தெவ் மன்னர் இன் குருதி
கழுது படியக் கண்டான் கன்னி அன்ன மின் ஏர் இடையாய்
அழுது சுவல் சென்ற அக்கு அரையானொடும் வந்தமையால்
தொழுது வழிபடற்பாலை பிழைப்பு எண்ணல் தோன்றலையே
#300
வார் ஆர் சிறுபறை பூண்டு மணிக் காசு உடுத்துத் தந்தை
பேரான் சுவலின் இருப்ப வந்தான் பிழைப்பு எண்ணப்பெறாய்
நேரா வயவர் நெடுங்களத்து ஓட நெய் வேல் நினைந்த
பாரார் புகழ் மன்னன் தென் புனல் நாடு அன்ன பல்_வளையே
** தலைவி ஆறியது தோழி கூறல்
#301
மிடை மணிப் பூண் மன்னர் ஓட விழிஞத்து வென்றவன் தாள்
புடை மணி யானையினான் கன்னி அன்னாள் பொரு கயல் கண்
உடைமணியானொடு நீ வர ஊடல் சிவப்பு ஒழிந்தும்
அடை மணி நீலத்து அணி நிறம் கொண்டும் அலர்ந்தனவே
** புனலாட்டிய ஈரம் புலர்த்து வருக என்றல்
#302
பங்கயப் பூம் புனல் நாடன் பராங்குசன் பாழி ஒன்னார்
மங்கையர்க்கு அல்லல் கண்டான் மணி நீர் வையை வார் துறை-வாய்
எங்கையைத் தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும்
அங்கையின் சீறடி தீண்டிச் செய்யீர் செய்யும் ஆர் அருளே
** நாள் குறித்துத் தோழி உரைத்தல்
#303
கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடு_இல் திங்கள்
நாளே குறித்துப் பிரியலுற்றார் நமர் தீ விழியால்
ஆளே கனலும் கொல் யானைச் செங்கோல் அரிகேசரி-தன்
வாளே புரையும் தடம் கண்ணி என்னோ வலிக்கின்றதே
** ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் சொல்லியது
#304
வார்ந்து ஆர் கரு மென் குழல் மங்கை மா நிதிக்கு என்று அகன்ற
ஈர்ந்தாரவர் இன்று காண்பர்-கொல்லோ இகலே கருதிச்
சேர்ந்தார் புறம்கண்டு செந்நிலத்து அன்று திண் தேர் மறித்துப்
பேர்ந்தான்-தனது குல முதலாய பிறைக் கொழுந்தே
** தலைமகள் தோழிக்குச் சொல்லியது
#305
தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல்
இழித்தார் மணி கண்டம் போல் இருண்டன காரிகையே
விழித்தார் பட விழிஞக்கடல்கோடித் தன் வெண் சுடர் வாள்
கழித்தான் குமரி நல் நீர் கொண்டு எழுந்த கண முகிலே
#306
உளம் கொண்டு வாடின்று கோட்டாற்று எதிர்ந்தார் உதிர வெள்ளம்
குளம் கொண்டு தோற்பித்த கோன் நெடுமாறன் கை போலும் கொண்டல்
களம் கொண்டு கார் செய்த காலைக் களவின் கவை முகத்த
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே
** தோழி உரைத்தல்
#307
சுழலும் வரி வண்டு அலம்ப சொரி மதம் வாய்ப் புக நின்று
அழலும் களிற்று அரிகேசரி தென் புனல் நாடு அனையாள்
கழலும் வரி வளை காக்க வந்தன்று கனலும் செந்தீத்
தழலும் குளிர்ந்து பொடிப்படப் போர்க்கின்ற தாழ் பனியே
#308
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது
குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்ட கொல்லைக்
கனி ஆர் களவின் அக முள் கதிர் முத்தம் கோப்பன போல்
பனி ஆர் சிதர் துளி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே
** தோழி கவன்று உரைத்தல்
#309
வான் நலம் கொண்ட கையான் மன்னன் மாறன்-தன் மரந்தை அன்னாள்
தான் நலம் தேய் அப் பனியோ கழிந்தது தண் குவளைத்
தேன் நலம் போது வளாய் வந்து தண் தென்றல் தீவிரியும்
வேனல் அம் காலம் எவ்வாறு கழியும்-கொல் மெல்_இயற்கே
** ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு உரைத்தல்
#310
மெல்_இயலாய் நங்கள் மேல் வெய்யவாய் விழிஞத்து வென்ற
மல் இயல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார் சடையோன்
வில் இயல் காமனைச் சுட்ட வெம் தீச் சுடர் விண்டு அவன் மேல்
செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தே மலரே
** தலைமகந்தன் நெஞ்சிற்கு உரைத்தல்
#311
மஞ்சு ஆர் இரும் பொழில் வல்லத்து வாள் மன்னர் போர் அழித்த
அஞ்சா அடு களி யானையினான் அகல் ஞாலம் அன்ன
பஞ்சு ஆர் அகல் அல்குலாள் தன்மை சொல்லும் பணை முலை மேல்
செஞ்சாந்து அணிந்து வந்தாள் செய்த கோலத்தின் சே_இழையே
** தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்
#312
பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன் இல் புறங்கடையான்
என்னா அளவில் சிவந்தாள் சிவந்தும் இயல்வது அன்றால்
அன்னாய் எனச் சிவப்பாற்றினள் வல்லத்து அரசு அவித்த
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே
** தக்கான் என்றல்
#313
கோடிய நீள் புருவத்து மடந்தை கொழும் பணைத் தோள்
வாடிய வாட்டம் உணர்ந்து மனையிடை வந்தமையால்
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அகன்று
நீடிய காதலர் தாமே பெரியர் இ நீள் நிலத்தே
** தகான் என்றல்
#314
விண்டு உறை தெவ்வர் விழிஞத்து அவிய வெல் வேல் வலம் கைக்
கொண்டு உறை நீக்கிய கோன் வையை நாடு அன்ன கோல் வளை இவ்
வண்டு உறை கோதை வருந்த நல்லார் இல்லில் வைகுதலால்
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே
** தலைவி சிறப்புரைத்தல்
#315
நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலித் தன் நீள் சிலை-வாய்ச்
சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள்
பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும்
கரந்தாள் அகல் இடம் எல்லாம் புகழ் தரும் கற்பினளே
** பரத்தை தற்புகழ்தல்
#316
வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல்
செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல்
அம் சுடர் வேல் அரிகேசரி கோன் அளநாட்டு உடைந்தார்-
தம் சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே
** தலைவி தற்புகழ்தல்
#317
வெறி தரு பூம் தார் விசாரிதன் வேலை முந்நீர் வரைப்பின்
நெறிதரு கோல் செல்லும் எல்லை உள்ளேம் அல்லேம் நீர்மை இலாச்
சிறியர் வாழ் பதியே எமது இல்லம் சிறிது எமக்கே
எறி புனல் ஊர எவ்வாறு அமையும் நின் இன் அருளே
** பெரியீர்க்கு இது தகாது என்றல்
#318
வரிய வண்டு ஆர் தொங்கல் மான் தேர் வரோதயன் வல்லத்து ஒன்னார்
கரிய வை வேல் கொண்ட காவலன் காக்கும் கடலிடம் போல்
பெரிய நல் நாட்டுப் பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு
உரிய மிக்கீர்க்கு இயல்பு அன்று-கொல் இவ்வாறு ஒழுகுவதே
** தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தல்
#319
இல் என்று இரவலர்க்கு ஈதல்செய்யாதான் இல்லம் எனப்
புல்லென்று வாடிப் புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார்
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட
கொல் ஒன்று வாள் படையான் தமிழ்நாடு அன்ன கோல்_வளையே
#320
அரை அணங்கும் துகிலாள் அல்லள் ஆற்றுக்குடியில் வென்ற
உரை அணங்கும் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில்
வரை அணங்கோ அல்லளோ என்ன யான் மம்மர் எய்த உண்கண்
நிரை அணங்கும் பனி நீர் கொள்ள நின்ற இ நேர்_இழையே
** நெஞ்சிற்கு உரைத்தல்
#321
துளியும் துறந்த வெம் கானம் செலவு இன்று சொல்லுதுமேல்
ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்-கொல் உசிதன் என்ற
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் எனச் சிறந்த
அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆய்_இழையே
** தலைமகன் செலவழுங்கல்
#322
மை ஆர் தடம் கண் வரும் பனி சோர வருந்தி நின்று இ
நெய் ஆர் குழலாள் இனைய நறையாற்று நின்று வென்ற
கை ஆர் கொடும் சிலைச் செங்கோல் கலிமதன் காய் கலிக்கு
வெய்யான் பகை என நீங்குதுமோ நெஞ்சம் வெம் சுரமே
#323
செரு மால் கடல் படை சேரலர் கோன் நறையாற்று அழியப்
பொரு மால் சிலை தொட்ட பூழியன் மாறன் பொரு முனை போல்
அரு மா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள்-தன்
பெரு மா மழைக் கண்ணும் நித்திலம் சிந்தின பேதுறவே
** அறியாமல் பிரிந்த தலைமகனையுடையாள் சொல்லியது
#324
செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்லத் தன்-கண்
ஒல்லாள் அவள் என்று அவர் இகழ்ந்தார் மற்று இவை இரண்டும்
கொல் ஆர் அயில் படைக் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற
வில்லான் பகை போல் என் உள்ளம்-தன்னை மெலிவிக்குமே
** பருவமன்று என்று ஆற்றுவித்தல்
#325
கடாவும் நெடும் தேர்க் கலிமதனன் கலி தேயச் செங்கோல்
நடாவும் நகை முத்த வெண்குடை வேந்தன் நண்ணார் மதில் பாய்ந்து
இடாவும் மத மா மழை பெய்யும் ஓதை என முழங்கப்
பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் பெண் அணங்கே
** பருவம் என்றல்
#326
விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய்
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல்
கடக் குன்றம் சென்ற நம் காதலர் பொய்யலர் நையல் பொன்னே
மடக் கொன்றை வம்பினை கார் என்று மலர்ந்தனவே
#327
பூரித்த மென் முலையாய் அன்று பூலந்தைப் போர் மலைந்த
வேரித் தொடையல் விசயசரிதன் விண் தோய் கொல்லி மேல்
மூரிக் களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல்
மாரிக்கு முல்லையின் வாய் நகவே நீ வருந்துவதே
** வருவர் என வற்புறுத்தியது
#328
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல்
நெய் ஆர் அயிலவர் காணப் பொழிந்த நெடுங்களத்து
வெய்யார் அமரிடை வீழச் செம் தூவி வெள்ளம் புகைத்த
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே
#329
கொடி ஆர் மதில் கோட்டாற்று அரசர் குழாம் சிதைத்த
வடி ஆர் அயில் படை வானவன் மாறன் வண் கூடல் அன்ன
துடி ஆர் இடையாய் வருந்தல் பிரிந்த துளங்கு ஒளி சேர்
அடி ஆர் கழலார் அணுக வந்து ஆர்த்தது அகல் விசும்பே
#330
ஆமான் அனைய மெல் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற
தேமா நறும் கண்ணியாரையும் காட்டும் தென் பாழி வென்ற
வாமா நெடும் தேர் மணிவண்ணன் மாறன் வண் தீம் தமிழ்நர்
கோமான் கொடி மேல் இடி உரும் ஆர்க்கின்ற கூர்ம் புயலே
#331
கரும் தண் புயல் வண் கைத் தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும்
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து
வருந்தல் மடந்தை வருவர் நம் காதலர் வான் அதிரக்
குருந்தம் பொருந்தி வெண் முல்லைகள் ஈன்றன கூர் எயிரே
#332
புலம் முற்றும் தண் புயல் நோக்கிப் பொன் போல் பசந்ததின்-பால்
நலம் முற்றும் வந்த நலமும் கண்டாய் நறையாற்று எதிர்ந்தார்
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ்
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே
#333
அறை ஆர் கழல் மன்னன் ஆற்றுக்குடி அழல் ஏற வென்று
கறை ஆர் அடர் வேல் வலம்கொண்ட கோன் கடல் ஞாலம் அன்னாய்
நிறையாம் வகை வைத்து நீத்தவர் தேரொடு நீ பிணித்த
இறை ஆர் வரி வளை சேர வந்து ஆர்த்தன ஏர் முகிலே
** செவிலி நற்றாய்க்கு உரைத்தல்
#334
திரு நெடும் கோதையும் தெய்வம் தொழாள் தெவ்வர் மேல் செலினும்
பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றித் தங்கான் பிறழ்வு_இல் செங்கோல்
அரு நெடும் தானை அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
கரு நெடும் கண் மடவாய் அன்னதால் அவர் காதன்மையே
#335
பார் மன்னு செங்கோல் பாராங்குசன் கொல்லிப் பனி வரை-வாய்க்
கார் மன்னு கோதை அன்னாளும் அருந்ததிக் கற்புடையாள்
தேர் மன்னன் ஏவச் சென்றாலும் முனை மிசைச் சேந்து அறியா
போர் மன்னு வேல் அண்ணல் பொன் நெடும் தேர் பூண் புரவிகளே
#336
கூர் ஆர் அயில் கொண்டு நேரார் வளம் பல கொண்ட வென்றித்
தேரான் வரோதயன் வஞ்சி அன்னாள் தெய்வம் சேர்ந்து அறியாள்
வார் ஆர் கழல் மன்னன் தானே பணிப்பினும் வல்லத்துத் தன்
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடுந்தகையே
** சிறைப்புறம் குறித்தல்
#337
உலத்தின் பொலிந்த திண் தோள் மன்னன் ஒண் தேர் உசிதன் மற்று இ
நிலத்தில் பொலிந்த செங்கோலவன் நீள் புனல் கூடல் அன்ன
நலத்திற்கும் நாணிற்கும் கற்பிற்கும் ஞாலத்தின் நல்ல நங்கள்
குலத்திற்கும் தக்கது அன்றால் இன்னை ஆகுதல் கோல்_வளையே
** சங்கினை வாழ்த்தல்
#338
தேன் இறவு ஆர் கண்ணிச் செம்பியன் மாறன் செழும் குமரி
மால் நிற வெண் திரை மால் கடல் தோன்றினை மண் அளந்த
நீல் நிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம் புரை தீம்
பால் நிற வெண் சங்கம் யார் நின்னின் படிமையரே
** விற்பூட்டுப் பொருள்கோள்
#339
வருவர் வயங்கு_இழாய் வாட்டாற்று எதிர்நின்று வாள் மலைந்த
உருவ மணி நெடும் தேர் மன்னர் வீய ஒளி தருமேல்
புருவம் முரிவித்த தென்னவன் பொன் அம் கழல் இறைஞ்சாச்
செரு வெம் படை மன்னர் போல் வெம் கானகம் சென்றவரே
** விதலையாப்பு
#340
பண்தான் அனைய சொல்லாய் பரி விட்டுப் பறந்தலை-வாய்
விண்டார் படச் செற்ற கோன் கொல்லிப் பாங்கர் விரை மணந்த
வண்டு ஆர் கொடி நின் நுடங்கு இடை போல வணங்குவன
கண்டால் கடக்கிற்பரோ கடவார் அன்பர் கானகமே
** பாசி நீக்கம்
#341
சென்றார் வருவது நன்கு அறிந்தேன் செருச் செந்நிலத்தை
வென்றான் பகை போல் மெல் இயல் மடந்தை முன் வெற்பு எடுத்து
நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள் புயலால்
பொன்தான் மலர்ந்து பொலம் கொன்றைதாமும் பொலிந்தனவே
** கொண்டுகூட்டு
#342
கோவைக் குளிர் பூத்த வெண்குடைக் கோன் நெடுமாறன் முந்நீர்
தூ வைச் சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ
பூவைப் புது மலர் வண்ணன் திரை பொரு நீர்க் குமரிப்
பாவைக்கு இணை அனையாய் கொண்டு பண்டு ஈத்த பல் முகிலே
** ஒரு சிறை நிலை
#343
கோடல் மலர்ந்து குருகு இலை தோன்றின கொன்றைச் செம்பொன்
பாடல் மணி வண்டு பாண்செயப் பாரித்த பாழி வென்ற
ஆடல் நெடும் கொடி அரிகேசரி அம் தண் பொன்னி
நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே
** விதலை யாப்பு
#344
முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள்
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல்
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே
#345
மானக் கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று
ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து
நானக் குழல் மிசை நான் கொய்து கொண்டு நயந்து அணிந்த
கானக் குரவின் அம் போதே கமழும் என் கைத்தலமே
** கோளின்றி வருதல்
#346
வாடும் நிலைமையை நீக்கி மண் காத்து வல்லத்து எதிர்ந்தார்
ஓடும் நிலைமை கண்டான் வையை ஒண் நுதல் மங்கையரோடு
ஆடும் நிலைமையை அல்லை அவரோடு அம் பூம் பொழில்-வாய்
நீடு நிலைமையும் அல்லை சொல்லாய் என் நெடுந்தகையே
** சொல்லெச்சம்
#347
பள்ளத்து நீலம் பறந்தலைக்கோடிப் பட்டார் குருதி
வெள்ளத்துச் செங்கழுநீர் வைத்த கோன் தொண்டி வண்டு மென் பூ
வள்ளத்துத் தேம் மகிழ் கானல் வந்தார் சென்ற தேர் வழி எம்
உள்ளத்தினோடு சிதைய வந்து ஊரும் ஒலி கடலே
** குறிப்பெச்சம்
#348
இடி ஆர் முகில் உரும் ஏந்திய கோன் இரணோதயன்-தன்
வடி ஆர் அயில் அன்ன கண்ணி-தன் வாட்டம் உணர்ந்து வண் பூம்
கடி ஆர் கரும் கழி மேய்கின்ற கானல் கலந்து அகன்ற
கொடியாரினும் மிகத் தாமே கொடிய குருகு இனமே
** பாண்டிக் கோவை பாடல்கள் முற்றிற்று