Select Page

நம்பி அகப்பொருள் விளக்கம்

**நாற்கவிராச நம்பி

@0 பாயிரம்
** [பழம் பாயிரம்]

#1
பூ மிசை நடந்த
வாமனை வாழ்த்தி வடமலைச் சென்னி
ஈண்டிய கடவுளர் வேண்டலில் போந்து
குடங்கையின் அலை கடல் அடக்கி ஈண்டிய
தென்மலை இருந்த இரும் தவன் இயற்றமிழ் 5
கெழீய அகப்பொருள் தழீய நோக்கி
வழிகொடுத்து நிறீஇ வகுத்துப் புலப்படுத்தாங்கு
இகப்பு_இல் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி
செந்தமிழ்நாட்டு மைந்தன் குரிசில்
பாற்கடல் பல புகழ் பரப்பிய 10
நாற்கவிராசநம்பி என்பவனே

#2
** சிறப்புப்பாயிரம்
பூ மலி நாவன் மா மலைச் சென்னி
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து
குடங்கையின் விந்த நெடும் கிரி மிகை தீர்த்து
அலை கடல் அடக்கி மலையத்து இருந்த
இரும் தவன்-தன்பால் இயற்றமிழ் உணர்ந்த 5
புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய
தொல்காப்பியன் அருள் ஒல்காப் பெரும் பொருள்
அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ
இகப்ப அரும் சான்றோர் இலக்கியம் நோக்கித்
தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு 10
அகப்பொருள் விளக்கம் என்று அதற்கு ஒரு நாமம்
புலப்படுத்தி இருள் அறப் பொருள் விரித்து எழுதினன்
மாந்தரும் தேவரும் வாழ்த்த முக்குடைக் கீழ்
ஏந்து எழில் அரி மான் ஏந்து பொன் அணை மிசை
மதி மூன்று கவிப்ப உதய மால் வரைக் 15
கதிர் ஒன்று இருந்து எனக் காண் தக இருந்து
தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய
உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும்
முத்தமிழ் ஆசான் மைந்தன் இத் தலத்து
இரு பெரும் கலைக்கும் ஒரு பெரும் குரிசில் 20
பாற்கடல் புகழ் பரப்பிய
நாற்கவிராசநம்பி என்பவனே
** நூல்

@1 அகத்திணை இயல்

#1
** இதன் வகை
மலர் தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அரும் தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும்

#2
** இதன் திறன்
அதுவே
புனைந்துரை உலகியல் எனும் திறம் இரண்டினும்
தொல் இயல் வழாமல் சொல்லப்படுமே

#3
** கைக்கிளை இன்னது
அவற்றுள்
கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்

#4
** ஐந்திணை இன்னது
ஐந்திணை உடையது அன்பு உடைக் காமம்

#5
** பெருந்திணை இன்னது
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்

#6
** ஐந்திணை வகை
குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே

#7
** ஐந்திணைக்கு உரிய பொருள் வகை
அவைதாம்
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என முறை
நுதல் பொருள் மூன்றினும் நுவலப்படுமே

#8
** முதற்பொருள் வகை
நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே

#9
** நிலத்தின் வகை
வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவைஅவை சேர்தரும் இடனே
என ஈர்_ஐ வகைத்து அனை இயல் நிலமே

#10
** பொழுதின் வகை
பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே

#11
** பெரும்பொழுதின் வகை
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் வேனில் என்று ஆங்கு
இரு_மூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே

#12
** சிறுபொழுதின் வகை
மாலை யாமம் வைகறை எற்படு
காலை வெம் கதிர் காயும் நண்பகல் எனக்
கை வகைச் சிறுபொழுது ஐ வகைத்து ஆகும்

#13
** குறிஞ்சியில் பெரும்பொழுது சிறுபொழுது
அவற்றுள்
கூதிர் யாமம் முன்பனி என்று இவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும்

#14
** பாலையில் பெரும்பொழுது சிறுபொழுது
வேனில் நண்பகல் பின்பனி என்று இவை
பான்மையின் உரிய பாலை-தனக்கே

#15
** முல்லையில் பெரும்பொழுது சிறுபொழுது
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய

#16
** மருதத்தில் சிறுபொழுது
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே

#17
** நெய்தலில் சிறுபொழுது
வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே

#18
** மருதத்தில் நெய்தலில் பெரும்பொழுது
மருதம் நெய்தல் என்று இவை இரண்டிற்கும்
உரிய பெரும்பொழுது இரு_மூன்றும்மே

#19
** கருப்பொருள் வகை
ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு
ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண்
தொழில் எனக் கருவி ஈர்_எழு வகைத்து ஆகும்

#20
** குறிஞ்சியின் கருப்பொருள் நிரல்
விறல் சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளி மயில் மறப் புலி குடாஅடி
கறையடி சீயம் சிறுகுடி அருவி
நறும் சுனை வேங்கை குறிஞ்சி காந்தள் 5
ஆரம் தேக்கு அகில் அசோகம் நாகம்
வேரல் ஐவனம் தோரை ஏனல்
கறங்கு இசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகோள் ஐவனம் வித்தல் செறி குரல்
பைம் தினை காத்தல் செந்தேன் அழித்தல் 10
செழும் கிழங்கு அகழ்தல் முழங்கு வீழ் அருவியொடு
கொழும் சுனை ஆடல் குறிஞ்சிக் கருப்பொருளே

#21
** பாலையின் கருப்பொருள் நிரல்
கன்னி விடலை காளை மீளி
இன் நகை எயிற்றி எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை
கழுகு செந்நாய் கல் கெழு குறும்பு
குழி வறும் கூவல் குராஅ மராஅ 5
உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை
வழங்கு கதிக் கொண்டன செழும் பதி கவர்ந்தன
பகைத் துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகல் சூறையாடல் பாலைக் கருப்பொருளே

#22
** முல்லையின் கருப்பொருள் நிரல்
நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல்
வடு_இல் கற்பின் மனைவி கிழத்தி
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்
கான வாரணம் மான் முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை 5
நிறம் கிளர் தோன்றி பிறங்கு அலர்ப் பிடவம்
கொன்றை காயா மன்றல் அம் குருந்தம்
தாற்றுக் கதிர் வரகொடு சாமை முதிரை
ஏற்றுப்பறை முல்லையாழ் சாதாரி
சாமை வரகு தரமுடன் வித்தல் 10
அவை களைகட்டல் அரிதல் கடாவிடல்
செவி கவர் கொன்றைத் தீம் குழல் ஊதல்
மூ இனம் மேய்த்தல் சே இனம் தழுவல்
குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை
முழுது உடன் ஆடல் முல்லைக் கருப்பொருளே 15

#23
** மருதத்தின் கருப்பொருள் நிரல்
இந்திரன் ஊரன் பைம் தார் மகிழ்நன்
கெழுதகு கற்பின் கிழத்தி மனைவி
உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர்
மழலை வண்டானம் மகன்றில் நாரை
அன்னம் போதா நல் நிறக் கம்புள் 5
குருகு தாரா எருமை நீர்நாய்
பெருகிய சிறப்பின் பேரூர் முதூர்
யாறு மனைக்கிணறு இலஞ்சி தாமரை
நாறு இதழ் கழுநீர் நறு மலர்க் குவளை
காஞ்சி வஞ்சி பூம் சினை மருதம் 10
செந்நெல் வெண்ணெல் அந் நெல்லரிகிணை
மன்றல் முழவம் மருதயாழ் மருதம்
மன்று அணி விழாக்கோள் வயல் களைகட்டல்
அரிதல் கடாவிடல் அகல் குளம் குடைதல்
வரு புனல் ஆடல் மருதக் கருப்பொருளே 15

#24
** நெய்தலின் கருப்பொருள் நிரல்
வருணன் சேர்ப்பன் விரி திரைப் புலம்பன்
பரும அல்குல் பரத்தி நுளைச்சி
நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலை கடல் காக்கை
சுறவம் பாக்கம் பெறல் அரும் பட்டினம் 5
உவர் நீர்க் கேணி கவர் நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டகம் அடம்பு
கண்டல் புன்னை வண்டு இமிர் ஞாழல்
புலவு மீன் உப்பு விலைகளின் பெற்றன
நளி மீன்கோட்பறை நாவாய் பம்பை 10
விளரியாழ் செவ்வழி மீன் உப்புப்படுத்தல்
உணங்கு அவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல்
நெடும் கடல் ஆடல் நெய்தல் கருப்பொருளே

#25
** உரிப்பொருள் வகை
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் என ஆங்கு
எய்திய உரிப்பொருள் ஐ_இரு வகைத்தே

#26
** கைக்கோளின் வகை
அளவு_இல் இன்பத்து ஐந்திணை மருங்கில்
களவு கற்பு என இரு கைக்கோள் வழங்கும்

#27
** களவுப் புனர்ச்சி வகை
இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு
பாங்கன் கூட்டம் பாங்கியின் கூட்டம் என்று
உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே

#28
** கைக்கிளை இயலும் காலம்
மெய்க் கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சி முன்
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப

#29
** கைக்கிளை இஃதெனல்
அதுவே
காமம் சான்ற இளமையோள் வயின்
குறிப்பு அறிகாறும் குறுகாது நின்று
குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும்

#30
** கைக்கிளை ஆற்றும் தலைமக்கள்
மறையோர் மன்னவர் வணிகர் சூத்திரர் எனும்
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே

#31
** கைக்கிளையில் மற்றோர் வகை
அதுவே
மொழிந்தோர் நால்வரும் ஒழிந்த ஐந்நிலத்து உறை
இழிந்தோர்-தம்முள் உயர்ந்தோரும் எய்துப

#32
** இயற்கைப் புணர்ச்சி இஃதெனல்
தெய்வம் தன்னின் எய்தவும் கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி

#33
** இயற்கைப் புணர்ச்சியில் சிறப்பு
இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
முயற்சி இன்றி முடிவது ஆகும்

#34
** களவினுள் புணர்ச்சி வகை
உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய

#35
** உள்ளப் புணர்ச்சி நிகழ்வு களம்
பொருவிறந்தோற்கு பெருமையும் உரனும்
நல்_நுதற்கு அச்சமும் நாணும் மடனும்
மன்னிய குலங்கள் ஆதலின் முன்னம்
உள்ளப் புணர்ச்சி உரியது ஆகும்

#36
** மெய்யுறு புணர்ச்சி நிகழ்வு களம்
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக்
காட்டிய பத்தும் கைவரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே

#37
** களவுப் புணர்ச்சி நிகழ்வு களம்
பகற்குறி இரவுக்குறி எனும் பான்மைய
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழிடனே

#38
** பகல் இரவுக்குறி ஈதெனல்
இல் வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி
இல் வரை இகவா இயல்பிற்று ஆகும்

#39
** களவில் பிரிவு வகை
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்-வயின் பிரிதல் என்று இரு வகைத்து ஆகும்
நிறைதரு காதல் மறையினில் பிரிவே

#40
** ஒருவழித் தணத்தலின் இயல்
அவற்றுள்
ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார்

#41
** வரைவிடைவைத்துப் பொருள்வியின் பிரிவின் இயல்
வரைவிடை வைத்துப் பொருள்-வயின் பிரிதல்
இருதுவின்-கண் உடைத்து என்மனார் புலவர்

#42
** வரைவு நிகழ் களம்
களவு வெளிப்படா முன்னும் பின்னும்
விளையும் நெறித்து என விளம்பினர் வரைவே

#43
** களவு அறியப்படுமுன் வரைவிற்கு களம்
நான்கு வகைப் புணர்வினும் தான் தெருண்டு வரைதலும்
பாங்கனில் பாங்கியில் தெருளுற்று வரைதலும்
களவு வெளிப்படா முன் வரைதல் ஆகும்

#44
** களவு அறியப்பட்ட பின் வரைவிற்கு இயல்
உடன் போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன்போக்கு இடையீடுற்று வரைதலும்
களவு வெளிப்பட்ட பின் வரைதல் ஆகும்

#45
** உடன்போய் வரைதல்
அவற்றுள்
உடன்போய் வரைதல் ஒரு வகைத்து ஆகும்

#46
** மீண்டு வரைதல்
அவள் மனை வரைதலும் தன் மனை வரைதலும்
என மீண்டு வரைதல் இரு வகைத்து ஆகும்

#47
** அறத்தொடு நிலை களம்
ஆற்று ஊறு அஞ்சினும் அவன் வரைவு மறுப்பினும்
வேற்று வரைவு நேரினும் காப்புக் கைமிகினும்
ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே

#48
** அறத்தொடு நிற்றலின் நெறியும் உரியாரும்
தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்
பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும்
செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்
நற்றாய் தந்தை தன் ஐயர்க்கு அறத்தொடு
நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே 5

#49
** தலைவி அறத்தொடு நிற்கும் களம்
ஒரு புணர்வு ஒழிந்தவற்றும் ஒருவழித் தணப்பவும்
வரைவிடை வைத்துப் பொருள்-வயின் பிரியவும்
இறைவனைச் செவிலி குறி-வயின் காணவும்
மனை-வயின் செறிப்பவும் வருத்தம் கூரின்
வினவியக் கண்ணும் வினவாக் கண்ணும் 5
அன நடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும்

#50
** பாங்கி அறத்தொடு நிற்கும் களம்
முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளில்
சில் மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும்

#51
** செவிலி அறத்தொடு நிற்கும் களம்
செவிலி நற்றாய்க்குக் கவலை இன்று உணர்த்தும்

#52
** நற்றாய் அறத்தொடு நிற்கும் களம்
நற்றாய் அறத்தொடு நிற்கும் காலைக்
குரவனும் தன் ஐயும் குறிப்பின் உணர்ப

#53
** அறத்தொடு நிற்போர் வினா எழு களம்
பாங்கி தலைவியை வினவும் செவிலி
பாங்கியை வினவும் பாங்கி-தன்னையும்
நற்றாய் தானும் வினவும் செவிலியின்
பொன் தொடிக் கிழத்தியை உற்று நோக்கின்

#54
** உடன்போக்குக் களத்து அறத்தொடு நிற்போர்
ஆங்கு உடன் போயுழி அறத்தொடு நிற்ப
பாங்கியும் செவிலியும் பயந்த தாயும்

#55
** கற்பின் வகை
களவின் வழி வந்த கற்பும் பொற்பு அமைக்
களவின் வழி வாராக் கற்பும் என்று ஆங்கு
முற்படக் கிளந்த கற்பு இரு வகைத்தே

#56
** கற்பினுள் புணர்ச்சி வகை
குரவரின் புணர்ச்சி வாயிலின் கூட்டம் என்று
இரு வகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி

#57
** களவுவழி கற்புப் புணர்ச்சியில் ஓர் சிறப்பு
அவற்றுள்
களவின் வழி வந்த கற்பின் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன் போய் வரைதலும் உண்மையான

#58
** கற்பில் தலைவன்கண் நிகழ்வு
மறையின் புணர்ச்சியும் மன்றல் புணர்ச்சியும்
இறைவற்கு எய்தல் உண்டு இரு வகைக் கற்பினும்

#59
** அத்தலைவன் கண் நிகழ்வுக்கு உரியர்
காதல் பரத்தையர் காமக்கிழத்தியர்
பின் முறை வதுவைப் பெரும் குலக் கிழத்தி என்று
அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும்

#60
** இவருள் களவில் புணர்ச்சிக்கு உரியோர்
அவருள்
காதல் பரத்தையர் களவிற்கு உரியர்

#61
** மன்றப் புணர்ச்சிக்கு உரியோர்
ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர்

#62
** கற்பில் பிரிவு
பரத்தையின் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருள் தகு காவலொடு தூதிற்கு அகறல்
உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல் என்று
உரை பெறு கற்பில் பிரிவு அறு வகைத்தே

#63
** பரத்தையின் பிரிதல்
அயல் மனைப் பிரிவு அயல் சேரியின் அகற்சி
புறநகர்ப் போக்கு இவை புரவலர்க்கு உரிய
பரத்தையின் பிரியும் பருவத்தான

#64
** அயன்மனைப்பிரிவு
கெழீஇய காமக்கிழத்தியர் பொருட்டாத்
தழீஇய அயல் மனைத் தலைவன் பிரியும்

#65
** அயல்சேரிப்பிரிவு
பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
இன் இயல் விழவும் ஏதுவாக
அவன் அயல் சேரியின் அகலும் என்ப

#66
** புறநகர் போக்கு
விருந்து இயல் பரத்தையைப் பெரும் தேர் மிசைக் கொண்டு
இள மரக் காவின் விளையாடற்கும்
புனல் ஆடற்கும் புறநகர்ப் போகும்

#67
** தலைவியின் ஊடல் களம்
ஊடல் அவ் வழிக் கூடும் கிழத்திக்கு

#68
** உடல் தணி வழி
கொளை வல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இரு வகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக்கிழத்தி காதல் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல் 5
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்

#69
** ஓதற்பிரிவிற்கு உரியோர்
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும்

#70
** கல்வி பிரிவிற்கு உரியோர்
அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே

#71
** படைபயில் பிரிவிற்கு உரியோர்
படைக்கலம் பயிறலும் பகடு பிற ஊர்தலும்
உடைத் தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே

#72
** காவல் பிரிவின் வகை
அறப்புறம் காவல் நாடு காவல் எனச்
சிறப்புறு காவல் திறம் இரு வகைத்தே

#73
** அறப்புறம் காவல்
அவற்றுள் அறப்புறம் காவல் அனைவர்க்கும் உரித்தே

#74
** நாடுகாவல்
மற்றைக் காவல் கொற்றற்கு உரித்தே

#75
** தூதில் பிரிவு
வேத மாந்தர் வேந்தர் என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும்

#76
** பிரிவில் சிறப்பு
சிறப்புப் பெயர் பெறின் செப்பிய இரண்டும்
உறற்கு உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும்

#77
** துணைவயில் பிரிவு
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே

#78
** யாவர்க்கும் உரிய பிரிவு
பரத்தையின் பிரிவும் பொருள்-வயின் பிரிவும்
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும்

#79
** நில மக்களுக்கு உரிய பிரிவு
இழிந்தோர்-தமக்கும் இவற்றுள் மேம்பட்டவை
ஒழிந்தனவாம் என மொழிந்தனர் புலவர்

#80
** தலைமகன் பிரிவு இயல்
கல்வி முதலா எல்லா வினைக்கும்
சொல்லி அகறலும் சொல்லாது அகறலும்
உரியன் கிழவோன் பெரு மனைக் கிழத்திக்கு

#81
** ஓர் பிரிவு வகை
சொல்லாது அகலினும் சொல்லும் பாங்கிக்கு

#82
** மற்றோர் பிரிவு வகை
குறிப்பின் உணர்த்தும் பெறற்கு அரும் கிழத்திக்கு

#83
** நாடு இடைபெயர் காலத்து அறிவிக்கும் நெறி
காலில் சேறலும் கலத்தில் சேறலும்
ஊர்தியில் சேறலும் நீதி ஆகும்

#84
** அந்தணர்க்குரிய நெறி
புலத்தில் சிறந்த புரி நூல் முதல்வர்க்குக்
கலத்தில் சேறல் கடன் அன்று என்ப

#85
** மன்னர் குலமாதரொடு செல்லல் ஆகா
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குல மட மாதரொடு கலம் மிசைச் சேறலும்
பாசறைச் சேறலும் பழுது என மொழிப

#86
** தலைமகன் செலவு அழுங்கல் ஆதல்
ஓதல் முதலா ஓதின ஐந்தினும்
பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும்

#87
** செலவு அழுங்கல் களம்
இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும்
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே

#88
** செலவு அழுங்கல் ஏது
தலைவி-தன்னையும் தன் மனம்-தன்னையும்
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது
செல்வத் தோன்றல் செல்லான் அல்லன்

#89
** ஓதல் பிரிவு காலம்
அவற்றுள்
ஓதல் பிரிவு உடைத்து ஒரு மூன்று யாண்டே

#90
** மூவகைப் பிறிவு காலம்
தூதின் பிரிவும் துணை-வயின் பிரிவும்
பொருள்-வயின் பிரிவும் ஓர் யாண்டு உடைய

#91
** பரத்தையர் பிரிவு காலம்
பூத்த காலைப் புனை இழை மனைவியை
நீராடிய பின் ஈர்_ஆறு நாளும்
கரு வயிற்று உறூஉம் காலம் ஆதலின்
பிரியப் பெறாஅன் பரத்தையின் பிரிவோன்

#92
** ஓதற்பிரிந்தேனுக்கு தகாதன
ஓதற்கு அகன்றோன் ஒழிந்து இடை மீண்டு
போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன்

#93
** தூது துணை சென்றார்க்கு நெறி
தூதும் துணைமையும் ஏதுவாகச்
சென்றோன் அவ் வினை நின்று நீட்டித்துழிப்
புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே

#94
** கற்பில் தலைமகளுக்கு உரிய நெறி
பூத்தமை சேடியின் புரவலர்க்கு உணர்த்தலும்
நீத்தமை பொறாது நின்று கிழவோனைப்
பழிக்கும் காமக்கிழத்தியைக் கழறலும்
கிழவோன் கழறலும் வழிமுறை மனைவியைக்
கொழுநனொடு வந்து எதிர்கோடலும் அவனொடு 5
பாங்கொடு பரத்தையைப் பழித்தலும் நீங்கிப்
புறநகர்க் கணவனொடு போகிச் செறி மலர்ச்
சோலையும் காவும் மாலை அம் கழனியும்
மாலை வெள் அருவியும் மலையும் கானமும்
கண்டு விளையாடலும் கடும் புனல் யாறும் 10
வண்டு இமிர் கமல வாவியும் குளனும்
ஆடி விளையாடலும் கூடும் கிழத்திக்கு

#95
** பாணற்கு உரியன
வாயில் வேண்டலும் வாயில் நேர்வித்தலும்
சே_இழை ஊடல் தீர்த்தலும் போயுழி
அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் அவன்-வயின்
செல்ல விரும்பலும் சென்று அவற்கு உணர்த்தலும்
சொல்லிய கூற்று எனச் சொல்லலும் கிழவோன் 5
வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும்
அணி நலம் பெற்றமை அறியான் போன்று அவள்
பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய

#96
** விறலிக்கு உரியன
செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும்
வாயில் வேண்டலும் வாயில் நேர்வித்தலும்
தெரி இழை விறலிக்கு உரிய ஆகும்

#97
** கூத்தர்கு உரியன
செல்வம் வாழ்த்தலும் நல் அறிவு கொளுத்தலும்
கலன் அணி புணர்த்தலும் காம நுகர்பு உணர்த்தலும்
புலவி முதிர் காலைப் புலம்கொள ஏதுவில்
தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை
மேற்சென்று உரைத்தலும் மீண்டு வரவு உணர்த்தலும் 5
கூற்றரு மரபில் கூத்தற்கு உரிய

#98
** இளையோர்க்கு உரியன
மடந்தையை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத்தலும் அவள் ஊடல் தீர்த்தலும்
கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும்
சென்று முன் வரைவு செப்பலும் அவன் திறம்
ஒன்றி நின்று உரைத்தலும் வினை முடிவு உரைத்தலும் 5
வழி இயல்பு கூறலும் வழியிடைக் கண்டன
மொழிதலும் இளையோர் தொழில் என மொழிப

#99
** கண்டோர்கு உரியன
தீது உடைப் புலவி தீர்த்தலும் அவன் வரல்
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய

#100
** பார்ப்பன பாங்கற்கு உரியன
இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலை எடுத்துரைத்தலும்
செலவு அழுங்குவித்தலும் செலவு உடன்படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய

#101
** சூத்திரப் பாங்கற்கு உரியன
நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும்
சொன்னவும் பிறவும் சூத்திரர்க்கு உரிய

#102
** பாகற்கு உரியன
சே இழைக் கிழத்தியை வாயில் வேண்டலும்
வாயில் நேர்வித்தலும் வயங்கு துனி தீர்த்தலும்
வினை முடித்ததன் பின் வியன் பதி சேய்த்து என
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே

#103
** பாங்கிக்கு உரியன
பிரிவுழி விலக்கலும் பிரிவு உடன்படுத்தலும்
பிரிவுழித் தேற்றலும் பிரிவுழி அழுங்கலும்
பிறவும் உரிய இறை வளைப் பாங்கிக்கு

#104
** செவிலிக்கு அறிவர்க்கு உரியன
முன் வரும் நீதியும் உலகியல் முறைமையும்
பின் வரும் பெற்றியும் பிறவும் எல்லாம்
தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும்
உற்ற அறிவர்க்கும் உரியன ஆகும்

#105
** காமக்கிழத்திக்கு உரியன
குடிப்பிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்
மனைவியைப் பழித்தலும் வாடா ஊடலுள்
தலைவன் கழறலும் மனைவிக்கு அமைந்த
ஒழுக்கமும் காமக்கிழத்திக்கு உரிய

#106
** பரத்தையர்க்கு உரியன
கிழவோன்-தன்னையும் கிழத்தி-தன்னையும்
இகழ்தலும் தம்மைப் புகழ்தலும் நிகழ் பொருள்
கரத்தலும் பரத்தையர் கடன் என மொழிப

#107
** பரத்தையர்க்குரிய ஓர் சிறப்பு
பரத்தையர் காதல் பரத்தையைப் புகழ்தலும்
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப

#108
** இளையர் தலைமகன்பால் உரியன
இளையர் கிழவோர்க்கு இரவும் பகலும்
களைதல் இல்லாக் கவசம் போல்வார்

#109
** இரு வகைப் பாங்கர்க்கு உரியன
இரு வகைப் பாங்கரும் ஒரு பெரும் குரிசிற்கு
இன் உயிர்த் துணையா இரு பெரும் குரவரும்
தன்னை அளித்த தகைமையோரே

#110
** தோழிக்கு உரியன
தோழி செவிலி மகளாய்ச் சூழ்தலோடு
உசாத்துணை ஆகி அசாத் தணிவித்தற்கு
உரிய காதல் மருவிய துணையே

#111
** செவிலிக்கு உரியன
செவிலி நற்றாய் தோழி ஆகி
அவலம் நீக்கி அறிவும் ஆசாரமும்
கொளுத்தி தலைவியை வளர்த்த தாயே

#112
** அறிவர்க்கு உரியன
அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பெரும் குரவர்

#113
** காமக் கிழத்தியர் இயல்
ஒருவன் தனக்கே உரிமை பூண்டு
வரு குலப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காமக்கு வரைந்தோர் காமக்கிழத்தியர்

#114
** காதற் பரத்தையர் இயல்
யாரையும் நயவா இயல்பில் சிறந்த
சேரிப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர்

#115
** காதல் பரத்தையரில் சிறப்பு
அவருளும் வரைதற்கு உரியோர் உளரே

#116
** துறவறம் மேற்கொள் காலம்
மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனும் தலைவியும் தம் பதி நீங்கித்
தொலைவு_இல் சுற்றமொடு துறவறம் காப்ப

@2 களவியல்

#1
** களவின் இயல்
உளம் மலி காதல் களவு எனப்படுவது
ஒரு நான்கு வேதத்து இரு_நான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப

#2
** கைக்கிளையின் வகை
காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவு என
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை

#3
** காட்சியின் இயல்
புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள்
புணர்க்கும் பாலில் பொருவிறந்து ஒத்த
கறை வேல் காளையும் கன்னியும் காண்ப
இறையோன் உயரினும் குறைவு இன்று என்மனார்

#4
** ஐயத்தின் இயல்
மட மான் நோக்கி வடிவம் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்

#5
** துணிவின் இயல்
எழுதிய வல்லியும் தொழில் புனை கலனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடை பயில் அடியும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவன்-பால் நிகழும்
கச்சம்_இல் ஐயம் கடிவன ஆகும் 5

#6
** குறிப்பு அறிதலின் இயல்
அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப

#7
** களவின் கிளவி நிரல்
இயற்கைப்புணர்ச்சி வன்புறை தெளிவே
பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழிக் கலங்கல்
இடந்தலைப்பாடு பாங்கன் கூட்டம்
பாங்கி மதியுடன்பாடு பாங்கியின் கூட்டம்
பாங்கு அமை பகற்குறி பகற்குறி இடையீடு 5
இரவுக்குறியே இரவுக்குறி இடையீடு
வரைவு வேட்கை வரைவு கடாதல்
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்-வயின் பிரிதல் என்று ஒரு பதினேழும்
களவிற்கு உரிய கிளவித் தொகையே 10

#8
** இயற்கைப் புணர்ச்சியின் இயல்
தெய்வம் புணர்ப்பச் சிந்தை வேறு ஆகி
எய்தும் கிழத்தியை இறையோன் என்ப

#9
** இதன் விரி
கலந்துழி மகிழ்தலும் நலம் பாராட்டலும்
ஏற்புற அணிதலும் என்னும் இ மூன்றும்
போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே

#10
** தலைவியின்கண் புணர்ச்சி வகை
வேட்கை உணர்தல் மறுத்தல் உடன்படல்
கூட்டம் என்று இறைவியின் கூட்டம் நால் வகைத்தே

#11
** இதன் விரி
இரந்து பின் நிற்றற்கு எண்ணலும் இரந்து
பின்னிலை நிற்றலும் முன்னிலை ஆக்கலும்
மெய் தொட்டுப் பயிறலும் பொய் பாராட்டலும்
இடம் பெற்றுத் தழாலும் வழிபாடு மறுத்தலும்
இடையூறு கிளத்தலும் நீடு நினைந்து இரங்கலும் 5
மறுத்து எதிர்கோடலும் வறிது நகை தோற்றலும்
முறுவல் குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும்
புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும்
உணர்த்திய தலைவியின் புணர்ச்சியின் விரியே

#12
** வன்புறையின் வகை
ஐயம் தீர்த்தல் பிரிவு அறிவுறுத்தல் என்று
எய்திய வன்புறை இரு வகைத்து ஆகும்

#13
** இதன் விரி
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும்
பெரு நயப்பு உரைத்தலும் தெய்வத் திறம் பேசலும்
பிரியேன் என்றலும் பிரிந்து வருக என்றலும்
இடம் அணித்து என்றலும் என்று இவை ஆறும்
மடன் அறத் தெரிந்த வன்புறை விரியே 5

#14
** தெளிவின் இயல்
தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
தெளிவாம் என்பர் தெளிந்திசினேரே

#15
** பிரிவுழி மகிழ்ச்சியின் விரி
செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு
சொல்லலும் பாகனொடு சொல்லலும் இரண்டும்
பிரிவுழி மகிழ்ச்சியின் விரி எனக் கொளலே

#16
** பிரிவுழி கலங்கல்¢ன் வகை
மருளுற்று உரைத்தல் தெருளுற்று உரைத்தல் என்று
இரு வகைத்து ஆகும் பிரிவுழிக் கலங்கல்

#17
** பிரிவுழி கலங்கல்¢ன் விரி
ஆய வெள்ளம் வழிபடக் கண்டு இது
மாயமோ என்றலும் வாயில் பெற்று உய்தலும்
பண்பு பாராட்டலும் பயந்தோர்ப் பழிச்சலும்
கண்படை பெறாது கங்குல் நோதலும் எனும்
ஐந்தும் பிரிவுழிக் கலங்கல் விரி ஆகும் 5

#18
** இடந்தலைப்பாட்டின் வகை
தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல் என்று
இவ் ஓர் மூ வகைத்து இடந்தலைப்பாடே

#19
** இதன் விரி
தந்த தெய்வம் தரும் எனச் சேறலும்
முந்துறக் காண்டலும் முயங்கலும் புகழ்தலும்
உடன் புணர் ஆயத்து உய்த்தலும் என ஐந்து
இடந்தலைப்பாட்டின் இலக்கண விரியே

#20
** பாங்கற் கூட்ட வகை
சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை
நேர்தல் கூடல் பாங்கின் கூட்டல் என்று
ஆங்கு எழு வகைத்தே பாங்கன் கூட்டம்

#21
** இதன் விரி
தலைவன் பாங்கனைச் சார்தலும் பாங்கன்
தலைவனை உற்றது வினாதலும் தலைவன்
உற்றது உரைத்தலும் கற்று அறி பாங்கன்
கழறலும் கிழவோன் கழற்று எதிர்மறுத்தலும்
கிழவோன் பழித்தலும் கிழவோன் வேட்கை 5
தாங்கற்கு அருமை சாற்றலும் பாங்கன்
தன் மனத்து அழுங்கலும் தலைவனோடு அழுங்கலும்
எவ் இடத்து எவ் இயற்று என்றலும் அவன் அஃது
இவ் இடத்து இவ் இயற்று என்றலும் பாங்கன்
இறைவனைத் தேற்றலும் குறி வழிச் சேறலும் 10
இறைவியைக் காண்டலும் இகழ்ந்தற்கு இரங்கலும்
தலைவனை வியத்தலும் தலைவியை வியத்தலும்
தலைவன்-தனக்கு தலைவி நிலை கூறலும்
தலைவன் சேறலும் தலைவியைக் காண்டலும்
கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியைப் 15
பாங்கியொடு வருக எனப் பகர்தலும் பாங்கின்
கூட்டலும் என்று ஈங்கு ஈட்டும் நால்_ஆறும்
காட்டிய பாங்கன் கூட்டத்து விரியே

#22
** பாங்கி மதியுடன்பாட்டின் வகை
முன் உறவு உணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல் என்று
ஒரு மூன்று வகைத்தே பாங்கி மதியுடன்பாடு

#23
** முன்னுற உணர்தலின் இயல்
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய் வினை மறைப்பும் செலவும் பயில்வும் என்று
இவ் வகை ஏழினும் ஐயமுற்று ஓர்தலும்
அவ் வகை-தன்னால் ஐயம் தீர்தலும்
மெய்யினும் பொய்யினும் வழி நிலை பிழையாது 5
பல் வேறு கவர் பொருள் சொல்லி நாடலும் என
முன் உறவு உணர்தல் மூன்று ஆகும்மே

#24
** குறையுற உணர்தலின் இயல்
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தோன்
கண்ணியும் தழையும் ஏந்தி நண்ணி
ஊர் பெயர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவுழி
யாரே இவர் மனத்து எண்ணம் யாது எனத்
தேர்தலும் எண்ணம் தெளிதலும் என ஆங்கு 5
ஓர் இரண்டு ஆகும் குறையுற உணர்தல்

#25
** இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தலின் இயல்
கையுறை ஏந்தி வந்து அவ் வகை வினாவுழி
எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும்
மதியின் அவரவர் மனக்கருத்து உணர்வும் என்று
இருவரும் உள் வழி அவன் வரவு உணர்தல்
ஒரு மூன்று ஆகும் தெரியும் காலே 5

#26
** பாங்கிமதி உடன்பாட்டின் விரி
ஈங்ஙனம் இயம்பிய இரு_நான்கு கிளவியும்
பாங்கி மதியுடன்பாட்டது விரியே

#27
** பாங்கியற் கூட்ட வகை
இரந்து பின் நிற்றல் சேட்படை மடல் கூற்று
மடல் விலக்கு உடன்படல் மடல் கூற்று ஒழிதல்
குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல்
கூடல் ஆயம் கூட்டல் வேட்டல் என்று
ஈர்_ஆறு வகைத்தே இகுளையின் கூட்டம் 5

#28
** இரந்து பின் நிற்றல் சேட்படை விரி
தலைவன் உட்கோள் சாற்றலும் பாங்கி
குலமுறை கிளத்தலும் தலைவன் தலைவி
தன்னை உயர்த்தலும் நல் நுதல் பாங்கி
அறியாள் போன்று வினாதலும் இறையோன்
இறைவித் தன்மை இயம்பலும் பாங்கி 5
தலைவி அருமை சாற்றலும் தலைவன்
இன்றியமையாமை இயம்பலும் பாங்கி
நின் குறை நீயே சென்று உரை என்றலும்
பாங்கியைத் தலைவன் பழித்தலும் பாங்கி
பேதைமை ஊட்டலும் காதலன் தலைவி 10
மூதறிவு உடைமை மொழிதலும் பாங்கி
முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறலும்
தன் நிலை தலைவன் சாற்றலும் பாங்கி
உலகியல் உரைத்தலும் தலைமகன் மறுத்தலும்
பாங்கி அஞ்சி அச்சுறுத்தலும் ஆங்கு அவன் 15
கையுறை புகழ்தலும் தையல் மறுத்தலும்
ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தலும் அவள்
ஆற்றுவித்து அகற்றலும் ஆகும் நால்_ஐந்தும்
இரந்து பின் நிற்றற்கும் சேட்படுத்தற்கும்
பொருந்துவ என்மனார் தெரிந்திசினோரே 20

#29
** மடற்கூற்று-மடல் விலக்கின் விரி
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன்
மடலே பொருள் என மதித்தலும் பாங்கிக்கு
உலகின் மேல் வைத்து உரைத்தலும் அதனைத்
தன் மேல் வைத்துச் சாற்றலும் பாங்கி
தலைமகள் அவயவத்து அருமை சாற்றலும் 5
தலைமகன் தன்னைத்தானே புகழ்தலும்
அலர் முலைப் பாங்கி அருள் இயல் கிளத்தலும்
கொண்டுநிலை கூறலும் என்று இவை ஏழும்
மடல் கூற்றிற்கும் மடல் விலக்கிற்கும்
கடவ என்மனார் கற்று அறிந்தோரே 10

#30
** குறைநேர்தல்-மடல்கூற்று ஒழிதலின் விரி
தலைவி இளமைத் தன்மை பாங்கி
தலைவற்கு உணர்த்தலும் தலைவன் தலைவி
வருத்திய வண்ணம் உரைத்தலும் பாங்கி
செவ்வி அருமை செப்பலும் தலைவன்
செவ்வி எளிமை செப்பலும் பாங்கி 5
என்னை மறைப்பின் எளிது என நகுதலும்
அ நகை பொறாஅது அவன் புலம்பலும் அவள்
தேற்றலும் கையுறை ஏற்றலும் கிழவோன்
ஆற்றலும் என்னும் அவ் ஒன்பானும்
குறை நேர்தற்கும் மடல் கூற்று ஒழிதற்கும் 10
முறைமையின் உரிய முன்னும் காலே

#31
** குறை நயப்பித்தல்-குறைமறுத்தலின் விரி
இறைவன்-தனக்கு குறை நேர் பாங்கி
இறைவிக்கு அவன் குறை உணர்த்தலும் இறைவி
அறியாள் போன்று குறியாள் கூறலும்
பாங்கி இறையோர் கண்டமை பகர்தலும்
பாங்கியைத் தலைவி மறைத்தலும் பாங்கி 5
என்னை மறைப்பது என் எனத் தழாஅலும்
கையுறை புகழ்வும் என்று இவ் இரு_மூன்றும்
மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும்
வலிதாகச் சொல்லி மறுத்தற்கும் உரிய

#32
** குறை நயப்பித்தல்-நயத்தலின் விரி
தோழி கிழவோன் துயர் நிலை கிளத்தலும்
மறுத்தற்கு அருமை மாட்டலும் தலைவன்
குறிப்பு வேறாக நெறிப்படக் கூறலும்
தலைவியை முனிதலும் தலைவி பாங்கி
தன்னை முனிதலும் தன் கைக் கையுறை 5
ஏற்றலும் என முறை சாற்றிய ஆறும்
வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தற்கும்
மெலிதாகச் சொல்லி மேவற்கும் உரிய

#33
** கூட்டல்-கூடல்-ஆயம்கூட்டல்-வேட்டலின் விரி
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி
இறைவற்கு உணர்த்தலும் குறியிடம் கூறலும்
குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறலும்
குறியிடத்து உய்த்து நீங்கலும் இறையோன்
இடத்து எதிர்ப்படுத்தலும் இயைதலும் புகழ்தலும் 5
விடுத்தலும் பாங்கி மெல்_இயல் சார்ந்து
கையுறை காட்டலும் மை உறை கண்ணியைப்
பாங்கின் கூட்டலும் நீங்கித் தலைவற்கு
ஓம்படை சாற்றலும் உலகியல் மேம்பட
விருந்து விலக்கலும் பெருந்தகை விருந்திறை 10
விரும்பலும் எனத் தெரிந்த பன்மூன்றும்
கூட்டல் முதலா வேட்டல் ஈறாப்
பாங்கிற்கு வகுத்த நான்கிற்கும் உரிய

#34
** பாங்கியிற் கூட்டத்தின் விரி
அற்றம்_இல் சிறப்பின் இவ் அறுபத்தொன்றும்
குற்றம்_இல் பாங்கியின் கூட்டத்து விரியே

#35
** பகற்குறியின் வகை
கூட்டல் கூடல் பாங்கின் கூட்டல்
வேட்டல் என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி

#36
** இதன் விரி
குறியிடம் கூறல் முதலாப் பெறல் அரும்
விருந்திறை விரும்பல் ஈறாப் பொருந்தப்
பகர்ந்த பன்னிரன்டும் பகற்குறி விரியே

#37
** ஒரு நோக்கு பகற்குறியின் வகை
இரங்கல் வன்புறை இற்செறிப்பு உணர்த்தல் என்று
ஒருங்கு மூ வகைத்து ஒரு சார் பகற்குறி

#38
** இதன் விரி
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலை அம்
பொழுது கண்டு இரங்கலும் பாங்கி புலம்பலும்
தலைவன் நீடத் தலைவி வருந்தலும்
தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி
முன்னிலைப் புறமொழி மொழிதலும் இன் உயிர்ப் 5
பாங்கியொடு பகர்தலும் பாங்கி அச்சுறுத்தலும்
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும்
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும்
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும்
முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுத்தலும் 10
முன் நின்று உணர்த்தலும் முன் நின்று உணர்த்தி
ஓம்படை சாற்றலும் மேம்படு கிழவோன்
தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும்
என்ற ஈர்_ஏழும் எல்லுக்குறி விரியே

#39
** பகற்குறி இடையீ£ட்டின் வகை
விலக்கல் சேறல் கலக்கம் என்று ஆங்கு
இகப்பு_இல் மூ வகைத்தே பகற்குறி இடையீடு

#40
** இதன் விரி
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
இறைவியைக் குறிவரல் விலக்கலும் இறைமகள்
ஆடிடம் நோக்கி அழிதலும் பாங்கி
ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறலும் பின் நாள்
நெடுந்தகை குறி-வயின் நீடு சென்று இரங்கலும் 5
வறும் களம் நாடி மறுகலும் குறும்_தொடி
வாழும் ஊர் நோக்கி மதி மயங்கலும் எனும்
ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே

#41
** இரவுக்குறி வகை
வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல்
கூடல் பாராட்டல் பாங்கியின் கூட்டல்
உயங்கல் நீங்கல் என்று ஒன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக் குறியே

#42
** இதன்விரி
இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி
நெறியினது அருமை கூறலும் இறையோன்
நெறியினது எளிமை கூறலும் பாங்கி
அவன் நாட்டு அணி இயல் வினாதலும் கிழவோன்
அவள் நாட்டு அணி இயல் வினாதலும் அவற்குத் 5
தன் நாட்டு அணி இயல் பாங்கி சாற்றலும்
இறைவிக்கு இறையோன் குறி அறிவுறுத்தலும்
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும்
நேர்_இழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும்
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும் 10
குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதலும்
இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தலும்
அவள் கொண்டு சேறலும் குறி உய்த்து அகறலும்
வண்டு உறை தாரோன் வந்து எதிர்ப்படுதலும்
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும் 15
புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும்
இறைமகள் இறைவனை குறி விலக்கலும் அவன்
இறைவியை இல்-வயின் விடுத்தலும் இறைவியை
எய்திப் பாங்கி கையுறை காட்டலும்
இல் கொண்டு ஏகலும் பின் சென்று இறைவனை 20
வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும்
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலும்
திருமகள் புணர்ந்து அவன் சேறலும் என்று ஆங்கு
இருபத்தேழும் இரவுக்குறி விரியே

#43
** இரவுக்குறிஇடையீட்டின் வகை
அல்லகுறி வரும் தொழிற்கு அருமை என்று ஆங்கு
எல்லிக்குறி இடையீடு இரு வகைத்து ஆகும்

#44
** அல்லகுறி
இறைவிக்கு இகுளை இறை வரைவு உணர்த்துழித்
தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும்
பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும்
புலந்து அவன் போதலும் புலந்த பின் வறும் களம்
தலைவி கண்டு இரங்கலும் தன் துணைக்கு உரைத்தலும் 5
தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும்
இறைவன் மேல் பாங்கி குறிபிழைப்பு ஏற்றலும்
இறைவி மேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும்
அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும்
அவன் மொழிக் கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும் 10
என் பிழைப்பு அன்று என்று இறைவி நோதலும் என
ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்கு உரிய

#45
** வருந்தொழிற்கு அருமை வகை
தாயும் நாயும் ஊரும் துஞ்சாமை
காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல்
கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல்
ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன்
வரும் தொழிற்கு அருமை பொருந்துதல் உரிய 5

#46
** இரவுக்குறிஇடையீட்டின் விரி
திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று
இரட்டியும் இரவுக்குறி இடையீட்டு விரியே

#47
** வரைதல் வேட்கை வகை
அச்சம் உவத்தல் ஆற்றாமை என
மெச்சிய வரைதல் வேட்கை மூ வகைத்தே

#48
** இதன் விரி
பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அரு மறை செவிலி அறிந்தமை கூறலும்
தலைமகன் வரும் தொழிற்கு அருமை சாற்றலும்
தலைமகன் ஊர்க்குச் செல ஒருப்படுதலும்
பாங்கி இறைவனைப் பழித்தலும் பூம்_கொடி 5
இறையோன்-தன்னை நொந்து இயல்பட மொழிதலும்
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும்
தன் துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும்
துன்புறல் பாங்கி சொல் எனச் சொல்லலும்
அலர் பார்த்து உற்ற அச்சக் கிளவியும் 10
ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவியும்
காமம் மிக்க கழி படர் கிளவியும்
தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
நெறி விலக்குவித்தலும் குறி விலக்குவித்தலும்
வெறி விலக்குவித்தலும் பிற விலக்குவித்தலும் 15
குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தலும் என
உரை பெற வகுத்த ஒன்பதிற்று இரட்டியும்
வரைதல் வேட்கை விரி எனப்படுமே

#49
** வரைவுகடாதலின் வகை
பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல் என்று
ஒரு நால் வகைத்தே வரைவு கடாதல்

#50
** இதன் விரி
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பலும்
அலர் அறிவுறுத்தலும் தாய் அறிவு உணர்த்தலும்
வெறி அச்சுறுத்தலும் பிறர் வரைவு உணர்த்தலும்
வரை எதிர்வு உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும்
அறிவு அறிவுறுத்தலும் குறிபெயர்த்திடுதலும் 5
பகல் வருவானை இரவு வருக என்றலும்
இரவு வருவானைப் பகல் வருக என்றலும்
பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும்
பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும்
உரவோன் நாடும் ஊரும் குலனும் 10
மரபும் புகழும் வாய்மையும் கூறலும்
ஆறு பார்த்து உற்ற அச்சம் கூறலும்
ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறலும்
காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும்
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும் 15
என முறை நாடி இயம்பிய இருபதும்
வரைவு கடாதல் விரி எனப்படுமே

#51
** ஒருவழித் தணத்தல் வகை
செலவு அறிவுறுத்தல் செலவு உடன்படாமை
செலவு உடன்படுத்தல் செலவு உடன்படுதல்
சென்றுழிக் கலங்கல் தேற்றி ஆற்றுவித்தல்
வந்துழி நொந்து உரை என்று எழு வகைத்தே
ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல் 5

#52
** இதன் விரி
தன் பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும்
மென் சொல் பாங்கி விலக்கலும் தலைவன்
நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும்
தலைவிக்கு அவன் செலவு உணர்த்தலும் தலைவி
நெஞ்சொடு புலத்தலும் சென்றோன் நீடலின் 5
காமம் மிக்க கழி படர் கிளவியும்
கோல் தொடிப் பாங்கி ஆற்றுவித்தலும் அவன்
வந்தமை உணர்த்தலும் வந்தோன்-தன்னொடு
நொந்து வினாதலும் வெம் திறல் வேலோன்
பாங்கியொடு நொந்து வினாதலும் பாங்கி 10
இறைவியை ஆற்றுவித்து இருந்த அருமை
கூறலும் என்னும் ஆறு_இரு கிளவியும்
ஒருவழித் தணத்தலின் விரி எனப்படுமே

#53
** வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவின் வகை
பிரிவு அறிவுறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
வரு வழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று
ஒருமையின் கூறிய ஒன்பது வகைத்தே 5
வரைவிடை வைத்துப் பொருள்-வயின் பிரிவே

#54
** இதன் விரி
என் பொருள் பிரிவு உணர்த்து ஏந்து_இழைக்கு என்றலும்
நின் பொருள் பிரிவு உரை நீ அவட்கு என்றலும்
நீடேன் என்று அவன் நீங்கலும் பாங்கி
ஓடு அரிக் கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலும்
பூம்_குழை இரங்கலும் பாங்கி கொடும் சொல் 5
சொல்லலும் தலைவி கொடும் சொல் சொல்லலும்
வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தலும்
பருவம் கண்டு பெருமகள் புலம்பலும்
இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும்
அவர் தூதாகி வந்து அடைந்தது இப்பொழுது எனத் 10
துணைவி சாற்றலும் பிணை_விழி ஆற்றலும்
அவன் அவண் புலம்பலும் அவன் வரும் காலைப்
பாகன்-தன்னொடும் மேகம்-தன்னொடும்
சோகம் கொண்டு அவன் சொல்லலும் பாங்கி
வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தலும் 15
வலம்புரி கிழத்தி வாழ்த்தலும் வந்துழி
நினைத்தமை வினாதலும் நினைந்தமை செப்பலும்
அனைத் தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை
பாங்கி கூறலும் என ஆங்கு எழு_மூன்றும்
வரைவிடை வைத்துப் பொருள்-வயின் பிரிவின் 20
விரி என விளம்பினர் தெரி மொழிப் புலவர்

@3 வரைவியல்

#1
** வரைவின் இயல்
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு புணரக் கடி அயர்ந்து கொளலே

#2
** வரைவின் கிளவி நிரல்
வரைவு மலிவே அறத்தொடு நிற்றல் என்று
உரை அமை இரண்டும் வரைவிற்கு உரிய
கிளவித் தொகை எனக் கிளந்தனர் புலவர்

#3
** வரைவு மலிதல் வகை
வரைவு முயல்வு உணர்த்தல் வரைவு எதிர்வு உணர்த்தல்
வரைவு அறிந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று
ஒரு நால் வகைத்தே வரைவு மலிதல்

#4
** இதன் விரி
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய்
உள்ளம் மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி
தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும் 5
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவி
மணப் பொருட்டாக அணங்கைப் பராநிலை
காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய
இரு_மூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம்
விரி என விளம்பினர் மெய் உணர்ந்தோரே 10

#5
** அறத்தொடுநிலையின் வகை
முன்னிலை முன்னிலைப் புறமொழி என்று ஆங்கு
அன்ன இரு வகைத்து அறத்தொடு நிலையே

#6
** தலைவி அறத்தொடு நிற்றல்
கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக்
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன்
தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை
எய்தக் கூறலும் இகந்தமை இயம்பலும்
இயற்பழித்து உரைத்துழி இயற்பட மொழிதலும் 5
தெய்வம் பொறை கொளச் செல்குவம் என்றலும்
இல்-வயின் செறித்தமை சொல்லலும் செவிலி
கனை இருள் அவன் வரக் கண்டமை கூறலும்
என முறை இயம்பிய ஏழும் புனை இழைத்
தலைவி அறத்தொடுநிலை-தனக்கு உரிய 10

#7
** பாங்கி அறத்தொடு நிற்றல்
எறி_வளை வேற்றுமைக்கு ஏது வினாவினும்
வெறி விலக்கிய வழி வினாவினும் பாங்கி
பூவே புனலே களிறே என்று இவை
ஏதுவாகத் தலைப்பாடு இயம்பும்

#8
** செவிலி அறத்தொடு நிற்றல்
மின்_இடை வேற்றுமை கண்டு தாய் வினாவுழி
முன்னிலை மொழியால் மொழியும் செவிலி

#9
** அறத்தொடு நிற்றலின் விரி
என்று உடன் விளம்பிய எல்லாம் களவியல்
நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே

#10
** களவு வெளிப்பாட்டின் வகை
போக்கே கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சி என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்படைக் கிளவி வெளிப்படும் தொகையே

#11
** உடன்போக்கின் வகை
போக்கு அறிவுறுத்தல் போக்கு உடன்படாமை
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல்
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று
யாப்பு அமை உடன்போக்கு இருநான்கு வகைத்தே

#12
** இதன் விரி
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்
ஆங்கு அவன் மறுத்தலும் அவள் உடன்படுத்தலும்
தலைவன் போக்கு உடன்படுதலும் பாங்கி
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் தலைவி
நாண் அழிபு இரங்கலும் கற்பு மேம்பாடு 5
பூண் முலைப் பாங்கி புகறலும் தலைவி
ஒருப்பட்டு எழுதலும் விருப்பு உடைப் பாங்கி
சுரத்து இயல் உரைத்துழிச் சொல்லலும் பாங்கி
கையடை கொடுத்தலும் வைகு இருள் விடுத்தலும்
அவன் சுரத்து உய்த்தலும் அசைவு அறிந்து இருத்தலும் 10
உவந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தலும்
கண்டோர் அயிர்த்தலும் காதலின் விலக்கலும்
தன் பதி அணிமை சாற்றலும் தலைவன்
தன் பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும்
என்று இவை ஒன்பதிற்று_இரு வகைக் கிளவியும் 15
ஒன்றிய அன்பின் உடன்போக்கு விரியே

#13
** கற்பொடு புணர்ந்த கவ்வை வகை
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர் மனை மருட்சி கண்டோர் இரக்கம்
செவிலி பின் தேடிச் சேறல் என்று ஆங்குக்
கற்பொடு புணர்ந்த கவ்வை ஐ வகைத்தே

#14
** செவிலி புலம்பல்
வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இனையல் என்போர்க்கு எதிரழிந்து மொழிதலும்
தன் அறிவின்மை தன்னை நொந்து உரைத்தலும்
தெய்வம் வாழ்த்தலும் இவ் ஒரு மூன்றும்
இலங்கு இழைச் செவிலி புலம்புதற்கு உரிய 5

#15
** நற்றாய் புலம்பல்
செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில்
பாங்கி-தன்னொடும் பாங்கியர்-தம்மொடும்
அயலார்-தம்மொடும் பயிலிடம்-தம்மொடும்
தாங்கலள் ஆகிச் சாற்றிய எல்லாம்
பூம் கொடி நற்றாய் புலம்பற்கு உரிய 5

#16
** மனைமருட்சி
நிமித்தம் போற்றலும் சுரம் தணிவித்தலும்
தன் மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும்
இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கலும்
அச்சத் தன்மைக்கு அச்சமுற்று இரங்கலும்
என இவை ஐந்தும் அனை மருட்சிக்கு உரிய 5

#17
** கண்டோர் இரங்கல்
ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர்
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம்

#18
** செவிலி பின்தேடல்
ஆற்றாத் தாயைத் தேற்றலும் ஆற்றிடை
முக்கோல் பகவரை வினாதலும் மிக்கோர்
ஏதுக் காட்டலும் எயிற்றியொடு புலம்பலும்
குரவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும்
கலந்து உடன் வருவோர்க் கண்டு கேட்டலும் அவர் 5
புலம்பல் தேற்றலும் புதல்வியைக் காணாது
கவலை கூர்தலும் என இவை ஒன்பானும்
செவிலி பின் தேடிச் சேறற்கு உரிய

#19
** கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி
முற்பட மொழிந்த முறை எழு_மூன்றும்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே

#20
** மீட்சியின் வகை
தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பல் என
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே

#21
** மீட்சியின் விரி
தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தலும்
தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றலும்
தலைவி முன் செல்வோர்-தம்மொடு தான் வரல்
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் ஆங்கு அவர்
பாங்கியர்க்கு உணர்த்தலும் ஆங்கு அவர் கேட்டு 5
நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டு அவன்
உளம் கொள் வேலனை வினாதலும் என உடன்
விளம்பி இரு_மூன்றும் மீட்சியின் விரியே

#22
** மீளுதலும் ஏனவையும்
மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும்
அவள் மனை வரைதற்கும் தன் மனை வரைதற்கும்
இவை ஐந்தும் உரிய செவிலி கூற்று ஒழித்தே

#23
** தன்மனை வரைதலின் வகை
வினாதல் செப்பல் மேவல் என்று இறைவன்
தனாது இல் வரைதல் தான் மூ வகைத்தே

#24
** இதன் விரி
பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின்
செவிலியை வினாதலும் செவிலிக்கு இகுளை
வரைந்தமை உணர்த்தலும் வரைந்தமை செவிலி
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும்
தலைவி இல் வந்துழித் தலைவன் பாங்கிக்கு 5
யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு சென்று என்றலும்
தான் அது முன்னே சாற்றியது உரைத்தலும்
என்னும் இவ் ஐந்தும் இன் நிலை வேலோன்
மன்னிய தன் மனை வரைதலின் விதியே

#25
** உடன்போய் வரைந்து மீளுதலின் விரி
ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும்
மாதினை உடன் போய் வரைந்து மீடற்கு
நீதியின் உரிய நினையும் காலை

#26
** இதனில் மற்றோர் வகை
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும்
ஒரு வகை மீண்டு வரைதலின் விரியே

#27
** உடன்போக்கு இடையீட்டின் வகை
போக்கு அறிவுறுத்தல் வரவு அறிவுறுத்தல்
நீக்கம் இரக்கமொடு மீட்சி என்று ஆங்கு
உடன்போக்கு இடையீடு ஒரு நால் வகைத்தே

#28
** இதன் விரி
நீங்கும் கிழத்தி பாங்கியர்-தமக்குத்
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் தலைமகள்
தன் செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தலும்
ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் ஈன்றாள்
அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலைத் 5
தலைவி கண்டு தலைவர்க்கு உணர்த்தலும்
தலைமகள்-தன்னைத் தலைமகன் விடுத்தலும்
தமருடன் செல்பவள் அவன் புறம் நோக்கிக்
கவன்று ஆற்றலும் என நுவன்றவை ஆறும்
உடன்போக்கு இடையீடு விரி ஆகும்மே 10

#29
** அந்தணர் சான்றோர்முன் வரைதல்
தன் ஊர் வரைதலும் தன் மனை வரைதலும்
என்னும் இவ் இரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன்
அந்தணர் சான்றோர் முன்னிட்டு அரும் கலம்
தந்து வரைதல் தகுதி என்ப

@4 கற்பியல்

#1
** கற்பின் இயல்
பொற்பு அமை சிறப்பின் கற்பு எனப்படுவது
மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
பிரிவும் பிறவும் மருவியது ஆகும்

#2
** கற்பின் கிளவி நிரல்
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே
ஓதல் பிரிவே காவல் பிரிவே
தூதின் பிரிவே துணை-வயின் பிரிவே
பொருள்-வயின் பிரிவே எனப் பொருந்திய ஏழும்
வளம் மலி கற்பின் கிளவித் தொகையே 5

#3
** இல்வாழ்க்கையின் வகை
கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று
ஈங்கு நால் வகைத்து இல்வாழ்க்கையே

#4
** இதன் விரி
தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தலும்
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவியை
வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை
உரையாய் என்றலும் பெருமகள் உரைத்தலும்
தலைவனைப் பாங்கி வரையும் நாள் அளவும் 5
நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும்
மன்றல் மனை வரு செவிலிக்கு இகுளை
அன்பு உறவு உணர்த்தலும் வாழ்க்கை நன்று அறைதலும்
மண மனைச் சென்று வந்த செவிலி
பொன்_தொடி கற்பு இயல் நற்றாய்க்கு உணர்த்தலும் 10
நல் மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தலும்
அன்னவர் காதல் அறிவித்தலும் எனும்
இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே

#5
** பரத்தையிற் பிரிவின் வகை
வாயில் வேண்டல் வாயில் மறுத்தல்
வாயில் நேர்வித்தல் வாயில் நேர்தல் என்று
ஆய பரத்தையின் அகற்சி நால் வகைத்தே

#6
** உணர்த்த உணரும் ஊடல் கிளவி நிரல்
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
ஏது ஈதாம் இவ் இறைவிக்கு என்றலும்
தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும்
ஈங்கு இது என் எனப் பாங்கி வினாதலும்
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்கு உணர்த்தலும் 5
தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி
செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
அவ் அணி உழையர் கண்டு அழுங்கிக் கூறலும்
பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர்
உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன் 10
வரவு கண்டு வந்து வாயில்கள் மொழிதலும்
வரவு உணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்
முதிரா மென்_முலை எதிர்கொண்டு பணிதலும்
புணர்ச்சியின் மகிழ்வும் என்று உரைத்த பன்னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய 15

#7
** உணர்த்த உணரா ஊடல் கிளவி நிரல்
வெள்ளணி அணிந்து விடுத்துழிப் புள் அணி
மலை வேல் அண்ணல் வாயில் வேண்டலும்
தலைவி நெய்யாடியது இகுளை சாற்றலும்
தலைவன் தன் மனத்து உவகை கூறலும்
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும் 5
தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும்
பாணன் முதலாப் பாங்கன் ஈறாப்
பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி
மறுத்தலும் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு
இறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்து கண்டு 10
ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்
சீறேல் என்று இவள் சீறடி தொழலும் இஃது
எங்கையர் காணின் நன்று அன்று என்றலும்
அங்கு அவர் யாரையும் அறியேன் என்றலும்
காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தலும் 15
தாமக் குழலியை பாங்கி தணித்தலும்
தணியாள் ஆகத் தலைமகன் ஊடலும்
அணி வளைப் பாங்கி அன்பிலை கொடியை என்று
இணர்த் தார் மார்பனை இகழ்தலும் பிறவும்
உணர்த்த உணரா ஊடற்கு உரிய 20

#8
** இதன் தொடர்
ஆய்_இழை மைந்தனும் ஆற்றாமையுமே
வாயிலாக வரவு எதிர்கோடலும்
மணந்து அவன் போன பின் வந்த பாங்கியோடு
இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும்
தலைவனைப் புகழ்தலும் சிலை நுதல் பாங்கி 5
மனைவியைப் புகழ்தலும் இனையவை பிறவும்
அனை வகை மொழிந்த அதன்-பால் படுமே

#9
** பரத்தையின் பிரிவின் விரி
மூன்று சூத்திரத்தும் மொழிந்தவை எல்லாம்
ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே

#10
** பல்வகைப் பிரிவினுக்குரிய கிளவிகள்
பிரிவு அறிவுறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன்படுத்தல் பிரிவு உடன்படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று
ஒருமையில் கூறிய ஒன்பது வகைய 5
கல்வி முதலா எல்லாப் பிரிவும்

@5 ஒழிபியல்

#1
** ஒழிபின் இயல்
ஒழிபு எனப்படுவது அகப்பாட்டு உறுப்பும்
வழுவும் அமைவும் தழுவியது ஆகும்

#2
** அகப் பாட்டு உறுப்பு இவை
திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறை என
அப்பால் ஆறு_இரண்டு அகப்பாட்டு உறுப்பே

#3
** திணை-கைக்கோள்
அவற்றுள்
முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும்

#4
** களவில் கூற்றில் உரிமை
தலைவன் தலைவி பார்ப்பான் பாங்கன்
பாங்கி செவிலி என்று ஈங்கு இவ் அறுவரும்
சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர்

#5
** கற்பில் கூற்றில் உரிமை
நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தையர் அறிவர் என்று எழுவரும்
அறுவர் என்று அவரும் ஆகிய அனைவரும்
குறைவு அறு கற்பில் கூற்றிற்கு உரியர்

#6
** கூற்றில் உரிமை இன்மை
பயந்தோன் தன் ஐ உயங்கு நோய் அறிவோர்
ஊரவர் அயலோர் சேரியோர் என்று இவர்
முகத்து உரை நிகழா அகப்பொருள் அகத்தே

#7
** தலைவன் கூற்று ஓர் வகை
தமர் வரின் இடைச்சுரம்-தன்னில் கிழத்தியோடு
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும்

#8
** தலைவி கூற்று ஓர் வகை
உடன் போய் மீண்ட கொடும் குழை மடந்தை
பிரிவுழித் தலைவனொடு சுரத்து இயல் பேசலும்
பிரிவுழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்திச்
சொல்லலும் உரியள் சொல்லும் காலை

#9
** நற்றாய் கூற்று இன்மை
தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள்

#10
** நற்றாய் கூற்று
புணர்ந்து உடன் போயது உணர்ந்த பின்னர்
அந்தணர் தெய்வம் அயலோர் அறிவர்
சிந்தை நோய் அறிவோர் செவிலி பாங்கியொடு
கண்டோர்க்கு உரைக்கும் பண்பு உடை நற்றாய்

#11
** செவிலிக் கூற்று
தாயொடும் பாங்கிதான் முதலாரொடும்
சே இழை செவிலியும் செப்பும் ஆங்கே

#12
** கண்டோர் கூற்று
தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோடு
ஏயும் என்ப கண்டோர் கூற்றே

#13
** ஏனையோர் கூற்று
சாற்றா எழுவரும் தலைவன் தலைவியோடு
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும்

#14
** தலைவி கூற்று-வேறு
நெஞ்சும் நாணும் நிறை சேர் அறிவும்
செம் சுடர்ப் பருதியும் திங்களும் மாலையும்
புள்ளும் மாவும் புணரியும் கானலும்
உள்ளுறுத்து இயன்றவும் மொழிந்தவை பிறவும்
தன் சொல் கேட்குந போலவும் தனக்கு அவை 5
இன் சொல் சொல்லுந போலவும் ஏவல்
செய்குந போலவும் தோற்றுந போலவும்
மொய் குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும்

#15
** யாவரின் கூற்று-வேறு
இறையோன் முதலோர் யாரொடும் இன்றித்
தம்மொடு தாமே சாற்றியும் அமைப

#16
** கிழவன்/கிழத்தி கூற்று கேட்போர்
கிழவோன் கூற்றும் கிழத்தி கூற்றும்
பழமறையோன் முதல் பதின்மரும் கேட்ப

#17
** மறையோன் /அறிவர் கூற்று
மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும்
இறையோன் முதலா எனைவரும் கேட்ப

#18
** இடம்
நெறிப்படு கருமம் நிகழ்வுழி இடமே

#19
** காலம்
சென்றதும் நிகழ்வதும் எதிர்வதும் என முறை
நின்று பொருள் உணர நிகழ்வது காலம்

#20
** பயன்
இப் பொருள் பயக்கும் இஃது என்பது பயனே

#21
** முன்னம்
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும்
முன்னம் தருவது முன்னம் ஆகும்

#22
** மெய்ப்பாடு
நகை முதலாம் இரு_நான்கு மெய்ப்பாடும்
நிகழ் பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே

#23
** எச்சம்
சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும்
சொல்லி முடித்தல் வேண்டுவது எச்சம்

#24
** பொருள்
ஒரு திணைக்கு உரிமை பூணா நிலைமை
பொருள்வகை என்மனார் புலமையோரே

#25
** துறை
சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோடு
ஒல்லும் வகை தேர்ந்து உணர்த்து இயல் வழாமல்
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி
உரைக்கும் கவியே உரைப்பது துறையே

#26
** எச்சம் வேறு
அவற்றுள்
எச்சம் இன்றியும் இயையும் என்ப

#27
** அகப்பாட்டு பொருளாவன
உவமைப் பொருளும் இறைச்சிப் பொருளும் என்று
இரு வகைப் பொருளும் எய்தும் அகப்பாட்டினுள்

#28
** உவம வகை
உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம் என
எள்ள அரும் உவமம் இரு வகை உடைத்தே

#29
** உள்ளுறை உவம இயல்
அவற்றுள்
உள்ளுறை உவமம் உய்த்து உணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்

#30
** வெளி உவமம்
வெளிப்படை உவமம் வினை பயன் மெய் உரு
வெளிப்பட நின்று விளங்குவது ஆகும்

#31
** இறைச்சிப் பொருள் இயல்
கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே

#32
** அகப்புற கைக்கிளை
காமம் சாலா இளமையோள்-வயின்
குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு
இறப்பக் கூறுவது அகப்புறக் கைக்கிளை

#33
** இதனுக்கு உரியோர்
அதுவே
இறைமையில்லோர்க்கும் இழிகுலத்தோர்க்கும்
முறைமையின் உரித்தே முன்னும் காலை

#34
** அகப்பொருள் பெருந்திணை
அகன்றுழிக் கலங்கலும் புகன்ற மடல் கூற்றும்
குறி இடையீடும் தெளிவிடை விலங்கலும்
வெறிகோள் வகையும் விழைந்து உடன்போக்கும்
பூப்பு இயல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும்
தீர்ப்பு_இல் ஊடலும் போக்கு அழுங்கு இயல்பும் 5
பாசறைப் புலம்பலும் பருவம் மாறுபடுதலும்
வன்புறை எதிர்ந்து மொழிதலும் அன்புறு
மனைவியும் தானும் வனம் அடைந்து நோற்றலும்
பிறவும் அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய

#35
** அகப்புறப் பெருந்திணை
மடலேறுதலொடு விடைதழால் என்றா
குற்றிசை-தன்னொடு குறுங்கலி என்றா
சுரநடை-தன்னொடு முதுபாலை என்றா
தாபத நிலையொடு தபுதார நிலை எனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின் 5
அகன்ற அகப்புறப் பெருந்திணைக்கு ஆகும்

#36
** அகப்பாட்டுடைத் தலைவர்
பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவன் எனப்
பாட்டினுள் பாடப்படுவோர் இருவர்

#37
** இதனுள் உயர்வு
அவருள்
உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆகும்

#38
** பாட்டுடைத் தலைவர்க்கு இடுவன
நிலப் பெயர் வினைப் பெயர் பண்பு கொள் பெயரொடு
குலப் பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே

#39
** இசையா பெயர்
அவற்றுள்
இயற்பெயர் கிளவித் தலைவற்கு இசையார்

#40
** தலைமக்கள் வருகை
இருவரும் ஒருங்கே வருதலும் தனித்தனி
வருதலும் இருவரும் வாராது ஒழிதலும்
உரிய என்மனார் உணர்ந்திசினோரே

#41
** அகப்புறப்பாட்டிற்காகும் நெறி
அகப்புறப் பாட்டும் இகப்பு இல அவையே

#42
** முதல் கரு உரி இவையின் வழு அமைதி
முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய

#43
** அதிகார புறநெறி
கூறிய அல்ல வேறு பிற தோன்றினும்
கூறியவற்றொடும் கூட்டி மெய் கொளக்
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே
** நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் முற்றிற்று
*